Monday, February 26, 2018

15 -முற்பகல் செய்யின்


நாம் யாருக்கேனும் தீங்கிழித்தோமாயின்..அதற்கான பலனை பின்னாளில் நாமே அனுபவிக்க வேண்டியிருக்கும்.

கர்ணன் வாழ்க்கையிலும் அப்படி நடந்தது,அதுவே இக்கதையாகும்.

முனிவர் ஒருவர் காட்டில் தியானம் செய்து கொண்டிருந்தார்.அவரது ஆசிரமத்தைச் சேர்ந்த பசுவும், கன்றும் அருகே புல்லை மேய்ந்து கொண்டிருந்த நேரத்தில், கன்றின் மீது அம்பு ஒன்று பாய்ந்தது.அக்கன்று துடிதுடித்து இறந்தது..இறக்கும் தறுவாயில் அக்கன்றின் வேதனைக் கத்தல் கேட்டு முனிவர் தியானம் கலைந்தது.

அவர், இறந்த கன்றையும், தாய்ப்பசு கண்ணீருடன் நிற்பதையும் பார்த்தார்.

அம்பு எய்தி பசுவைக் கொன்றவனைத் தேடினார். அப்போது ஒரு வீரன் கையில் வில்லுடன் அங்கு வந்தான்.அவன்தான் அம்பை எய்திருக்க வேண்டும் என முனிவர் எண்ணினார்.அவரது கோபம் அந்த வீரன் மீது சாபமாக அமைந்தது.

"சிறு கன்றின் மீது அம்பு எய்தி கொன்றவனே! உனக்கு முடிவுகாலம் வருகையில், உன் தேரில் நின்று நீ போர் புரிகையில், தேரின் சக்கரங்கள் மண்ணுக்குள் புதையும்.அந்த நேரமே உனக்கு மரண நேரமாய் அமையும் என்பதை உணர்வாயாக!" என்றார்.

அந்த வீரன் தான் கர்ணன்.

கன்றைக் கொன்ற தன் செயலால் வருந்தினான் கர்ணன்.ஆனாலும் விதியின் செயல் இது என தன்னை தேற்றிக் கொண்டான்.

அந்த முனிவர் சாபப்படியே பாரதப் போரில் கர்ணன் மரணம் நிகழ்ந்தது. .

Monday, February 19, 2018

14. நமது கடவுள்


ஒருநாள் கடவுள், ஒரு குழந்தையை பூமியில் பிறக்க வைக்கத் தயாராய் ஆனார்.

அப்போது அந்தக் குழந்தைக் கடவுளைக் கேட்டது..
"கடவுளே! என்னை பூமிக்கு அனுப்பினால், அங்கு யாருக்கும் என்னைத் தெரியாதே!"
அதற்குக் கடவுள் சொன்னார்,"கவலைப்படாதே! பூமியில் நிறைய தேவதைகள் உள்ளனர்.அவற்றில் ஒரு தேவதை  யிடம்தான் உன்னை அனுப்புகிறேன்"
"அது புதிய இடம்.யாரையும் எனக்குத் தெரியாது.அழுகை, அழுகையாக வரும்.இங்கு நீங்கள் இருக்கிறீர்கள்,நான் சந்தோஷமாக இருக்கிறேன்" என்றது
அதற்குக் கடவுள்."பயப்படாதே! பூமியில் உன்னை வரவேற்கக் காத்திருக்கும் தேவதை, உனக்காகப் பாடுவார்.உன்னிடம் அன்பாய் இருப்பார்.உன்னை எப்போதும் சந்தோஷத்தில் வைப்பார்"என்றார்.
"எனக்கு அங்கு பேசும் மொழி தெரியாதே!" என்றது குழந்தை
"அனைத்தையும் அந்தத் தேவதைக் கற்றுக் கொடுப்பார்" என்றார்.கடவுள்
"உங்களை மீண்டும் என்னால் பார்க்க முடியுமா? "என்றது குழந்தை
"என்னைப் பற்றியும்,என்னைத் தொழும் முறையையும், மீண்டும் என்னிடம் வர செய்ய வேண்டியதை அந்தத் தேவதை உனக்கு சொல்லிக் கொடுப்பார்" என்றார் கடவுள்
"சரி" என்றது குழ்ந்தை.
அப்போது அங்கு ஒரு பெரும் சப்தம் கேட்கக் கடவுள்"நீ பூமிக்கு செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது" என்றார்.
உடன் குழ்ந்தை, "என்னை வரவேற்கப் போகும் தேவதையின் பெயரைச் சொல்ல வில்லையே" என்றது
அதற்கு க் கடவுள், "அந்த தேவதையின் பெயர் உனக்கு வேண்டாம்.ஆனால் அவரை நீ கூப்பிட வேண்டியது "அம்மா" என்று" என்றார்.
அப்போது,, பூமியில் ஒருவர் வீட்டில் குழந்தை ஒன்று பிறந்தது.


