Monday, February 25, 2013

120 - அவரவர் தொழில்..(நீதிக்கதை)

           


ஒரு சலவைத் தொழிலாளி இருந்தான்.அவன் தினந்தோறும் தன் கழுதையின் முதுகில் சுமைகளை ஏற்றி..குளத்திற்குச் சென்று துணிகளைத் துவைத்து...கழுதையின் மேல் வைத்து திரும்பி வருவான்.அவனுடன் அவனது செல்லப் பிராணியான நாயும் செல்லும்.

கழுதை, என்ன உழைத்தாலும்..அதை சலவைத் தொழிலாளி பாராட்டுவதில்லை.தேவையான உணவு மட்டும் அளித்து வந்தான்.

ஆனால், நாயுடன் அவன் கொஞ்சி விளையாடுவான்.தான் உண்ணுவதையெல்லாம் அதற்கும் கொடுப்பான்.நாயும் வாலை ஆட்டியவாறே..அவனிடம் பேசுவது போல குரைக்கும்.கழுதைக்கு இது ஆத்திரத்தைக் கிளப்பியது.

ஒருநாள் இரவு..

நாய் குரைப்பதைக் கேட்டு, எழுந்துவந்த சலவைத் தொழிலாளி, திருடன் ஒருவன் துணிகளைக் களவாட வந்ததையும், அவனை நாய் குரைத்து விரட்டியதையும் அறிந்து, நாயைத் தூக்கி கொஞ்சினான்.

இதையெல்லாம்..பார்த்துக் கொண்டிருந்த கழுதை, விவரம் அறியாது,  தானும் தன் முதலாளியிடம் நல்ல பெயர் வாங்க எண்ணியது.

நள்ளிரவு நேரம்...எழுந்து கத்த ஆரம்பித்தது.அதனது நாராசக் குரலைக் கேட்ட தொழிலாளி ..வெளியே வந்து, தன் தூக்கத்தைக் கெடுத்த கழுதையை நையப் புடைத்தான்.

கழுதை வேதனையுடன் முணகியது.சலவைத் தொழிலாளி படுக்கச் சென்றதும்...நாய் ஆறுதலாக கழுதையிடம் வந்து அதை நக்கிக் கொடுத்தது.பின்னர் சொன்னது,'நான் என் வேலையைச் செய்தேன்..அதற்கு பாராட்டுக் கிடைத்தது.அதுபோல நீயும்..உன் வேலையை மட்டும் ஒழுங்காகச் செய்து வா..என்றேனும் பாராட்டுக் கிடைக்கும்.தவிர்த்து இன்னொருவர் போல நீயும் இருக்க எண்ணாதே.அவரவர் வேலையை அவரவர் செய்ய வேண்டும்.இல்லையேல் துன்பப் பட வேண்டியது தான்' என்றது.

நாமும்..நமக்கான வேலையை ஒழுங்காகச் செய்ய வேண்டுமே அல்லாது, பிறரது வேலையில் தலையிட்டால் துன்பமே அடைவோம்.

Friday, February 15, 2013

119 - மயிலும்..கொக்கும்.. (நீதிக்கதை)

               


ஒரு சோலையில் அழகான மயில் ஒன்று இருந்தது.அதற்கு தன் அழகுக் குறித்து மிகவும் கர்வம் இருந்தது.ஒருநாள் அந்த சோலைஅருகே இருந்த குளக்கரையில் அது தன் தோகையை விரித்து ஆட ஆரம்பித்தது.

அக்குளக்கரையில் கொக்கு ஒன்று...பெரிய மீன் வருமா..அதைக் கொத்திக் கொண்டு ஒடலாமா..? என்ற எண்ணத்தில் ஒற்றைக் காலில் நின்று கொண்டு இருந்தது.

கொக்கைப் பார்த்த மயில், 'கொக்கே! நீயும் நல்ல வெண்மை நிறத்தில் அழகாகத் தான் இருக்கிறாய்.ஆனாலும் அதனால் என்ன பயன்? என்னைப் போல உன்னால்..அழகாக ஆட முடியாது" என்றது.

அப்போது, பாம்பு ஒன்று, மயிலிடம் வர, விரித்த தோகையுடன் மயில் தப்பி ஓட பார்த்தது.உடன் கொக்கு மயிலிடம்.'மயிலே! பார்த்தாயா..உயிருக்கு பயந்து உன்னால் ஓடத்தான் முடிகிறது.ஆனால், என்னை யாரும் தாக்க முயன்றால்..நான் பறந்துடுவேன்.அதுபோல பறக்க உன்னால் முடியாது' என்றது.

மேலும் கொக்கு மயிலிடம்,'கடவுள் உயிரினங்களைப் படைக்கும் போது, ஒவ்வொரு உயிரினத்திற்கும் , ஒவ்வொரு திறமையைக் கொடுக்கிறார்,அதனால் உலகில், திறமை இல்லாதது என ஏதும் இல்லை.அதே நேரம், எல்லாத் திறமையைக் கொண்ட உயிரினமும் கிடையாது' என்று கூறியபடியே, கிடைத்த மீன் ஒன்றைக் கவ்விக் கொண்டு பறந்தது.

அதே நேரம், தன்னைக் கொத்த வந்த பாம்பை, கழுகு ஒன்று பறந்து வந்து கொத்திச் சென்றதையும் மயில் பார்த்தது.

Tuesday, February 5, 2013

118 -கடலின் பெருமை (நீதிக்கதை)




ஒருநாள் நதி ஒன்று, கிணறு ஒன்றிடம், 'நீயும் என்னைப் போல கடலில் கலந்துவிடு வா' என்றது.

அதற்கு கிணறு, 'நீ கடலில் கலப்பதற்கு முன், ஆயிரக்கணக்கான மக்களுக்கு குடிநீராகவும்,உணவு விளைய பாசனத்திற்கும் பயன்படுகிறாய்.ஆனால் கடலில் கலந்தபின்னர் உனது தனித்துவத்தை இழந்துவிடுகிறாய்.பயனில்லா உப்பு நீராகி விடுகிறாய்.அதுபோல ஆக நான் விரும்பவில்லை.என் காலம் முழுதும் மக்களுக்கு பயன்படவே விரும்புகிறேன்' என்றது.

இதைக் கேட்ட நதி, 'கிணறே..நீ தவறாகப் பேசுகிறாய்.நாம் தனித்துவத்துடன் இருப்பதற்குக் காரணமே கடல் தான்.அது பார்க்க ஆரவாரமாய் இருந்தாலும், ஆரவாரம் இல்லாமல் தன் பணியைச் செய்து வருகிறது.கடலில் உள்ள நீர்தான் ஆவியாகி, மழைமேகமாக மாறி மழைத் தருகிறது. மக்கள் வாழ்வில் வறட்சியைப் போக்க பெரும் பங்கு வகிக்கிறது.நாட்டின் வெப்பதட்ப நிலையை நிர்ணயிக்கிறது ..மழையில்லையேல், ஒருநாள்..நீ, நான் எல்லாம் வறண்டுவிடுவோம்.' என்றது.

அப்போதுதான் கிணற்றிற்கு கடலின் முக்கியத்துவம் புரிந்தது.ஒருசிலருக்கு பயன் படும் தான் செருக்குடன் இருக்கும் போது..உலகிற்கே பயன்படும் கடலின்..விளம்பரமின்மைக் கண்டு வியந்தது.

இதையெல்லாம் கண்டு கொள்ளாமல்..கடல் தன் பணியை ஆற்றிக் கொண்டிருந்தது.

நாமும்..நம்மால் முடிந்த நல்ல காரியங்களைச் செய்யும்போது..அதற்கான விளம்பரத்தை எதிர்ப்பார்க்காது...நம் மனநிறைவை மட்டுமே எண்ணி செயல்பட வேண்டும்.