Thursday, November 21, 2013

130.புத்திக் கூர்மை ....(நீதிக்கதை)



அந்தக் காட்டில் சிங்கம் ஒன்று இருந்தது. அதற்கான உணவை நரி ஒன்று தினமும் ஏற்பாடு செய்துவந்தது.

அந்தக் காட்டில் ...கிடைக்கும் வளமிக்க இலைகளையும்,புல்லையும் உண்டு நன்கு கொழுத்திருந்த ஆடு ஒன்று இருந்தது.
அதைப் பார்த்த நரி...அதை சிங்கத்துக்கு உணவாக ஆக்கினால்...சிங்கம் உண்டது போக தானும் மீதியை உண்ணலாம் என திட்டம் போட்டது.

உடனே சிங்கத்திடம் சென்று "  சிங்கராஜாவே ....இந்தக்காட்டில் இதுவரை நான் பார்த்திராத கொழு கொழு ஆடு ஒன்று உள்ளது.அதை காட்டுகிறேன்...அதை நீங்கள் இன்று உணவாக்கிக் கொள்ளலாம் " என்றது.

சிங்கமும், நரியுடன் புறப்பட்டது.

தூரத்திலிருந்து... நரி,சிங்கத்தை அழைத்து வருவதைப் பார்த்த ஆடு...விஷயத்தை ஊகித்துக் கொண்டது.
உடன், தனது புத்தி கூர்மையால் ...அந்த இடத்தில் இருந்த சில எலும்புகள் முன் அமர்ந்து,' சிங்கத்தின் ஊண் ருசியே அலாதி...இன்று ஒரு சிங்கத்தை,நரி கூட்டி வரேன் என்று சொல்லியதே இன்னும் காணவில்லையே" என நரியுடன் வரும் சிங்கத்தின் காதில் விழுமாறு கூறியது.

இதைக் கேட்ட சிங்கம்...'  அனைவரும் பயப்படும்  சிங்கமான தன் இனத்தை உண்ணும் ஆடு போல தெரிகிறது...நல்ல வேளை, இந்த நரியின் பேச்சைக் கேட்டு உயிரை விடாமல் இருந்தோம்' என்று எண்ணியபடியே நரியை அடித்து போட்டுவிட்டு அவ்விடத்தை விட்டு ஓடியது.

தன் புத்திக் கூர்மையால் ஆடு உயிர் பிழைத்தது. நாமும்....நமக்கு துன்பம் வரும்போது ....நமது மூளையை உபயோகித்து துன்பங்களிலிருந்து விடுபடவேண்டும். 

Wednesday, October 23, 2013

129 " உன் திறமையை உணர் "........ (நீதிக்கதை)



பள்ளியிலிருந்து வந்ததிலிருந்து ரமேஷ் அழுது கொண்டிருந்தான்.

அலுவலகத்திலிருந்து வந்த அப்பா ரமேஷிடம் அவன் அழுகைக்கான காரணத்தைக் கேட்டார்.

ரமேஷ், " அப்பா...நான் தொடர்ந்து காலாண்டு,அரையாண்டு தேர்வுகளில் கணக்கில் குறைவான மதிப்பெண்களே வாங்குகிறேன்..எனக்கு கணக்கு வராது...என்னால் அப்பாடத்தைக் கற்றுக்கொள்ள முடியாது.....' என்றான்.

அதற்கு அப்பா...'ரமேஷ்...உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள் ' என சொல்ல ஆரம்பித்தார்.

ஒருவனிடம் குட்டியானை ஒன்று இருந்தது.அது ஓடிவிடக்கூடாது என்பதற்காக ...ஒரு கயிற்றைக் கொண்டு அதன் காலில் கட்டி ...பக்கத்திலிருந்த தூணில் இணைத்துவிட்டான்.

யானை வளர்ந்து. பெரிய யானையானது.அது இப்போது நினைத்தால்...அந்த தூணுடன் சேர்ந்து கயிற்றை அறுத்துக் கொண்டு ஓடியிருக்க முடியும்.ஆனாலும் ...தான் குட்டியாயிருந்தபோது இருந்த பலமே இப்போதும் இருக்கிறது என யானை எண்ணியது.தன்னால் இப்போதும் தப்ப முடியாது என எண்ணியது. அது போல..உனக்கு கணக்கு வராமல் இருந்திருக்கலாம்..ஆனால் நீ முயன்றால் கணக்கில் புலி ஆகலாம்...

நீ செய்யவேண்டியதெல்லாம் ...'உன்னிடம் உள்ள திறமையை புரிந்து கொண்டு படிக்கவேண்டும்.நம்மால் முடியாது என நினைத்து சும்மா  இருந்தால், யானையின் நிலை தான் உனக்கும்.. முயற்சி திருவினையாக்கும் என்பதை நினைவில் கொள்.

பின்னர், ரமேஷ் தன் திறமையை உணர்ந்து படித்து, கணிதத்தில் வகுப்பில்  முதலிடத்தில் வந்தான்.

