Wednesday, July 18, 2018

31 - எப்படி வாழவேண்டும்




ஒரு சந்நியாசியிடம்..அவர் சிஷ்யன்..ஒருநாள்..'சுவாமி...நான் எப்படி வாழவேண்டும்..என்பதை..தெரிவித்தால்..நலமாயிருக்கும்..'என்றான்.,
குருவும்..தன் ஆயுட்காலம் முடிவதை..அறிந்து..தன் சிஷ்யன் இனி..தனியாக..விவரங்களை தெரிந்துக்கொள்ளட்டும்..என்று...தூரத்தில் நொண்டிக்கொண்டே வரும் நரியைக்காட்டி..'அதனுடன் செல்..அதற்கு உணவு எப்படி கிடைக்கிறது..என்று பார்..அப்போது..நீ எப்படி வாழவேண்டும் என்று தெரியும்..' என்றார்.,
நரியை தொடர்ந்து வந்த சிஷ்யன்..தூரத்தே ஒரு சிங்கம்..இறந்த மானின் உடலை இழுத்து வருவதை பார்த்து ஒளிந்துக் கொண்டான்.அந்த மான் சிங்கத்தால் வேட்டையாடப்பட்டது.அதை சிறிது தின்றுவிட்டு..மீதத்தை..நரியிடம் போட்டு விட்டு சென்றது..சிங்கம்..
உடனே சிஷ்யனுக்கு ..வாழவேண்டிய வழி தெரிந்தது போல இருந்தது..
அடுத்தநாள் முதல்...சிஷ்யன்..உண்ணாமல்...யாரேனும் தனக்கு..உணவு கொண்டுவந்து தருவார்கள் என காத்திருக்க ஆரம்பித்தான்..
நாட்கள் உருண்டன...
ஆனால்..யாரும் உணவை கொண்டுவந்து தரவில்லை..
அவன் உடல் இளைத்து..தெம்பையெல்லாம் இழந்தான்..குருவைத் தேடி வந்தான்..நடந்த விஷயங்களைக் கூறி.'குருவே..அந்த நரிக்கு கொடுத்தாற்போல்..யாரேனும்..எனக்கு ..உணவு கொண்டுவந்து தருவார்கள் என எண்ணினேன்..ஆனால் யாரும் வரவில்லை.'என புலம்பினான்..
பதிலுக்கு..குரு..'அட..மடையா..நீ என்னிடம்..எப்படி வாழவேண்டும் என்று கேட்டாய்...நானும் சொன்னேன்..ஆனால்..நீ..சிங்கம்..நரியைப் பார்த்து..தப்பாய் புரிந்துக் கொண்டாய்..உண்மையில்..நீ என்ன செய்திருக்க வேண்டும்..சிங்கம் போல வாழ நினைத்திருக்க வேண்டும்..மற்றவர்களுக்கு..உதவியாய்...மற்றவர்களுக்கு..உணவளிக்கக் கூடியவனாய் இருக்க எண்ணியிருக்க வேண்டும்'என்றார்..
அப்போதுதான்..சிஷ்யனுக்கு..எப்படி வாழவேண்டும் என்பதற்கான விடை தெரிந்தது

Tuesday, July 17, 2018

30.சமயோசிதப் புத்தி



ஒரு நாள் இடி மின்னலுடன் காட்டில் மழை பெய்து கொண்டிருந்தது.

ஒரு மான் தன் குட்டிகளுடன் எங்கு செல்வது எனத்தெரியாமல் அலைந்து கொண்டிருந்தது.அப்போது ஒரு குகை  காலியாக இருப்பதைப் பார்த்தது.அது சிங்கத்தின் குகை.
வேறு வழி தெரியாத மான் அது சிங்கத்தின் குகை என்று அறிந்தும் காலியாக இருந்ததால் தன் குட்டிகளுடன் உள்ளே சென்றது.

வெளியே போயிருந்த சிங்கம் தூரத்தில் வருவதைப்பார்த்த  மான்,தன் குட்டிகளிடம் "எனக்கு சிங்கக் கறி வேண்டும்" என கத்துங்கள் என்றது.
குட்டிகளும் அது போல கத்த சிங்கம் குகைக்குள் தன்னைவிட  பலசாலியான மிருகங்கள் இருப்பதாக எண்ணி ஓடியது.

வழியில் நரி ஒன்றைப்பார்த்த சிங்கம் "என் குகையில் பலசாலியான மிருகங்கள் இருக்கின்றன,அவை என்னைக் கொல்ல காத்திருக்கிறன" என்றது.

ஆனால் குகைக்குள் மான் தன் குட்டிகளுடன் செல்வதை நரி பார்த்திருந்தது.அது சிங்கத்திடம் அதைக்கூறி "பயப்படாதீர்கள் நானும் உங்களுடன் வருகிறேன்.நீங்கள் பெரிய மானை சாப்பிடுங்கள்,நான் குட்டிகளை சாப்பிடுகிறேன் "என சிங்கத்தை மீண்டும் குகைக்குள் அழைத்து வந்தது

சிங்கத்தை நரி அழைத்து வருவதைப் பார்த்த மான், உடனே தன் குட்டிகளிடம் "கவலைப்படாதீங்க.நரிமாமா சிங்கக்கறிக்காக கண்டிப்பாக சிங்கத்தை அழைத்துவருவதாகச் சொல்லியிருக்கார்" என் சிங்கத்தின் காதுகளில் விழுமாறு கத்தி சொன்னது.

அதைக் கேட்ட சிங்கம், நரி தன்னை ஏமாற்றி அழைத்து  வருவதாக எண்ணி நரியை அடித்துக் கொன்றது.பின் குகைக்குள் இருந்த மிருகங்களிடமிருந்துத் தப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வேறு குகையைத் தேடி ஓடிவிட்டது

எந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கை, முயற்சியைக் கைவிடாததால் மானால், தன்னையும், தன் குட்டிகளையும் காப்பாற்றமுடிந்தது. மானின் சமயோசித புத்தியை நாமும் பாராட்டுவோம்

தன்னம்பிக்கை, முயற்சி இருந்தால் எந்தக் காரியத்திலும் வெற்றியடையலாம்

Saturday, June 2, 2018

தன்னம்பிக்கை


200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி
” யாருக்கு இது' பிடிக்கும்?” எனக் கேட்டார்.
கூடியிருந்த அனைவரும் தனக்கு பிடிக்குமென கையை தூக்கினர்.
பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன் ஆனால் அதற்கு முன்” என சொல்லி
அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து
“இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்.
அனைவரும் கையைத் தூக்கினர்.
அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி
“இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார்.
அனைவரும் இப்போதும் கைகளை தூக்கினர்.
அவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய்தாள் பல முறை கசங்கியும் மிதிபட்டும் அழுக்கடைந்தும்
அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப் படும் போதும் ,
தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்தி கொள்கிறோம் .
நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர்.
இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித் தன்மை இருக்கும்.
அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. வாழ்கை என்ற பயிர்க்கு
தைரியமும் தன்னம்பிக்கையும் தான் உரம்.
ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்கள்

Monday, April 30, 2018

28- யார் பலசாலி



நல்ல பாம்பு ஒன்று புற்றில் வாழ்ந்து வந்தது.
அதற்கு ரொம்ப நாட்களாக தன்னுடைய இனத்தார் பெரிய மிருகங்களை கூட அப்படியே விழுங்கி விடுவதால், தாங்கள்தான் பலசாலி என்று நினைத்திருந்தது.
இருந்தாலும், இதை சோதித்து பார்க்க எண்ணி, புற்றை விட்டு வெளியே வந்தது.
அப்போது அங்கு ஒரு கீரி வரவே, பாம்பு பயத்துடன் மறைந்துக் கொண்டு, ""ஆகா! கீரிதான் பலசாலி'' என்று நினைத்துக் கொண்டது.
அச்சமயம் அங்கு வந்த பூனை, கீரியை விரட்டியது. அதைப் பார்த்ததும், "பூனைத்தான் பலசாலி' என்று எண்ணியது பாம்பு.
அந்தப் பூனையை ஒரு நாய் விரட்டத் தொடங்கியது. அதைக் கண்டதும், ""பூனையை விரட்டுகிற நாய்தான் பலசாலி' என்று நினைத்தது பாம்பு.
பூனையை விரட்டிக் கொண்டு ஓடிய நாய், ஒரு மனிதன் செய்து கொண்டிருந்த பச்சைப் பானையில் விழுந்தது. அதைக் கண்டு கோபம் அடைந்த மனிதன், நாயைத் தடியால் அடித்தான்.
நாய் அலறிக் கொண்டு ஓடியது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த பாம்பு, ""நாயை விட மனிதன்தான் பலசாலி'' என்று எண்ணிக் கொண்டே மறைவை விட்டு வெளியே வந்தது.
மனிதன் அதைக் கண்டதும், ""ஐயோ பாம்பு!'' என்று அலறிக் கொண்டு ஓடினான்.
அந்தக் காட்சியை கண்ட பாம்பு, "இந்த உலகில் எல்லாரையும் விட நான்தான் பலசாலி' என்று எண்ணிக் கொண்டது.
அப்போதுதான் முன்பு பார்த்த கீரி மீண்டும் அங்கே வரவே, "அய்யோ... அம்மா!' என்று அலறிக்கொண்டு ஓட்டம் எடுத்தது பாம்பு.
இந்த உலகில் ஒவ்வொருவரும் தான் தான் பெரியவர் என்று நினைத்துகொள்ளக் கூடாது என்பதற்காகவே.
"ஒவ்வொருவருக்கும் ஒரு எதிரியை
கடவுள் படைத்துள்ளார்"

