Saturday, June 6, 2015

150- மூட நம்பிக்கை

                       

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர் டாக்டர் அம்பேத்கர்.

அவர் ஒருநாள் தனது நண்பர் ஒருவருடன் வீதியில் சென்று கொண்டிருந்தார்.அப்போது ஒருவன் கரடி ஒன்றை வைத்துக் கொண்டு, அதன் முடி ஒன்றினை வாங்கி வீட்டில் வைத்து கொண்டிருந்தால் பணக்காரராகிவிடலாம் என்று கரடியின் முடியை விற்று கொண்டிருந்தான்.

கரடியின் முடியை வாங்கக் கூட்டம் அலை மோதியது.அம்பேத்கரின் நண்பரும் முடியை வாங்கச்  சென்றார்.அவரை தடுத்து நிறுத்திய அம்பேத்கர், "நீ அந்த முடியை வாங்கினால் என்ன ஆவாய்?" என்றார்.

நண்பர், "நானும் பணக்காரனாக ஆவேன்" என்றார்.

உடன் அம்பேத்கர், :நீ கரடியின் ஒரு முடியை வாங்கினால் பணக்காரன் ஆவாய். சரி, நான் ஒப்புக் கொள்கிறேன்.ஆனால் அந்த வியாபாரி அந்தக் கரடியையே வைத்திருக்கின்றானே...அவன் ஏன் பணக்காரன் ஆகாமல் இப்படித் தெருவில் அதன் முடியை விற்று பிழைத்துக் கொண்டிருக்கின்றான்?" என்றார்.

அப்போதுதான் நண்பரும் தான் அப்படி நினைத்தது மூடநம்பிக்கை என்பதை உணர்ந்தார்.

நாமும் , ஒருவர் சொல்வதைக் கெட்டு, அதைப் பற்றி சிந்திக்காமல் மூட நம்பிக்கையுடன் செயல் படக் கூடாது.நம் அறிவைப் பயன்படுத்தி அதற்கேற்ப நடக்க வேண்டும்.

இதைத்தான் வள்ளுவரும்,

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

என்றார்.

(எந்தவொரு பொருள் குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடமை ஆகும்.)

Friday, June 5, 2015

149-ஓட்டைப்பானையின் சாதனை

                         

சரவணன் தோட்ட வேலை செய்பவன்.

ஒரு நீளமான கம்பின் இரு முனைகளிலும் பெரிய பானைகளைக் கட்டித் தொங்க விட்டு, அதில் தொலை தூரத்திலிருந்து தண்ணீர் சுமந்து வந்து தன் செடிகளுக்கு ஊற்றி வந்தான்.

அந்த கம்பின் இரு முனைகளில், ஒரு முனையில் இருந்த பானையின் அடியில் ஒரு  ஓட்டை இருந்தது.அதனால் சரவணன் தூக்கி வருன் நீரில் பாதி வழியிலேயே சிந்தி வந்தது,.

இதனால், அந்த ஓட்டைப் பானையைப் பார்த்து அடுத்த முனையில் இருந்த நல்ல பானை கேலி செய்து வந்தது.

ஒருநாள், சரவணனிடம் அவனது நண்பர் ஒருவர் "ஓட்டைப் பானையை மாற்று" என்றார்.

அதற்கு சரவணன், "ஐயா...நானும் அது பற்றி சிந்தித்தேன்.ஆனால் நான் தண்ணீர் கொண்டு வரும் வழியில் அழகிய பூச்செடிகள் உள்ளன.பானையில் இருந்து சிந்தும் நீர் அப்பூச்செடிகளில்தான் விழுகிறது. அதனால் அச்செடிகள் வளமாக வளர்ந்து, அழகாக பூத்திருக்கின்றன.இந்த ஓட்டைப் பானைத்தான் அதை சாதித்திருக்கிறது" என்றான்.

இது கேட்டு...ஓட்டைப் பானை செய்து வந்த நற்செயலை எண்ணி நல்லப் பானை அதைக் கேலி செய்வதை நிறுத்தியது.

நாமும், ஒருவரது அருமை, பெருமைகள் தெரியாது யாரையும் எடை போடக்கூடாது.