Tuesday, September 3, 2013

128. ' நம் ஆசிரியர்களை வணங்குவோம் ' (நீதிக்கதை)


   ( செப்டம்பர் 5 - ஆசிரியர் தினம் )

ஆசிரியர் பரமானந்தத்திற்கு அதிர்ச்சி....

வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது தலைமை ஆசிரியர் அறையிலிருந்து ....அந்த ஊருக்கு புதிதாய் வந்துள்ள காவல் துறை அதிகாரி அவரை பார்க்க விரும்புவதாக அழைப்பு வந்தது.

தான் எதுவும் தவறிழைக்கவில்லையே ..இப்போதெல்லாம் மாணவர்கள் தவறிழைத்தாலும் அடிப்பதைக் கூட நிறுத்திவிட்டோமே ..
எதற்காக தன்னை காவல் துறை அதிகாரி தேடி வரவேண்டும் என்றெல்லாம். ...எண்ணியபடி தலைமை ஆசிரியர் அறைக்கு வந்தார் ஆசிரியர் பரமானந்தம்.

அங்கே....இன்ஸ்பெக்டர் அருண் அவருக்காகக் காத்திருந்தார். பரமானந்தத்தைக் கண்டதும் எழுந்த அருண்..அவர் கால்களைத் தொட்டு வணங்கினார்.

பின், ' ஐயா...என்னைத் தெரியவில்லையா..நான் தங்களிடம் எட்டாம் வகுப்பில் படித்த மாணவன் .ஒரு நாள் பக்கத்து மாணவனின் பையிலிருந்து பத்து ரூபாய் திருடிவிட்டேன்...இதைப் பார்த்த நீங்கள் ..என்னைக் கண்டித்து ...உங்களை நீங்களே பிரம்பால் அடித்துக் கொண்டீர்கள். பின்னர் கண்களில் கண்ணீர் மேலிட ....' என் மாணவன்...நாட்டில் சிறந்தவனாகத் திகழவேண்டும்...அவன் ஒரு திருடனாக ஆகக்கூடாது. நீ இன்று செய்த தவறு ...உன் தவறாகவே இருந்தாலும் .....உன்னை நல் புத்தி புகட்டாதது என் தவறு... ஆகவே தான் என்னை நானே தண்டித்துக்கொண்டேன். இது நீ எந்த ஒரு தவறிழைத்தாலும் ...இந்த நிகழ்ச்சி உன் ஞாபகத்திற்கு வரவேண்டும். அப்போது தான்.....நீ எந்த தவறும் செய்யமாட்டாய், என்றீர்கள்' என்றார் அருண்.

பின் மேலும் அவர் கூறுகையில்...'உங்களது அந்த சொல் தான்...என்னை இன்று ஒரு நேர்மையான அதிகாரியாய் ஆக்கியுள்ளது' என்றார்.

' ஆசிரியர் பணியின் சிறப்பே ....ஒரு கல்லை...செதுக்கி அழகான சிலையாய் ஆக்கும் சிற்பியின் செயலுக்கு சமமானது' என்றார்
தலைமையாசிரியரும்.'

' இவ்வளவு ஆண்டுகாலமாக...தான் ஆற்றிவந்த ஆசிரியர் பணி..அருணைப் போல பல நேர்மையான  மனிதர்களை உருவாக்கியிருக்கும் இந்த சமுதாயத்தில்' என பரமானந்தம் தான் பிறவிப்பயன் அடைந்தாற்போல மகிழ்ந்தார்.

நம் கல்வி எனும் கண்களைத் திறக்கும் ஆசிரியர்கள் வாழ்க என இந்நாளில் வேண்டுவோம்.

(புகைப்படம்- நன்றி இணையம்).

Wednesday, August 7, 2013

127. ' தூற்றுவார் தூற்றட்டும் ' (நீதிக்கதை)



கௌதம புத்தர் துறவியானதும் தினமும் தனக்கு வேண்டிய உணவை பிச்சை எடுத்து சாப்பிட்டு வந்தார்.

ஒரு நாள் ஒரு வீட்டில் அவர் பிச்சை கேட்டபோது ...' போ..போ.. தடிமாடு மாதிரி இருந்துகொண்டு, ஏன் பிச்சை எடுக்கிறாய்' என விரட்டினார் அந்த வீட்டில் இருந்தவர்.

உடனே புத்தர் ' ஐயா' என அவரை அழைத்தார்'

அந்த வீட்டுக்காரரும் ' என்ன?' என்றார்.

நீங்கள் எனக்கு ஏதேனும் பிச்சை போட்டிருந்தால் அது யாருக்கு சொந்தம்' என கேட்டார்.

' போட்டிருந்தால் அது உனக்கு சொந்தம் ' என்றார் வீட்டுக்காரர்.