27 - தவறை உணர்ந்தால் மன்னிப்பு உண்டு


ஒரு நரியும், ஒட்டகமும் நண்பர்களாக இருந்தன.ஒருநாள் ஒட்டகத்திடம் நரி சொல்லியது, "நண்பா..இந்த நதிக்கு அக்கரையில், ஒரு பெரிய கரும்புத் தோட்டம் உள்ளது.நாம் இருவரும் நதியைக் கடந்து அங்கே சென்றால் இனிப்பான கரும்பை சாப்பிட்டு வரலாம்"

அதைக் கேட்ட ஒட்டகம், "நரியே! நீ இனிப்பைச் சாப்பிட்டால் ஊளையிடுவாய்.அப்போது கரும்புத் தோட்டக்காரன் நம்மைப் பிடித்து அடித்து விடுவான்" என்றது.

நரி ,தான் ஊளை இடமாட்டேன் என வாக்குறுதி இட்டதால், இரண்டும் கிளம்பின.

ஒட்டகத்தின் மீது ஏறிக் கொண்டு நரி நதியைக் கடந்தது.

இரண்டும் கரும்புத் தோட்டத்திற்குச் சென்று இனிமையான கரும்பை சுவைத்தன.

மகிழ்ச்சியில் நரி ஊளையிடத் தொடங்கியது.அதைக் கேட்டு அங்கு வந்தான் கரும்புத் தோட்ட முதலாளி.நரி உடனே ஒடிப் போய் ஒரு புதரில் ஒளிந்து கொண்டது.

ஒட்டகமோ அடியை வாங்கிக் கொண்டு, வலியுடன் நதிக்கரைக்கு வந்தது.அப்போது நரி புதரிலிருந்து ஓடி வந்து, "ஒட்டக நண்பா..எனக்கு மகிழ்ச்சி அதிகமானால் ஊளையிடுவேன்.அது என் வழக்கம்.வழக்கத்தை என்னால் மாற்றிக் கொள்ள இயலவில்லை." என்றது.

ஒட்டகத்தின் மீது ஏறிக்கொண்டு நதியைக் கடந்தது நரி.பாதி வழியில்,நதியின் ஆழமான பகுதி வந்ததும், ஒட்டகம் ஆற்றில் புரண்டது.

நரி தண்ணீரில் விழுந்து தத்தளித்தது.ஒட்டகம் நரியினிடம், "அதிகமாக யாரேனும் அடித்தால் உடல்வலி தீரநீரில் புரள்வது என் வழக்கம்" என்றது.

நரி தன் தவறை உணர்ந்து, தன்னைக் காப்பாற்றும் படி ஒட்டகத்திடம் கெஞ்சியது.

ஒட்டகமும், நரியின் தவறை மன்னித்து, அதை மீண்டும் முதுகினில் ஏற்றி இக்கரைக்குக் கொண்டு சேர்த்தது.

தவறு செய்தவர்,தவறை உணர்ந்து வருந்தினால் மன்னிக்க வேண்டும்   

Sunday, April 29, 2018

26 - நல்ல நண்பர்கள் வேண்டும்



வயல்களில் பறவைகள் வந்து தானியங்களை நாசம் செய்தன.அதனால், வயல்களுக்கு சொந்தக்காரனான விவசாயி பறவிகளைப் பிடிக்க வலையைக் கட்டினான்.

வலையில் பல பறவைகல் மாட்டிக்கொண்டன. அவற்றோடு ஒரு கொக்கும் மாட்டிக் கொண்டது.

விவசாயி வந்து, வலையில் அகப்பட்டிருந்த பறவைகளைப் பிடித்தான்.தன்னை விடுவிக்குமாறு கொக்கு மன்றாடியது.

" நீ பறவைகளைப் பிடிக்கத்தானே வலையைப் போட்டாய்.நான் பறவை அல்லவே! என்னை விடுவிப்பதுதானே நியாயம்?" என்றது

அதற்கு விவசாயி, "நீ சொல்வது முற்றிலும் உண்மை,ஆனால், நீ கெட்டவர்களோடு அகப்பட்டாய்,கெட்டவர்களின் கூட்டுறவு உனக்கு இருக்கிறபடியால் அவர்களுக்கு க் கிடைக்கிற தண்டனை உனக்கும் கிடைக்க வேண்டியதுதான்" என்று சொன்னான்

ஒவ்வொருவரும், அவர்கள் நண்பர்களைக் கொண்டே மதிப்பிடப்படுவார்கள்

Thursday, April 26, 2018

25 - மானும்..நரியும்



ஒரு நரி கிணறு ஒன்றில் தவறி வீழ்ந்து விட்டது.
மேலே வர முடியாமல் தவித்தது.
அந்தப் பகக்மாக வந்த மான் ஒன்று, கிணற்றுக்குள் ஏதோ சப்தம் கேட்பதைக் கேட்டு, கிணற்றை எட்டிப் பார்த்தது.

அதனுள், நரி இருப்பதைப் பார்த்து விட்டு, "நரியாரே! கிணற்றினுள் என்ன செய்கிறீர்கள்? " என வினவியது.

மான் இப்படிக் கேட்டதும், தந்திரக்கார நரி, "இந்த கிணற்று நீர் இளநீர் போன்று மிகவும் சுவையானது.எனக்கு தாகம் எடுக்கும் போதெல்லாம், இக்கிணற்றினுள் இறங்கி தண்ணீர் குடித்துவிட்டுச் செல்வேன்" என்று பொய் சொல்லியது.

மானிற்கும், உடனே அந்தத் தண்ணீரைக் குடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.உடனே, அதுவும் கிணற்றினுள் குதித்தது.

நல்ல சமயத்தை எதிர்ப்பார்த்திருந்த நரி, அந்த மானின் கொம்புகளைப் பிடித்து, அதன் மீது ஏறி வெளியே குதித்து தப்பி ஓடியது.

அப்போதுதான் நரியின் தந்திரத்தை உணர்ந்தது மான்.இப்போது கிணற்றினுள் இருந்து தன்னால்வெளியே
 வர முடியாது, "யாராவது என்னக் காப்பாற்றுங்கள்" எனக் கதற ஆரம்பித்தது.

நாம் யாருக்கு உதவி செய்தாலும், அந்த உதவிக்கு அந்த நபர் தகுதியானவர்தானா என யோசித்து செய்ய வேண்டும்.

Wednesday, April 25, 2018

24- மோசம் செய்பவன் நாசம் ஆவான்



ஒரு நதியின் ஒரு பக்கம் செல்வம் மிகுந்த நகரமும், மறுபக்கம் ஒரு செழிப்பான கிராமமும் இருந்தது.
அந்த கிராமத்தில் ஒரு பால்காரன் இருந்தான்.
அவன் தன் பசுக்களிலிருந்து பாலைக் கறந்து படகின் மூலம் நதியைக் கடந்து நகரத்திற்குக் சென்று பால் விற்பனை செய்து வந்தான்

அவன், எப்படியாவது விரைவில் பணக்காரன் ஆக வேண்டும் என எண்ணினான்.அனவே, பாலில் பாதி தண்ணீரைக் கலந்து விற்றான்.

கொஞ்ச நாளில் அவனது வீட்டில் அவனுக்கு திருமண ஏற்பாடு நடந்தது.

பால்காரன், நகரத்திற்குச் சென்று, பணத்தை வசூலித்துக் கொண்டு,திருமணத்திற்கான பொருள்கள்,நகைகள், துணிமணிகள் வாங்கிக் கொண்டு படகில் ஏறி தன் கிராமத்திற்கு வந்தான்

நதியில்பாதி தூரம் வந்த போது, படகு பாறை ஒன்றில் மோதி,அவன் வாங்கி வந்த பொருள்கள் பாதி நதியில் வீழ்ந்து மூழ்கியது.

மீதம் கிடைத்த பொருள்களுடன் அவன் நீந்தி தன் கிராமம் வந்து சேர்ந்தான்.