Sunday, February 18, 2018

13- மாறவேண்டியது நாமே



பலநூறு ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு நாட்டை ஆண்டு வந்த அரசன், தனது நாட்டைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினான்.

கரடு முரடான சாலைகளிலும், வெயிலால் சூடேறிக் கிடந்த தெருக்களிலும் நடந்தான்.மிகவும் சிரப்பட்டான்.காலில் சூட்டினால் கொப்புளங்கள்.வலியும் அதிகமாய் இருந்தது.

சமதள சாலைகளும், தெருவின் சூட்டைக் குறைக்க தெருமுழுதும் பசுவின் தோலினால் மூடினால், அவதிப்படுவதைத் தடுக்கலாம் என்றனர் அமைச்சர்கள்.

ஆனால், நாடு முழுதும், பசுத்தோல் போர்த்துவது நடக்கும் செயலா? அதற்கு எவ்வளவு செலவாகும்.ஆயிரக் கணக்கில் பசுக்கள் இறந்தால்தானே தோலும் கிடைக்கும் என்றெல்லாம் மன்னன் நினைத்தான்.

அப்போது, மூத்த அமைச்சர் ஒருவர் , ஒரு செய்தியைக் கூறினார்,"மன்னா!நம்மால் அவ்வளவு செலவு செய்ய முடியாது.ஆனால், தெருக்களை தோலினால் மூடுவதற்குப் பதிலாக, நாம் ஏன்., அவரவர் கால்களை தோலினால் மூடிக் கொள்ளக் கூடாது.தோலும் அதற்கு சிறிதளவேப் போதுமே!"

அமைச்சரின் இந்த அறிவுரை, மன்னனுக்குப் பிடித்தது.இதுவே காலணிகள் தோன்றக் காரணமாக அமைந்தது.

இதிலிருந்து நாம் ஒரு நீதியையும் அறியலாம்.

"ஊரை மாற்ற நினைக்காமல், நம்மை மாற்றிக் கொண்டால்...ஊர் தானாக மாறும்" என்பதுதான்.

Wednesday, February 14, 2018

12- உருவம் பார்த்து எடை போடக்கூடாது


                        


உருவத்தில் சிறியவனாக இருப்பதால் அவனை ஏளனம் செய்யக்கூடாது. அவன் வேறு விடையங்களில் வல்லவனாக இருப்பான் என்பதை உண்ர்த்தும் நீதிக்கதை

ஒரு காட்டில் சிங்கம் ஒன்று வசித்து வந்தது. அது தனது பலத்தாலும், தோற்றத்தாலும், கர்ஜனையாலும் காட்டில் வசித்த அனைத்து மிருகங்களையும் பயமுறுத்தி வந்தது.
பயம் காரணமாய் அனைத்து மிருகங்களும் சிங்கத்திற்கு கிட்டச் செல்வதில்லை. சிங்கத்தைக் கண்டால் பயந்து ஓடிவிடுகின்றன.