Thursday, June 4, 2015

148- நம்பிக்கை

                     

கந்தனுக்கு முழு ஆண்டுத் தேர்வு நெருங்க நெருங்க பயம் அதிகரித்தது.

"அம்மா! நான் நன்கு படித்திருந்தாலும்...பரீட்சை எழுத பயமாய் இருக்கிறது" என்றான்.

அதற்கு அம்மா, "பயப்படாதே! நீ நன்றாகவே தேர்வு எழுதுவாய்.வேண்டுமானால் என் கையிலுள்ள இந்த நாணயத்தினால் டாஸ் போடலாம்.தலை விழுந்தால், நீ நல்ல மதிப்பெண்களைப் பெறுவாய்" என்று சொல்லியபடியே, தன் கையிலிருந்த நாணயத்தை சுண்டி டாஸ் போட்டார்.

தலையே விழுந்தது.

அதைக் கண்ட கந்தன் மகிழ்ந்து, முழு தைரியத்துடன் தேர்வுகளை எழுதினான்.

ரிசல்ட் வந்தது..எல்லா பாடங்களிலும் 95 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருந்தான் அவன்."அம்மா! அன்று டாஸில் தலை விழுந்ததால்தான் நான் வெற்றி பெற்றேன்" என்றான்.

அதற்கு அம்மா,  அந்த நாணயத்தை அவனிடம் காட்டினார். நாணயத்தின் இரு பக்கமுமே தலை இருந்த அதிசய நாணயம் அது."கந்தா ! நீ வென்றது டாஸால் அல்ல.தலை விழுந்த நம்பிக்கையால்.வாழ்வில் வெற்றி பெற கடின உழைப்புடன் நம்பிக்கை வேண்டும்." என்றார்.

கந்தனும் நம்பிக்கையின் அவசியத்தைப் புரிந்து கொண்டான்.

நீங்களும் அப்படித்தானே!

Tuesday, June 2, 2015

147 - குற்றம் பார்க்கின்....

                               

ஒரு காட்டில் பெரிய மரம் ஒன்று நன்கு தழைத்து வளர்ந்து, கனிகளுடன் காணப்பட்டது.அம்மரத்தில், பல பறவைகள் கூடு கட்டி, தனது குஞ்சுகளுடன் சந்தோசமாக அக்கனிகளை உண்டு வாழ்ந்து கொண்டிருந்தன.

அதே காட்டில், வஞ்சக நரி ஒன்று இருந்தது.அது எப்போதும் பிறர் மீது குற்றம் சொல்லியே வாழ்ந்து வந்தது.

ஒரு சமயம், மழையே இல்லாததால், தண்ணீர் இல்லாது அக்காட்டில் விலங்குகளும், பறவைகளும் தவித்தன.அந்த மரமும் தனது இலைகளையெல்லாம் இழந்து..எலும்புக் கூடாய் வாடிக்காணப்பட்டது.
அதனால், அம்மரத்தில் வசித்து வந்த பறவைகள் வேறு இடம் தேடிச் சென்றன...

இதுதான் சமயமென்று, நரி மரத்திடம் வந்து, "பார்த்தாயா?  நீ வளமாய் இருந்த போது உன்னையே சுற்றி வந்த பறவைகள், நீ வாடியதும் உன்னை விட்டுச் சென்று விட்டன.அவை திரும்பி வந்தால் அடைக்கலம் கொடுக்காதே" என்றது.

ஆனால், அந்த மரமோ, நரியைப் போல குறுகிய நோக்கம் கொண்டது அல்ல..அது நரியிடம், " நரியாரே! எல்லாவற்றிலும் குறை காணக்கூடாது.மழை இல்லாவிடினும், எனது ஆழமான வேர்கள் எனக்கு வேண்டிய தண்ணீர் மற்றும் ஊட்டச் சத்துகளை பூமியிலிருந்து பெற்றுத் தந்து விடும்.அதுபோன்ற வசதி, அந்தப் பறவைகளுக்குக் கிடையாது.ஆகவே..அவை உயிர் வாழ வேண்டுமாயின் வேறு இடம் தேடித்தான் செல்ல வேண்டும்" என்றது.