'நீங்கள் போடும் பிச்சையை நான் மறுத்துவிட்டால்' என வினவினார் புத்தர்
.
'எனக்குதான் சொந்தம்'  

'சற்று முன்பு என்னை விரட்டினீர்களே ...அதை ஏற்க நான் மறுத்துவிட்டேன்...எனவே...அது உங்களுக்கு சொந்தம் ' என்று கூறிச்சென்றார்.

நம்மை தூற்றுபவர்களைக்கண்டு ...பதிலுக்கு நாமும் தூற்றக்கூடாது.நாம் மௌனமாய் இருந்தால்....தூற்றப்பட்ட வார்த்தைகள் தூற்றுபவரைச் சாரும் என்பதை நாமும் உணர்வோம், நம்மை தூற்றுபவரும் உணர்வர்..

Tuesday, July 9, 2013

126. " தெரியாததை தெரியும் என வேண்டாம் " (நீதிக்கதை)



சரவணன் படிக்கும் பள்ளியில் அன்று கல்வி அதிகாரி வருவதாக இருந்தது.

சரவணன் வகுப்பு ஆசிரியருக்கு ஒரே பதட்டம்.அவர் மாணவர்களைப் பார்த்து,' அதிகாரி உங்களை ஏதேனும் கேளவிகள் கேட்கச் சொன்னால்,,நான் கேட்கிறேன்..அவ்வாறு கேட்கும்போது விடை தெரிந்தவர்கள் வலதுகையையும்,தெரியாதவர்கள் இடது கையையும்
தூக்குங்கள்.நான் உடனே வலது கையை தூக்கியவர்களிடம் விடை கேட்கிறேன். இப்படி செய்வது மூலம் நம் பள்ளிக்கும்,எனக்கும்,உங்களுக்கும் அதிகாரிகளிடம் நல்ல பெயர் கிடைக்கும்' என்றார்.
மாணவர்களும் ' சரி' என்றனர்.

கல்வி அதிகாரி வந்தார்.
ஆசிரியரை ஏதேனும் கேள்வி கேட்கச் சொன்னார்.
ஆசிரியர் ஒரு கேள்வியைக் கேட்டதும்,சிலர் வலது கையையும்,சிலர் இடது கையையும் தூக்கினர்.
ஒரு மாணவன் மட்டும் எந்தக் கையையும் தூக்கவில்லை.

உடனே அதிகாரி, அந்த மாணவனிடம்,' உனக்கு விடை தெரியவில்லையா? நீ ஏன் கையை தூக்கவில்லை? என்றார்.
உடனே அந்த மாணவன் 'ஐயா..எனக்கு எது வலது கை...எது இடது கை என ஆசிரியர் சொல்லவில்லை..' என்றான்.

ஆசிரியர் விழிக்க..அதிகாரி நடந்ததை அறிந்து ,ஆசிரியரிடம் ' நல்போதனை செய்யவேண்டிய ஆசிரியர் இப்படி செய்யலாமா ?' என்று கடிந்துகொண்டு, மாணவர்களிடம், ' நமக்கு தெரியாததை ஒப்புக்கொண்டு,பின் அதைப்பற்றி தெரிந்து கொள்ளவேண்டும்,எல்லாம் தெரிந்தது போல நடந்துகொண்டு பிறரை ஏமாற்றினால் இறுதியில் ஏமாறுவது நாமாக இருக்கும்' என்றார்.

Monday, June 24, 2013

125. மூடரின் செயல் (நீதிக்கதை)



' மரம் நடு விழா ' ஒரு ஊரில் நடைபெறுவதாக இருந்தது.

இது சம்மந்தமாக அரசு மூன்று பேரை வேலைக்கு அமர்த்தியது.அவர்களது வேலை....

முதலாவது நபர் ... பத்தடி தூரத்துக்கு ஒன்றாக பள்ளம் தோண்ட வேண்டியது ஆகும்.
இரண்டாவது நபர்...அந்த பள்ளத்தில் ஒரு செடியை நட வேண்டும்.
மூன்றாவது நபர்...பள்ளத்தை மண் கொண்டு மூடவேண்டும்.

அவர்கள் இந்த வேலையை முதல் நாள் அந்த ஊரின் பத்து தெருக்களில் செய்து முடித்தனர்.
அடுத்த நாள் பத்து தெருக்கள் என ஏற்பாடு.

அடுத்த நாள்.. பள்ளம் தோண்டுபவர் தோண்டிக்கொண்டு சென்றார்.
செடியை நட வேண்டிய இரண்டாவது நபர் வேலைக்கு வரவில்லை.
அது பற்றிக் கவலைப்படாத மூன்றாவது நபர் தோண்டிய பள்ளத்தை மூடிக்கொண்டே வந்தார்.