ஆனால் 'ஈ" ஒன்று பயமின்றி சிங்கத்தின் மீது வந்து அமர்ந்தது.  அதைப் பார்த்ததும் சிங்கம் கோபமுற்று கர்ஜனை செய்தபடியே..'உன்னை என் பற்களால் கடித்துக் குதறுவேன், நகங்களால் பிறாண்டுவேன், நசுக்கிப் பொசிக்கிப் போடுவேன் என்றது.

அதற்கு ஈ யோ நீ பலசாலியாய் இருக்கலாம்..உன்னைப் பார்த்து மற்ற மிருகங்கள் பயப்படலாம். ஆனால் நான் பயப்பட மாட்டேன். இன்னும் சொல்லப்போனால்..நீ சொன்னபடி உன்னையே நீ பற்களால் கடித்துக் கொள்ளவும், நகங்களால் விறாண்டிக் கொள்ளவும் செய்வேன்" என்றது.

இதைக் கேட்ட சிங்கம் கோபத்துடன் ஏலுமாயின் முடிந்தால்அதைச் செய் என் சவால் விட..ஈ பறந்து வந்து சிங்கத்தின் முதுகில் அமர்ந்து அதைக் கடித்தது. ஈ முதுகில் அமர்ந்த போது..அதை விரட்ட சிங்கம்.தன் பற்களால் முயன்ற போது..ஈ பறந்து விட சிங்கம் தன் முதுகைத் தானே கடித்துக் கொண்டது.

ஈ சிங்கத்தின் முகத்தில் அமர்ந்த போது, அதை விரட்ட தன் கால் நகங்களால் முயல..ஈ பறக்க...சிங்கம் தன் நகங்களால் தன் முகத்தையே பிறாண்டிக் கொண்டது. இவ்வாறு பலதடவை சிங்கத்தை நன்கு இம்சை செய்து விட்டு ஈ பறந்தது. 

சிங்கத்தினால் ஈயை பிடிக்கவோ நசுக்கவோ முடியவில்லை. அதனால் சிங்கம் தன் இயலாமையை எண்ணி வெட்கப்பட்டது. 

அதன் பின்புதான் சிங்கத்திற்கு புரிந்தது..தான் உடலளவில் வீரமாய் இருந்தாலும்..ஒரு சிறு ஈ தன்னை இம்சைப் படுத்தி விட்டதே என்று. .

உருவத்தைக் கண்டு யாரையும் எடை போடக் கூடாது 

Tuesday, February 13, 2018

11- பாம்பும் கீரியும்

தேவப்பட்டினம் என்றொரு கிராமத்தில் மாரப்பன் என்றொரு குயவனும் அவன் மனைவியும் வாழ்ந்து வந்தார்கள். பல வருடங்களாகியும் அவர்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை.

தங்களுக்கு குழந்தை இல்லாத ஏக்கத்தைப்போக்க ஒரு கீறிப் பிள்ளையைக் குழந்தையைப் போல் வளர்த்து வந்தனர். இப்படி சிலகாலம் சென்றது. ஒரு நாள் குயவனின் மனைவி சுந்தரி கருவுற்றாள். ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள்.

நீண்ட கால ஏக்கத்திற்குப் பிறகு பிறந்த முதல் குழந்தை என்பதால் அக்குழந்தை வெகு செல்லமாக வளர்க்கப்பட்டது.

ஒருநாள் தண்ணீர் குடத்துடன் புறப்பட்ட சுந்தரி, கணவனிடம் “குழந்தை தூங்குகிறது. அருகிலேயே இருந்து பார்த்துக் கொள்ளுங்கள், கீரி கடித்துவிடப் போகிறது”, என்று கூறிவிட்டுக் குளக்கரைக்குச் சென்றாள்.

குழந்தையின் அருகிலேயே அமர்ந்து கொண்டிருந்த குயவனுக்கு திடீர் தாகம் உண்டாயிற்று. அவன் தண்ணீர் அருந்த சமையலறைக்குள் சென்றான்.

அந்த நேரம் பார்த்து ஒரு கரு நாகம் எங்கிருந்தோ வந்து குழந்தையின் தொட்டிலின்மேல் ஏற ஆரம்பித்தது. கீரி அதைப் பார்த்து விட்டது. அடுத்த வினாடி கீரி அப்பாம்பைத் துண்டு துண்டாகக் கடித்துக் குதறிவிட்டது.