கோவிலுக்குச் சென்று, "இறைவா! எனக்கு ஏன் இப்படி நடந்தது" என அழுதான்.

அப்போது இறைவன் அவன் முன் தோன்றி, "நீ மோசடி செய்து, பாலில் பாதி தண்ணீரைக் கலந்து விற்றாய்,அந்தத் தண்ணீரின் விலையுள்ள பாதிப் பொருள்கள் நதியின் தண்ணீரோடு போய்விட்டன" என்றார்

மோசம் செய்தால் மோசம் அடைவோம் என அவன் உணர்ந்தான்


Monday, April 23, 2018

23-நமக்குள் ஒற்றுமை தேவை



இரண்டு பூனைகள் ஒரு வீட்டில் அப்பம் ஒன்றினைத் திருடின.அதனைப் பங்குப் போடுவதில், இரண்டினுக்கும் சண்டை வந்தது.

குரங்கு ஒன்றிடம் மத்தியஸ்தம் செய்ய சென்றன.
குரங்கு ஒரு தராசினைக் கொணர்ந்து, அப்பத்தை இரு துண்டுகளாக்கி இரண்டு தட்டுகளிலும் போட்டன.தராசைத் தூக்கிப் பார்த்த போது ஒரு தட்டு கீழே சாய்ந்தது.அதிலிருந்த அப்பத்துண்டை ஒரு கடி கடித்து விழுங்கியது.
இப்போரு, மற்றொரு தட்டு கீழே சாய்ந்த்து.அதிலிருந்து அப்பத்தை எடுத்து ஒரு கடி கடித்து விழுங்கியது.
இப்படி மாற்றி, மாற்றி செய்தது,இப்போது,அப்பத்துண்டுகளின் அளவு குறைந்து வருவதை பூனைகள் கண்டன
.
கடைசியில் தங்களுக்கு ஒன்றும் கிடைக்காது என உணர்ந்து, கிடைத்த வரை போதும் என,குரங்கிடம் "மத்தியஸ்தம் வேண்டாம்.அப்பங்களைக் கொடுத்து விடு:" என்றன.

குரங்கு ஒப்புக் கொள்ளவில்லை.கடைசியில் இருந்த அப்பத் துண்டுகளை தன் கையில் எடுத்துக் கொண்டு"நியாயம் சொல்வது மிகவும் கடினம்.அதில் உங்களுக்காக நான் ஈடுபட்டதால்..மீதமுள்ள இரண்டு அப்பத்துண்டுகளை நான் என் வேலைக்குக் கூலியாக எடுத்து கொள்கிறேன்" என்றவாறு வாயில் போட்டு விழுங்கியது

எதுவாயினும் நமக்குள் சமாதானமாகப் பேசித் தீர்த்துக் கொள்ளாததால் நஷ்டம் நமக்குத்தான் என பூனைகள் உணர்ந்தன .நமக்குள் ஒற்றுமை தேவை என்றும் உணர்ந்தன

Friday, April 20, 2018

22- விட்டுக் கொடுத்தல்




காட்டில் மான் ஒன்று இறந்து கிடந்தது.
அங்கு சிங்கம் ஒன்றும், கரடி ஒன்றும் வந்தன.இரண்டுமே மானைத் தின்ன ஆசைப்பட்டன.

சிங்கம் கரடியைப் பார்த்து,"கரடியே! நான் தான் இந்த மானை முதலில் பார்த்தேன்.ஆகவே நான் தான் அதைத் தின்பேன்.நீ போய்விடு என்றது.
ஆனால், கரடியோ சிங்கத்திடம், "நான் தான் முதலில் பார்த்தேன்.ஆகவே மான் எனக்கெ உணவு.நீ போய்விடு" என்றது.

இரண்டிற்கும் வாக்குவாதம் முற்றி,  ஒன்றுக் கொன்று சண்டையிடத் தொடங்கின.நீண்ட நேரம்
சண்டையிட்டதால், இரண்டும் காயமடைந்து, சோர்ந்து தரையில் வீழ்ந்து கிடந்தன.

அவ்வேளையில் நரி ஒன்று அங்கு வந்தது.இறந்து கிடந்த மானையும், வீழ்ந்து கிடந்த கரடியையும், சிங்கத்தையும் பார்த்ததுசூழ்நிலையைப் பயன்படுத்தி , இறந்து கிடந்த மானைத் தின்று சென்றது.

சோர்வு நீங்கி, சிங்கமும், கரடியும் எழுந்து பார்த்த போது நரி மானைத் தின்றுவிட்டு சென்றதைப் பார்த்தன.

"நாம் இப்படி வீணாக சண்டையிட்டதால் ஏமாந்துவிட்டோமே!" என சொல்லி வருந்தின.

ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து கிடைப்பதை பகிர்ந்து உண்ண வேண்டும் என உணர்ந்தன.

நாமும், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் குணத்தை வளர்த்து கொள்ள வேண்டும் 

Thursday, April 19, 2018

21- முடியாத செயலில் ஈடுபடக்கூடாது



ஒரு பாழடைந்த வீட்டில் ஏராளமான எலிகள் வாழ்ந்து வந்தன.ஒருநாள் பூனை ஒன்று அந்த வீட்டில் புகுந்தது.பூனை தினமும் எலிகளை வேட்டையாடித் தின்றது.எலிகள் மிகவும் பயந்தன.அவைகள் ஒன்றுகூடி இந்த அபாயத்திலிருந்து தப்புவது எப்படி? என யோசித்தன.

அப்போது ஒரு பெரிய எலி ஒரு பெரிய மணியைக் கொண்டு வந்து எலிகளை நோக்கி,"நண்பர்களே! நம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள புது யோசனையுடன் வந்துள்ளேன்.இந்த மணியை பூனையின் கழுத்தில் கட்டிவிட்டால், பூனை வரும்போது மணியோசை முன்னதாகக் கேட்கும்.அப்போது உடனே நாம் தப்பித்துவிடலாம்" என்றது.இதைக் கேட்ட எலைகள் அனைத்தும் மகிழ்ந்தன.மிகவும் அற்புதமான யோசனை என பெரிய எலியைப் பாராட்டின.

சிறிது நேரம் கழித்து ஒரு எலி, "இந்த மணியை யார் பூனையில் கழுத்தில் கட்டுவது?" என்றது
இதைக் கேட்டதும் அனைத்து எலிகளின் உற்சாகமும் குறைந்து போனது.யாரால் மணியை தைரியமாகச் சென்று பூனையின் கழுத்தில் கட்டமுடியும் என நினைத்துக் கொண்டிருக்கும் போதே,"மியாவ்" என பூனை வரும் சப்தம் கேட்டது.அனைத்து எலிகளும் பயந்து எல்லா திசையிலும் ஒடி ஒளிந்தன.

இயலாத, முடியாத செயலில் நாம் இடுபடக்கூடாது என்பதே இக்கதையின் மூலம் நாம் அறியும் செய்தியாகும்  

Wednesday, April 18, 2018

20- பாத்திரமறிந்து உதவு



ஒரு ஆட்டு மந்தையினுள் புகுந்து ஆடுகளைஅடித்துக் கொல்ல முயன்றது ஓநாய் ஒன்று.

அந்த ஆட்டு மந்தையின் காவலாக இருந்த நாய்கள் ஓநாயைத் துரத்திப் பிடித்து நன்றாக அடித்துப் போட்டு விட்டன.

படுகாயம் அடைந்த ஓநாய் நடக்க முடியாமல் வேதனையுடன் ஓரிடத்தில் படுத்திருந்தது.அதற்குக் கடுமையான பசி வேறு.
அந்த சமயத்தில் அந்த வழியாக ஒரு ஆடு சென்றுக் கொண்டிருந்தது.

ஓநாய் அந்த ஆட்டைக் கூப்பிட்டது.

அதனிடம், "நண்பா! எதிரிகளால் நான் காயப்பட்டு நடக்க முடியாமல் இருக்கின்றேன்.தண்ணீர் தாகமாக உள்ளது.எனக்குக் கை கொடுத்து நீரோடை வரை அழைத்து செல்.நான் தாகத்தை தணித்துக் கொள்வேன்" என உருக்கமாகக் கேட்டது

ஓநாயின் கபட நாடகத்தை அறியாத ஆடு, அதன் மீது அனுதாபம் கொண்டு ,அது நடப்பதற்கு உதவ அதன் அருகே சென்றது.

கைக்கு எட்டும் தொலைவில் ஆடு வந்ததும் ஓநாய் அதன் மீது பாய்ந்து, அதை அடித்துக் கொன்று தன் பசியைத் தீர்த்து கொண்டது

பிறர் துன்பப்படும் போது நம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டியது நம் கடமை.

