Tuesday, July 9, 2013

126. " தெரியாததை தெரியும் என வேண்டாம் " (நீதிக்கதை)



சரவணன் படிக்கும் பள்ளியில் அன்று கல்வி அதிகாரி வருவதாக இருந்தது.

சரவணன் வகுப்பு ஆசிரியருக்கு ஒரே பதட்டம்.அவர் மாணவர்களைப் பார்த்து,' அதிகாரி உங்களை ஏதேனும் கேளவிகள் கேட்கச் சொன்னால்,,நான் கேட்கிறேன்..அவ்வாறு கேட்கும்போது விடை தெரிந்தவர்கள் வலதுகையையும்,தெரியாதவர்கள் இடது கையையும்
தூக்குங்கள்.நான் உடனே வலது கையை தூக்கியவர்களிடம் விடை கேட்கிறேன். இப்படி செய்வது மூலம் நம் பள்ளிக்கும்,எனக்கும்,உங்களுக்கும் அதிகாரிகளிடம் நல்ல பெயர் கிடைக்கும்' என்றார்.
மாணவர்களும் ' சரி' என்றனர்.

கல்வி அதிகாரி வந்தார்.
ஆசிரியரை ஏதேனும் கேள்வி கேட்கச் சொன்னார்.
ஆசிரியர் ஒரு கேள்வியைக் கேட்டதும்,சிலர் வலது கையையும்,சிலர் இடது கையையும் தூக்கினர்.
ஒரு மாணவன் மட்டும் எந்தக் கையையும் தூக்கவில்லை.

உடனே அதிகாரி, அந்த மாணவனிடம்,' உனக்கு விடை தெரியவில்லையா? நீ ஏன் கையை தூக்கவில்லை? என்றார்.
உடனே அந்த மாணவன் 'ஐயா..எனக்கு எது வலது கை...எது இடது கை என ஆசிரியர் சொல்லவில்லை..' என்றான்.

ஆசிரியர் விழிக்க..அதிகாரி நடந்ததை அறிந்து ,ஆசிரியரிடம் ' நல்போதனை செய்யவேண்டிய ஆசிரியர் இப்படி செய்யலாமா ?' என்று கடிந்துகொண்டு, மாணவர்களிடம், ' நமக்கு தெரியாததை ஒப்புக்கொண்டு,பின் அதைப்பற்றி தெரிந்து கொள்ளவேண்டும்,எல்லாம் தெரிந்தது போல நடந்துகொண்டு பிறரை ஏமாற்றினால் இறுதியில் ஏமாறுவது நாமாக இருக்கும்' என்றார்.