இதைப் பார்த்த வழிப்போக்கர் ஒருவர் ...' ஏம்பா..நீ பள்ளம் தோண்டியதும் ...இவர் அதை மூடி விடுகிறாரே..என்ன விஷயம் ...' என்றார்.
அதற்கு முதல் நபர் ....' ஐயா..செடி நடு விழா எங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதில் என் வேலை பள்ளம் தோண்டுபவது...
செடி நடுவது இரண்டாம் நபர் வேலை....
இதோ நிற்கும் மூன்றாம் நபர் பள்ளத்தை மூடவேண்டும்.
செடி நடும் நபர் இன்று வரவில்லை.
அதனால் வேலை தடைபெறக்கூடாது என எங்கள் இருவர் வேலையை சரியாக செய்து விடுகிறோம்' என்றார்.

இந்த மூடர்களை என்ன செய்வது?

நம்மில் பலர் கூட ....என்ன வேலை செய்கிறோம் ...எதற்காக அதை செய்கிறோம் என்றெல்லாம் தெரியாமல் இயந்திரத்தனமாய் காரியங்களைச் செய்கிறோம்..
அதைவிடுத்து ...நாம் செய்யும் வேலையைப் பற்றி முழுவதும் அறிந்து செய்ய வேண்டும்.
இல்லையேல் இந்த மூடர்களின் கதிக்குத்தான் ஆளாவோம்.

Sunday, May 12, 2013

124.பெற்றோரைப் பேண்.....(நீதிக்கதை)





முன்னொருகாலத்தில் புண்டரிகன் என்று ஒருவன் இருந்தான்.

அவன் இறைவனை வேண்டுவதைவிட தன்னெய்பெற்ற தாய் தந்தையருக்கு பணிவிடை செய்வதையே பெறும் பேறாகச் செய்துக் கொண்டிருந்தான்.

அவனது செயல்களைக் கண்ட இறைவன் மனம் மகிழ்ந்து அவனுக்குக் காட்சியளித்தார்.

அந்த நேரம் அவன் தன் பெற்றொர்களை கவனித்துக் கொண்டிருந்தான். இறைவன், தான் வந்திருப்பதைச் சொல்லியும் அவன் மனம் மாறவில்லை.

" இறைவா...எனக்காக சற்றுப் பொறுங்கள்.பெற்றோர்களுக்கான என் கடமையை முடித்துவிட்டு உங்களைக் கவனிக்க வந்து விடுகிறேன்' என்றான்.

இறைவனும்....புண்டரிகன் மீது கோபம் கொள்ளாது...காத்திருந்து அவனைப் பார்த்துவிட்டு தன் நல்லாசிகளை வழங்கிச் சென்றார்.

ஒருவருக்கு இறைவன் வழிபாடு முக்கியம் ..அதைவிட முக்கியமானது....தன்னைப் பெற்றவர்களை பேணிக்காப்பது என்பதை நாம் உணரவேண்டும்.

Monday, April 8, 2013

123. உனக்கான கடமையைச் செய் (நீதிக்கதை)



ஒரு நாள் நல்ல வெயில்...

சரவணன்,குடையை எடுத்துக்கொண்டு,காலில் செருப்பைப் போட்டுக்கொண்டு வெளியே சென்று வந்தான்.

வீட்டினுள் நுழைந்ததும் செருப்பை வெளியில் விட்டுவிட்டு குடையை உள்ளே எடுத்து சென்றான்.

அப்போது குடை செருப்பைப் பார்த்து சிரித்து.' நீ என்னை விட தாழ்ந்தவன்.ஆகவே தான் உன்னை வெளியே விட்டுவிட்டு என்னை உள்ளே எடுத்து செல்கின்றனர்' என்றது.

செருப்புக்கு மிகவும் வருத்தம் ஏற்பட்டது.

அடுத்த நாள் நல்ல மழை....வெளியே சென்றுவிட்டு வந்த சரவணன் வீட்டினுள் நுழையும் முன் செருப்பைக் கழட்ட...குடை செருப்பைப் பார்த்து சிரித்தது..

உடன் செருப்பு சரவணனைப் பார்த்து,' சரவணா...உன் பாதங்களை வெயிலிருந்தும்....குப்பை...மணல்..கல் ஆகியவற்றிலிருந்தும் நான் காக்கிறேன் .. ஆனால்  என்னை வீட்டிற்கு வெளியே விட்டு விடுகிறாய்.. தலையை மட்டும் காக்கும் குடையை உள்ளே எடுத்து செல்கிறாயே? என வருந்தியது.

உடனே சரவணன்,' செருப்பே..இதோ பார்...மழையில் குடை நனைந்ததால் அதையும் இன்று வெளியில் வைத்துள்ளேன்.ஆண்டவன் படைப்பில் எந்தப்பொருளும் சரி...எந்த உயிரினங்களும் சரி...அவற்றில் ஏற்றத்தாழ்வு என்பதே இல்லை.ஒவ்வொன்றும் அதற்கான கடமையைச் செய்கிறது.இதை உணராது ..நீங்களும் சரி..மக்களும் சரி ஒருவருக்கொருவர்..இகழ்ந்தும்,புகழ்ந்தும் பேசுகிறீர்கள்.உன் கடமையை ஒழுங்காக செய்வதை நினைத்து பார்.உனக்கு திருப்தி ஏற்படும். தவிர்த்து, குடை மனிதனுக்கு சில தினங்களுக்கு மட்டுமே பயன் படும்.ஆனால்,நீயோ மனிதர்கள் வெளியே கிளம்பும் போதெல்லாம் உன்னை வருத்திக் கொண்டு, அவர்களுக்காக உழைத்துத் தேய்கிறாய்.பிறருக்கு உதவுவதே நோக்கமாகக் கொண்ட நீ வருந்த வேண்டிய அவசியமே இல்லை.' என்றான்.