ஆனால், அதே நேரம், யாருக்கு உதவுகிறோம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்

Monday, April 2, 2018

19- அச்சமின்மை


அக்பரிடம் ஒருவர் சவால் விட்டார். என் வேலைக்காரன் நல்லா சாப்பிடுவான் அவனை ஒரு மாதம் வைத்திருந்து நிறைய நல்ல உணவுகளைக் கொடுங்கள். அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது. ஆனால் ஒரு கிலோகூட எடை கூடக் கூடாது.
அக்பர் யோசிச்சார். பீர்பாலை பார்த்தார். பீர்பால் அரசர் சார்பாக அந்த சவாலை ஏற்றார். மூன்று வேளைகளும் மகத்தான விருந்து படைக்கப்பட்டது.
மாதக்கடைசியில் எடையும் அப்படியே இருந்தது. அக்பருக்கு ஆச்சரியம். பீர்பால் சொன்னார்.
அவனுடைய இரவுப்படுக்கையை சிங்கக்கூண்டுக்கு அருகே அமைத்தேன். கூண்டின் கதவு சரியாக இல்லை என்று சொன்னேன். அச்சம் காரணமாய் சத்து உடலில் ஒட்டவில்லை.
பயம் ஒரு பெரிய நோய். நிறைய பேர்களுக்கு வியாதி வர காரணம், தங்களுக்கு வந்துவிடுமோ என்ற பயம்தான்.

நாம் எப்படிப்பட்ட சூழலில் இருந்தாலும், அச்சத்தை மட்டும் நம்மை அணுக விடக்கூடாது

அச்சமின்மையே ஆரோக்கியம்!

Friday, March 23, 2018

18 - தெரியாத வேலையில் தலையிடாதே




ஒரு விறகு வெட்டி இருந்தான். காட்டுப் பகுதிக்கு ஒட்டி இருந்தது அவன் குடிசை.
மரங்களை வெட்டிவருவது, கோடரியால் பிளப்பது, சிறு துண்டுகளாக்கி பக்கத்துக்கு கிராமங்களுக்கு கொண்டு விற்பது. அதை கொண்டு குடும்பம் நடத்துவது, அவனது அன்றாட வேலை.
அன்று அப்படிதான் ஒரு பெரிய அடிமரத்துண்டை கோடரியால் பிளக்க ஆரம்பித்தான்.
கலப்பு வந்தது. அடிமரத்தை பாதியளவு பிளந்திருந்ததால் அப்பிளவுக்கு இடையில் ஆப்பு போல் ஒரு மரச்சக்கையை வைத்துவிட்டு ஓய்வெடுக்கச் சென்றான்.
பக்கத்திலேயே ஒரு பெரிய மரம் இருந்தது. அம்மரத்தின் ஒரு கிளையில் இருந்த அக்குரங்கு ஒன்று மரம் வேட்டியின் செயலைப் பார்த்துக் கொண்டிருந்தது.
மரம் வெட்டி அப்பால் நகர்ந்ததும் அக்குரங்கு உடனே இறங்கி வந்தது.
அம்மரத்துண்டின் பிளவுபட்ட பகுதியில் வால் முழுவதும் விட்ட நிலையில் படிய அதன்மேல் அமர்ந்து கொண்டது.
அது குரங்கு அல்லவா! அதற்கே உரிய குரங்கு வேலையைச் செய்ய ஆரம்பித்தது; ஆப்பாக சொருகி இருந்த மரத்துண்டை ஆட்டி ஆட்டி எடுக்க ஆரம்பித்தது/
ஒரு ஆட்டு, இரண்டு ஆட்டு, மூன்று ஆட்டு….. சில ஆட்டுகள்!
படுக்கென்று அந்த ஆப்புதுண்டு வந்துவிட்டது. சடக்கென்று பிளவுபட்டப் பகுதியின் இடைவெளி குறைந்துவிட்டது.
அத்துடனா?
பிளவுக்குள் தொங்கி இருந்த வால் நசுங்க குறைந்து “வீல்…வீல்” என்று அலறியது.
ஓய்வாக உள்ளே இருந்த மரம்வெட்டி அலறல் கேட்டு அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தான்.
பாத்தால் குரங்கு பாவம் செத்துவிட்டது.
“இத்தனை நாள் இல்லாமல் எங்கிருந்து வந்துத் தொலைந்தது இன்று சாவதற்கென்றே” என்ற முணுமுணுப்புடன் குரங்கின் உடலை அப்புறப்படுத்தினான் அவன்.
குரங்கின் அசட்டுச் செயல் அதற்கே அழிவை தந்துவிட்டது

Monday, March 19, 2018

17 - அன்னதானம்

அன்னதானத்தின் அவசியம் தெரியுமா?
அனைவருக்கும் கேட்டவரம் அனைத்தையும்
அளித்த கொடையாளி கர்ணன். தன் வாழ்நாளின்
ஒருவரை அமர்வித்து உணவளித்து அன்னதானம்
செய்ததில்லை.
இறந்தபின் சொர்க்கம் அடைந்தான்.
அங்கு அனைவரும் பசி, தாகம் இன்றி சுகமாக
இருந்தனர். ஆனால் கர்ணனுக்கு மட்டும் கடும்
பசி எங்கு தேடியும், யாரை கேட்டும்
உணவு கிடைக்கவில்லை.
நாரதரை கண்டு, எனக்கு மட்டும் சொர்க்கத்தில்
ஏன் இந்த அவல நிலை? எனக் கேட்டான். நாரதர்,
கர்ணா! உனது ஆள்காட்டி விரலை வாயில்
இட்டு சுவை என்றார். கர்ணனும்
அப்படியே செய்ய பசியும் தீர்ந்தது. ஆனால்
வாயிலிருந்து விரலை எடுத்தாலோ மீண்டும்
பசித்தது. காரணம் கேட்ட கர்ணனிடம் நாரதர் நீ
உனது வாழ்நாளில் ஒருவருக்காவது அன்னதானம் செய்ததில்லை.ஒரு சமயம் துரியோதனன் வீட்டில் அன்னதானம் நடைபெற்றது. பசியால் வாடிய ஒருவன் உன்னிடம் வந்து விசாரித்த போது, அன்னதானம் நடக்கும் இடத்தை நீ உனது ஆள்காட்டி விரலால் சுட்டிக்காட்டினாய். அந்த பெரும் புண்ணியம் உனது ஆள் காட்டி விரலில் தொற்றியுள்ளது. அந்த விரலைச் சுவைத்தவுடன்
பசி நீங்குகிறது. எனவே தான் தானத்தின்
சிறந்தது அன்னதானம் என்றார்.
எனவே தான் கர்ணன், அன்னதானம்
செய்வதற்காகவே மறுபிறவி எடுக்க விரும்பி,
சிவனிடம் வரம் கேட்டுப் பெற்றான். கர்ணனின்
மறுபிறவியே சிறுத்தொண்ட நாயனார்.
பக்தரின் அன்னதான அவசியத்தை உலகுக்
உணர்த்தவே சிவன் வீர சைவ அடியாராக
வந்து பிள்ளைக்கறி கேட்டு அருள் புரிந்தார்.
இக்கதையையே சீராளன் கதை என கிராமங்கள்
தோறும் பல நூற்றாண்டுகளாக சிவபக்தர்கள்
சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்

Thursday, March 1, 2018

16. எல்லோரும் உயர்ந்தவர்களே



காகம்  ஒன்று தான் கருப்பு நிறத்தில் இருப்பதாக தாழ்வு மனப்பான்மை கொண்டு இருந்தபோது ஒரு அன்னத்தை பார்த்தது.

அது அன்னத்திடம் சென்று ' அன்னமே ! நான் உன்னைப்போல வெண்மையாக விரும்புகிறேன் என்றது.

அதற்கு அன்னம், "காகமே! உண்மையில் என்னை விட பச்சைக் கிளி தான் அழகு.நானே, பச்சைக்கிளியாக  விரும்புகிறேன்" என்றது.

அடுத்து காகம் , பச்சைக்கிளியிடம் சென்று, "பச்சைக்கிளியே! நான் உன்னைப்போல ஆக விரும்புகிறேன்" என்றது

அதற்குக்  கிளி, "காகமே! எனக்கு இரண்டு நிறங்களே உள்ளன.ஆனால், மயிலுக்கோ, பலநிறங்கள்.ஆகவே, நானே அழகாக மயிலாக இருக்க விரும்புகிறேன்" என்றது

உடன் காகம். மயிலிடம் சென்று, "மயிலே! நான் உங்களைப் போல ஆக விரும்புகிறேன்" என்றது.

அதற்கு, மயில், "காகமே! என்னைப் போல அழகாக இருந்தால் ஆபத்தும் உண்டு.என்னைக் கொண்டு சென்று, மிருகக் காட்சிச் சாலையில் கூண்டில் அடைத்துவிடுகிறார்கள்.எனக்குத் தெரிந்து, காகங்கள் மட்டுமே , யாருக்கும் பயப்படாமல், சுதந்திரமாக பறந்துக் கொண்டிருக்கும் பறவை இனம் ஆகும்.ஆகவே நீ நீயாகவே இரு.அதுதான் நல்லது: என்றது.

