Thursday, December 27, 2012

115 எல்லாம் நன்மைக்கே.. (நீதிக்கதை)



மகத நாட்டு மன்னன் ஒருவன் தனது அமைச்சருடன் வேட்டைக்குச் சென்றான்...வில்லை  எடுத்து..அம்பைப் பொருத்தி நாணை இழுக்கையில்..அவன் கட்டை விரல் துண்டாகிக்  கீழே வீழ்ந்தது.

இதைக் கண்ட அமைச்சர், 'மன்னா..கவலை வேண்டாம்.எல்லாம் நன்மைக்கே' என்றார்.

தன் விரல் போனதை, அமைச்சர் 'நன்மைக்கே' என்றதால் கோபமுற்ற மன்னன், அந்த அமைச்சரை சிறையில் அடைத்தான்.

சில நாட்கள் சென்றன..

இம்முறை மன்னன்..தனியாக வேட்டைக்குச் சென்றான்.அப்போது அங்கு இருந்த காட்டுவாசிகளிடம் சிக்கினான்.அவர்கள் தங்களது எல்லை சாமிக்கு நரபலி கொடுக்க ஒரு மனிதனைத் தேடிக் கொண்டு இருந்தார்கள்.மன்னனைக் கண்டதும், அவரை, நரபலி கொடுக்க சிறை பிடித்தனர்.

மன்னனை, குளிப்பாட்டி, சந்தனம் பூசி, பலி பீடத்திற்கு அழைத்து வந்தனர்.அப்போது..அக் காட்டுவாசிகளின் தலைவன், மன்னனுக்கு, கட்டை விரல் இல்லாததைப் பார்த்து, "ஊனமுள்ளவரை பலி கொடுப்பது வீண்' என்று கூறி மன்னனை விடுவித்தான்.

அப்போது மன்னனுக்கு அமைச்சர் சொன்னது நினைவிற்கு வந்தது..'எல்லாம் நன்மைக்கே'

ஆம்..அன்று விரல் போனது, நல்லதற்கே.இல்லையேல், இன்று உயிர் போயிருக்குமே..என எண்ணியவன்..ஊருக்கு வந்ததும் , அமைச்சரை விடுவித்தான்.

நாமும், நமக்கு ஏதேனும் துன்பம் வந்தால், உடனே, வாடிவிடாது..'எல்லாம் நன்மைக்கே' என்று எண்ண வேண்டும்.

அப்போதுதான்..நாளடைவில் துன்பம் அகலும்..துன்பத்தின் வலி அதிகம் தெரியாது.    

Sunday, November 18, 2012

114 .தேவையில்லாதது ஏதுமில்லை..... (நீதிக்கதை)





முனியனிடம் சில ஆடுகளும் ஒரு நாயும் இருந்தன. தினமும் அவன் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வான்.கூடவே அவனது நாயும் செல்லும்.

மர நிழலில் முனியன் படுத்து உறங்க ...ஆடுகள் புல் மேயும்...அந்த ஆடுகளை ஓநாய் போன்றவை அணுகாமல் நாய் காக்கும்.

முனியன் தூங்கி எழுந்ததும்,தான் சாப்பிட்டுவிட்டு நாய்க்கும் சாப்பாடு அளிப்பான்.இது ஆடுகளுக்கு பிடிப்பதில்லை.

ஒரு நாள் ஆடுகள் முனியனிடம் ' நாங்கள் உனக்கு பால் தருகிறோம்...நீ உயிர் வாழ உதவுகிறோம்..ஆனால் நீயோ எங்களை நாங்களாகவே மேய விட்டுவிட்டு ...சும்மாயிருக்கும் நாய்க்கு உணவளிக்கிறாயே ' என்றன.

அப்போது முனியன் ஆடுகளிடம் ' நீங்க சொல்வது சரி..ஆனால் சற்று சிந்தித்து பாருங்கள் இந்த நாய் ...நீங்களெல்லாம் மேயும் போது உங்களைப் பார்த்துக் கொள்ளாவிட்டால் ஓநாய் வந்து தினசரி உங்களில் ஒருவரை கொண்டு சென்று உணவாக்கிக்கொள்ளும்.
அப்படி நேராமல் உங்கள் உயிரைக் காக்கிறது இந்த நாய்' என்றான்.

ஆடுகளும் சிந்தித்துப் பார்த்துவிட்டு நாயின் முக்கியத்துவத்தை உணர்ந்தன.