நாமும், பிறருக்கு பிரதிபலனை எதிர்பாராது உதவி செய்து, நம் கடமையை ஆற்ற வேண்டும்.தவிர்த்து..நமக்குள் நீ உயர்ந்தவன்..நான் உயர்ந்தவன் என்ற சர்ச்சைகளில் ஈடுபடக்கூடாது.

ஒவ்வொருவரும்...ஒவ்வொரு விதத்தில் உயர்ந்தவர்களே!

Monday, April 1, 2013

122. தீங்கு செய்யக்கூடாது ...(நீதிக்கதை)






பாஸ்கர் என்ற குறும்புக்காரச் சிறுவன் ஒருவன் இருந்தான்.அவன் பிறரை துன்புறுத்தி அவர்கள் படும் வேதனையைக் கண்டு மிகவும் சந்தோஷப்படுவான்.

அவனது வீட்டில் வளர்க்கும் பூனையைத் தூக்கி தூர எறிவான்...விழுந்த வலியுடன் சிறிது நேரம் எழுந்திருக்காது படுத்திருக்கும் பூனையின் வலியைக் கண்டு சிரிப்பான்.

அவனது வீட்டருகில் ஒரு குளம் இருந்தது.அந்தக் குளத்தில் அவன் வீட்டில் வளர்த்து வரும் ' டாமி ' என்ற நாயைத் தூக்கிப் போடுவான்.நாய் மூச்சிரைக்க நீந்தி கரைக்கு வரும்போது ...மீண்டும் தூக்கிப் போட்டு ...நாய் அல்லாடுவதைக் கண்டு சிரிப்பான்.

ஒரு நாள்...அப்படி செய்து கொண்டிருந்தபோது ...கால் வழுக்கி குளத்தில் அவன் வீழ்ந்து விட்டான்.அவனுக்கோ நீச்சல் தெரியாது...தண்ணீர் கால்களை இழுத்தது...'ஐயோ...யாரேனும் உதவுங்கள்' என கத்தினான்.

சுற்று வட்டாரத்தில் எந்த மனிதருமே இல்லை. ஆனால் பாஸ்கரின் குரலை எங்கேயோ இருந்த 'டாமி' கேட்டது...உடனே ஓடி வந்தது.அவன் இருக்கும் நிலை அறிந்து ...அதுவும் குளத்தில் குதித்து...பாஸ்கரின் சட்டையை பிடித்து இழுத்தவாறு...அவனையும் கரைக்கு இழுத்து வந்து அவனது உயிரைக் காப்பாற்றியது.

தான் நாயை துன்புறுத்தியிருந்தாலும் ...அது தன் உயிரைக் காத்தது நினைத்து ...பாஸ்கர் நாயை அன்புடன் அணைத்துக்கொண்டான். அது முதல் அவன் யாரையும், எதையும் துன்புறுத்துவதில்லை.

நாமும் பிறரை துன்புறுத்தக்கூடாது.அப்படி செய்தால் நமக்கே கேடு விளையும்.

இதையே திருவள்ளுவர்
     பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
     பிற்பகல் தாமே வரும்.
என்றார்.

Saturday, March 23, 2013

121.அறிவுக்கூர்மையும் ..வெளவாலும்..(நீதிக்கதை)




சண்முகத்தின் அப்பா தினமும் அவன் இரவு தூங்கப் போகும்போது நீதிக்கதைகளை அவனுக்கு சொல்வது வழக்கம்.

ஒரு நாள் அவர் அவனிடம் ' அறிவுக்கூர்மையிருந்தால் வரும் ஆபத்திலிருந்து தப்பலாம்' என்றார்..
அது எப்படி என்றான் சண்முகம்...
அப்பா அதற்கு அவனுக்கு ஒரு கதையைக் கூறினார்.

ஒரு காட்டில் இரு பூனைகள் இருந்தன.அதில் ஒரு பூனை எலிகளை மட்டுமே பிடித்து உண்ணும்.மற்றதோ பறவைகளை பிடித்து உண்ணும்.