அப்பொதுதான் காகத்திற்கு, தான் மட்டுமே, அபாயமின்றி சுதந்திரமாக பறக்கக் கூடிய இனம் என்று உணர்ந்தது.

மேலும், இறைவன் படைப்பில், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று யாருமில்லை.எல்லோரும் சமமானவர்களே என்றும் உணர்ந்தது    

Monday, February 26, 2018

15 -முற்பகல் செய்யின்


நாம் யாருக்கேனும் தீங்கிழித்தோமாயின்..அதற்கான பலனை பின்னாளில் நாமே அனுபவிக்க வேண்டியிருக்கும்.

கர்ணன் வாழ்க்கையிலும் அப்படி நடந்தது,அதுவே இக்கதையாகும்.

முனிவர் ஒருவர் காட்டில் தியானம் செய்து கொண்டிருந்தார்.அவரது ஆசிரமத்தைச் சேர்ந்த பசுவும், கன்றும் அருகே புல்லை மேய்ந்து கொண்டிருந்த நேரத்தில், கன்றின் மீது அம்பு ஒன்று பாய்ந்தது.அக்கன்று துடிதுடித்து இறந்தது..இறக்கும் தறுவாயில் அக்கன்றின் வேதனைக் கத்தல் கேட்டு முனிவர் தியானம் கலைந்தது.

அவர், இறந்த கன்றையும், தாய்ப்பசு கண்ணீருடன் நிற்பதையும் பார்த்தார்.

அம்பு எய்தி பசுவைக் கொன்றவனைத் தேடினார். அப்போது ஒரு வீரன் கையில் வில்லுடன் அங்கு வந்தான்.அவன்தான் அம்பை எய்திருக்க வேண்டும் என முனிவர் எண்ணினார்.அவரது கோபம் அந்த வீரன் மீது சாபமாக அமைந்தது.

"சிறு கன்றின் மீது அம்பு எய்தி கொன்றவனே! உனக்கு முடிவுகாலம் வருகையில், உன் தேரில் நின்று நீ போர் புரிகையில், தேரின் சக்கரங்கள் மண்ணுக்குள் புதையும்.அந்த நேரமே உனக்கு மரண நேரமாய் அமையும் என்பதை உணர்வாயாக!" என்றார்.

அந்த வீரன் தான் கர்ணன்.

கன்றைக் கொன்ற தன் செயலால் வருந்தினான் கர்ணன்.ஆனாலும் விதியின் செயல் இது என தன்னை தேற்றிக் கொண்டான்.

அந்த முனிவர் சாபப்படியே பாரதப் போரில் கர்ணன் மரணம் நிகழ்ந்தது. .

Monday, February 19, 2018

14. நமது கடவுள்


ஒருநாள் கடவுள், ஒரு குழந்தையை பூமியில் பிறக்க வைக்கத் தயாராய் ஆனார்.

அப்போது அந்தக் குழந்தைக் கடவுளைக் கேட்டது..
"கடவுளே! என்னை பூமிக்கு அனுப்பினால், அங்கு யாருக்கும் என்னைத் தெரியாதே!"
அதற்குக் கடவுள் சொன்னார்,"கவலைப்படாதே! பூமியில் நிறைய தேவதைகள் உள்ளனர்.அவற்றில் ஒரு தேவதை  யிடம்தான் உன்னை அனுப்புகிறேன்"
"அது புதிய இடம்.யாரையும் எனக்குத் தெரியாது.அழுகை, அழுகையாக வரும்.இங்கு நீங்கள் இருக்கிறீர்கள்,நான் சந்தோஷமாக இருக்கிறேன்" என்றது
அதற்குக் கடவுள்."பயப்படாதே! பூமியில் உன்னை வரவேற்கக் காத்திருக்கும் தேவதை, உனக்காகப் பாடுவார்.உன்னிடம் அன்பாய் இருப்பார்.உன்னை எப்போதும் சந்தோஷத்தில் வைப்பார்"என்றார்.
"எனக்கு அங்கு பேசும் மொழி தெரியாதே!" என்றது குழந்தை
"அனைத்தையும் அந்தத் தேவதைக் கற்றுக் கொடுப்பார்" என்றார்.கடவுள்
"உங்களை மீண்டும் என்னால் பார்க்க முடியுமா? "என்றது குழந்தை
"என்னைப் பற்றியும்,என்னைத் தொழும் முறையையும், மீண்டும் என்னிடம் வர செய்ய வேண்டியதை அந்தத் தேவதை உனக்கு சொல்லிக் கொடுப்பார்" என்றார் கடவுள்
"சரி" என்றது குழ்ந்தை.
அப்போது அங்கு ஒரு பெரும் சப்தம் கேட்கக் கடவுள்"நீ பூமிக்கு செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது" என்றார்.
உடன் குழ்ந்தை, "என்னை வரவேற்கப் போகும் தேவதையின் பெயரைச் சொல்ல வில்லையே" என்றது
அதற்கு க் கடவுள், "அந்த தேவதையின் பெயர் உனக்கு வேண்டாம்.ஆனால் அவரை நீ கூப்பிட வேண்டியது "அம்மா" என்று" என்றார்.
அப்போது,, பூமியில் ஒருவர் வீட்டில் குழந்தை ஒன்று பிறந்தது.


Sunday, February 18, 2018

13- மாறவேண்டியது நாமே



பலநூறு ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு நாட்டை ஆண்டு வந்த அரசன், தனது நாட்டைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினான்.

கரடு முரடான சாலைகளிலும், வெயிலால் சூடேறிக் கிடந்த தெருக்களிலும் நடந்தான்.மிகவும் சிரப்பட்டான்.காலில் சூட்டினால் கொப்புளங்கள்.வலியும் அதிகமாய் இருந்தது.

சமதள சாலைகளும், தெருவின் சூட்டைக் குறைக்க தெருமுழுதும் பசுவின் தோலினால் மூடினால், அவதிப்படுவதைத் தடுக்கலாம் என்றனர் அமைச்சர்கள்.

ஆனால், நாடு முழுதும், பசுத்தோல் போர்த்துவது நடக்கும் செயலா? அதற்கு எவ்வளவு செலவாகும்.ஆயிரக் கணக்கில் பசுக்கள் இறந்தால்தானே தோலும் கிடைக்கும் என்றெல்லாம் மன்னன் நினைத்தான்.

அப்போது, மூத்த அமைச்சர் ஒருவர் , ஒரு செய்தியைக் கூறினார்,"மன்னா!நம்மால் அவ்வளவு செலவு செய்ய முடியாது.ஆனால், தெருக்களை தோலினால் மூடுவதற்குப் பதிலாக, நாம் ஏன்., அவரவர் கால்களை தோலினால் மூடிக் கொள்ளக் கூடாது.தோலும் அதற்கு சிறிதளவேப் போதுமே!"

அமைச்சரின் இந்த அறிவுரை, மன்னனுக்குப் பிடித்தது.இதுவே காலணிகள் தோன்றக் காரணமாக அமைந்தது.

இதிலிருந்து நாம் ஒரு நீதியையும் அறியலாம்.

"ஊரை மாற்ற நினைக்காமல், நம்மை மாற்றிக் கொண்டால்...ஊர் தானாக மாறும்" என்பதுதான்.

Wednesday, February 14, 2018

12- உருவம் பார்த்து எடை போடக்கூடாது


                        


உருவத்தில் சிறியவனாக இருப்பதால் அவனை ஏளனம் செய்யக்கூடாது. அவன் வேறு விடையங்களில் வல்லவனாக இருப்பான் என்பதை உண்ர்த்தும் நீதிக்கதை

ஒரு காட்டில் சிங்கம் ஒன்று வசித்து வந்தது. அது தனது பலத்தாலும், தோற்றத்தாலும், கர்ஜனையாலும் காட்டில் வசித்த அனைத்து மிருகங்களையும் பயமுறுத்தி வந்தது.
பயம் காரணமாய் அனைத்து மிருகங்களும் சிங்கத்திற்கு கிட்டச் செல்வதில்லை. சிங்கத்தைக் கண்டால் பயந்து ஓடிவிடுகின்றன.

ஆனால் 'ஈ" ஒன்று பயமின்றி சிங்கத்தின் மீது வந்து அமர்ந்தது.  அதைப் பார்த்ததும் சிங்கம் கோபமுற்று கர்ஜனை செய்தபடியே..'உன்னை என் பற்களால் கடித்துக் குதறுவேன், நகங்களால் பிறாண்டுவேன், நசுக்கிப் பொசிக்கிப் போடுவேன் என்றது.