.தேவையில்லாதது என எதுவும் கிடையாது.சற்று சிந்தித்தால் தேவையில்லாதவை என நினைப்பவையின் தேவையும் அவசியமும் புரியும்.

Friday, November 9, 2012

113. உறுதி மொழியும் சிங்கமும் ...(நீதிக்கதை)





அருகிலிருந்த காட்டிலிருந்து சிங்கம் ஒன்று ஒரு கிராமத்திற்குள் புகுந்து விட்டது.மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் பயத்தில் இருந்தனர்.

அப்போது அக்கிராமத்தில் இருந்த தைரியசாலி ஒருவன்..ஒரு இரும்பு கூண்டை தயார் செய்து ..அதனுள் ஒரு ஆட்டை கட்டி கிராம எல்லையில் வைத்திருந்தான்.  

கிராமத்திற்குள் அன்று வந்த சிங்கம் ஆட்டைப் பார்த்தது .கூண்டைப் பார்க்கவில்லை...ஆகவே ஆட்டை உண்ண எண்ணி கூண்டுக்குள் அது போக கூண்டு உடனே மூடிக் கொண்டது.

சிங்கம் கூண்டுக்குள் மாட்டிக்கொண்டதால் இப்போது அதன் எண்ணம் ஆட்டின் மீது செல்லாமல் தான் தப்பிக்கும் வழியை நாடியது.


கூண்டைப் பற்றி முன்னமே அறிந்திருந்த ஆடு...சிங்கத்திடம் ..' சிங்கமே..உன்னை நான் காப்பாற்றுகிறேன் ஆனால் நீ வெளியே வந்ததும் என்னைக் கொல்லக்கூடாது' என்றது. சிங்கமும் அவ்வாறே உறுதி அளித்தது...கட்டியிருந்த ஆட்டை விடுவித்தது.

ஆடு தாவித்தாவி ...கூண்டின் கதவைத்திறந்தது. வெளியே வந்தன சிங்கமும்..ஆடும்.

உடன் ...சிங்கம் ஆட்டைக் கொல்லப்பார்த்தது. ஆடோ ..'உன்னை நான் காப்பாற்றினேன்.அதற்காக நீ அளித்த உறுதி மொழியை மீறலாமா:,,என்றது.

'அப்போது என் உயிர் முக்கியம்..இப்போது என் உணவு முக்கியம்' என்றது சிங்கம்.

அப்போது அந்த வழியே வந்த நரியைப் பார்த்து ..ஆடு நரியை நீதி கேக்கலாமா...? என்றது.சிங்கமும் ஒப்புக்கொண்டது.
நடந்த விவரங்களை அறிந்த நரி ....'எனக்கு நீங்கள் சொல்வது சரிவர விளங்கவில்லை......முதலில் சிங்கம் கூண்டில்
எந்நிலையில் இருந்தது; என்றது.

சிங்கமும் கூண்டுக்குள் சென்று ' இந்நிலையில் தான் ' என்றது.

மின்னல் வேகத்தில் நரி கூண்டின் கதவை மூடியது.பின்னர் ஆட்டைப் பார்த்து ' உன்னை உண்ணும் சிங்கத்திற்கு உதவலாமா?'
என்றது.

ஆடு நரிக்கு நன்றி சொல்லிவிட்டு விரைந்தது.

நாமும் ஒருவருக்கு உதவும் முன் அவருடைய தராதரம் அறிந்து அதற்கேற்ப உதவவேண்டும்

அதுபோன்று ஒருவருக்கு நாம் கொடுக்கும் உறுதி மொழியையும் தவறக்கூடாது.சிங்கம் உறுதி மொழியை தவறியதால் தான் அவதிக்குள்ளானது.

Thursday, November 1, 2012

112 - கடவுளும் காற்றும் (நீதிக்கதை)





ஒரு நாள் மழையும் புயலுமாக இருந்தது. பலத்தக் காற்று வீசி பல மரங்கள் முறிந்து வீழ்ந்தன. மக்களும் அவதிக்குள்ளாயினர்.
அப்போது பலர் ' காற்று இப்படி வீசுகிறதே' என காற்றை சாடினர்.

இதனால் காற்று மனம் வருந்தி, கடவுளிடம் சென்று, ' இறைவா...நான் மனிதர்க்கு நன்மையே செய்கிறேன்.அவர்கள் உயிர் வாழும் மூச்சாகவும் உள்ளேன்.ஆனால் இதையெல்லாம் மறந்து மக்கள் என்னை ஏசுகின்றனரே ". என்றது.