ஒரு நாள் எலிகளைப் பிடிக்கும் பூனையிடம் வெளவால் ஒன்று மாட்டிக்கொண்டது.அது எலிகளை மட்டுமே உண்ணும் பூனை என்று வெளவாலுக்குத் தெரிந்தது..'உடனே அது....எலிகளை மட்டுமே உண்ணும் நீ...பறவையான என்னை உண்ணலாமா?' என்றது.
உடனே பூனை...' நீ பறவையா' என்று கேட்டது.' ஆம்...எனக்கு இறக்கைகள் இருக்கிறதே...நீ பார்க்கவில்லையா. நான் பறக்கும் பறவை தான்' என்றது.

பூனையும் வெளவாலை பறவை என நினைத்து விட்டுவிட்டது.

வேறொரு நாள்...அந்த வெளவால் பறந்து செல்லும்போது ..அதை பறவைகளை மட்டுமே உண்ணும் பூனை தாவிப்பிடித்தது.

உடனே வெளவால் அதனிடம் 'பூனையே....பறவைகளை மட்டும் உண்பவர் நீ...ஆனால் நான் பறவை இல்லையே," என்றது.

அதற்கு பூனை உனக்கு இறக்கைகள் உள்ளதே என்றது.

' அது இறக்கைகள் அல்ல...என்னுடைய மேல் தோல்...என் மீசையைப்பார்...நான் எலி தான் என்றது.

அதை எலி என நினைத்து அப்பூனை விட்டுவிட்டது

வௌவால் அறிவுக்கூர்மையாய் இருந்ததால் தான்..இரு பூனைகளிடமும் அவைகளுக்குத் தகுந்தார் போல பேசி..தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது.

Monday, February 25, 2013

120 - அவரவர் தொழில்..(நீதிக்கதை)

           


ஒரு சலவைத் தொழிலாளி இருந்தான்.அவன் தினந்தோறும் தன் கழுதையின் முதுகில் சுமைகளை ஏற்றி..குளத்திற்குச் சென்று துணிகளைத் துவைத்து...கழுதையின் மேல் வைத்து திரும்பி வருவான்.அவனுடன் அவனது செல்லப் பிராணியான நாயும் செல்லும்.

கழுதை, என்ன உழைத்தாலும்..அதை சலவைத் தொழிலாளி பாராட்டுவதில்லை.தேவையான உணவு மட்டும் அளித்து வந்தான்.

ஆனால், நாயுடன் அவன் கொஞ்சி விளையாடுவான்.தான் உண்ணுவதையெல்லாம் அதற்கும் கொடுப்பான்.நாயும் வாலை ஆட்டியவாறே..அவனிடம் பேசுவது போல குரைக்கும்.கழுதைக்கு இது ஆத்திரத்தைக் கிளப்பியது.

ஒருநாள் இரவு..

நாய் குரைப்பதைக் கேட்டு, எழுந்துவந்த சலவைத் தொழிலாளி, திருடன் ஒருவன் துணிகளைக் களவாட வந்ததையும், அவனை நாய் குரைத்து விரட்டியதையும் அறிந்து, நாயைத் தூக்கி கொஞ்சினான்.

இதையெல்லாம்..பார்த்துக் கொண்டிருந்த கழுதை, விவரம் அறியாது,  தானும் தன் முதலாளியிடம் நல்ல பெயர் வாங்க எண்ணியது.

நள்ளிரவு நேரம்...எழுந்து கத்த ஆரம்பித்தது.அதனது நாராசக் குரலைக் கேட்ட தொழிலாளி ..வெளியே வந்து, தன் தூக்கத்தைக் கெடுத்த கழுதையை நையப் புடைத்தான்.

கழுதை வேதனையுடன் முணகியது.சலவைத் தொழிலாளி படுக்கச் சென்றதும்...நாய் ஆறுதலாக கழுதையிடம் வந்து அதை நக்கிக் கொடுத்தது.பின்னர் சொன்னது,'நான் என் வேலையைச் செய்தேன்..அதற்கு பாராட்டுக் கிடைத்தது.அதுபோல நீயும்..உன் வேலையை மட்டும் ஒழுங்காகச் செய்து வா..என்றேனும் பாராட்டுக் கிடைக்கும்.தவிர்த்து இன்னொருவர் போல நீயும் இருக்க எண்ணாதே.அவரவர் வேலையை அவரவர் செய்ய வேண்டும்.இல்லையேல் துன்பப் பட வேண்டியது தான்' என்றது.

நாமும்..நமக்கான வேலையை ஒழுங்காகச் செய்ய வேண்டுமே அல்லாது, பிறரது வேலையில் தலையிட்டால் துன்பமே அடைவோம்.

Friday, February 15, 2013

119 - மயிலும்..கொக்கும்.. (நீதிக்கதை)

               


ஒரு சோலையில் அழகான மயில் ஒன்று இருந்தது.அதற்கு தன் அழகுக் குறித்து மிகவும் கர்வம் இருந்தது.ஒருநாள் அந்த சோலைஅருகே இருந்த குளக்கரையில் அது தன் தோகையை விரித்து ஆட ஆரம்பித்தது.