அதற்கு ஈ யோ நீ பலசாலியாய் இருக்கலாம்..உன்னைப் பார்த்து மற்ற மிருகங்கள் பயப்படலாம். ஆனால் நான் பயப்பட மாட்டேன். இன்னும் சொல்லப்போனால்..நீ சொன்னபடி உன்னையே நீ பற்களால் கடித்துக் கொள்ளவும், நகங்களால் விறாண்டிக் கொள்ளவும் செய்வேன்" என்றது.

இதைக் கேட்ட சிங்கம் கோபத்துடன் ஏலுமாயின் முடிந்தால்அதைச் செய் என் சவால் விட..ஈ பறந்து வந்து சிங்கத்தின் முதுகில் அமர்ந்து அதைக் கடித்தது. ஈ முதுகில் அமர்ந்த போது..அதை விரட்ட சிங்கம்.தன் பற்களால் முயன்ற போது..ஈ பறந்து விட சிங்கம் தன் முதுகைத் தானே கடித்துக் கொண்டது.

ஈ சிங்கத்தின் முகத்தில் அமர்ந்த போது, அதை விரட்ட தன் கால் நகங்களால் முயல..ஈ பறக்க...சிங்கம் தன் நகங்களால் தன் முகத்தையே பிறாண்டிக் கொண்டது. இவ்வாறு பலதடவை சிங்கத்தை நன்கு இம்சை செய்து விட்டு ஈ பறந்தது. 

சிங்கத்தினால் ஈயை பிடிக்கவோ நசுக்கவோ முடியவில்லை. அதனால் சிங்கம் தன் இயலாமையை எண்ணி வெட்கப்பட்டது. 

அதன் பின்புதான் சிங்கத்திற்கு புரிந்தது..தான் உடலளவில் வீரமாய் இருந்தாலும்..ஒரு சிறு ஈ தன்னை இம்சைப் படுத்தி விட்டதே என்று. .

உருவத்தைக் கண்டு யாரையும் எடை போடக் கூடாது 

Tuesday, February 13, 2018

11- பாம்பும் கீரியும்

தேவப்பட்டினம் என்றொரு கிராமத்தில் மாரப்பன் என்றொரு குயவனும் அவன் மனைவியும் வாழ்ந்து வந்தார்கள். பல வருடங்களாகியும் அவர்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை.

தங்களுக்கு குழந்தை இல்லாத ஏக்கத்தைப்போக்க ஒரு கீறிப் பிள்ளையைக் குழந்தையைப் போல் வளர்த்து வந்தனர். இப்படி சிலகாலம் சென்றது. ஒரு நாள் குயவனின் மனைவி சுந்தரி கருவுற்றாள். ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள்.

நீண்ட கால ஏக்கத்திற்குப் பிறகு பிறந்த முதல் குழந்தை என்பதால் அக்குழந்தை வெகு செல்லமாக வளர்க்கப்பட்டது.

ஒருநாள் தண்ணீர் குடத்துடன் புறப்பட்ட சுந்தரி, கணவனிடம் “குழந்தை தூங்குகிறது. அருகிலேயே இருந்து பார்த்துக் கொள்ளுங்கள், கீரி கடித்துவிடப் போகிறது”, என்று கூறிவிட்டுக் குளக்கரைக்குச் சென்றாள்.

குழந்தையின் அருகிலேயே அமர்ந்து கொண்டிருந்த குயவனுக்கு திடீர் தாகம் உண்டாயிற்று. அவன் தண்ணீர் அருந்த சமையலறைக்குள் சென்றான்.

அந்த நேரம் பார்த்து ஒரு கரு நாகம் எங்கிருந்தோ வந்து குழந்தையின் தொட்டிலின்மேல் ஏற ஆரம்பித்தது. கீரி அதைப் பார்த்து விட்டது. அடுத்த வினாடி கீரி அப்பாம்பைத் துண்டு துண்டாகக் கடித்துக் குதறிவிட்டது.

அத்துடன் தன் எஜமானியின் வரவு நோக்கி தெரு வாசலருகில் நின்றும் கொண்டது.

தண்ணீர் குடத்துடன் வந்த சுந்தரி கீரியின் வாயெல்லாம் இரத்தமாக இருந்ததைப் பார்த்து பதறிப்போனாள்.

அவள் கீரிப்பிள்ளை தன் குழந்தையைக் கடித்து விட்டது. அதனால் தான் அதன் வாயில் ரத்தம் சொட்ட நிற்கிறது என்று தவறாகப் புரிந்து கொண்டாள்.

நிலைமையைத் தீர ஆராயாமல் "அய்யோ! நம் குழந்தையை கீரிப்பிள்ளை கடித்து விட்டதே என்று ஆத்திரம் கொண்டு அடங்காக் கோபத்தோடு அக்கீரியின் மேல் நீர்க்குடத்தை தூக்கிப் போட்டாள்.

கீரிப்பிள்ளை அதே இடத்தில் வலி தாங்காமல் செத்தது. சுந்தரி தன் குழந்தைக்கு என்ன ஆயிற்றோ என்ற பதற்றத்தில் உள்ளே ஓடினாள். குழந்தை தொட்டிலில் அப்படியே உறங்கிக் கொண்டுதான் இருந்தது.

பிறகு என்ன நடந்திருக்கும் என்று சுற்றும் முற்றும் பார்த்த அவளுக்கு ஒரே அதிர்ச்சி. தரையில் பாம்பின் உடல் பல துண்டுகளாக சிதறி இருந்தன. அவளுக்கு உண்மை புரிய ஆரம்பித்தது.

"அடடா பாம்பைக் கொன்ற இரத்த்தத்துடன் இருந்த கீரிப்பிள்ளையைப் பார்த்துக் குழந்தையைத்தான் கடித்து விட்டதோ என்று தவறாக எண்ணி விட்டேனே. அருமையாக வளர்த்த கீரியைக் அவசரப்பட்டுக் கொன்று விட்டேனே!" என்று கண்ணீர் விட்டுக் கதறத் துவங்கினாள்.

க்ஷனநேரத்தில் நடந்து முடிந்து விட்ட இந்த நிகழ்ச்சிகளை உள்வாங்கிக்கொண்ட குயவன் தனது மனைவியை சமாதானப்படுத்தினான்.

 எந்தப் பிரச்சனையையும் தீர ஆராயாமல் அவசர புத்தியால் முடிவெடுத்தால் அது தவறாகிவிடும்

Monday, February 12, 2018

10- பிறவிக்குணம்




ஒரு காட்டிற்குள், அமைதியாக, அழகான நதி ஒன்று ஓடிக் கொண்டிருந்தது.

அந்நதியில், எப்போதும் அன்னப்பறவைகள் நீந்தி விளையாடி வந்தன.நதிக்கரையில், சில காகங்கள் வசித்து வந்தன.

அந்த காகங்கள் இறந்த சில பறவைகளை கொத்தித் தின்று வாழ்ந்து வந்தன.

ஒரு காகத்திற்கு, அன்னப்பறவை ஒன்றின் நட்புக் கிடைத்தது.

நல்லதையும், தீயவனவற்றையும் பிரித்துப் பார்ப்பதில் அன்னப்பறவை பெயர்ப் பெற்றது.

அன்னப்பறவை காகத்தினிடம் "நண்பா! நீயும் எங்களைப் போல,நல்லதை மட்டுமே பிரித்து உண்.ஏன் இறந்து அழுகிக் கிடக்கும் பறவைகளை உண்ணுகிறாய்?" என்றது.

காகமும், அன்னப்பறவை சொன்னதில் உள்ள நன்மையை உணர்ந்து, 'இனி அப்படியே நடப்பதாக உறுதி அளித்தது"

அந்த சமயத்தில்..எங்கிருந்தோ அழுகிய நாற்றம் வர . அந்த நாற்றத்தினால் ஈர்க்கப்பட்ட காகம் அங்கு பறந்து சென்று பார்த்தது.

ஒரு எலி ஒன்று அழுகிய நிலையில் செத்துக் கிடந்தது.

உடனே, தான் நண்பன் அன்னப்பறவைக்கு அளித்திருந்த உறுதி மொழியை மறந்து, எலியைக் கொத்தி உண்ண ஆரம்பித்தது.

அதைப் பார்த்த அன்னம், சிலரது பிறவிக் குணத்தை மாற்ற முடியாது என்று உணர்ந்தது..

Sunday, February 11, 2018

9-நன்றி மறப்பது நன்றன்று


ஒரு காட்டில், சிங்கம் ஒன்றை உயிருடன் பிடிக்க எண்ணிய சிலர், ஒரு கூண்டினைத் தயாரித்து அதில் ஒரு ஆட்டுக் குட்டியை கட்டி வைத்திருந்தனர்
ஆட்டிற்கு ஆசைப்பட்டு ,சிங்கம் கூட்டினுள் அகப்பட்டுக் கொள்ளும் என்ற எண்ணத்தில்.

ஒரு சிங்கமும், அதுபோலவே கூண்டினுள் மாட்டிக் கொண்டது

அப்போது ,அவ்வழியாக ஒரு விறகுவெட்டி வந்தான்.சிங்கம் அவனிடம்,"மனிதா! என்னை விடுவித்து விடு.நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன்" என்றது

மனிதர்களை அடித்துக் கொல்பவன் நீ.உன்னை நான் எப்படி நம்புவது?" என்றான் விறகுவெட்டி

'நான் மனிதர்களை அடித்துக் கொல்பவன் தான்.அதற்காக..என்னை காப்பாற்றியவனை நான் அப்படிச் செய்வேனா? நன்றி மறப்பவன் அல்ல நான்" என்றது

சிங்கத்தின்பேச்சினை நம்பிய விறகுவெட்டி, கூண்டினைத் திறந்து சிங்கத்தை விடுவித்தான்.

வெளியே வந்த சிங்கம் ,விறகுவெட்டி மீது பாயத் தயாரானது.

உடன் விறகுவெட்டி, "சிங்கமே! உன்னை விடுவித்த எனக்கு நீ காட்டும் நன்றி இதுதானா?" என்றான்

"மனிதனை அடித்துக் கொல்பவன் நான்.என் உயிரைக் காப்பாற்றுக் கொள்ள பொய் சொன்னேன்.நீ மனிதன்.உன் அறிவைப் பயன் படுத்தி, ஒருவருக்கு உதவும் முன், அது நல்லதா?கெட்டதா? என்பதை உணர வேண்டாமா" என்றது.

அப்போது அவ்வழியாக நரி ஒன்று வந்தது.

"நாம் நரியிடம் நியாயம் கேட்போம்" என்றான் விறகுவெட்டி.

மனிதனை அடித்துத் தின்று விட்டு,  நரியையும் கொன்று உண்ணலாம் என்ற ஆசையில், சிங்கம் அதற்கு சம்மதித்தது.

சிங்கத்தின் நன்றி கெட்ட செயலை அறிந்த நரி, விறகுவெட்டியை காப்பாற்ற எண்ணியது

அதனால், சிங்கத்திடம் ,"நீங்கள் எந்த கூண்டில் அடைபட்டு இருந்தீர்கள்?" என்றது.

சிங்கம் கூண்டினைக் காட்டியது.

"எப்படி அடைபட்டுக் கிடந்தீர்கள்?" என்றது நரி.

"இப்படித்தான்" என்று கூறியபடியே, சிங்கம் கூண்டினுள் சென்றது.உடன் நரி, கூண்டினை இழுத்து மூடியது.

இப்போது, சிங்கம் மீண்டும் கூண்டினுள்.

நரியைப் பார்த்து சிங்கம், "நரியே! நீ செய்தது நியாயமா?" என்றது

"உதவி செய்த மனிதனை, நீ அடித்துக் கொல்வது நியாயமானால், நான் செய்ததும் நியாயம்தான்"என்ற நரி, விறகுவெட்டியைப் பார்த்து,"ஒருவருக்கு உதவும்முன், அந்த உதவிக்கு அவன் தகுதியானவனா? என யோசித்து செய்ய வேண்டும்" என அறிவுரை கூறியது.

நாமும் ஒருவர் செய்த உதவியை மறந்து நடந்தோமானால், தீங்கு விளையும் என்று உணர வேண்டும்.

நன்றி மறப்பது நன்றன்று 

Saturday, February 10, 2018

8 -உழைப்பே உயர்வு தரும்



சரவணனும், கந்தனும் நண்பர்கள்.
சரவணன் எல்லோரிடமும் இரக்கக் குணம் கொண்டவன்.கந்தனோ, யார்..யாருக்கு இரக்கம் காட்ட வேண்டும் என்பதை அறிந்தவன்

ஒருநாள், வாலிப வயது பிச்சைக்காரன் ஒருவன் அவர்களிடம் வந்து , தனக்கு பசிப்பதாகக் கூறி பிச்சைக் கேட்டான்.கந்தன் அவனிடம், "உனக்கு இளம் வயது.ஏன் பிச்சை எடுக்கிறாய்? ஏதேனும் வேலை செய்து பிழைக்கலாமே!' என திட்டி அனுப்பி விட்டான்.

ஆனால், சரவணனோ அவனைக் கூப்பிட்டு, சிறிது பணம் தந்து அனுப்பினான்

அடுத்தநாளும் இப்படியே நடந்தது

மூன்றாம் நாள், அவன் வந்த போது, கந்தன் அவனை தர தர  என இழுத்துக் கொண்டு ஒரு நதிக்கரைக்கு வந்தான்.அவனிடம் ஒரு தூண்டிலைக் கொடுத்து, "இனி நீ இந்தத் தூண்டில் மூலம் மீன் பிடித்து, அதை விற்று, உழைத்து உண்ண வேண்டும்." என்று கோபத்துடன் கூறிச் சென்றான்.

பிறகு அவர்கள் அந்தப் பிச்சைக்காரனப் பார்க்கவேயில்லை.

சில வருடங்கள் ஓடின..

ஒருநாள் பணக்கரர் ஒருவர் கந்தனையும், சரவணனையும் பார்க்க வந்தார்.

அவர் யார் ?என அவர்களூக்குத் தெரியவில்லை.

அவரே சொன்னார்"ஐயா''நீங்கள் தூண்டில் கொடுத்து உழைத்துப் பிழைக்கச் சொன்னீர்களே! அந்தப் பிச்சைக்காரன் நான்.அன்றுமுதல் உழைத்தேன்.பணக்காரன் ஆனேன்.உழைப்புத்தான் உயர்வு தரும் என உணர்ந்தேன்.
அதற்கு உங்களுக்கு நன்றி என்றதுடன் கந்தனுக்கும் சரவணனுக்கும் சில பரிசுகள் கொடுத்துவிட்டுச் சென்றார்.

இதிலிருந்து சோம்பித் திரிபவர்கள் வாழ்வில் முன்னேற முடியாது.உழைப்பே உயர்வு தரும் என உணருவோமாக

Friday, February 9, 2018

7 - விட்டுக் கொடுக்கும் மனம்


அந்த ஊரின் நடுவே ஆறு ஒன்று ஓடிக் கொண்டிருந்தது.
ஆற்றைக் கடக்க ஒரு பாலம் ஒன்றிருந்தது.அது மிகவும் குறுகிய பாலம்.ஒருவர் போனால் , ஒருவர் வர முடியாத அளவிற்குக் குறுகியது,

ஒருநாள் பாலத்தின் ஒருமுனையிலிருந்து ஆடு ஒன்று பாலத்தைக் கடக்க எண்ணி பாலத்தில் நடக்க ஆரம்பித்தது

அதே நேரத்தில்,எதிர்முனையில் இருந்தும்,ஆற்றினைக் கடக்க பாலத்தில் ஒரு ஆடு வர ஆரம்பித்தது.

இரு ஆடுகளும், நடு பாலத்தில் சந்தித்தன

முதல் ஆடு, "வழி விடு.நான் தான் முதலில் கடக்க ஆரம்பித்தேன்"என்றது

எதிர் முனையில் இருந்து வந்த மற்ற ஆடோ, "முடியாது.நான் தான் முதலில் கடக்க ஆரம்பித்தேன்..நீ வழிவிடு" என்றது.

இரண்டு ஆடுகளும். ஒன்றுக்கொன்று விட்டுக் கொடுக்காமல் ..நடுப்பாலத்தில் சண்டையிட்டுக் கொண்டிருந்தன.
 ஒருகட்டத்தில், ஒன்றை ஒன்று முட்டிக் கொண்டு, கால்கள்  தடுமாற, பாலத்திலிருந்து ஆற்றில் விழுந்தன.இரு ஆடுகளையும் ஆறு அடித்துச் சென்றது.

ஒன்றுக்கொன்று விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாததால் தங்கள் உயிரை இழந்தன.

வாழ்விலும், நாம் விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கினைக் கொண்டால், வாழ்வு சிறப்பாக அமையும்.

Thursday, February 8, 2018

6 - நட்பின் பெருமை


ராமனும், குமரனும்  நண்பர்கள்.
இருவரும் ஒரே பள்ளியில், ஒரே பிரிவில் நான் காம் வகுப்பு படித்து வந்தனர்
ராமன், காலையில் விரைவில் எழுந்து, காலைக்கடன்களை முடித்து, குளித்து முடித்து, சிறிது நேரம் பள்ளிப் பாடங்களைப் படித்துவிட்டு, காலை உணவை அருந்திவிட்டு பள்ளி செல்வது வழக்கம்

ஆனால், குமரனோ ,நேர் எதிர்.
தாமதமாகத் தான் தினமும் எழுவான்.அவசர அவசரமாகக் காலைக் கடன்களை முடித்து, அரை குறையாகக் குளித்ததாகப் பெயர் பண்ணிவிட்டு, உணவை அள்ளி அள்ளி வாயில் போட்டுக் கொண்டு பள்ளிக்கு ஓடுவான்

ஒருநாள் குமரன், மிகவும் தாமதமாக எழுந்தான்.பள்ளிக்கோ நேரம் ஆகிறது.அவசர அவசரமாகக் காலைக் கடன்களை முடித்து பள்ளிக்கு விரைந்தான்

முதல் பீரியட் முடிந்ததும்...பொறுக்க முடியாத்தால் அவன் கால்சட்டை நனைந்தது.

அதைப்பார்த்த ராமன் உடனடியாக தன்னிடமிருந்த தண்ணீர்
பாட்டிலைத் திறந்து..ஏதேச்சையாகத் தண்ணீர் கொட்டுவது போல குமரனின் கால்சட்டையில் தண்ணீரைக் கொட்டினான்
மற்ற மாணவர்கள் பார்த்த போது, தான் தவறி தண்ணீரைக் கொட்டிவிட்டதாகக் குறி குமரனிடம் மன்னிப்புக் கேட்டான்.

மாலையில், பள்ளி முடிந்ததும், குமரன் , ராமனிடம் வந்து "ராமா..என் கால்சட்டை நனைந்ததை நீ பார்த்துவிட்டாய்.மற்றவர்கள் பார்த்து..என்னைக் கேலி செய்யப் போகிறார்களே என்று உடனே தண்ணீரைக் கொட்டி, தண்ணீரினால் என் கால்சட்டை நனைந்தது போல செய்து விட்டாய்.உன் இந்த உதவியை மறக்க மாட்டேன்" என்றான்.

ராமனும் குமரனைப் பார்த்து, "குமரா! இதற்கான காரணம் என்ன தெரியுமா? நீ தினமும் தாமதமாக எழுவதால்...உன்னால் எந்த ஒரு வேலையையும் ஒழுங்காகச் செய்ய இயலவில்லை.நீயும் என்னைப் போல சீக்கிரம் எழுந்தால், ஆரவாரமில்லாது எல்லா வேலைகளையும் செய்யலாம் இல்லையா?" என்றான்.

குமரனும், தன் தவறினை உணர்ந்து, அடுத்த நாள் முதல் ராமனை பின் பற்ற ஆரம்பித்தான்.

இப்போது, அவர்கள் வகுப்பில் முதல் மாணவர்கள் அவர்களே ஆகும்.



Wednesday, February 7, 2018

5 - முட்டாள் தோழன்


நரியூர் என்ற ஊரில் அரசன் ஒருவன் அரசாண்டு வந்தான்.அவனுக்கு ஒருவர் ஒரு நாள் குரங்கு ஒன்றை பரிசாக அளித்தார்.

அந்த குரங்கும், அரசனிடம் மிகவும் பாசமாய் இருந்தது.
அரசர் உலாவச் செல்லும் போதெல்லாம், குரங்கையும் உடன் கூட்டிச் செல்வார்

ஒருநாள், அப்படிச் செல்லும் போது, முட்புதர் ஒன்றில் இருந்த பாம்பு ஒன்று அரசரைக்  கடிக்க இருந்தது.அதைக் கண்ட குரங்கு, அந்தப் பாம்புடன் சண்டையிட்டு அதைக் கொன்றது.
மன்னனுக்கோ மகிழ்ச்சி.குரங்கு, தன் உயிரைக் காத்தது என அனைத்து மந்திரிகளிடமும் சொல்லி, குரங்கின் விசுவாசத்தைப் போற்றினான்.
தவிர்த்து, அன்று முதல் குரங்கை தன் பாதுகாவலராக அமர்த்தினான்.

அமைச்சர்கள் அனைவரும் அரசனிடம்' அரசே! என்ன இருந்தாலும் குரங்கு ஒரு விலங்கு, அதற்கு பகுத்தறிவோ,முடிவெடுக்கும் திறனோ இருக்காது" என்றனர்.
ஆனால் , அரசனோ, "குரங்கிற்கு, பாசமும், விசுவாசமும் உள்ளது.அது போதும்" என்றான்.
அன்றுமுதல் குரங்கு அரசனின் பாதுகாவலன் ஆகியது.

ஒருநாள், அரசனுக்கு தூக்கம் வந்தது,மிகவும் சோர்வுடன் காணப்பட்ட அவன், குரங்கினிடம், "நான் தூங்கப் போகிறேன்.யாரும் தொந்தரவு செய்யாமல் பார்த்துக் கொள்" என்று கூறிவிட்டு தூங்கச் சென்றார்.

அரசன் தூங்க ஆரம்பித்ததும், ஈ ஒன்று பறந்து வந்து ராஜாவின் மூக்கின் மீது அமர்ந்தது.அதை விரட்டி அடித்த குரங்கு, "மன்னன் தூங்குகிறார்.அவரை இம்சித்தால் கொன்றுவிடுவேன் உன்னை" என ஈயை எச்சரித்தது.
அதை பொருட்படுத்தாத ஈ, இம்முறை அரசனின் கழுத்தில் அமர்ந்தது.

தூங்கும் அரசனை இம்சிக்கும் ஈ மீது கோபம் கொண்ட குரங்கு, அரசனின் வாளை எடுத்து, அவரது கழுத்தில் அமர்ந்திருந்த ஈ ம் மீது ஒரே போடாக போட்டது.
வாள், மன்னனின் கழுத்தில் பாய்ந்து மன்னன் உயிர் நீத்தான்.

முட்டாளை பாதுகாவலனாக அமர்த்தியதால் மன்னன் உயிரிழக்க நேரிட்டது.

ஆகவே, குழந்தைகளே! நாமும் முட்டாள்களை நண்பனாகக் கொள்ளக் கூடாது

Saturday, January 13, 2018

4. தேவையில்லாதவற்றில் தலையிடாதே.......




ஒரு விறகு வெட்டி இருந்தான். காட்டுப் பகுதிக்கு ஒட்டி இருந்தது அவன் குடிசை.

மரங்களை வெட்டிவருவது, கோடரியால் பிளப்பது, சிறு துண்டுகளாக்கி பக்கத்துக்கு கிராமங்களுக்கு கொண்டு விற்பது. அதை கொண்டு குடும்பம் நடத்துவது, அவனது அன்றாட வேலை.

அன்று அப்படிதான் ஒரு பெரிய அடிமரத்துண்டை கோடரியால் பிளக்க ஆரம்பித்தான்.

சிறிது நேரத்தில் களைப்படைந்தவன்,. அடிமரத்தை பாதியளவு பிளந்திருந்ததால் அப்பிளவுக்கு இடையில் ஆப்பு போல் ஒரு மரச்சக்கையை வைத்துவிட்டு ஓய்வெடுக்கச் சென்றான்.

பக்கத்திலேயே ஒரு பெரிய மரம் இருந்தது. அம்மரத்தின் ஒரு கிளையில் இருந்த அக்குரங்கு ஒன்று மரம் வெட்டியின் செயலைப் பார்த்துக் கொண்டிருந்தது.

மரம் வெட்டி அப்பால் நகர்ந்ததும் அக்குரங்கு உடனே இறங்கி வந்தது.

அம்மரத்துண்டின் பிளவுபட்ட பகுதியில் வால் முழுவதும் விட்ட நிலையில் படிய அதன்மேல் அமர்ந்து கொண்டது.

அது குரங்கு அல்லவா! அதற்கே உரிய குரங்கு வேலையைச் செய்ய ஆரம்பித்தது; ஆப்பாக சொருகி இருந்த மரத்துண்டை ஆட்டி ஆட்டி எடுக்க ஆரம்பித்தது/

ஒரு ஆட்டு, இரண்டு ஆட்டு, மூன்று ஆட்டு….. சில ஆட்டுகள்!

படுக்கென்று அந்த ஆப்புதுண்டு வந்துவிட்டது. சடக்கென்று பிளவுபட்டப் பகுதியின் இடைவெளி குறைந்துவிட்டது.

அத்துடனா?

பிளவுக்குள் தொங்கி இருந்த வால் நசுங்க குறைந்து “வீல்…வீல்” என்று அலறியது.

ஓய்வாக உள்ளே இருந்த மரம்வெட்டி அலறல் கேட்டு அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தான்.

பாத்தால் குரங்கு பாவம் செத்துவிட்டது.

“இத்தனை நாள் இல்லாமல் எங்கிருந்து வந்துத் தொலைந்தது இன்று சாவதற்கென்றே” என்ற முணுமுணுப்புடன் குரங்கின் உடலை அப்புறப்படுத்தினான் அவன்.

குரங்கின் அசட்டுச் செயல் அதற்கே அழிவை தந்துவிட்டது