அத்துடன் தன் எஜமானியின் வரவு நோக்கி தெரு வாசலருகில் நின்றும் கொண்டது.

தண்ணீர் குடத்துடன் வந்த சுந்தரி கீரியின் வாயெல்லாம் இரத்தமாக இருந்ததைப் பார்த்து பதறிப்போனாள்.

அவள் கீரிப்பிள்ளை தன் குழந்தையைக் கடித்து விட்டது. அதனால் தான் அதன் வாயில் ரத்தம் சொட்ட நிற்கிறது என்று தவறாகப் புரிந்து கொண்டாள்.

நிலைமையைத் தீர ஆராயாமல் "அய்யோ! நம் குழந்தையை கீரிப்பிள்ளை கடித்து விட்டதே என்று ஆத்திரம் கொண்டு அடங்காக் கோபத்தோடு அக்கீரியின் மேல் நீர்க்குடத்தை தூக்கிப் போட்டாள்.

கீரிப்பிள்ளை அதே இடத்தில் வலி தாங்காமல் செத்தது. சுந்தரி தன் குழந்தைக்கு என்ன ஆயிற்றோ என்ற பதற்றத்தில் உள்ளே ஓடினாள். குழந்தை தொட்டிலில் அப்படியே உறங்கிக் கொண்டுதான் இருந்தது.

பிறகு என்ன நடந்திருக்கும் என்று சுற்றும் முற்றும் பார்த்த அவளுக்கு ஒரே அதிர்ச்சி. தரையில் பாம்பின் உடல் பல துண்டுகளாக சிதறி இருந்தன. அவளுக்கு உண்மை புரிய ஆரம்பித்தது.

"அடடா பாம்பைக் கொன்ற இரத்த்தத்துடன் இருந்த கீரிப்பிள்ளையைப் பார்த்துக் குழந்தையைத்தான் கடித்து விட்டதோ என்று தவறாக எண்ணி விட்டேனே. அருமையாக வளர்த்த கீரியைக் அவசரப்பட்டுக் கொன்று விட்டேனே!" என்று கண்ணீர் விட்டுக் கதறத் துவங்கினாள்.

க்ஷனநேரத்தில் நடந்து முடிந்து விட்ட இந்த நிகழ்ச்சிகளை உள்வாங்கிக்கொண்ட குயவன் தனது மனைவியை சமாதானப்படுத்தினான்.

 எந்தப் பிரச்சனையையும் தீர ஆராயாமல் அவசர புத்தியால் முடிவெடுத்தால் அது தவறாகிவிடும்

Monday, February 12, 2018

10- பிறவிக்குணம்




ஒரு காட்டிற்குள், அமைதியாக, அழகான நதி ஒன்று ஓடிக் கொண்டிருந்தது.

அந்நதியில், எப்போதும் அன்னப்பறவைகள் நீந்தி விளையாடி வந்தன.நதிக்கரையில், சில காகங்கள் வசித்து வந்தன.

அந்த காகங்கள் இறந்த சில பறவைகளை கொத்தித் தின்று வாழ்ந்து வந்தன.

ஒரு காகத்திற்கு, அன்னப்பறவை ஒன்றின் நட்புக் கிடைத்தது.

நல்லதையும், தீயவனவற்றையும் பிரித்துப் பார்ப்பதில் அன்னப்பறவை பெயர்ப் பெற்றது.

அன்னப்பறவை காகத்தினிடம் "நண்பா! நீயும் எங்களைப் போல,நல்லதை மட்டுமே பிரித்து உண்.ஏன் இறந்து அழுகிக் கிடக்கும் பறவைகளை உண்ணுகிறாய்?" என்றது.

காகமும், அன்னப்பறவை சொன்னதில் உள்ள நன்மையை உணர்ந்து, 'இனி அப்படியே நடப்பதாக உறுதி அளித்தது"

அந்த சமயத்தில்..எங்கிருந்தோ அழுகிய நாற்றம் வர . அந்த நாற்றத்தினால் ஈர்க்கப்பட்ட காகம் அங்கு பறந்து சென்று பார்த்தது.

ஒரு எலி ஒன்று அழுகிய நிலையில் செத்துக் கிடந்தது.

உடனே, தான் நண்பன் அன்னப்பறவைக்கு அளித்திருந்த உறுதி மொழியை மறந்து, எலியைக் கொத்தி உண்ண ஆரம்பித்தது.

அதைப் பார்த்த அன்னம், சிலரது பிறவிக் குணத்தை மாற்ற முடியாது என்று உணர்ந்தது..

Sunday, February 11, 2018

9-நன்றி மறப்பது நன்றன்று


ஒரு காட்டில், சிங்கம் ஒன்றை உயிருடன் பிடிக்க எண்ணிய சிலர், ஒரு கூண்டினைத் தயாரித்து அதில் ஒரு ஆட்டுக் குட்டியை கட்டி வைத்திருந்தனர்
ஆட்டிற்கு ஆசைப்பட்டு ,சிங்கம் கூட்டினுள் அகப்பட்டுக் கொள்ளும் என்ற எண்ணத்தில்.

ஒரு சிங்கமும், அதுபோலவே கூண்டினுள் மாட்டிக் கொண்டது

அப்போது ,அவ்வழியாக ஒரு விறகுவெட்டி வந்தான்.சிங்கம் அவனிடம்,"மனிதா! என்னை விடுவித்து விடு.நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன்" என்றது

மனிதர்களை அடித்துக் கொல்பவன் நீ.உன்னை நான் எப்படி நம்புவது?" என்றான் விறகுவெட்டி

'நான் மனிதர்களை அடித்துக் கொல்பவன் தான்.அதற்காக..என்னை காப்பாற்றியவனை நான் அப்படிச் செய்வேனா? நன்றி மறப்பவன் அல்ல நான்" என்றது

சிங்கத்தின்பேச்சினை நம்பிய விறகுவெட்டி, கூண்டினைத் திறந்து சிங்கத்தை விடுவித்தான்.

வெளியே வந்த சிங்கம் ,விறகுவெட்டி மீது பாயத் தயாரானது.

உடன் விறகுவெட்டி, "சிங்கமே! உன்னை விடுவித்த எனக்கு நீ காட்டும் நன்றி இதுதானா?" என்றான்

"மனிதனை அடித்துக் கொல்பவன் நான்.என் உயிரைக் காப்பாற்றுக் கொள்ள பொய் சொன்னேன்.நீ மனிதன்.உன் அறிவைப் பயன் படுத்தி, ஒருவருக்கு உதவும் முன், அது நல்லதா?கெட்டதா? என்பதை உணர வேண்டாமா" என்றது.

அப்போது அவ்வழியாக நரி ஒன்று வந்தது.

"நாம் நரியிடம் நியாயம் கேட்போம்" என்றான் விறகுவெட்டி.

மனிதனை அடித்துத் தின்று விட்டு,  நரியையும் கொன்று உண்ணலாம் என்ற ஆசையில், சிங்கம் அதற்கு சம்மதித்தது.

சிங்கத்தின் நன்றி கெட்ட செயலை அறிந்த நரி, விறகுவெட்டியை காப்பாற்ற எண்ணியது

அதனால், சிங்கத்திடம் ,"நீங்கள் எந்த கூண்டில் அடைபட்டு இருந்தீர்கள்?" என்றது.

சிங்கம் கூண்டினைக் காட்டியது.

"எப்படி அடைபட்டுக் கிடந்தீர்கள்?" என்றது நரி.

"இப்படித்தான்" என்று கூறியபடியே, சிங்கம் கூண்டினுள் சென்றது.உடன் நரி, கூண்டினை இழுத்து மூடியது.

இப்போது, சிங்கம் மீண்டும் கூண்டினுள்.

நரியைப் பார்த்து சிங்கம், "நரியே! நீ செய்தது நியாயமா?" என்றது

"உதவி செய்த மனிதனை, நீ அடித்துக் கொல்வது நியாயமானால், நான் செய்ததும் நியாயம்தான்"என்ற நரி, விறகுவெட்டியைப் பார்த்து,"ஒருவருக்கு உதவும்முன், அந்த உதவிக்கு அவன் தகுதியானவனா? என யோசித்து செய்ய வேண்டும்" என அறிவுரை கூறியது.

நாமும் ஒருவர் செய்த உதவியை மறந்து நடந்தோமானால், தீங்கு விளையும் என்று உணர வேண்டும்.

நன்றி மறப்பது நன்றன்று 

Saturday, February 10, 2018

8 -உழைப்பே உயர்வு தரும்



சரவணனும், கந்தனும் நண்பர்கள்.
சரவணன் எல்லோரிடமும் இரக்கக் குணம் கொண்டவன்.கந்தனோ, யார்..யாருக்கு இரக்கம் காட்ட வேண்டும் என்பதை அறிந்தவன்

ஒருநாள், வாலிப வயது பிச்சைக்காரன் ஒருவன் அவர்களிடம் வந்து , தனக்கு பசிப்பதாகக் கூறி பிச்சைக் கேட்டான்.கந்தன் அவனிடம், "உனக்கு இளம் வயது.ஏன் பிச்சை எடுக்கிறாய்? ஏதேனும் வேலை செய்து பிழைக்கலாமே!' என திட்டி அனுப்பி விட்டான்.

ஆனால், சரவணனோ அவனைக் கூப்பிட்டு, சிறிது பணம் தந்து அனுப்பினான்

அடுத்தநாளும் இப்படியே நடந்தது

மூன்றாம் நாள், அவன் வந்த போது, கந்தன் அவனை தர தர  என இழுத்துக் கொண்டு ஒரு நதிக்கரைக்கு வந்தான்.அவனிடம் ஒரு தூண்டிலைக் கொடுத்து, "இனி நீ இந்தத் தூண்டில் மூலம் மீன் பிடித்து, அதை விற்று, உழைத்து உண்ண வேண்டும்." என்று கோபத்துடன் கூறிச் சென்றான்.

பிறகு அவர்கள் அந்தப் பிச்சைக்காரனப் பார்க்கவேயில்லை.

சில வருடங்கள் ஓடின..

ஒருநாள் பணக்கரர் ஒருவர் கந்தனையும், சரவணனையும் பார்க்க வந்தார்.

அவர் யார் ?என அவர்களூக்குத் தெரியவில்லை.

அவரே சொன்னார்"ஐயா''நீங்கள் தூண்டில் கொடுத்து உழைத்துப் பிழைக்கச் சொன்னீர்களே! அந்தப் பிச்சைக்காரன் நான்.அன்றுமுதல் உழைத்தேன்.பணக்காரன் ஆனேன்.உழைப்புத்தான் உயர்வு தரும் என உணர்ந்தேன்.
அதற்கு உங்களுக்கு நன்றி என்றதுடன் கந்தனுக்கும் சரவணனுக்கும் சில பரிசுகள் கொடுத்துவிட்டுச் சென்றார்.

இதிலிருந்து சோம்பித் திரிபவர்கள் வாழ்வில் முன்னேற முடியாது.உழைப்பே உயர்வு தரும் என உணருவோமாக

Friday, February 9, 2018

7 - விட்டுக் கொடுக்கும் மனம்


அந்த ஊரின் நடுவே ஆறு ஒன்று ஓடிக் கொண்டிருந்தது.
ஆற்றைக் கடக்க ஒரு பாலம் ஒன்றிருந்தது.அது மிகவும் குறுகிய பாலம்.ஒருவர் போனால் , ஒருவர் வர முடியாத அளவிற்குக் குறுகியது,

ஒருநாள் பாலத்தின் ஒருமுனையிலிருந்து ஆடு ஒன்று பாலத்தைக் கடக்க எண்ணி பாலத்தில் நடக்க ஆரம்பித்தது

அதே நேரத்தில்,எதிர்முனையில் இருந்தும்,ஆற்றினைக் கடக்க பாலத்தில் ஒரு ஆடு வர ஆரம்பித்தது.

இரு ஆடுகளும், நடு பாலத்தில் சந்தித்தன

முதல் ஆடு, "வழி விடு.நான் தான் முதலில் கடக்க ஆரம்பித்தேன்"என்றது

எதிர் முனையில் இருந்து வந்த மற்ற ஆடோ, "முடியாது.நான் தான் முதலில் கடக்க ஆரம்பித்தேன்..நீ வழிவிடு" என்றது.

இரண்டு ஆடுகளும். ஒன்றுக்கொன்று விட்டுக் கொடுக்காமல் ..நடுப்பாலத்தில் சண்டையிட்டுக் கொண்டிருந்தன.
 ஒருகட்டத்தில், ஒன்றை ஒன்று முட்டிக் கொண்டு, கால்கள்  தடுமாற, பாலத்திலிருந்து ஆற்றில் விழுந்தன.இரு ஆடுகளையும் ஆறு அடித்துச் சென்றது.

ஒன்றுக்கொன்று விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாததால் தங்கள் உயிரை இழந்தன.

வாழ்விலும், நாம் விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கினைக் கொண்டால், வாழ்வு சிறப்பாக அமையும்.

Thursday, February 8, 2018

6 - நட்பின் பெருமை


ராமனும், குமரனும்  நண்பர்கள்.
இருவரும் ஒரே பள்ளியில், ஒரே பிரிவில் நான் காம் வகுப்பு படித்து வந்தனர்
ராமன், காலையில் விரைவில் எழுந்து, காலைக்கடன்களை முடித்து, குளித்து முடித்து, சிறிது நேரம் பள்ளிப் பாடங்களைப் படித்துவிட்டு, காலை உணவை அருந்திவிட்டு பள்ளி செல்வது வழக்கம்

ஆனால், குமரனோ ,நேர் எதிர்.
தாமதமாகத் தான் தினமும் எழுவான்.அவசர அவசரமாகக் காலைக் கடன்களை முடித்து, அரை குறையாகக் குளித்ததாகப் பெயர் பண்ணிவிட்டு, உணவை அள்ளி அள்ளி வாயில் போட்டுக் கொண்டு பள்ளிக்கு ஓடுவான்

ஒருநாள் குமரன், மிகவும் தாமதமாக எழுந்தான்.பள்ளிக்கோ நேரம் ஆகிறது.அவசர அவசரமாகக் காலைக் கடன்களை முடித்து பள்ளிக்கு விரைந்தான்

முதல் பீரியட் முடிந்ததும்...பொறுக்க முடியாத்தால் அவன் கால்சட்டை நனைந்தது.

அதைப்பார்த்த ராமன் உடனடியாக தன்னிடமிருந்த தண்ணீர்
பாட்டிலைத் திறந்து..ஏதேச்சையாகத் தண்ணீர் கொட்டுவது போல குமரனின் கால்சட்டையில் தண்ணீரைக் கொட்டினான்
மற்ற மாணவர்கள் பார்த்த போது, தான் தவறி தண்ணீரைக் கொட்டிவிட்டதாகக் குறி குமரனிடம் மன்னிப்புக் கேட்டான்.

மாலையில், பள்ளி முடிந்ததும், குமரன் , ராமனிடம் வந்து "ராமா..என் கால்சட்டை நனைந்ததை நீ பார்த்துவிட்டாய்.மற்றவர்கள் பார்த்து..என்னைக் கேலி செய்யப் போகிறார்களே என்று உடனே தண்ணீரைக் கொட்டி, தண்ணீரினால் என் கால்சட்டை நனைந்தது போல செய்து விட்டாய்.உன் இந்த உதவியை மறக்க மாட்டேன்" என்றான்.

ராமனும் குமரனைப் பார்த்து, "குமரா! இதற்கான காரணம் என்ன தெரியுமா? நீ தினமும் தாமதமாக எழுவதால்...உன்னால் எந்த ஒரு வேலையையும் ஒழுங்காகச் செய்ய இயலவில்லை.நீயும் என்னைப் போல சீக்கிரம் எழுந்தால், ஆரவாரமில்லாது எல்லா வேலைகளையும் செய்யலாம் இல்லையா?" என்றான்.

குமரனும், தன் தவறினை உணர்ந்து, அடுத்த நாள் முதல் ராமனை பின் பற்ற ஆரம்பித்தான்.

இப்போது, அவர்கள் வகுப்பில் முதல் மாணவர்கள் அவர்களே ஆகும்.



Wednesday, February 7, 2018

5 - முட்டாள் தோழன்


நரியூர் என்ற ஊரில் அரசன் ஒருவன் அரசாண்டு வந்தான்.அவனுக்கு ஒருவர் ஒரு நாள் குரங்கு ஒன்றை பரிசாக அளித்தார்.

அந்த குரங்கும், அரசனிடம் மிகவும் பாசமாய் இருந்தது.
அரசர் உலாவச் செல்லும் போதெல்லாம், குரங்கையும் உடன் கூட்டிச் செல்வார்

ஒருநாள், அப்படிச் செல்லும் போது, முட்புதர் ஒன்றில் இருந்த பாம்பு ஒன்று அரசரைக்  கடிக்க இருந்தது.அதைக் கண்ட குரங்கு, அந்தப் பாம்புடன் சண்டையிட்டு அதைக் கொன்றது.
மன்னனுக்கோ மகிழ்ச்சி.குரங்கு, தன் உயிரைக் காத்தது என அனைத்து மந்திரிகளிடமும் சொல்லி, குரங்கின் விசுவாசத்தைப் போற்றினான்.
தவிர்த்து, அன்று முதல் குரங்கை தன் பாதுகாவலராக அமர்த்தினான்.

அமைச்சர்கள் அனைவரும் அரசனிடம்' அரசே! என்ன இருந்தாலும் குரங்கு ஒரு விலங்கு, அதற்கு பகுத்தறிவோ,முடிவெடுக்கும் திறனோ இருக்காது" என்றனர்.
ஆனால் , அரசனோ, "குரங்கிற்கு, பாசமும், விசுவாசமும் உள்ளது.அது போதும்" என்றான்.
அன்றுமுதல் குரங்கு அரசனின் பாதுகாவலன் ஆகியது.

ஒருநாள், அரசனுக்கு தூக்கம் வந்தது,மிகவும் சோர்வுடன் காணப்பட்ட அவன், குரங்கினிடம், "நான் தூங்கப் போகிறேன்.யாரும் தொந்தரவு செய்யாமல் பார்த்துக் கொள்" என்று கூறிவிட்டு தூங்கச் சென்றார்.

அரசன் தூங்க ஆரம்பித்ததும், ஈ ஒன்று பறந்து வந்து ராஜாவின் மூக்கின் மீது அமர்ந்தது.அதை விரட்டி அடித்த குரங்கு, "மன்னன் தூங்குகிறார்.அவரை இம்சித்தால் கொன்றுவிடுவேன் உன்னை" என ஈயை எச்சரித்தது.
அதை பொருட்படுத்தாத ஈ, இம்முறை அரசனின் கழுத்தில் அமர்ந்தது.

தூங்கும் அரசனை இம்சிக்கும் ஈ மீது கோபம் கொண்ட குரங்கு, அரசனின் வாளை எடுத்து, அவரது கழுத்தில் அமர்ந்திருந்த ஈ ம் மீது ஒரே போடாக போட்டது.
வாள், மன்னனின் கழுத்தில் பாய்ந்து மன்னன் உயிர் நீத்தான்.

முட்டாளை பாதுகாவலனாக அமர்த்தியதால் மன்னன் உயிரிழக்க நேரிட்டது.

ஆகவே, குழந்தைகளே! நாமும் முட்டாள்களை நண்பனாகக் கொள்ளக் கூடாது