அதற்கு கடவுள்... ' எப்போதும் மனிதர்க்கு உதவும் வரை புகழுண்டு.ஆனால் அவர்களுக்கு தீங்கிழைக்கும் போது திட்டு தான் கிடைக்கும்.உன்னை கோபமாகத்தான் பேசுவார்கள்' என்றார்.

அவர் மேலும் சொன்னார் ' நீயே புல்லாங்குழலில் நுழைந்து இசையாய் வெளியேறினால் மக்கள் மகிழ்கின்றனர். உதைப்பந்தில் அடைபட்டுக் கிடக்கும்போது அவர்களாலேயே உதைபடுகிறாய்.இதிலிருந்து என்ன தெரிகிறது...நீ மனிதனுக்கு பயன்படாமல் அடைத்துக் கிடந்தால் உதைபடுகிறாய்.அது போல் தான்...உன்னால் தீமை நிகழும்போது மனிதர்களின் ஏச்சுக்கும்,பேச்சுக்கும் ஆளாகிறாய்' என்றார்.

அது முதல் காற்று தன்னால் முடிந்தவரை மக்களுக்கு சேவையே செய்வேன் என்று குளிர்ந்து வீச ஆரம்பித்தது.

நமக்கும் யாரேனும் தீங்கிழைத்தாலும், ஏசினாலும்,அவர்களுக்கு நன்மையே செய்யவேண்டும்.

Thursday, August 30, 2012

111. " பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் " (நீதிக்கதை)




முருகன் ஒரு கடவுள் பக்தன்.
தமக்கு என்ன வேண்டுமானாலும் அந்த இறைவனை வேண்டினால் போதும் என எண்ணுபவன்.

பல நாட்களாய் அவன் கடவுளை தன் வீட்டிற்கு விருந்து உண்ண வரும்படி வேண்டிக்கொண்டிருந்தான்.

ஒரு நாள் கடவுள் அவன் முன் தோன்றி அன்று இரவு விருந்துண்ண அவன் வீட்டிற்கு வருவதாகக் கூறினார்.

முருகனும் தடபுடலாய் விருந்து ஏற்பாடு செய்தான்.

அவன் இறைவனுக்காக காத்திருக்கையில்....ஒரு வயதான பிச்சைக்காரர்..' ஐயா பசிக்குது. உணவு கொடுங்கள் ' என்று கேட்டார்.

' கடவுள் என் வீட்டிற்கு வரும் நேரம்...நீ இங்கே இருக்காதே..போ..போ..' என பிச்சைக்காரரை விரட்டினான் முருகன்.

ஆனால் இரவு கடவுள் விருந்துண்ண முருகன் வீட்டிற்கு வரவில்லை.

அடுத்த நாள் முருகன் ...இறைவனிடம் " நேற்று ஏன் வரவில்லை" என வினவினான்.

இறைவனும் ...' நான் சொன்னபடி நேற்று வந்தேன்..பிச்கைக்காரர் உருவில்....நீ தான் விரட்டி விட்டாய்' என்றார்.

பின் ..மனிதர்களுக்கு நீ செய்யும் தொண்டே எனக்கு செய்யும் தொண்டு என்று உணர்ந்து கொள் என்றார் கடவுள்.

அன்று முதல் முருகனும் தன்னால் இயன்றவரை ஏழை மக்களுக்கு உதவி வந்தான்.

Wednesday, April 18, 2012

110. நம்பிக்கை துரோகம் கூடாது (நீதிக்கதை)




பணக்காரன் ஒருவன் வெளியூருக்கு செல்ல வேண்டியிருந்தது.அதனால் தன் சொத்துக்களை பாதுகாக்க தன் நண்பன் மாணிக்கம் என்பவனை நம்பி ஒப்படைத்துவிட்டு சென்றான்.

பணக்காரனின் நிலங்களின் நடுவே ஒரு குளம் இருந்தது.அக்குளத்தில் பலவகையான மீன்கள் வளர்க்கப்பட்டன.

ஒரு நாள் ...மீனுக்கு ஆசைப்பட்ட மாணிக்கம்..வலைவீசி மீன்களைப் பிடித்தான்.அச்சமயம் ஊருக்கு சென்றிருந்த பணக்காரன் திரும்பி வந்தான்.

தன் சொத்துக்களை பாதுகாக்க வேண்டி அமர்த்தப்பட்ட தன் நண்பன் மாணிக்கம் குளத்தில் மீன்களைபிடிப்பதைக்கண்டு " மற்றவர்கள் தவறு செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய நீயே தவறு செய்கிறாயே?" என்று கேட்டுவிட்டு அவனை வேலையிலிருந்து நீக்கி விட்டார்.

மாணிக்கம் ..தன்னை நம்பிய பணக்காரனுக்கு துரோகம் செய்து விட்டதை எண்ணி பின்னர் வெட்கமடைந்தான்.

நாமும்...நம்மை நம்பி பிறர் ஒப்படைக்கும் காரியங்களை நம் காரியங்களைப்போல செய்யவேண்டும்.

நம்மை நம்பியவர்களை ஏமாற்றக்கூடாது.

Thursday, April 5, 2012

109. உள்ளதும் போய்விடும்...(நீதிக்கதை)




ஒரு கொக்கு ஒன்று நதிக்கரையில் நின்றபடியே...நீரில் மீன் வரும்போது கொத்தித்தின்ன காத்திருந்தது.

பல சிறிய மீன்கள் நதியில் கொக்கின் கண்ணில் பட்டாலும்....அது பேராசையுடன் பெரிய மீன் வருகைக்குக் காத்திருந்தது.

அப்போது பெரிய மீன் ஒன்று ஆற்றில் வர ...அதைக் கொத்தி விழுங்கியது கொக்கு...ஆனால் கொக்கின் தொண்டை சிறியதாய் இருந்ததாலும் ....மீன் பெரியதாய் இருந்ததாலும் மீன் கொக்கின் தொண்டையில் அகப்பட்டுக்கொண்டது.

மீனை துப்பவும் முடியாமல்......விழுங்கவும் முடியாமல் ...மூச்சுத் திணறிக் கொக்கு மயங்கி விழுந்தது,

அதைப் பார்த்துக் கொண்டிருந்த மற்றொரு கொக்கு ..' என்னைப் போல சின்ன மீன்கள் ஒன்றிரண்டை கொத்தி சாப்பிடாமல் பேராசையுடன் .....பெரிய மீனை விழுங்கின உனக்கு
இந்த தண்டனை தேவை தான்' என்றது.

நாமும்...நமக்கு கிடைக்கும் பொருளை வைத்து சந்தோஷம் அடைய வேண்டுமேயன்றி பெரும் பொருள் வேண்டி பேராசைப்பட்டால் உள்ளதும் போய்விடும்.


Saturday, March 17, 2012

108. இறைவனின் பரிசு (நீதிக்கதை )




குமரனும்,சரவணனும் நண்பர்கள்...குமரன் வகுப்பில் படு சுட்டி....எதிலும் முதல் மாணவனாகத் திகழ்ந்ததுடன் ...அனைவரிடமும் நல்ல பெயரையும் எடுத்தவன்.

சரவணனோ..நேர் எதிர்.படிப்பிலும் சுமார்...அவ்வப்போது...சிறு சிறு திருடுகளிலும் ஈடுபட்டு வந்தான்.

ஒரு நாள் சரவணனின் தந்தை குமரனிடம்..' உன் நண்பன் சரவணனை திருத்த வேண்டியது உன் கடமை அல்லவா.....' என்றார்.

அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டான் குமரன்.

ஒரு நாள் வகுப்பில்...பக்கத்து நண்பன் ஒருவன் பையிலிருந்து ...பணத்தை சரவணன் திருடுவதை...குமரன் பார்த்துவிட்டான்.
சரவணன் உடன் குமரனிடம் ' குமரா...இதை நீ ஒருவன் பார்த்துவிட்டாய்...இதை யாரிடமும் சொல்லிவிடாதே...இதுவரை நான் திருடுவதை யாரும் பார்த்ததில்லை...
இன்று இத்திருட்டு நம் இருவருக்கு மட்டுமே தெரியும்' என்றான்.

உடன் குமரன்..'சரவணா..நீ அப்படித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறாய்.இதுவரை நீ செய்த திருட்டுகள் உனக்கு மட்டுமே தெரியும் என்று.
நீ செய்வதை,சொல்வதை ..இன்னொருவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்.அதை மறந்துவிடாதே...இன்று..இத்திருட்டு ..என்னையும் சேர்த்து மூவருக்குத் தெரியும்" என்றார்.

' யார்....யார்...; என பயத்துடன் கேட்டான் சரவணன்.'

 "நாம் செய்யும் நல்லது..கெட்டது எல்லாவற்றையும் அவன் நம்முடன் இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறான்....
அவன் நம் செயலுக்கு ஏற்ப பின்னாளில் தண்டனையைக் கொடுப்பான். அவன் தான் இறைவன் "' என்றான். குமரன்.

குமரன் சொல்வதுபோல ....நாம் செய்யும் எல்லாவற்றையும் இறைவன் பார்த்துக்கொண்டிருக்கிறான்.
அதற்கான பயனை நமக்கு பரிசாக அளிக்கிறான்.

Monday, February 27, 2012

" சிறுவர் உலகம் "....புத்தக வெளியீடு




" சிறுவர் உலகத்தில் எழுதிய முதல் 54  நீதிக்கதைகள் வானதி பதிப்பகத்தாரால் "சிறுவர் உலகம் " என்ற பெயரிலேயே முதல் பாகமாக வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அனைவரிடமும் பகிர்ந்து கொள்கிறேன்.

புத்தகம் பற்றிய விவரம் வருமாறு:

புத்தகத்தலைப்பு சிறுவர் உலகம் - 1 (நீதிக்கதைகள்)

வெளியீட்டாளர் வானதி பதிப்பகம்
                       23. தீனதயாளு தெரு
                       தி.நகர். சென்னை- 17.
                       ph.24342810/ 24310769

108 பக்கங்கள் விலை ரூபாய் 50/-

மீதியுள்ள கதைகள் இரண்டாவது பாகமாக விரைவில் வெளிவர உள்ளது.

Saturday, February 18, 2012

107. அச்சம் கலந்த மரியாதை..(நீதிக்கதை)




அது ஒரு அழகிய கிராமம்.கிராமத்தின் வெளியே ஒரு ஆலமரம் இருந்தது.அதன் அடியில் ஒரு பாம்பு புற்றில் பாம்பு ஒன்று வாழ்ந்து வந்தது.

அந்த பாம்பு..தன்னை அடிக்க வருபவர்களை தற்காப்புக்காக கடிக்கும்.ஆகவே மக்கள் யாரும் அந்த புற்றிடம் செல்லமாட்டர்கள்.

ஒரு நாள் ஒரு ஞானி வந்து மரத்திடம் அமர்ந்தார்.அவர் தன்னை துன்புறுத்த வந்ததாக எண்ணிய பாம்பு...அவரை கடிக்க வந்தது...ஆனால் அந்த ஞானியைப் பார்த்ததும்
அவர் காலடியில் விழுந்து எழுந்தது.

மகான் பாம்பிடம்," நீ நிறைய பேரைக் கடித்து நிறைய பாவங்களைத் தேடிக்கொண்டாய்..இனி யாரையும் கடிக்காதே..' என்றார்.

அந்த மகான் சென்றதும்...அன்று முதல் பாம்பு யாரையும் கடிப்பதில்லை.

அது சாதுவாகி விட்டதால்..அதைக் கண்டதும் கிராம மக்கள் அதன் மீது கற்களை வீசி காயப்படுத்தினர்.உடலெங்கும் காயத்துடன் தன் பொந்தினுள் சென்று மறைந்தது பாம்பு.

சில நாட்கள் கழித்து, மீண்டும் அந்த ஞானி வந்தார்.அவர் வந்தது தெரிந்த பாம்பு புற்றிலிருந்து வெளியே வந்து அவரை வணங்கியது.
பின் " ஐயா...நீங்கள் சொன்ன அறிவுரையைக் கேட்டு..நான் யாரையும் கடிக்காமல் சாதுவாய் இருந்ததால் ..மக்களால் கொடுக்கப்பட்ட காயங்களைப் பாருங்கள்" என்றது.

அதற்கு அந்த ஞானி ' முட்டாள் பாம்பே நான் கடிக்காதே என்று தான் சொன்னேன்....சீற வேண்டாம் என்று சொல்லவில்லையே.நீ சீறியிருந்தால் அவர்கள் பயந்து உன்னை நெருங்கி இருக்க மாட்டார்கள்' என்றார்.

நாமும் யாருக்கும் தீங்கு செய்யக்கூடாது.அதே சமயம் யாரும் நமக்கு தீங்கு செய்யக் கூடாது என்பதால்..அவர்கள் நம்மிடம் அச்சம் கலந்த மரியாதை ஏற்படும் வண்ணம் நடந்து கொள்ளவேண்டும்.இல்லையேல் நாம் இளிச்சவாயர்களாக ஆகிவிடுவோம்.

Friday, February 10, 2012

106. நியாயமான ஆசையே வேண்டும். (நீதிக்கதை)




ஒரு ஊரில் வயதான கணவனும் மனைவியும் வறுமையில் வாழ்ந்து வந்தனர்.

அவர்கள் இறைவனிடம் ' கடவுளே..எங்களது முதுமைக் காலத்தில் ஏன் இப்படி வறுமையில் வாட விடுகிறாய் ' என முறையிட்டனர்.

ஒரு நாள் இறைவன் அவர்கள் முன் தோன்றி, ஒரு வாத்தை அவர்களுக்கு கொடுத்துவிட்டு ' தினமும் இந்த வாத்து ஒரு பொன் முட்டையிடும்...அதை விற்று உங்கள் வறுமையை போக்கிக் கொள்ளுங்கள்' என்றார்.

அவர்களும் அப்படியே செய்து வர அவர்கள் வறுமை சிறிது சிறிதாக மறைந்தது.

வறுமை மறைந்ததும் ..அது நாள் வரை அவர்களுக்கு இல்லாத பேராசை உண்டானது.

தினமும் ஒரு பொன் முட்டையிடும் இந்த வாத்தை அறுத்தால்..அதனுள் இருக்கும் அனைத்து பொன் முட்டைகளையும் எடுத்துக் கொண்டு ..நாம் பெரும் பணக்காரர்கள் ஆகி விடலாம் ' என்று எண்ணினர்.

அதனால் அந்த வாத்தின் வயிற்றைக் கத்தியால் கிழித்தனர்.

ஆனால் அந்த வாத்தின் வயிற்றில் பொன் முட்டைகள் இல்லாததுடன் எல்லா வாத்துகள் போல எலும்பும் சதையுமே இருந்தன.

பேராசையால் முட்டாள் தம்பதிகள் தினமும் அடையும் லாபத்தை இழந்தனர்.

மீண்டும் வறுமையால் வாட ஆரம்பித்தனர்.

பேராசை பெரு நஷ்டம்.

நாமும் எந்த நிலையிலும் பேராசை படக்கூடாது.

நம் நியாயமான ஆசைகளை  மட்டுமே இறைவன் நிறைவேற்றிவைப்பார்,

Tuesday, January 31, 2012

105. " பச்சோந்தியாய் இராதே " (நீதிக்கதை)




ஒரு மரத்தினடியில் ஒருவன் பச்சோந்தி ஒன்றைப் பார்த்தான்.அது பழுப்பு நிறமாய் இருந்தது.

அவன் தன் நண்பனிடம் ' நான் பச்சோந்தியைப் பார்த்தேன்.அது பழுப்பு நிறம் ' என்றான்.

அந்த நண்பனோ..'இல்லை...இல்லை..அது பச்சை நிறம் நான் பார்த்திருக்கிறேன்' என்றான்.

இவற்றைக் கேட்டுக்கொண்டிருந்த மற்றவன் ' இல்லை அது நீல நிறம்' என்றான்.

வேறொருவன் ' அது சிவப்பு நிறம் ' என்றான்.

அனைவரும் ஒருவருக்கொருவர் இது சம்பந்தமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த ஒருவர் இவர்களின் சண்டைக்கான காரணம் கேட்க ...ஒவ்வொருவரும் தான் பார்த்த பச்சோந்தியின் நிறம் பற்றிக் கூறினர்.

உடனே அவர்..'நீங்கள் சொல்லுவது எல்லாம் உண்மையே..பச்சோந்தி ...அவ்வப்போது அது இருக்குமிடத்திற்கு ஏற்ப தன் நிறத்தை மாற்றிக் கொள்ளும்' என்றார்.

இது கேட்டு நண்பர்கள் ஆச்சிரியமடைந்தனர்.

அவர் மேலும் கூறினார்.' சமயத்திற்கு ஏற்றாற் போல நிறம் மாறும் பச்சோந்தி மாதிரி நாம் இருக்கக் கூடாது.எப்போதும்..எந்த இடத்திலும் நல்ல குணத்தோடு  பிறர் மீது
குறை கூறாது..அடக்கத்துடன் ..மற்றவர் மீது அன்புடன் நாம் இருந்து கொள்ளவேண்டும்.

 "பச்சோந்தி போன்று நேரத்துக்கு தக்கபடி மாறக்கூடாது" என அறிவுரை கூறினார்.

Wednesday, January 25, 2012

104. ' மூடர்களை திருத்த முடியாது' (நீதிக்கதை)



ஒரு பணக்காரரிடம் முட்டாள் வேலைக்காரன் ஒருவன் இருந்தான்.

அவன்..அந்த பணக்காரரைத் தேடி யார் வந்தாலும் பணக்காரரிடம் ' ராமசாமி வந்திருந்தார்...கிருஷ்ணசாமி வந்திருந்தார் ' என்பான்.

இதனால் வருபவர்கள் தங்களுக்கு வேலைக்காரன் மரியாதை தருவதில்லை என்று பணக்காரரிடம் முறையிட்டனர்.

பணக்காரர் உடனே வேலைக்காரனை அழைத்து ...'இனி என்னைத் தேடி வருபவர்களுக்கு நீ மரியாதை தர வேண்டும்..அவர்களை திரு.ராமசாமி..திரு.கிருஷ்ணசாமி என்று சொல்லவேண்டும்' என்றார்.

முட்டாள் வேலைக்காரன் ..அதற்கு பிறகு யார் வந்தாலும்..எது வந்தாலும் அதற்கு முன் ..திரு.. திரு.. என்ற அடை மொழியைச் சேர்த்தான்.

சில நாட்களில்....வேலைக்காரனின் ' திரு' பழக்கம் பணக்காரருக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

மீண்டும் வேலைக்காரனை கூப்பிட்டு ' இனி..உன் வாயால் ' திரு' என்ற சொல்லைக் கேட்டால் ...உன்னை வேலையை விட்டு நிறுத்தி விடுவேன் ' என்றார்.

வேலைக்காரனும் பயந்தபடியே ' சரி' என தலையை ஆட்டினான்.

ஒரு நாள் ..இரவு பணக்காரர் வீட்டிற்கு திருடர்கள் வந்தனர்....பணக்காரரின் அனைத்து பணம்,நகைகளை கொள்ளையடித்து ஓட முற்பட்டனர்.

அதை வேலைக்காரன் பார்த்துவிட்டான்.. வேகமாக பணக்காரர் படுக்கை அறைக் கதவை தட்டினான்.அவரும் கதவைத் திறந்தார்.உடன் வேலையாள் ' டன் வந்து டிண்டு '
போனான் என்றான்.

பணக்காரருக்கு என்ன சொல்கிறான் என்று புரியவில்லை.பலமுறை கேட்டும் .....நான் சொன்னால் என்னை வேலையை விட்டு துரத்தி விடுவீர்கள்' என்றான்.

பணக்காரரும் ..' உன்னை துரத்த மாட்டேன்..சொல்' என்றார்.

' திருடன் வந்து திருடிண்டு போனான் ' என்றான்...அப்போதுதான் பணக்காரருக்கு ' திரு ' என்ற வார்த்தையை சொல்லக் கூடாது என்று சொன்னது ஞாபகம் வந்தது.

மூடர்களை திருத்துவது என்பது மிகவும் கடினம் என்று பணக்காரர் உணர்ந்தார். தன் விதியை நொந்து கொண்டார்.

நாமும் மூடர்களுக்கு அறிவுரை சொல்லும்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.

Tuesday, January 17, 2012

103. " கண்ணுடையர் கற்றோர் " (நீதிக்கதை)




படிக்காமல்...சோம்பேறியாய் ஊரைச் சுற்றிக்கொண்டிருந்தான் மாடசாமி...

அவன் ஒரு நாள் தெருவில் நடந்து கொண்டிருந்தபோது...அவனுக்கு இணையாக...அந்த ஊர் பள்ளிக்கூடத்தின் தலைமையாசிரியரும் வந்து கொண்டிருந்தார்...

அவரைப் பார்த்த மக்கள்...அவருக்கு வணக்கம் சொன்னனர்.

தலையை அசைத்து தலைமை ஆசிரியர் அந்த வணக்கங்களை ஏற்றுக் கொண்டிருந்தார்.அதையெல்லாம் கவனிக்காத மாடசாமி மக்கள் தன்னைத்தான் வணங்குவதாக எண்ணி கர்வம் அடைந்தான்.

இது தினசரி நடந்து கொண்டிருந்து.

ஒரு நாள் தலைமை ஆசிரியர் சற்று நேரம் கழித்து பள்ளிக்கு செல்ல வேண்டியிருந்தது.ஆகவே தாமதமாக புறப்பட எண்ணினார்.

இதை அறியாத மாடசாமி...தெருவில் நடக்க ஆரம்பித்தான்...ஆனால் ஒருவரும் கண்டுகொள்ளவில்லை.யாரும் வணக்கமும் சொல்லவில்லை.

இதனால் கோபம் அடைந்தவன்...'நீங்கள் எல்லாம் எனக்கு ஏன் வணக்கம் சொல்லவில்லை' என மக்களிடம் கேட்டான்...

அதைக்கேட்டு சிரித்த மக்கள்....;மூடனே ...நாங்கள் ஏன் உனக்கு வணக்கம் சொல்ல வேண்டும்....நீ என்ன படித்தவனா...அல்லது உழைத்து சம்பாதிப்பவனா...நீ படிக்காத சோம்பேறி....தினசரி உன் தேவைகளுக்கே பிறரை எதிர்பார்ப்பவன்' என்றனர்.

அப்போதுதான் மடசாமிக்கு தான் செய்த தவறுகள் புரிய ஆரம்பித்தது.இது நாள் வரை மக்கள் மதித்தது தலைமை ஆசிரியரை என்று.

இனி சோம்பித் திரியாமல்...முடிந்தவரை படிக்க ஆரம்பிப்பேன் ...உழைத்து சம்பாதிப்பேன் என்றான்....

பின்னால் தலைமை ஆசிரியர் அப்போது வர மக்களுடன் சேர்ந்து அவனும் வணக்கம் சொன்னான்.

படிப்பறிவும்,கர்வம் இல்லாமையும்,கோபம் இல்லாமையும்,உழைப்பும் ஒவ்வொருவரையும் வாழ்க்கையில் உயர்த்திவிடும்.

' கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
 புண்ணுடையர் கல்லா தவர்.'

கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார்.கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும் என்கிறார் வள்ளுவர்.

Friday, January 6, 2012

102. மூத்தோர் சொல் மதிப்போம்...(நீதிக்கதை)



ஒரு பெரிய மரத்தினடியில் பாம்பு புற்று ஒன்று இருந்தது.

அம்மரத்தில் காகம் ஒன்று கூடு கட்டி குஞ்சு பொரிக்க எண்ணியது.

அப்போது ஒரு மூத்த காகம் ஒன்று...'அந்த மரத்தினடியில் பாம்பு புற்று இருக்கிறது.ஆகவே அம்மரத்தில் கூடு கட்டாதே' என்றது.ஆனால் மற்ற காகம் அதைக் கேட்கவில்லை.'

அடுத்த நாள் கூட்டினுள் முட்டையிட்டுவிட்டு காகம் உணவிற்காக வெளியே சென்றது.

காகம் இல்லாத நேரம் பொந்திலிருந்து ...பாம்பு ஒன்று மரத்திலேறி கூட்டினுள் இருந்த முட்டையைத் தின்றுவிட்டது.

வழக்கமாய் இது நடந்து கொண்டிருந்தது.அப்போதுதான் மூத்த காகத்தின் புத்திமதியை தான் கேட்கவில்லை என நினைத்தது.

உடன் அதனிடம் சென்று நடந்ததைக் கூறி....ஆலோசனைக் கேட்டது.

மூத்த காகம் ...' நான் அப்போதே கூறினேன் நீதான் கேட்கவில்லை ..சரி...இதற்கு ஒரு வழி பண்ணுகிறேன் என்று சொல்லிவிட்டு....அந்த நாட்டு ராணி குளிக்கும் தடாகத்திற்குச் சென்றது.

ராணி தன் முத்துமாலையைக் கழட்டி கரையில் வைத்துவிட்டு குளிக்கச்  சென்றாள். மூத்த காகம் அந்த மாலையை எடுத்துக்கொண்டு பறந்தது.

ராணி கூச்சலிட, வெளியேயிருந்த சேவகர்கள் உடனே காகத்தின் பின்னே ஓடினர்.மூத்த காகம் மரத்தினடியில் வந்து மாலையை புற்றினுள் போட்டது.

வந்த சேவகர்கள் பாம்பு புற்றை வெட்டினர். மாலையை எடுக்கும்போது பாம்பு வெளியே வந்தது.அதையும் வெட்டிக் கொன்றனர்.

அதற்கு பின் காகம் இடும் முட்டைகள் திருட்டு போகாமல் குஞ்சுகளாக வெளியே வந்தன.

நாமும் நம்மைவிட அனுபவசாலிகள் கூறும் அறிவுரை படி நடந்தால் நமக்கும் நல்லதே நடக்கும்.