அக்குளக்கரையில் கொக்கு ஒன்று...பெரிய மீன் வருமா..அதைக் கொத்திக் கொண்டு ஒடலாமா..? என்ற எண்ணத்தில் ஒற்றைக் காலில் நின்று கொண்டு இருந்தது.

கொக்கைப் பார்த்த மயில், 'கொக்கே! நீயும் நல்ல வெண்மை நிறத்தில் அழகாகத் தான் இருக்கிறாய்.ஆனாலும் அதனால் என்ன பயன்? என்னைப் போல உன்னால்..அழகாக ஆட முடியாது" என்றது.

அப்போது, பாம்பு ஒன்று, மயிலிடம் வர, விரித்த தோகையுடன் மயில் தப்பி ஓட பார்த்தது.உடன் கொக்கு மயிலிடம்.'மயிலே! பார்த்தாயா..உயிருக்கு பயந்து உன்னால் ஓடத்தான் முடிகிறது.ஆனால், என்னை யாரும் தாக்க முயன்றால்..நான் பறந்துடுவேன்.அதுபோல பறக்க உன்னால் முடியாது' என்றது.

மேலும் கொக்கு மயிலிடம்,'கடவுள் உயிரினங்களைப் படைக்கும் போது, ஒவ்வொரு உயிரினத்திற்கும் , ஒவ்வொரு திறமையைக் கொடுக்கிறார்,அதனால் உலகில், திறமை இல்லாதது என ஏதும் இல்லை.அதே நேரம், எல்லாத் திறமையைக் கொண்ட உயிரினமும் கிடையாது' என்று கூறியபடியே, கிடைத்த மீன் ஒன்றைக் கவ்விக் கொண்டு பறந்தது.

அதே நேரம், தன்னைக் கொத்த வந்த பாம்பை, கழுகு ஒன்று பறந்து வந்து கொத்திச் சென்றதையும் மயில் பார்த்தது.

Tuesday, February 5, 2013

118 -கடலின் பெருமை (நீதிக்கதை)




ஒருநாள் நதி ஒன்று, கிணறு ஒன்றிடம், 'நீயும் என்னைப் போல கடலில் கலந்துவிடு வா' என்றது.

அதற்கு கிணறு, 'நீ கடலில் கலப்பதற்கு முன், ஆயிரக்கணக்கான மக்களுக்கு குடிநீராகவும்,உணவு விளைய பாசனத்திற்கும் பயன்படுகிறாய்.ஆனால் கடலில் கலந்தபின்னர் உனது தனித்துவத்தை இழந்துவிடுகிறாய்.பயனில்லா உப்பு நீராகி விடுகிறாய்.அதுபோல ஆக நான் விரும்பவில்லை.என் காலம் முழுதும் மக்களுக்கு பயன்படவே விரும்புகிறேன்' என்றது.

இதைக் கேட்ட நதி, 'கிணறே..நீ தவறாகப் பேசுகிறாய்.நாம் தனித்துவத்துடன் இருப்பதற்குக் காரணமே கடல் தான்.அது பார்க்க ஆரவாரமாய் இருந்தாலும், ஆரவாரம் இல்லாமல் தன் பணியைச் செய்து வருகிறது.கடலில் உள்ள நீர்தான் ஆவியாகி, மழைமேகமாக மாறி மழைத் தருகிறது. மக்கள் வாழ்வில் வறட்சியைப் போக்க பெரும் பங்கு வகிக்கிறது.நாட்டின் வெப்பதட்ப நிலையை நிர்ணயிக்கிறது ..மழையில்லையேல், ஒருநாள்..நீ, நான் எல்லாம் வறண்டுவிடுவோம்.' என்றது.

அப்போதுதான் கிணற்றிற்கு கடலின் முக்கியத்துவம் புரிந்தது.ஒருசிலருக்கு பயன் படும் தான் செருக்குடன் இருக்கும் போது..உலகிற்கே பயன்படும் கடலின்..விளம்பரமின்மைக் கண்டு வியந்தது.

இதையெல்லாம் கண்டு கொள்ளாமல்..கடல் தன் பணியை ஆற்றிக் கொண்டிருந்தது.

நாமும்..நம்மால் முடிந்த நல்ல காரியங்களைச் செய்யும்போது..அதற்கான விளம்பரத்தை எதிர்ப்பார்க்காது...நம் மனநிறைவை மட்டுமே எண்ணி செயல்பட வேண்டும்.

Thursday, January 31, 2013

117.செய் நன்றி மறவாமை (நீதிக்கதை)




ஒரு கிராமத்தில் குரங்கொன்று இருந்தது.

ஒரு நாள் அது மரத்தில் ஒடி விளையாடியபோது,உச்சாணிக் கொம்பில் இருந்து தவறி விழுந்து படு காயமடைந்தது.
அதனால் எழுந்து நடக்க முடியவில்லை.உணவு தேடவும் வழியில்லை.மரத்தின் அடியிலே  படுத்துக் கிடந்தது.