மரத்தின் குணத்தைப் பாருங்கள்.

நாமும் அந்த நரியைப் போல இல்லாமல், நமது சுற்றத்தினர், நட்பு ஆகியோரிடம் தேவையின்றி குறைகளைக் கூறி வெறுக்கக்கூடாது, குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பதை உணர வேண்டும்.

Saturday, May 30, 2015

146- ஒற்றுமையின் பயன்

                               

வியாபாரி ஒருவன், பொருட்கள் வாங்க மலைப்பாதையில் நடந்து கொண்டிருந்தான்.அந்தப் பாதையின் நடுவில் ஒரு பெரிய பாறை ஒன்று வழியை அடைத்துக் கொண்டிருந்தது.மேலே நடக்கவும் வழி இல்லை.

அந்தப் பாறையை நகர்த்தி வழி உண்டாக்க முயன்றான்.ஆனால், அந்தப் பாறை சிறிதளவு கூட நகரவில்லை.

"அடடா! இரவு வந்து விட்டால்...கொடிய விலங்குகள் இங்கு வரலாமே! என்ன செய்வது?" என தனது விதியை நொந்தபடியே, சுற்றி நோட்டம் இட்டான்.

அப்போதுதான்...அவனைப்போல பலர் அந்தப் பாறையை அசைக்க முடியாமல் அங்கு அமர்ந்துள்ளதைக் கண்டான்.அனைவரின் முகத்திலும் சோகம்.

அப்போது அறிவாளி ஒருவன் அவ்விடம் வந்தான்.அவனாலும், பாறையை அகற்றி வழி உண்டாக்க இயலவில்லை.உடனே அவனுக்கு " தனிப்பட்ட ஒருவனால் பாறையை நகர்த்த முடியவில்லை.அதுவே, அனைவரும் ஒன்று கூடி   முயன்றால் பாறையை அகற்றலாம்" என்று யோசனை வந்தது.

அவன் அதை அனைவரிடமும் சொல்ல, அனைவரும் முயன்றனர்.இப்போது பாறை அசைந்து கொடுத்ததுடன், நகர்ந்து மலைச் சரிவில் உருண்டது.

பாதை தெரிந்தது.

அனைவரும் ஒன்றுபட்டு முயன்றதால்....வழி கிடைத்த மகிழ்ச்சியில், அவரவர் பயணத்தைத் தொடர்ந்தனர்.

Friday, May 29, 2015

145 - படிப்பின் அவசியம்

                     

ஒரு ஊரில் படிப்பறிவு இல்லாத, சிந்திக்கும் திறனற்ற மூடன் ஒருவன் வசித்து வந்தான்.

அவனிடம் ஒரு பசு மாடு இருந்தது.அது, அவன் தினமும் போடும் தவிட்டைத் தின்று..பால் தந்தது. அந்தப் பாலை விற்று மூடன் தன் வாழ்நாளை கழித்து வந்தான்.

ஒருநாள், பசுவிற்குப் போட தவிட்டுப் பானையைத் தூக்கி வரும் போது, அப்பானைத் தவறிக் கீழே விழுந்து, உடைந்தது.அதில் இருந்த தவிடு அனைத்தும் சாக்கடையில் விழுந்து கரைந்தது.

இதைக்கண்ட மூடன்..மனம் வருத்தப்பட்டு, இறைவனிடம் வேண்டினான்.

இறைவன் அவன் முன் தோன்றி, "உனக்கு என்ன வேண்டுமோ கேள்.அதைத் தருகிறேன்' என்றார்.

சிந்திக்கும் திறனற்ற, மூடனான அவன் இறைவனிடம், "இறைவா...என் தவிட்டுப் பானை உடைந்து விட்டது.அதனால் தவிடு மொத்தமும் சாக்கடையில் கரைந்தது.ஆகவே எனக்கு உடனடியாக ஒரு பானையும், தவிடும் வேண்டும்" என்றான்.

அவனது முட்டாள் தனத்தைக் கண்டு சிரித்த இறைவன், பானையையும் தவிடையும் அளித்துவிட்டுச் சென்றார்.

அவன், படிக்காத மூளையற்ற மூடனாய் இருந்ததால், அவனுக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை இழந்தான்.

இதனால் நாம் அறியும் நீதி, ஒவ்வொருவருக்கும் படிப்பு எவ்வளவு முக்கியம் எனத் தெரிந்து கொள்ளும் அதே நேரம்...நம் மூளையை உபயோகித்து சிந்திக்கும் திறனையும்  வளர்த்து கொள்ள வேண்டும்

Sunday, April 19, 2015

144, கெடுவான் கேடு நினைப்பான் (நீதிக்கதை)


நரி ஒன்று கொழுத்த மான் ஒன்றை பார்த்தது.

' ஆஹா...இதன் உடலில் எவ்வளவு கொழுத்த இறைச்சி இருக்கிறது...இதைத் தின்றால் எவ்வளவு சுவையாக இருக்கும்' என்று எண்ணியது.

; ஆனால் இதை எப்படிக் கொல்வது? தன்னால் அது முடியாதே....இதை சூழ்ச்சியால் தான் அடைய முடியும் என்று தனக்குத்தானே கூறிக்கொண்டு மானிடம் சென்று ' மானே நீ மிகவும் அழகாக இருக்கிறாய்...சிறிது  தூரத்தில் ஒரு புல்வெளி இருக்கின்றது.அங்குள்ள புற்களை தின்றால் நீ மேலும் அழகாவாய். நான் அதற்கு ஏற்பாடு செய்கிறேன்.. நீ இந்த இடத்திலேயே இரு என்று சொல்லிவிட்டு சிங்கத்தைத் தேடி சென்றது.

அந்த சிங்கத்திடம் மானைக் காட்டினால்..அது அதை அடித்து தின்றது போக மீதத்தை தான் சாப்பிடலாம் என்று எண்ணி ' சிங்க ராஜாவே ...நான் இப்பொழுது ஒரு மானைப்பார்த்தேன். மிகவும் கொழுத்த மான்.கண்டிப்பாக அதன் இறைச்சி நன்றாக இருக்கும்.உங்களுக்காக ஒரு சிறு சூழ்ச்சி செய்து அதை ஒரு இடத்தில் நிற்க வைத்துவிட்டு வந்திருக்கிறேன்....நீங்கள் என்னுடன் வந்தால் அதைக்காட்டுகிறேன்' என்றது.

' அப்படியா மிகவும் நன்று' என்று சிங்கம் நரியுடன் செல்லத்தயாரானது.

நரியின் மீது சந்தேகம் கொண்டு ..அதைத் தொடர்ந்து வந்த மான்....நரி சிங்கத்திடம் பேசியதைக்கேட்டு ஓடி ஒளிந்தது.

மானைக் காண வந்த நரி ..அங்கே மான் இல்லாததைக் கண்டது.

' என்னிடம் பொய்யா சொன்னாய்' என்று கோபமுற்ற சிங்கம் ...நரியை அடித்துக்கொன்றது.

நாம் ஒருவருக்கு கெடுதல் செய்ய நினைத்தால் நம் செயலே நமக்கு கெடுதலை உண்டாக்கும்.

Sunday, March 22, 2015

143. நல்லவனாக இரு ......(நீதிக்கதை)



ஒரு ஊரில் சீதாராமன் என்று ஒருவன் இருந்தான்.அவன் எப்போதும் பிறருக்கு தீங்குகளையே இழைத்து வந்தான்.அதனால் அவ்வூர் மக்களும் அவனைக்கண்டால் பயந்து ஒதுங்கிச் சென்றனர்.

அவனது தந்தை பணக்காரராய் இருந்ததால்...அவன் எந்த வேலைக்கும் செல்லாமல் தன் கவனம் முழுவதையும் கெட்ட செயல்கள் செய்வதிலேயே கழித்து வந்தான்.

ஒரு நாள் திடீரென்று அவனுக்கு நல்லவனாக வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட கோவிலுக்குச் சென்று இறைவனிடம் 'ஆண்டவனே ..என்னை நல்லவனாக மாற்றிவிடு ' என்று வேண்டினான்.

இறைவன் அவன் முன் தோன்றி ' சீதாராமா..இன்றிலிருந்து இரண்டு மாதங்கள் என் கோவிலைச் சுற்றி சுத்தம் செய், .உழவாரப் பணி செய்  என்றார். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தாகம் தணிய தண்ணீருக்கு ஏற்பாடு செய். இரண்டு மாதங்களுக்கு பின் நான் வந்து உன்னை நல்லவனாக ஆக்குகிறேன் என்றார்.

அவனும் அன்றிலிருந்து கடுமையாக உழைத்து கோவிலை அழகாக ஆக்கினான்.அவனது மனம் வேறு எந்த விஷயத்தையும் நினைக்கவில்லை. மக்கள் அவனை விரும்ப ஆரம்பித்தார்கள்.

இரண்டு மாதம் கழித்து இறைவன் மீண்டும் வந்து ' சீதாராமா...இப்போது சொல்....உனக்கு இப்போது பிறருக்கு தீங்கு இழைக்கவேண்டும் என்று தோன்றுகிறதா' என்றார், அவனும் ' இல்லை ' என்றான்.

' நீ எந்த வேலையும் செய்யாமல் சோம்பித் திரிந்ததால் ...உன் உள்ளத்தில் பிறருக்கு தீங்கிழைக்கும் எண்ணம் தோன்றியது. ஆனால் இரண்டு மாதமாக ஓய்வின்றி உழைத்து பிற எண்ணங்கள் ஏதும் இல்லாமல் நல்ல காரியங்களையே செய்ததால்....உன் மனமும் மாறியது. நல்லவன் என்ற பெயரை எடுக்க ஆரம்பித்துள்ளாய்' என்றார்.

நாமும் நல்ல எண்ணங்களையும், நல்ல உழைப்பையும் வளர்த்துக் கொண்டால் நல்லவனாக போற்றப்படுவோம்.

Friday, January 9, 2015

142. இறைவனின் படைப்பில் ............. (நீதிக்கதை)




ஒரு காட்டில் ஒரு முயல் ஓடி விளையாடிக் கொண்டிருந்தது. அதை பார்த்துக் கொண்டிருந்தது ஒருஆமை....
'நம்மால் ஏற்கனவே வேகமாக போகமுடியாது...இதில்,முதுகில் வேறு பாரமாக ஓடு.
முயலைப் பார்த்து பொறாமைப் படுவதில் பயன் இல்லை....ஆண்டவனைத்தான் என்னை இப்படிப் படைத்ததற்காக நொந்து கொள்ளவேண்டும்.' என எண்ணியது.
அப்போது ....அன்று இறை எதுவும் கிடைக்காததால் அலைந்து கொண்டிருந்த சிங்கம்,விளையாடிக்கொண்டிருந்த முயலைப்பிடிக்க பாய்ந்தது.
முயல் ஒரே ஓட்டமாக ஓடி ஒளிந்தது.ஆமையோ, தன் கூட்டுக்குள் முடங்கியது
சிறிது நேரத்தில் சிங்கம் சென்றுவிட ....முயல் பயத்தில் அவ்விடம் வந்ததும், ஆமை தன் கூட்டிலிருந்து தலையை நீட்டிப் பார்த்தது.
ஒவ்வொரு விநாடியும்....மரணபயத்திலேயே முயல் வாழ்நாளை கழிக்க வேண்டியிருக்கையில்,விலங்குகளிடமிருந்து காத்துக்கொள்ள தன் முதுகிலேயே தனக்கு கூட்டையும் கொடுத்த இறைவனை நிந்தித்தது எவ்வளவு தவறு என உணர்ந்தது.
இறைவன் படைப்பில் ஒவ்வொரு உயிர்க்கும் ஒவ்வொரு தனித்தன்மை உண்டு.அந்த தனித்தன்மையை உபயோகித்து ...ஆபத்துக் காலங்களில் தப்பிக்கலாம்.
இதுவே இறைவன் கருணை என்பதை உணர்ந்தது ஆமை