Tuesday, April 4, 2023

24.நினைத்தால் முடியும்

  24- நினைத்தால் முடியும்




 நடேசன் திருச்சி அருகே ஒரு கிராமத்தில்  விவசாயம்செய்து வந்தான்.அவனுக்கு குடி பழக்கம் இருந்தது.காலையில் எழுந்து நிலத்துக்கு சென்று எல்லா வேலைகளையும்   முடித்து  விட்டு வரும் போது நிறைய குடித்து விட்டு வருவான்.வீட்டில் சரியாக பணம்  கொடுப்பதில்லை.இதனால் அவனுக்கும் அவன் மனைவிக்கும் சண்டை ஏற்படும்.குழந்தைகள் இருவரையும் நன்றாக படிக்க வைக்க அவள் நினைத்தாள்.ஆனால் அது முடியவில்லை.

எவ்வளவோ அவன் மனைவி முயன்றும் அவனை திருத்த  முடியவில்லை.பக்கத்து வீட்டில்  நடேசனின்  நண்பர் வசித்து  வந்தார்.அவர் நடேசனின் மனைவியிடம் ‘அடுத்த ஊரில் ஒரு ஞானி ஒருவர் இருக்கிறார்’ என்றும் அவரிடம் நடேசனை கூட்டி செல்லுமாறு சொன்னார்.'அவருடைய போதனையால் நடேசன் ஒரு வேளை திருந்தக்கூடும் "என்றார்.

அடுத்த நாள் நடேசனின் மனைவி அவனை ஞானியிட அழைத்து சென்றாள்.ஞானியிடம் நடேசன் தன் நிலைமையை கூறினான்.எவ்வளவு முயன்றும் தன்னால் குடியை கட்டுபடுத்தமுடியவில்லை என்றான்.எனக்கு நீங்கள் தான் ஒரு வழி கூறவேண்டும் என்றான்.அவர் அவன் சொல்வதையெல்லாம் கேட்டு ‘நீ நாளை வா "என்று சொல்லி அனுப்பினார்.

அடுத்த நாள் அவன் சென்றபோது ஞானி ஒரு தூணை இறுக்கக் கட்டிக்கொண்டு  ‘என்னை விட்டு விடு என்னை விட்டு விடு என்று கத்திக்கொண்டிருந்தார்.

நடேசன் அவரைப்பார்த்து  ‘ஐயா, நீங்கள் தான் தூணை கட்டிக்கொண்டிருக்கிறீர்கள்,நீங்கள் தான் தூணை விடவேண்டும்.’ என்றான்.

உடனே ஞானி "இதுபோல நீ தான் குடியை கட்டிக்கொண்டிருக்கிறாய்,நீயாகத்தான்  விடவேண்டும்" என்றார்.

நடேசனும் அதை உணர்ந்து குடியை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி நல்லவனாக மாறினான்.