அம்மரத்தின் அருகில் ஒரு சிறு குடிசையில் ஒருவன் வாழ்ந்து வந்தான்.அவன் அந்தக் குரங்கைப்பார்த்து மனம் வருந்தி அதை தன் குடிசைக்கு எடுத்து சென்று அடிபட்ட காலுக்கு மருந்திட்டு, உண்ண  உணவும் கொடுத்தான்.

நாளடைவில் குரங்கு குணமானது.அப்போதுதான் அந்த குடிசையை நன்கு பார்த்தது. குடிசையின் உச்சியில் ஒரு பெரிய ஓட்டை இருந்தது.அதன் வழியே வெய்யிலும்,மழை என்றால் மழை நீரும் குடிசைக்குள் விழுவது தெரிந்தது.

குரங்கு உடனே வெளியே வந்து,மரத்தில் ஏறி,இலைகளையும் சிறு கிளைகளையும் எடுத்து வந்து,குடிசையின் உச்சிக்கு சென்று ஓட்டையை அடைத்தது,

இப்போது குடிசையில் ஓட்டையும் இல்லை,வெய்யிலோ,அல்லது மழையின் பாதிப்போ இல்லை.

அந்த ஏழை தனக்கு செய்த உதவியை குரங்கு எண்ணி,தன்னால் முடிந்த பிரதியுபகாரத்தை செய்தது பாராட்டுக்குரியது.

நாமும் நமக்கு யாரேனும் சிறு உதவி செய்தாலும் அதை மறக்காமல் பெரிதாக எண்ணி ,நம்மால் முடிந்த நல்ல காரியங்களை
உதவியவர்களுக்கு செய்ய வேண்டும்

Monday, January 21, 2013

116. ஒன்று படுவோம்..(நீதிக்கதை)




காடு ஒன்றில் சிங்கம் ஒன்று இருந்தது.அது தினமும் மற்ற மிருகங்களைக் கொன்று பசியாறி வந்தது.நாளாக ஆக அதற்கும் வயதாகி, வலுவிழந்தது.அதனால் தனக்குத் தேவையான உணவை வேட்டையாட அதனால் அலைய முடியவில்லை.

ஒருநாள் அது நரி ஒன்றைக் கூப்பிட்டு, தனக்கு அன்றாடம் தேவைக்கான உணவிற்கான மிருகத்தை, நயமாகப் பேசி அழைத்து வருமாறும், அப்படி அது அழைத்து வரும் மிருகத்தை அடித்து தான் தின்றது போக , மீதத்தை நரி உண்ணலாம் என்றும் கூறியது. நரியும், அதற்கு ஒப்புக் கொண்டது.

காட்டை ஒட்டி இருந்த நகரில் நான்கு பசுக்கள் தினமும் ஒற்றுமையாய் புல் மேய்ந்து வந்தன.அவற்றைப் பார்த்த நரிக்கு நாவில் எச்சில் ஊறியது.இப்பசுக்களை சிங்கத்திடம் அழைத்துச் சென்றால் தினமும் தனக்கு உணவு கிடைக்கும் என எண்ணி அவற்றிடம் சென்று பேசியது.ஆனால் ஒற்றுமையாய் இருந்த பசுக்கள் நரியை விரட்டி அடித்தன.

நரி ஒரு தந்திரம் செய்தது..பசுக்களின் ஒற்றுமையைக் குலைக்க முடிவெடுத்தது.

முதலில் ஒரு பசுவிடம் சென்று..'எனக்குத் தெரிந்து..மற்ற பசுக்களை விட நீ இளைத்து இருக்கிறாய்.உனக்குத் தேவையான புல் கிடைக்கவில்லை என எண்ணுகிறேன்.அருகிலேயே..ஒரு புல்வெளி உள்ளது.பசுமையான புற்கள்.நீ தனியே வந்தால் அவற்றை உண்டு ருசிக்கலாம்.ஆனால் உன் நண்பர்கள் உன்னுடன் வந்தால், உன் பங்கு சிறிதாகிவிடும்' என்றது.

பச்சைப் பசேல் என்றிருக்கும் புல்லைத் தின்ன ஆசைப்பட்ட அந்த பசு..மற்ற மூன்று பசுக்களிடமும் சொல்லாது, நரியுடன் சென்றது.நரி அப்பசுவை, சிங்கம் இருக்குமிடம் அழைத்துச் சென்றது.சிங்கமும், தனியே வந்த அப்பசுவைக் கொன்று உண்டது.

அப்படியே, மற்ற பசுக்களையும் பிரித்து நரி அழைத்துச் சென்று சிங்கத்திற்கு உணவாக்கியது.

பசுக்கள் ஒற்றுமையாய் இருந்தவரை அவற்றை அணுக முடியாத நரி, அந்த ஒற்றுமையைக் குலைத்து, அவற்றைப் பிரித்து அழித்துவிட்டது.

நாமும், நம் குடும்பம், சுற்றம், சூழலுடன் ஒற்றுமையாய் இருந்தால்..நம்மை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது.