Thursday, December 30, 2010

57.மரத்தின் அவசியம்..(நீதிக்கதை)




ஒரு ஊரில் ஒரு பெரிய மாமரம் இருந்தது.ஒரு சிறுவன் அந்த மரத்தைச் சுற்றி விளையாடுவது வழக்கம்.

அச்சிறுவன் பள்ளி செல்லத் தொடங்கினான்.விடுமுறையில் ஒருநாள் அம்மரத்தினிடம் வந்தான்.

மாமரம் அவனை தன்னிடம் விளையாட அழைத்தது.

'நான் பள்ளி செல்ல ஆரம்பித்துவிட்டேன்.அதனால் உன்னுடன் விளையாட முடியாது.

எனக்கு இப்போது கிரிக்கெட் மட்டை வாங்கவேண்டும்' என்றான் அவன்.

உடனே மரம்..'என்னிடம் உள்ள பழங்களை பறித்து விற்று நீ கிரிக்கெட் மட்டை வாங்கிக்கொள்' என்றது.

'சரி' என அவன் எல்லாப் பழங்களையும் பறித்துச் சென்றான்.

பின் அவன் மரத்தையே மறந்துவிட்டான். அவன் பெரிய மனிதனாக வளர்ந்தான் .பின் ஒருநாள் மரத்திடம் வந்தான்,

மரம் அவனை விளையாட அழைத்தது.

'எனக்கு என் குடும்பத்தை பார்க்கவே நேரமில்லை.எனக்கு வீடு ஒன்று வேண்டும்.அதற்கு உன்னால் உதவ முடியுமா' என்றான்'.

மரம் தன் கிளைகளை உடைத்து இவற்றை வீட்டிற்கு உபயோகப்படுத்திக்கொள் என்றது.

அவனும் பல மரக்கிளைகளை எடுத்து சென்றான்.

மீண்டும் பல நாள் அவன் மரத்திடம் வரவில்லை.வயது முதிர்ந்து கிழவனாக ஒரு நாள் மரத்திடம் வந்தான்.

மகிழ்ந்த மரம் 'இப்போது முன் போல் என்னிடம் விளையாடு' என்றது.

எனக்கு வயதாகிவிட்டது .என்னால் விளையாட முடியாது.ஆனால் எனக்கு உட்கார்ந்து இளைப்பாற ஒரு சாய்வு நாற்காலி வேண்டும் என்றான்.

மரமும் தன் கிளைகளில் ஒன்றை அவனிடம் கொடுத்து நாற்காலி செய்து கொள்ளச் சொன்னது.

சிறிது காலம் கழித்து அவன் மீண்டும் வந்தான். இப்போது மரம் 'எனக்கும் வயதாகி விட்டது.என்னிடம் இப்போது பழங்கள் கூடக் கிடையாது..' என்றது.

'என் வாழ் நாள் முழுவதும் உதவினாய் நீ...ஆனால் ,உன்னைப் பற்றி இதுவரை நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே ''என்று வருந்தினான் அவன்.

மரமோ 'அதற்காக வருத்தப்படாதே .யாரோ நட்ட செடியான நான் வளர்ந்து உனக்கு பலனளித்தேன். நீ ஒரு செடியை நடு அது மரமாகி வேறு யாருக்கேனும்

பலனளிக்கும். எங்கள் வம்சமும் வளரும்' என்றது.

நாமும் நம்மால் முடிந்தால் நம் வீடுகளில் குறைந்தது ஒரு மரத்தையாவது வளர்க்க வேண்டும்.

மரத்தினால் சுத்தமான காற்று கிடைக்கிறது. மழை வர மரங்களும் காரணமாக அமைகின்றன் என்பதை நாம் உணர வேண்டும்.

Monday, December 27, 2010

56-செயலில் கவனம்..... (நீதிக்கதை)


ஒரு ஊரில் ஒரு பால் வியாபாரி இருந்தாள்.

அவள் தன்னிடமிருந்த ஒரு பசு மாட்டிலிருந்து பாலைக் கறந்து அதை ஒரு குடத்திலிட்டு தன் தலையில் வைத்து எடுத்துச் சென்று வியாபாரம் செய்து வந்தாள்.

ஒருநாள் அப்படிச் செல்லும் போது..இன்று பாலை விற்று வரும் பணத்தில்..சில கோழிக் குஞ்சுகள் வாங்குவேன்.அவை வளர்ந்து பெரிதானதும்..அவைகளை விற்று வரும் பணத்தில் இரண்டு ஆட்டுக் குட்டிகள் வாங்குவேன்..அவை வளர்ந்ததும் அவற்றை விற்று இன்னொரு பசு மாடு வாங்குவேன்..அது பால் கறக்கையில் சண்டித்தனம் பண்ணினால் அதை தலையில் பால் எடுத்துப் போகும் குடத்தால் இப்படி வீசுவேன்....என தன்னை மறந்து..தலையில் இருந்த குடத்தை எடுத்து வேகமாக வீச, அதில் இருந்த அனைத்து பாலும் கீழே கொட்டியது.குடமும் உடைந்தது.

அவளுக்கு அன்றைய பால் வியாபாரம் நஷ்டமடைந்ததுடன்..பால் குடமும் வேறு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அப்போதுதான் அவள், எந்த ஒரு காரியமும் நடந்து முடிக்கும் முன், அதை எண்ணி திட்டங்கள் போடக் கூடாது என்பதை உணர்ந்தாள்.

எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும்..அதை முதலில் முடிக்க வேண்டும்.இடையில் வேறு நினைவுகள் வந்தால் நஷ்டமே ஏற்படும்.

Tuesday, December 21, 2010

55-மூன்று மீன்கள் (நீதிக்கதை)




ஒரு கிராமத்தில் ஆழமற்ற குட்டை ஒன்று இருந்தது.

அதில் பல மீன்கள் இருந்தன. அவற்றில் மூன்று மீன்கள் நட்புடன் இருந்தன.அவற்றில் ஒரு மீன் அதிக புத்திசாலி,மற்றொன்று ஆழ்ந்த சிந்திக்கும் திறன் கொண்டது.மூன்றாவது மக்கு .

ஒருநாள் சில மீனவர்கள் குட்டை நீரை கால்வாய் அமைத்து பள்ளங்களில் வடிய வைத்தனர்.அது கண்டு பயந்த ஆழ்ந்த சிந்தனை உள்ள மீன் 'ஆபத்தில் சிக்கிக் கொள்ளாமல் விரைந்து கால்வாய் வழியே தப்பி வேறு இடம் சென்றிடுவோம்' என்றது.

ஆனால் மக்கு மீனோ 'இங்கேயே இருக்கலாம்' என்றது.புத்திசாலி மீன்'சமயம் வரும்போது புத்திசாலித்தனமாக தப்பி விடுவோம்' என்றது.

ஆனால்..ஆழ்ந்த சிந்தனைக் கொண்ட மீன் அந்த இடத்தை விட்டு..கால்வாய் வழியே வெளியேறி ஆழமான குளத்தைச் சேர்ந்தது.

தண்ணீர் வடிந்ததும் மீனவர்கள் வலைகளை விரித்து மீன்களை பிடித்தனர்.

மக்கு மீன் மற்ற குட்டையில் இருந்த மீன்களுடன் சேர்ந்து வலையில் சிக்கியது.

புத்திசாலி மீனோ வலையின் கயிற்றைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது.

வலையை எடுத்துச் சென்று குளத்தில் கழுவும் போது புத்திசாலி மீன் வலையிலிருந்து தன் பிடியை விட்டு விரைவில் குளத்தில் நுழைந்து தப்பித்தது.

மக்கு மீனோ வலையில் சிக்கி இறந்தது.

சிந்திக்கும் திறனும்,புத்திசாலித்தனமும் இருந்தால் மகிழ்ச்சியுடன் வாழலாம்.

Wednesday, December 15, 2010

54-புத்திசாலி காகம் (நீதிக்கதை)


வெயில் காலம்

வெயில் மக்களை பறவைகளை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தது
பறவைகள் தங்கள் தாகத்தைத் தீர்க்க தண்ணீர் இன்றி அவதியுற்றன.
அவற்றில் ஒரு புத்திசாலி காகமும் இருந்தது.அது தண்ணீருக்காக அலையும் போது..ஒரு வீட்டின் வெளியே வாய் குறுகிய குடுவை ஒன்றின் அடியில் கால் பாகத்திற்கு தண்ணீர் இருந்ததைப் பார்த்தது.அது, உடன் குடுவையின் விளிம்பில் அமர்ந்து, தன் அலகால் தண்ணீரைக் குடிக்கப் பார்த்தது.ஆனால் அதன் அலகிற்கு தண்ணீர் மட்டத்தை எட்ட முடியவில்லை.

அந்தக் காகம் புத்திசாலியானதால்..என்ன செய்வது..என யோசித்தது.

பக்கத்தில் சிறு சிறு கூழாங்கற்கள் கொட்டிக் கிடந்தன.உடனே அதற்கு ஒரு யுக்தித் தோன்றியது.ஒவ்வொரு கூழாங்கற்களாக எடுத்து..அதை அந்தக் குடுவையில் போட்டது.

கூழாங்கற்கள் விழ,விழ..தண்ணீரின் நீர் மட்டம் உயரத் தொடங்கியது.ஒரு கட்டத்தில் குடுவையின் வாயருகே தண்ணீர் வந்து விட்டது.

உடன், அந்தக் காகம் தண்ணீரில் தன் அலகை வைத்து..தாகம் தீர தண்ணீர் அருந்தி மகிழ்ந்தது.

எந்தப் பிரச்னையாயினும் அதற்கு ஒரு தீர்வு உண்டு.நமது புத்தியை பயன்படுத்தி,யோசித்து..தீர்வு கண்டால் பிரச்னை தீர்ந்து மகிழ்ச்சி ஏற்படும்.

Thursday, December 9, 2010

53-உப்பு வியாபாரியும்..கழுதையும் (நீதிக்கதை)




ஒரு ஊரில் ஒரு உப்பு வியாபாரி இருந்தான்.அவனிடம் ஒரு கழுதை இருந்தது.அவன் ஊரில் ஒரு ஆறு ஓடிக் கொண்டிருந்தது.பக்கத்து ஊருக்குச் செல்லக் கூட ஆற்றைக் கடக்க வேண்டும்.

அவன் தினமும் அடுத்த ஊருக்குச் சென்று உப்பு மூட்டையை கழுதையின் முதுகில் ஏற்றி ஆற்றைக் கடந்து தன் ஊருக்கு வந்து உப்பு வியாபாரம் செய்து வந்தான்.

அப்படி செய்கையில், ஒரு நாள் உப்பு மூட்டையுடன் கழுதையை ஆற்றில் இறக்கி நடந்து வந்த போது..ஆற்றின் நீர் மட்டம் உயர..உப்பு மூட்டை நனைந்து அதில் இருந்த உப்பு சற்று கரைய..கழுதைக்கு சுமந்து வந்த சுமை சற்று குறைந்தது.இதனால் மனம் மகிழ்ந்த கழுதை..அடுத்தடுத்த நாட்களில் உப்பை சுமந்து வரும்போது..வேண்டுமென்றே தண்ணீரில் அமிழ்ந்து உப்பைக் கரைத்தது.

இதனால்..வியாபாரத்தில் நஷ்டமடைந்த வியாபாரி..ஒருநாள் கழுதை செய்யும் தந்திரத்தை அறிந்தான்.உடன் கழுதைக்கு பாடம் கற்பிக்க எண்ணினான்.

அடுத்த நாள் அவன் கழுதையை கட்டிப் போட்டுவிட்டு..உப்புக்கு பதில்..பருத்தி பஞ்சை ஒரு மூட்டை வாங்கி வந்து கழுதையின் முதுகில் கட்டினான்.

வழக்கம் போல ஆற்றைக் கடக்கையில் கழுதை தண்ணீரில் அமிழ்ந்தது.பஞ்சு மூட்டை தண்ணீரில் நனைய ..மூட்டையின் சுமை ஏறியது.கழுதையும் கடக்க முடியாமல் ஆற்றைக் கடந்து கரைக்கு வந்து சேர்ந்தது.

தனது ஏமாற்று வேலை இவ்வளவு நாள் தன்னைக் காப்பாற்றிவந்த வியாபாரிக்குத் தெரிந்து விட்டத்தை எண்ணி வெட்கப்பட்டது.இனி நேர்மையாக நடக்க முடிவெடுத்தது.

நாமும்..நம்மை நம்பியவர், நம்பாதவர் யாரையும் ஏமாற்றக் கூடாது.அப்படி செய்தால் ஒரு நாள் நம் செயல் அவர்களுக்குத் தெரியவரும்.அன்று அவமானம் அடையும் நிலை வரும்.அதற்கான தண்டனையும் நமக்குக் கிடைக்கும்.

Tuesday, November 30, 2010

52..காலத்தால் செய்த உதவி -நீதிக்கதை.

பிரதீப் நன்கு படிக்கும் மாணவன்.அவனது லட்சியமே நன்கு படித்து டாக்டராக ஆகி ஏழைகளுக்கு இலவச வைத்தியம் பார்க்க வேண்டும் என்பதே.

ஆனால் அவனது குடும்பத்தில் அவன் உடன் பிறந்தவர்கள் ஐந்துபேர்.ஆகவே அவனுக்குத் தேவையானதைத் தரக்கூட அவனது பெற்றோர்களால் முடியவில்லை.

இந்நிலையில் ஒருநாள் சரியான சாப்பாடுக் கூட சாப்பிடாது..பள்ளி பரீட்சைக்குக் கிளம்பினான் அவன்.

வெளியே நல்ல வெயில்..பசி வேறு வயிற்றைக் கிள்ள..தெரு ஓரம் மயங்கி விழுந்தான்.

தெருவில் வந்துக் கொண்டிருந்த மூதாட்டி ஒருத்தி அதைப் பார்த்தார்.உடன்..தன் கையில் வாங்கி வந்துக் கொண்டிருந்த பாலை ஒரு தம்ளரில் ஊற்றி அவனுக்கு அளித்தாள்.அதைப் பருகிய பிரதீப் பின் தெம்புடன் தேர்வுக்குச் சென்றான்.

காலம் ஓடியது..

அந்த மூதாட்டி நோய் வாய் பட்டாள்.ஒரு மருத்துவமனையில் அண்டை வீட்டார் அவளைச் சேர்த்தனர்.அவளுக்கு நல்ல சிகிச்சைக் கொடுக்கப் பட்டது.உடல் நன்கு தேறியது..பின்னரே அவளுக்கு மருத்துவ மனைக்கான செலவை எப்படிக் கொடுப்பது என்ற எண்ணம் வந்தது.

அவளை வீட்டிற்குப் போகலாம் என்ற மருத்துவர் ஒருவர் கட்டணத்திற்கான பில்லைக் கொடுத்தார்.அதில் கட்டணம் ஒரு தம்ளர் பால்..அதுவும் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு விட்டது என்றிருந்தது.

புரியாத மூதாட்டி..அந்த மருத்துவரைப் பார்த்தாள்.அவர் "அம்மா..நான் யார் என்று தெரியவில்லையா...நான் தான் அன்று ஒருநாள் பரீட்சைக்குப் போனபோது மயங்கி விழுந்து..உங்களால் பாலை வாங்கி அருந்தி புத்துயிர் பெற்று பரீட்சைக்கு சென்ற மாணவன்.அன்று உங்கள் உதவி எனக்கு மிகவும் பெரிதாய் இருந்தது' என்றார்.

காலத்தால் செய்த உதவி சிறிதாய் இருந்தாலும்..அதைப் பெரிதாக நினைத்து மறக்கக் கூடாது

Thursday, November 18, 2010

51.மானும்..ஓநாயும் (நீதிக்கதை)

ஒரு ஊரில் மான் கூட்டம் ஒன்று வசித்து வந்தன.அவற்றுள் ஒரு சின்ன மான் மிகவும் புத்திசாலியாய் இருந்தது.

அதே நேரம் தன் புத்திசாலித்தனத்தைக் கண்டு மற்ற மான்களிடம் சற்று கர்வமாகவே நடந்துவந்தது.

ஒரு நாள் எல்லா மான்களும் மேய்ச்சல் முடிந்து திரும்புகையில் இருட்ட ஆரம்பித்தது..ஆனால் அப்போதும் அந்த

சின்ன மான் திரும்ப வரவில்லை..

'இருட்டில் எந்தமிருகமாவது வந்து உன்னை அடித்து உண்டு விடும்'என்று வயதான மான் ஒன்று அறிவுரை கூறியும்

சின்ன மான் கேட்கவில்லை..'சரி' என மற்ற அனைத்து மான்களும் திரும்பின..

அந்த நேரம் அங்கு வந்த ஒரு ஓநாய் ஒன்று சின்ன மான் தனியாய் இருப்பதைப் பார்த்து ...அதை கொன்று உண்ண விரும்பியது..

உடன் சின்ன மான் புத்திசாலித்தனமாக' என்னை நீ உண்பதில் எனக்கு ஆட்சேபணையில்லை..ஆனால் அதற்கு முன் உன் இனிய குரலில்

பாட்டு ஒன்று கேட்க ஆசை'என்றது.

ஓநாயும் சின்ன மானின் கடைசி விருப்பத்தை கேட்டுவிட்டு போகட்டும் என்ற எண்ணத்தில் தன் கொடூரக்குரலால் பாட ஆரம்பித்தது.

அதன் குரல் கேட்ட வேட்டைக்காரர்கள் சிலர் அங்கு ஓடி வந்து ஓநாயை கொன்றனர்.

சின்ன மான் உயிர் தப்பியது.

கர்வம் இல்லாமல் ...மூத்த மான் சொன்ன அறிவுரையை கேட்டிருந்தால் சின்ன மானுக்கு இந்த நெருக்கடி வந்திருக்காது.

ஓநாயும் தன் கொடூரக்குரலை பற்றி புரிந்துகொண்டு பாடாமல் இருந்திருந்தால் இறந்திருக்காது

Thursday, November 11, 2010

50.ஓநாயும் ஆடும் (நீதிக்கதை)





ஒரு காட்டில் ஒரு ஓநாயும்...ஒரு வெள்ளாடும் இருந்தது,

கொழுத்த அந்த ஆட்டின் மீது ஓநாய்க்கு எப்போதும் ஒரு கண்...அதை அடித்து சாப்பிடவேண்டும் என்று.

அதற்காக பலமுறை ஓநாய் அந்த ஆட்டை சண்டைக்கு இழுத்தது.

ஓநாயின் குணம் அறிந்த ஆடு..ஓநாயிடம் இருந்து தன் புத்திசாலித்தனத்தால் தப்பிவந்தது.

ஒரு சமயம்..ஒரு நதியின் நடுவில் குறுகலான ஒரு பாலத்தில் ஆடு சென்றது .அப்பாலம் ஒரு நபர் சென்றால்..ஒருவர்

எதிரே வர முடியாத அளவு குறுகலானது.

பாலத்தில் ஆடு வருவதைக்கண்டு,பெரும்பகுதியை ஆடு கடந்ததும்,ஓநாய் அந்த முனையிலிருந்து ஆட்டை நோக்கி வந்தது..

இப்போது ஆடும்.ஓநாயும் எதிரெதிரே வந்துவிட்டன.

ஆடு ஓநாயிடம் ..'நான் கிட்டத்தட்ட பாலத்தைக் கடந்துவிட்டேன்...சற்று நீங்கள் பின் சென்று எனக்கு இடம் கொடுத்தால்..நான்

சென்றுவிடுவேன் ..'என்றது.

இதுதான் சரியான தருணம் என எண்ணி ஓநாய் ஆட்டை வீண் சண்டைக்கு இழுத்தது ''நான் முட்டாள்களுக்கு இடம் தர மாட்டேன்'

நீயே எனக்கு இடம் கொடுத்துப் பின்னால் போ' என்றது.

ஓநாயின் நோக்கம் அறிந்த ஆடு ..'நான் முட்டாள்களுக்கு முதல் இடம் தருவேன்' என தான் பின்னால் சென்று..ஓநாய் பாலத்தை கடக்கச் செய்தது.ஓநாயும் தன் செயல் இம்முறையும் பலிக்கவில்லையே என சென்றுவிட்டது.

ஆடு...தன் புத்திசாலித்தனத்தால்..ஓநாயை முட்டாள் என மறைமுகமாக சொன்னதுடன்..கெட்டவர்களுடன் வீண்வாதம் கூடாது என்று உணர்ந்ததால்

உயிர் பிழைத்தது.

Wednesday, November 3, 2010

49-முயலும் ஆமையும் (நீதிக்கதை)



ஒரு மரத்தடியில் ஆமையிடம் ஓட்டப்பந்தயத்தில் தோற்ற முயல் இளப்பாறிக் கொண்டிருந்தது.அதனிடம் வென்ற ஆமை..தனது ஓடும் திறமையில்தான் வென்றோம் என்னும் இறுமாப்பில் முயலைப் பார்த்து'மீண்டும் ஓட்டப் பந்தயத்திற்கு வருகிறாயா?'எனக் கேட்டது.
தனது அலட்சியப் போக்கால் முன்னர் தோல்வியடைந்த முயல்..சரியான தருணத்திற்குக் காத்திருந்தது.ஆமைக் கேட்டதுமே முயல் 'சரி' எனச் சொல்லி விட்டது.
இம்முறை தூங்கிவிடாது, ஒரே தாவலாய்த் தாவி வெற்றிக் கோட்டை அடைந்தது முயல்.
ஆமையும் ..அப்போது தான் முயல் போல தன்னால் வேகமாக ஓட முடியாது என்பதை உணர்ந்து..வெட்கித் தலை குனிந்தது.
முயலும் சென்ற முறை தன்னை உயர்வாக எண்ணியதால்..ஓடுகையில் தூங்கச் சென்றதை உணர்ந்து..அத் தவறை இம்முறை செய்யாது ஓடி வென்றது.
தவறு செய்வது என்பது அனைவரும் செய்யக் கூடியதே..
அது போல ஒரு முறை தவறு செய்துவிட்டால் அத்தவறை மீண்டும் செய்யாமல் கவனமாய் இருக்க வேண்டும்.

Friday, October 29, 2010

48-குல்லா வியாபாரியும் ..குரங்கும் - நீதிக்கதை

ஒரு ஊரில்  ஒரு குல்லா வியாபாரி இருந்தார்.அவர் தலைக்குல்லாய்களை  ஒரு மூட்டையாகக்  கட்டி  தலையில் சுமந்து வியாபாரம்  செய்து வந்தார் .
வெயிலில்  அவர் அலைவதால் ..அவரும் ஒரு குல்லா அணிந்திருந்தார்    .
ஒருநாள்  குல்லாக்களை  விற்க..தலையில் சுமந்தப்படி  சென்ற அவர் ..ஒரு மரத்தின் கீழ்  மூட்டையை இறக்கி வைத்து விட்டு கண்ணயர்ந்தார் .
அந்த மரத்தில் நிறைய குரங்குகள் இருந்தன.அவை கீழே இறங்கி வந்து மூட்டையைப்  பிரித்து அதில் இருந்த குல்லாய்களை ..அதனதன் தலைகளில் அணிந்துக் கொண்டன.
தூக்கம் கலைந்து எழுந்த வியாபாரி ..குல்லா மூட்டையைக் காணாது ..மரத்தை ஏறிட்டு நோக்க ..குரங்குகள் ஒவ்வொன்றும் குல்லாய் அணிந்திருந்தன.
அவற்றிடம் இருந்து குல்லாயை எப்படி வாங்குவது என யோசித்த வியாபாரி ..குரங்குகள் நாம் செய்வதையே திரும்பச் செய்யும் என படித்திருந்தார் .
அதனால் , தன் தலையிலிருந்த  குல்லாயைக் கழட்டி கீழே எறிந்தார் .
அதைப் பார்த்த குரங்குகள் ..தங்கள் தலையில் இருந்த குல்லாய்களையும் கீழே வீசின .
வியாபாரி எல்லாவற்றையும் எடுத்து மீண்டும் மூட்டையாகக் கட்டிக் கொண்டு வியாபாரத்திற்குக்
கிளம்பினார் .
  எந்த காரியத்திலும்..நாம் சற்று  சிந்தித்து செயல்பட்டால் வெற்றி அடையலாம் .

இந்தக் கதையில் வியாபாரி தன் புத்தியை உபயோகித்ததால்  அவரது குல்லாக்களும்
சேதமின்றி திரும்பக் கிடைத்தது .

Thursday, October 21, 2010

47- தென்னையும் நாணலும் - நீதிக்கதை

ஒரு ஆற்றங்கரையின் ஓரத்தில் ஒரு தென்னை மரமும்.நாணலும் இருந்தன.
தென்னை மரத்துக்கு தான் உயர்ந்தவன் என்ற எண்ணம் இருந்தது.ஆகவே அவ்வப்போது நாணலை அது கேலி செய்து வந்தது.
'நீ மிகவும் சிறியவன்..மழை,காற்று,வெயில் இவற்றை உன்னால் தாங்க முடியாது.நானோ உயர்ந்தவன் ...நான் எல்லாவற்றையும் தாங்குவேன்...எனக்கு
கவலை இல்லை' என்றது தென்னை நாணலைப் பார்த்து.
சில நாட்கள் கழிந்தன்.
மழைகாலம் வர... ஒரு நாள் புயல் ஏற்பட்டது...
புயல் காற்றில் நாணல் தலை வணங்கியது..தென்னையோ புயலை எதிர்த்தது..
தென்னை வேரோடு சாய்ந்தது.
நாணல் எந்த சேதமும் அடையவில்லை.
நாமும் தென்னையைப்போல கர்வமாய் இல்லாமல் நாணலைப்போல அனைவரிடமும் பணிவாக இருக்கவேண்டும்.

Wednesday, October 13, 2010

46 - பழுத்த இலையும் பள்ளமும்(நீதிக்கதை)

ஒரு பெரிய மரம் ஒன்று இருந்தது..அம்மரத்தின் வேரருகே ஒரு பள்ளம் ஒன்றும் இருந்தது..
இலையுதிர் காலம் வந்தது...
மரத்தில் இருந்த இலைகள் பழுத்து கீழே விழ ஆரம்பித்தன.அப்போது ஒரு பழுத்த இலை கீழே பள்ளத்தில் விழுந்தது...அந்த இலை பள்ளத்தைப் பார்த்து ...என்னை உன் பள்ளத்தில் ஏற்றுக்கொள்
இல்லாவிடில்...அடிக்கும் காற்றில் நான் எங்கே போவேன் என தெரியாமல் அல்லாடுவேன் என்றது..
அந்த பழுத்த இலையால் தனக்கு என்ன லாபம் என்று கருதிய பள்ளம்"காப்பாற்ற முடியாது" என்று கூறி பழுத்த இலையை வெளியே தள்ளியது.
பெரும் காற்று அடிக்க இலை பறந்து எங்கோ சென்று விட்டது.
மற்றுமொரு நாள்..வேறொரு இலை பள்ளத்தில் விழுந்தது..மழை வேறு பெய்ய ஆரம்பித்தது..உடனே பள்ளம்..இலயைப் பார்த்து ..
'என்னை மூடிக்கொள்.. இல்லாவிடில் இந்த மழை நீர் என்னுள் நிரம்பி என்னை மூழ்கடித்துவிடும்..மண் சரிந்து என்னை நீக்கிவிடும்' என்று கெஞ்சியது.
அதற்கு அந்த இலை
'அன்று என் சகோதர இலை உன்னை உதவி வேண்டிய போது நீ உதவவில்லை...அதுவும் காற்றில் எங்கோ சென்று மறைந்துவிட்டது..ஆனால் நீ உதவி கேட்கும்போது நான் உன்னைப்போல இருக்கமாட்டேன்'. என்று சொல்லிவிட்டு ..அந்த பள்ளத்தின் மேல்..அதை முழுவதுமாக மறைத்தது இலை.
மழை பெய்து ஓய ..பள்ளமும் காப்பாற்றப்பட்டது.பின் இலை பள்ளத்தைப்பார்த்து 'இனியும் உதவி என நம்மை நாடிவருபவருக்கு..நம்மால் ஆன உதவியை செய்யவேண்டும் என்பதைக் கற்றுக்கொள்'என்றது.
நாமும் பிறருக்கு உதவி செய்வதை ஒரு குறிக்கோளாகக் கொள்ளவேண்டும்.

Wednesday, October 6, 2010

45- 'ராமனும் - பேசும் கிளியும்'.(நீதிக்கதை)

யார் எது சொன்னாலும் உடனே நம்பி விடுவான் ராமன்.
ஒரு நாள் சந்தைக்கு அவன் போன போது ஒரு வியாபாரி ஒரு கூண்டுக்குள் ..கிளி ஒன்றை வைத்து விற்றுக் கொண்டிருந்தான்,,'இந்தக் கிளி பேசும் கிளி 'என்றான்.
ராமனும் நூறு ரூபாய் கொடுத்து அந்தக் கிளியை வாங்கினான்...வீட்டில் அதற்கு பேசப் பழக்கினான்.ஒரு மாதம் ஆகியும் அந்தக் கிளி பேசவில்லை..
அதை அவன் எடுத்துக்கொண்டு ..தான் அதை வாங்கிய வியாபாரியிடம் சென்றான்.
அந்த வியாபாரியோ ..அந்தக் கிளியை வாங்கி ..பரிசோதிப்பது போல பாசங்கு செய்து ..இந்த கிளிக்கு காது கேட்காது ..அதனால் நீங்கள் சொல்வதைக் கேட்டு அதனால் பேச இயலவில்லை..என்று சொல்லி ..வேறு ஒரு கிளியைக் காட்டி ..'இதை வாங்கிக் கொள்ளுங்கள்..இது பேசும்..' என்றான்.
ராமன் மீண்டும் ஒரு நூறு ரூபாய் கொடுத்து அந்தக் கிளியை வாங்கினான்.அதற்கும் பேசக் கற்றுக்கொடுத்தான்.அதுவும் பேசவில்லை.
அப்போது ராமனின் நண்பர் ஒருவர் வந்தார்.அவரிடம் ராமன் நடந்ததைக் கூறினான்.
உடனே அந்த நண்பர் 'அடடா ..என்னை முதலிலேயே கேட்டிருக்கலாமே ..அந்த வியாபாரி ஒரு புளுகன்..பொய் சொல்லி வியாபாரம் செய்வதே அவன் பிழைப்பு' என்றான்.
ராமன் தான் ஏமாற்றப்பட்டதை எண்ணி மனம் வருந்தினான்.யார்..என்ன சொன்னாலும் அதைக் கேட்காமல் நமது அறிவை உபயோகித்து ..அது சாத்தியமா..என யோசித்து செயல்படவேண்டும்.

Thursday, September 30, 2010

44-எல்லாவற்றிற்கும் காரணம் உண்டு. (நீதிக்கதை)









Posted by Picasa



அசோக் என்பவன் தான் இருக்கும் ஊரிலிருந்து அடுத்த ஊருக்கு செல்ல வேண்டியிருந்தது.



நான்கு மைல் நடந்துதான் அவ்வூருக்கு செல்ல முடியும்,



அவன் காலை கிளம்பினான்.



செல்லும் வழியில் வயலில் பூசணிக்கொடிகள் பரவியிருந்தன.ஒவ்வொன்றிலும் அவற்றில் பல பூசணிக்காய்கள் காய்த்திருந்தன..அதைப் பார்த்தவாறு நடந்தான்.

சிறிது நேரத்தில்..வெயிலின் கொடுமை அதிகமாயிற்று.அசோக்கிற்கு வேர்வை வழிந்தோடியது..அவன் களைப்பானான்.சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு செல்ல தீர்மானித்தான்.



அப்போது..சற்றுத் தொலைவில் அரசமரம் ஒன்றிருப்பதைக் கண்டான்.அம்மரத்தின் அடியில் சென்று அமர்ந்து நிமிர்ந்து பார்த்தான்.

மரத்தில் சிறு சிறு காய்கள் நிறைய இருந்தன.

உடனே ..'கடவுள் ஏன் அறியாமல் சிறிய பூசணிக்கொடிக்கு பெரிய காயையும்..பெரிய இந்த மரத்திற்கு சிறிய காய்களையும் படைத்துள்ளார் ' என்று நினைத்தான்.



அப்போது மரத்திலிருந்து சிறிய காய் ஒன்று உதிர்ந்து அவன் தலையில் விழுந்து..அவனுக்கு சற்று வலியை ஏற்படுத்தியது.

உடனே..'கடவுள் காரணமில்லாமல் இப்படி படைக்கவில்லை.இந்த மரத்தில் பூசணி அளவு காய்கள் இருந்திருந்தால்..இவ்வளவு நேரம் என் தலை போயிருக்குமே' என உணர்ந்தான்.

தனது அறிவீனத்திற்கு வெட்கமடைந்தான்.

இறைவன் காரணமில்லாமல் எந்த ஒன்றையும்   செய்வதில்லை..படைப்பதில்லை

Monday, September 20, 2010

43- காகமும் ...அறிவுரையும்.(நீதிக்கதை)


ஒரு மரத்தில் ஒரு காக்கை கூடு கட்டி தன் குஞ்சுகளுடன் வாழ்ந்து வந்தது.அதே மரப்பொந்தில் ஒரு ஆந்தை இருந்தது.

அது நள்ளிரவில் காக்கை தூங்கி இருக்கும் வேளையில் வந்து அதை விரட்டி அடித்தது.

மறு நாள் வேறொரு மரத்தில் காக்கை கூடு கட்டியது.அதையும் தெரிந்து கொண்ட ஆந்தை அங்கேயும் சென்று இரவில் காக்கையை விரட்டியது.

அடுத்த நாள் காக்கைஅடுத்த ஊரிலிருந்த தன் தாய் காகத்திடம் இதைப் பற்றிக் கூறியது. 'இதிலிருந்து தப்ப வழி என்ன?' என்று கேட்டது.

அப்போது தாய் காகம்..'ஆந்தைக்கு பகலில் கண் தெரியாது ஆகவே நீ பகலில் சென்று ஆந்தையை விரட்டு' என்றது.

காகம் அதன் படியே செய்ய ...ஆந்தை காகத்தை விட்டு ஓடியது.

காகத்தின் புத்திசாலித்தனமும்...தாயார் சொன்ன அறிவுரையும்...அதையும் அதன் குஞ்சுகளையும் காப்பாற்றியது.

Tuesday, September 14, 2010

42-குரங்கும்..குருவியும் (நீதிக்கதை)



நல்ல மழை பெய்துக் கொண்டிருந்தது...

குளிரில் நடுங்கியபடி குரங்கு ஒன்று மரத்தடியில் ஒதுங்கி நின்றது.

மரத்தில் கூடுகட்டிக் கொண்டு , அதில் இருந்த தூக்கணாங்குருவி தலையை வெளியே நீட்டி குரங்கைப் பார்த்து..'குரங்காரே! இப்படி மழை காலத்தில் மழையில் நனைகிறீர்...வெயில் காலத்தில் வெயிலில் வாடுகிறீர்..இதையெல்லாம் தடுக்க..ஒரு வீடு கட்டிக் கொள்ளக் கூடாதா.? கைகள் இல்லாத நானே கூடு கட்டிக் கொண்டுள்ளேன்..இரு கைகள் உள்ள நீங்கள் ஏன் சோம்பித் திரிந்து, பின் அவதிப் படுகிறீர் கள்' என்றது.

குருவியின் அறிவுரையைக் கேட்ட குரங்கிற்கு கோபம் வந்தது. உடனே மரத்தில் ஏறி குருவியின் கூட்டைக் கலைத்தது. 'எனக்கு வீடு கட்டிக் கொள்ள சோம்பேறித்தனம் தான்..ஆனால் கூட்டை பிய்ப்பதற்கு அல்ல..இப்போது கூடின்றி நீயும் அல்லல் படு' என்று சொல்லிச் சென்றது.

முட்டாள்களுக்கு புத்தி சொல்லக் கூடாது.அப்படிச் சொன்னால்..நமக்குத்தான் தீங்கு வரும்.

Tuesday, September 7, 2010

41."நாம் வெற்றி பெற".- (நீதிக்கதை)


இரு குட்டித் தவளைகள் ..குதித்து விளையாடிக்கொண்டிருந்தன...அவற்றிற்கு அருகே ..ஒரு ஆழம் அதிகமான பாத்திரத்தில் பால் பாதி அளவு இருந்தது.

தாவிக் குதித்த இரண்டு தவளைகளும் பாலில் விழுந்தன.பால் என்று தெரிந்ததும் தன்னால் பிழைக்க முடியாது என்று நம்பியது ஒரு தவளை...
இது மிகவும் அவநம்பிக்கை கொண்டது.

ஆதலால்..தப்பிக்க முயற்சி ஏதும் செய்யாது ..பாலிற்கு அடியில் போய் உயிரை விட்டது...

மற்ற குட்டித் தவளையோ நம்பிக்கை உள்ளது.
பால் என்று தெரிந்தும் கால்களைப் போட்டு இங்கும் அங்கும் அடித்து உதைத்தது.
நீச்சல் போட்டது...உந்தி..உந்தி கலக்கியது.

பால் கலங்க ஆரம்பித்து அதில் ஆடை படர்ந்தது...மேலும்..மேலும் .. அதை தவளை உதைக்க..சிறிது..சிறிதாக வெண்ணைய் பந்து போல உருண்டு பாலில் மிதந்தது.

நம்பிக்கை கொண்ட தவளை வெண்ணைய் மீது சற்று அமர்ந்து இளைப்பாறி...பின் வெளியே தாவிப் பாய்ந்தது...

எந்த சந்தர்ப்பத்திலும் நம்பிக்கையை இழக்காதவன் தோல்வியை சந்திக்கமாட்டான்...

நாம் ஒரு காரியத்தில் வெற்றி பெற வேண்டுமானால் நம்பிக்கையுடன் அக்காரியத்தில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம்

Thursday, September 2, 2010

40.புலி...குரங்கு...மனிதன்.(நீதிக்கதை)




அருண் ஒரு நாள் காட்டு வழியே நடந்து கொண்டிருந்தான்.கிட்டதட்ட இருட்டும் சமயம்.

அந்த சமயம் புலி ஒன்று அவனை பார்த்து துரத்த ஆரம்பித்தது...

அவன் உடனே அருகில் இருந்த மரத்தின் மீது ஏறிக் கொண்டான்.வந்தவனுக்கு அந்த மரத்தில் வசித்த குரங்கு ஒன்று இடமளித்து..அவன் பசியையும் தீர்க்க
பழங்களைப் பறித்து கொடுத்தது.

மரத்தின் கீழே பசியோடு இருந்த புலி குரங்கிடம் ' குரங்கே அந்த மனிதனை நீ கீழே தள்ளு ...எனக்கு பசி ' என்றது.

ஆனால் குரங்கோ ..'இவன் என்னை நம்பி வந்தவன்.அதனால் தள்ள மாட்டேன்.நம்மை நம்பியவர்க்கு துரோகம் செய்யக்கூடாது' என மறுத்தது.

பிறகு குரங்கு தூங்க ஆரம்பித்தது...அப்போது புலி..'மனிதனே...எவ்வளவு நேரமானாலும் நான் இங்கிருந்து போகமாட்டேன் ..எனக்கு கொள்ளைப் பசி.
அந்த குரங்கையாவது தள்ளி விடு ..நான் சாப்பிட்டுவிட்டு செல்கிறேன் ' என்றது.

உடனே அருண் .. தூங்கும் குரங்கை தள்ளி விட ..புலி அதை தின்று விட்டு மறைந்தது.

தன்னை நம்பியவனை காப்பாற்றியது குரங்கு ..தனக்கு உதவிய குரங்கை தன்னை காத்துக்கொள்ள தள்ளிவிட்டு ..நம்பிக்கை துரோகம் செய்தான் அருண்.

நாம்..இந்த கதை மூலம் தெரிந்துகொள்ளவேண்டியது - நம்பிக்கை துரோகம் செய்யக்கூடாது.ஆபத்துக்கு நமக்கு உதவியவர்களின் நற்செயலை மறக்கக் கூடாது.

Friday, August 27, 2010

39. அளவிற்கு மிஞ்சக் கூடாது.- நீதிக்கதைகள்


மதன் வீட்டில் ஒரு வாய் குறுகலான ஜாடி ஒன்றில் அவனது அம்மா பாதாம் பருப்புகளை போட்டு வைத்திருந்தார்.

ஒரு நாள் அம்மா வெளியே செல்லும் போது மதனைப் பார்த்து ..மதன்..உனக்கு பசித்தால்..ஜாடியிலிருந்து கொஞ்சம் பாதாம்பருப்பை எடுத்து சாப்பிடு..',நான் வெளியே
போய் விட்டு சீக்கிரம் வந்து விடுவேன் 'என்று சொல்லிச் சென்றாள்.

பின் மதனும் ஜாடியினுள் கை விட்டு கையில் எவ்வளவு பாதம் பருப்பை எடுக்க முடியுமோ அதை எடுத்து ஜாடியினுள்ளிருந்து தன் கையை வெளியே எடுக்கப் பார்த்தான்.
ஜாடியின் வாய் குறுகலாக இருந்ததால் ..அவனால் கையை வெளியே எடுக்க முடியவில்லை...

கையில் இருக்கும் பாதாம் பருப்பை ஜாடியில் போட மனமில்லாமல் ...கையை வெளியே எடுக்கவும் முடியாமல் கண்ணீர் விட்டு புலம்பி அழுதான்...

அதற்குள் அவன் அம்மா வந்துவிட்டார்...அவர்..'மதன் உன் கையில் வைத்திருக்கும் பாதாம் பருப்பில் பாதியை ஜாடியில் போட்டுவிடு ..மீதி கொஞ்சம் பாதாம் பருப்புடன் கை சுலபத்தில்
வெளியே வந்துவிடும்' என்றார்.

எதையும் ஒரே சமயத்தில் அளவிற்கு அதிகமாக அடைய முயலக்கூடாது என்பதை உணர்ந்தான் மதன்.

Thursday, August 19, 2010

38.நோயற்ற வாழ்வும் ...கல்வியும்.-நீதிக்கதைகள்


அருண் ஆறாம் வகுப்பு மாணவன்..அவனது அப்பா ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.அருணின் நண்பன் பிரகாஷின் தந்தையோ பணக்காரர்.பிரகாஷிற்கு அவன் தந்தை
கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்தார்.எப்போதும் பிரகாஷிடம் பண நடமாட்டம் இருந்தது.ஆனால் அருணோ தன்னிடம் பிரகாஷைப் போல் பணமில்லையே என வருந்தினான்..தனக்கும் பணம் அதிகம் வேண்டும் என கடவுளை வேண்டினான்.

கடவுள் அவன் முன்னால் தோன்றி ..'அருண் உனக்கு என்ன வேண்டும் என்று கேள் தருகிறேன்.ஆனால் யோசித்துக் கேள்'என்றார்.

அருண் உடனே..'இறைவா..நான் எதைத் தொட்டாலும் பணமாக வேண்டும்' என்றான்.

அதைக் கேட்டு சிரித்த இறைவன் அப்படியே ஆகட்டும் என வரம் கொடுத்து மறைந்தார்.

உடன் அருண் பக்கத்திலிருந்த புத்தகத்தைத் தொட அது பணக்கட்டாய் மாறியது..அப்பா.அம்மாவைக் கூப்பிட்டு அருண் நடந்ததைச் சொன்னான்.

அருணுக்கு பசி எடுக்க..அம்மா உணவு எடுத்து வந்தார்.அருண் உணவில் கை வைக்க அது பணமானது.தண்ணீர் குடிக்க டம்ளரை எடுத்தால் அது பணமானது.பசியால் வாடிய அருண்.....
அப்போது தான் இறைவனிடம் கேட்ட வரம் தவறு என்று உண்ர்ந்தான்.

மீண்டும் இறைவனை வேண்டினான்.இறைவன் தோன்ற ,அவரிடம், தனக்கு நடந்ததைக் கூறி ...தன்னை மன்னிக்கும்படியும் ..தான் கேட்ட வரம் வேண்டாம் என்றும் கூறினான்.

உடன் இறைவன் அருணைப்பார்த்து ..'அருண் உன்னைப்போன்ற மாணவர்களுக்கு நல்ல கல்வியறிவும்..நோயற்ற வாழ்வும் தான் செல்வம்.அவை இருந்தால் வாழ்வில் பணம் சம்பாதிப்பது எளிது'
என்று கூறி..அவனுக்கு..அவ்விரண்டையும் அருளினார்.

Friday, August 13, 2010

37-தன் கையே தனக்கு உதவி (நீதிக்கதை)





ஒரு மாட்டு வண்டிக்காரன் தன் மாட்டு வண்டியை ஒரு குறுகலான தெருவில் ஓட்டிக் கொண்டுச் சென்றான்.அப்போது அருகில் இருந்த பள்ளம் ஒன்றை நோக்கி மாடுகள் செல்ல..வண்டியின் ஒரு சக்கரம் பள்ளத்தில் நன்கு சிக்கிக் கொண்டது.

பள்ளத்தில் மாட்டிக் கொண்ட வண்டியை மீண்டும் சரியாக சாலைக்குக் கொண்டு வர யாரேனும் வருகிறார்களா? எனறு பார்த்த வண்டிக்காரன்..யாரும் வராததால்..'ஆண்டவா! இந்த வண்டியை சரியான பாதைக்குக் கொண்டுவா.." என கடவுளை வேண்டினான்.

இறைவன் அவன் முன் தோன்றி' 'உன் தோள்களால் முட்டுக் கொடுத்து சக்கரத்தை பள்ளத்தில் இருந்துத் தூக்கி நிறுத்தி...மாடுகளையும் அதட்டி ஓட்டு..அதை விடுத்து..உன் அனைத்துக் காரியங்களுக்கும்..யாரேனும் வந்து உதவி செய்ய வேண்டும் என எதிர்ப்பார்க்காதே!' என்று கூறி மறைந்தார்.

தன் கையே தனக்கு உதவி என உணர்ந்துக் கொண்ட வண்டிக்காரன்...வண்டியை மீண்டும் சாலைக்குக் கொண்டு வந்தான்.

பின்னர்..அவன் எந்த தன் வேலைக்கும் யாரையும்...ஏன்..ஆண்டவனையும் கூட அழைக்கவில்லை

Wednesday, August 4, 2010

36.நாரையும் ஓநாயும் (நீதிக்கதைகள்)


ஒரு காட்டில் ஒரு ஓநாய் இருந்தது.அது மிகவும் கெட்ட குணம் கொண்டது.

தினமும் ..பலம் குறைந்த ஏதேனும் விலங்குகளையோ ..பறவைகளையோ கொன்று தன் பசியை தீர்த்துக்கொள்ளும்.

ஒரு நாள் அது இறந்த ஒரு மிருகத்தின் உடலை தின்றபோது ..அறியாமல் ஒரு எலும்புத் துண்டையும் சாப்பிட்டது. அந்த எலும்புத்துண்டு
அதனுடைய தொண்டையில் சிக்கிக்கொண்டது.

அதனால் ...அவதிப்பட்ட ஓநாயால் எந்த உணவையும் சாப்பிட முடியவில்லை..

ஒரு நாரையை அது அணுகி ...அதன் அலகால் எலும்புத்துண்டை அகற்றுமாறும்..அப்படி அகற்றினால் அந்த நாரைக்கு பரிசு தருவதாகவும் கூறியது.

சரியென்று நாரையும் தன் நீளமான அலகை ஓநாயின் தொண்டைக்குள் விட்டு அங்கே சிக்கிக்கொண்டிருந்த எலும்பை வெளியே எடுத்துவிட்டது.

பின் நாரை ..ஓநாயிடம் பரிசு கொடுக்குமாறு கேட்டது....

உடன் ஓநாய்'உனக்குத்தான் ஏற்கனவே வெகுமதி கொடுத்துவிட்டேன்,என்னைப்போன்ற ஓநாயின் வாயில் உன் தலையை விட்டுவிட்டு ...அதை பத்திரமாக வெளியே எடுக்க
அனுமதித்தேனே,,அதுவே உனக்கு சிறந்த பரிசு தான்' என்று கூறிவிட்டது.

நாரை ஏமந்தது...

கொடியவர்களுக்கு உதவி செய்தால் ..பின் அவற்றிடமிருந்து உயிர் தப்புவது பெரிய காரியமாகிவிடும்.

ஆகவே தீயவரைக் கண்டால் ஒதுங்குவதே சிறந்தது.

Wednesday, July 28, 2010

35.உண்மையே பேசவேண்டும்.(நீதிக்கதைகள்)


கந்தன் பள்ளிக்கு ஒழுங்காகச் செல்லாமல் ..எதற்கெடுத்தாலும் பொய்யைச் சொல்லி...மக்களை ஏமாற்றி வந்தான்.

அதனால் ...அவனது தந்தை,,,அவனிடம் ...வீட்டிலிருந்த ஆடுகளை மேய்க்கும் வேலையைக் கொடுத்திருந்தார்.

ஆடுகளை....ஊருக்கு வெளியே இருந்த காட்டுப்பகுதிக்கு ஓட்டிச் சென்றான் கந்தன்.

ஆடுகள் மேய்ந்துகொண்டிருக்க..சற்றே தள்ளி அமர்ந்திருந்த கந்தன் 'புலி வருது புலி வருது காப்பாத்துங்க...' எனக் கத்தினான்.

அருகாமையில் பக்கத்து வயல்களில் வேலை செய்துகொண்டிருந்த மக்கள் அவனைக் காக்க ஓடி வந்தனர்.ஆனால் வந்ததும்தான் கந்தன் பொய் சொல்லியிருக்கிறான் என்று உணர்ந்தனர்....ஏமாந்த அவர்களைப் பார்த்து கந்தன் சிரித்தான்.

அடுத்த நாளும்..கந்தன் முந்தைய நாள் சொன்னது போல 'புலி வருது புலிவருது..'எனக் கத்த ஓடி வந்த மக்கள் ஏமாந்தனர்....கந்தனும் அவர்களைப் பரிகசிப்பதுபோல சிரித்தான்.

மூன்றாம் நாள் ..ஆடுகள் மேய்ந்துகொண்டிருக்க ...உண்மையிலே புலி வந்து விட்டது. கந்தன் கத்த ...மக்களோ அவன் தங்களை மீண்டும் ஏமாற்றவே கத்துகிறான் என நினைத்து போகவில்லை.

புலி..சில ஆடுகளை அடித்து கொன்றுவிட்டு அவன் மேலும் பாய்ந்து காயத்தை ஏற்படுத்தி விட்டு மறைந்தது.

அப்போது தான் கந்தன் ....தான் முன்னர் பொய் சொன்னதால் ...தான் கூறும் உண்மைகளையும் மக்கள் பொய்யாக எண்ணியதை எண்ணி மனம் வருந்தினான்.

இனி எக்காரணம் கொண்டும் பொய் சொல்லக்கூடாது என்று எண்ணியதுடன் நில்லாது....அடுத்த நாள் முதல் ஒழுங்காகப் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தான்.

Friday, July 23, 2010

34. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு (நீதிக்கதை)




ஒரு தந்தைக்கு நாலு பிள்ளைகள் இருந்தனர்.அவர்கள் தங்களுக்குள் அவ்வப்போது சண்டைப் போட்டு வந்தனர்.அதனால் மனம் வருந்திய தந்தை...அவர்களிடையே எந்த வழியில் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் என்று யோசித்தார்.

பின் ஒரு நாள் அவர் தன் பிள்ளைகளிடம் ஒரு கட்டு சுள்ளி விறகுகளைக் கொண்டு வரச் சொன்னார்.

பின்னர் ஒவ்வொரு பையனிடமும் அந்தக் கட்டைக் கொடுத்து அதை துண்டுகளாக உடைக்கும்படியாகக் கூறினார்.மகன்கள் நால்வரும் தனித்தனியாக தங்கள் பலத்தை உபயோகித்து சுள்ளிக் கட்டை உடைக்க முயன்றனர்.

ஆனால்...அதை அவர்களால் உடைக்க முடியவில்லை...

பின்னர் தந்தை அந்தக் கட்டை அவிழ்த்து.....சுள்ளிக் குச்சிகளைத் தனித்தனியே எடுத்து ஒடிக்கக் கொடுத்தார்.....அவர்கள் சுலபமாக ஒடித்து விட்டனர்.

தந்தை தன் புதல்வர்களைப் பார்த்து 'பார்த்தீர்களா..முதலில் இருந்த சுள்ளிக் கட்டு போல நீங்கள் ஒற்றுமையாக ஒன்றாக வாழ்ந்தால் உங்களை யாரும் அசைக்க முடியாது.அதனால் உங்களுக்கு எப்போழுதும் துன்பம் வராது....ஆனால் ஒற்றுமையில்லாமல் தனித்தனியாக பிரிந்தீர்களானால் இந்த சுள்ளிக் குச்சிகளைப் போல எளிதில் உடைபட்டு அழிந்து விடுவீர்கள்'.என்று புத்திமதி கூறினார்.

அதைக் கேட்ட புதல்வர்கள்...ஒற்றுமையின் அவசியத்தை உணர்ந்து ஒற்றுமையாக இருந்தனர்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.

Friday, July 16, 2010

33.கரடியும் இரு நண்பர்களும்


இரண்டு நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்து காட்டுப் பகுதியைக் கடக்க வேண்டியிருந்தது....

அவர்கள் போகும் வழியில் ...எதிரே திடீரென ஒரு கரடி வர..மரம் ஏறத்தெரிந்த நண்பன் மற்றவனை விட்டு விட்டு சட்டென்று பக்கத்தில் இருந்த மரத்தில் தாவி ஏறிவிட்டான்.

என்ன செய்வது என பயந்த மற்றவன் அப்படியே கீழே படுத்து ..மூச்சை அடக்கி செத்த பிணம் போலக் கிடந்தான்.

உயிரற்ற உடலைக் கரடி பார்க்காது என்பதற்கிணங்க ...அக்கரடி அவனிடம் வந்து மோப்பம் பிடித்து விட்டு அகன்றது.

கரடி சென்றதும் மரத்திலிருந்த நண்பன் இறங்கி..'கரடி உன்னை நெருங்கி உன் காதில் என்ன சொல்லிற்று' என்றான்.

அதற்கு மற்றவன்..'ஆபத்து காலத்தில் உன்னை உதறி விட்டு தன்னை மட்டும் காப்பாற்றிக்கொள்ள மரம் ஏறிய சுயநலமிக்க நண்பர்களை நம்பாதே என்று சொல்லிற்று' என்றவாறே..அவனை விட்டு
பிரிந்து தனியே நடக்கலானான்.

ஒருவருக்கு ஆபத்து வரும் நேரத்தில் உதவுவது நண்பர்களின் செயலாக இருக்கவேண்டும்.

Monday, July 12, 2010

32. நண்பனாகும் தகுதி




சுண்டெலி ஒன்று .....தவளை ஒன்றுடன் ஒட்டிக் கொண்டிருந்தது.தவளையோ பெரும்பாலும் தண்ணீரிலேயே வசித்து வந்தது.....அது ஒரு நாள் சுண்டெலிக்கு ...தான் நீச்சல் கற்றுக் கொடுப்பதாகக்
கூறி ...சுண்டெலியின் காலை தன் காலுடன் ஒன்று சேர்த்து கயிற்றால் கட்டிக் கொண்டது.

அப்போது மேலே பறந்த பருந்து ஒன்று இவற்றைப் பார்த்து கொத்த வந்தது.

உடனே தவளை ...சுண்டெலியுடன் தண்ணீரில் பாய்ந்தது.தண்ணீரில் சுண்டெலி மூழ்கி மூச்சு திணறி இறந்தது...அதன் உடல் மேலே மிதந்தது...ஆனால் கால்கள் இன்னமும் தவளையுடன் சேர்த்து
கட்டப்பட்டிருந்தது....

அந்த சமயம்...தண்ணீரில் செத்த சுண்டெலி மிதந்ததைப் பார்த்த பருந்து கீழ் நோக்கி வந்து அந்த எலியைக் கொத்திக் கொண்டு உயரே பறந்தது.

அதனுடன் சேர்ந்து கட்டப்பட்டிருந்த தவளையும் பருந்தின் பிடியில் சிக்கியது.பருந்து தவளையையும் கொன்று தின்றது.

நாம் ஒருவரை நண்பராக ஏற்றுக்கொள்வதற்கு முன்..அதற்கு அவர்கள் தகுதியானவரா என்று யோசிக்கவேண்டும்.இல்லையேல் தவளைக்கு ஆன கதியே!

Monday, June 28, 2010

31. "கர்வம் கூடாது"



ரமேஷ் புத்திசாலி மாணவன்...

அதனால் அவனுக்கு கர்வம் உண்டு...யாருடனும் நட்பு வைத்துக்கொள்ளமாட்டான்..எல்லோரும் அவனை விட அறிவில் மட்டமானவர்கள் என எண்ணம்.

மற்ற மாணவர்கள் அனைவரும் சேர்ந்து எப்படியாவது ரமேஷை ஏதாவது ஒரு பந்தயத்தில் தோற்கடித்து ...வல்லவனுக்கு வல்லவன் பூமியில் உண்டு என நிரூபிக்க வேண்டும் என எண்ணினர்

அப்போது ...அந்தப் பள்ளியில் புதிதாக சேர்ந்த வினோத் என்ற மாணவன் அந்தப் பணியை ஏற்றான்.

அவன் ரமேஷிடம் சென்று 'ரமேஷ் நீ புத்திசாலி ..அதேபோல நானும் உன்னைவிட புத்திசாலி தான்' என்றான்.

கோபமடைந்த ரமேஷ் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் ..'நான் ஒரு கேள்வி கேட்பேன் .உனக்கு விடை தெரியவில்லை எனில் நீ எனக்கு பத்து ரூபாய் தரவேண்டும்.நீ கேட்கும் கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை என்றால் நான் நூறு ரூபாய் தருகிறேன்'என்றான்.ஆனால் அந்த கேள்விக்கு உனக்கு விடை தெரியவில்லை என்றால் கூட நீ பத்து ரூபாய் கொடுத்தால் போதும்' என்றான்.

பின் ரமேஷ் கேட்டான்'பூமிக்கும் ..சந்திரனுக்கும் இடையே எவ்வளவு தூரம்'.

வினோதிற்கு பதில் தெரியாததால் பத்து ரூபாயை ரமேஷிற்கு கொடுத்தான்.இப்போது வினோத் கேள்வி கேட்கவேண்டும்.

வினோத் கேட்டான்..

'மலை ஏறும்போது மூன்று கால்களுடன் ஏறி..இறங்கும்போது நான்கு கால்களுடன் இறங்கியது யார்'.

ரமேஷிற்கு விடை தெரியவில்லை.அதனால் ஒப்புக் கொண்டபடி நூறுரூபாயை வினோதிற்கு கொடுத்துவிட்டு ..விடையை நீயே சொல்' என்றான்.

'எனக்கும் தெரியாது'என்ற வினோத் பத்து ரூபாயை நீட்டினான்.அப்போது தான் கூறிய வார்த்தைகளை வைத்தே வினோத் தன்னை வென்றதை உணர்ந்து ரமேஷ் தலை குனிந்தான்.

அவன் கர்வம் மறைந்து அனைவருடனும் நட்பாக பழக ஆரம்பித்தான்.

Tuesday, June 22, 2010

30.மனதில் உறுதி வேண்டும்


அது ஒரு சிறு கிராமம்...அந்த கிராமத்தில் தண்ணீர் பிரச்னை வந்தது...மக்கள் எல்லாம் சேர்ந்து ஒரு கிணறு வெட்ட தீர்மானித்தனர்.ஒரு இடத்தை தீர்மானித்து ...அந்த இடத்தில் இருபது அடி ஆழம் தோண்டினர்.ஆனால் தண்ணீர் கிடைக்கவில்லை..

இடம் சரியில்லை என நினைத்து வேறொரு இடத்தை தேர்ந்தெடுத்து அங்கு முப்பது அடி வெட்டினர்.அங்கும் அவர்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை.

அந்த இடமும் சரியில்லை என மூன்றாவதாக ஒரு இடத்தை கண்டுபிடித்து அங்கு ஐம்பது அடி வெட்டினர்.தண்ணீர் இல்லை.

மூன்று இடங்களிலும் சேர்த்து அவர்கள் நூறடிக்கு மேல் தோண்டியுள்ளனர்.

அவர்கள் தங்கள் முயற்சியை ஒரே இடத்தில் பொறுமையுடன் மேற்கொண்டிருந்தால் முதலில் வெட்டிய இடத்திலேயே தண்ணீர் கிடைத்திருக்கும்.

மனதில் உறுதியுடன் செய்யும் காரியத்தில் ஈடுபடவேண்டும்....அப்போது தான் வெற்றி கிடைக்கும்.

எடுத்த காரியத்தில் கவனம் செலுத்தி மனதை ஒருமுகபடுத்தினால் வெற்றி நிச்சயம்.

Friday, June 11, 2010

29.முயன்றால் முடியாததில்லை


மூன்று தவளைகள் ஒன்றுக்கொன்று நண்பர்களாக இருந்தன.

ஒரு தவளை...மிகவும் சோம்பேறியாகவும்..தன்னால் எந்த வேலையும் செய்யமுடியாது என்றும் தாழ்வு மனப்பாமையுடன் இருந்தது.

இரண்டாவது தவளை ..எந்த விஷயத்திலும் எந்த முயற்சியும் செய்யாமல் ..எல்லாமே விதிப்படிதான் நடக்கும் என வேதாந்தம் பேசி வந்தது.

மூன்றாவது தவளையோ ..எந்த காரியத்திலும் முயற்சியை விடாது..விடா முயற்சி செய்து..வெற்றி பெற்று வந்தது.

ஒரு நாள் அவை மூன்றும் இருட்டில் போனபோது கிணறு வெட்ட வெட்டியிருந்த ஒரு பெரிய பள்ளத்தில் வீழ்ந்தன.

முதல் தவளை..'ஐயோ பள்ளத்தில் வீழ்ந்துவிட்டோமே..இனி வெளியே வரமுடியாதே' என அழுதவாறு இருந்தது.

இரண்டாவது தவளையோ...'நாம் பள்ளதில் விழ வேண்டும் என்பது விதி..நாம் வெளியே வரவேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால் வெளியே வருவோம் என சும்மா இருந்தது.

மூன்றாவது தவளையோ..கண்டிப்பாக என் முயற்சியால் நான் வெளியேறுவேன் என்று கூறி தாவி..தாவி.. குதிக்க ஆரம்பித்தது...

ஒரு கட்டத்தில்..மண்ணின் பக்கவாட்டத்திலிருந்த ஒரு கிளையில் அது தாவி உட்கார்ந்தது...அடுத்த தாவில் வெளியே வந்து விழுந்தது.,,

பின் தன் நண்பர்கள் நிலை குறித்து மனம் வருந்தி தன் வழியே சென்றது.

'முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்'

எந்த ஒரு காரியமும் முயன்றால் வெற்றி அடையலாம்

Thursday, May 13, 2010

28.அச்சம் தவிர்- (நீதிக்கதைகள்)


ஒரு காட்டில் பல முயல்கள் இருந்தன...இவை..தினம்..தினம்.,சிங்கம்..புலி ஆகியவை தாக்குமோ என பயந்து பயந்து வாழ்ந்தன.

ஒரு நாள் இவை எல்லாம் ஒன்று சேர்ந்து ..'நாம் கோழைகளாக தினம்..தினம் ..பயந்து சாவதை விட ஒட்டு மொத்தமாக குளத்தில் விழுந்து சாகலாம்'என முடிவெடுத்து..ஒரு குளத்தை நோக்கிச் சென்றன..

அந்த குளத்தில்.. பல தவளைகள் வாழ்ந்து வந்தன..குளத்தின் கரையில் உட்கார்ந்து கொண்டிருந்த தவளைகள்...எல்லா முயல்களும் அவற்றை நோக்கி வருவதைப் பார்த்து ..குளத்தில் குதித்து மறைந்தன.

இதைப் பார்த்த முயல்களின் தலைவன் மற்ற முயல்களைப்பர்த்து ..'நாம் கோழைகள் தான்..ஆனால் நம்மை விட கோழையானவர்களும் உலகில் உள்ளனர்.அவர்களே பயமில்லாமல் வாழும்போது நாம் ஏன் பயப்படவேண்டும்' என்று கூற .. அனைத்தும் திரும்பின.

நாம் பிறரைக் கண்டு பயப்படாமல் இருக்கவேண்டும்.நம்மைக் கண்டு பயப்படுபவர்களும் உலகில் இருப்பார்கள்.

பயம்..மனிதனை சிறிது சிறிதாக கொன்றுவிடும்.ஆகவே எதற்கும் எப்போதும் பயப்படக்கூடாது

Monday, May 10, 2010

27-'ஏமாறாதே....ஏமாற்றாதே'(நீதிக்கதைகள்)


ஒரு காட்டில் நரி ஒன்று இருந்தது.அதற்கு எப்போதும் யாரையாவது ஏமாற்றி...அவர்கள் ஏமாறுவதைக் கண்டு ..மனம் மகிழ்வது பொழுதுபோக்காக இருந்தது.

ஒரு நாள் ..கொக்கு ஒன்றை...அந்த நரி பார்த்தது.. அதை தன் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தது.

கொக்கும் ...நரியை நண்பன் என நினைத்து அதனுடைய வீட்டிற்குச் சென்றது.

கொக்கைக் கண்ட நரி..ஒரு தட்டில் கஞ்சியை எடுத்து வந்து கொக்கு உண்ணக் கொடுத்தது.கொக்கால் ..தன் அலகால்..தட்டிலிருந்த கஞ்சியை சாப்பிட முடியவில்லை...ஒரு வாயகன்ற ஜாடி போன்ற பாத்திரங்களில் இருந்தால் மட்டுமே ...கொக்கு தன் அலகை அதில் விட்டு கஞ்சியை உறிஞ்சி குடிக்க முடியும்.

கொக்கு படும் துன்பத்தைக் கண்டு நரி சிரித்து மகிழ்ந்தது...அவமானம் அடைந்த கொக்கு..நரிக்கு பாடம் புகட்டத் தீர்மானித்தது.

நரியை ஒரு நாள் கொக்கு விருந்துக்கு அழைத்தது..வந்த நரியை நன்கு உபசரித்த கொக்கு..ஒரு வாய் குறுகிய ஜாடியில்..கஞ்சியைக் கொண்டு வந்து வைத்தது

நரியால்..நாக்கால் நக்கி கஞ்சியை குடிக்க முடியவில்லை..

அதைக் கண்ட கொக்கு ..'நரியாரே..இப்பொழுது எப்படி உங்களால் கஞ்சியை குடிக்க முடியவில்லையோ..அதே போல தட்டில் இருந்தால் ...என்னால் குடிக்க முடியாது என தெரிந்தும் எனக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி ..மனம் மகிழ்ந்தீர்கள்.ஆனால் நான் அப்படியில்லை..உங்களுக்கு பாடம் புகட்டவே ஜாடியில் கஞ்சியை வைத்தேன்...என்று கூறியபடியயே ..கஞ்சியை தட்டில் ஊற்றிக் கொடுத்தது.
தன்னை ஏமாற்றிய நரிக்கு கொக்கு நல்லதே செய்தது.

நரி தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து விட்டு ..கஞ்சியைக் குடித்தது.

அது முதல் திருந்திய நரி. பிறகு யாரையும் ஏமாற்றுவதில்லை.

பிறர் துன்பம் கண்டு மகிழ்ச்சியடையாது..அவர்களுக்கு உதவியும் செய்ய ஆரம்பித்தது.


.

Thursday, May 6, 2010

26.ஒன்று பட்டால் வாழ்வு.


ஒரு நாள் நம் உடல் உறுப்புகளிடையே சண்டை வந்தது...எல்லா உறுப்புகளும் 'வயிறை'விரோதியாக்கின.

அப்போது கைகள் சொன்னது 'நாங்கள் இரவும் பகலும் கடுமையாக உழைக்கிறோம்...ஆனால் உணவை சுவையாக வயிறு தான் விழுங்கிறது'என்றன..

உடனே கால்கள்..'நாங்கள் மட்டும் என்ன...இந்த உடம்பை சுமந்து தினமும் எவ்வளவு தூரம் நடக்கிறோம்...ஆனால் வயிறோ ஒரு வேலையும் செய்யாது உண்ணுகிறது'என்றன..

தலை குறுக்கிட்டது...'நான்தான் பார்க்கிறேன்,கேட்கிறேன்,முகர்கிறேன்,சிந்திக்கிறேன்..ஆனால் எந்த வேலையும் செய்யாத வயிறு உணவை உண்டு மகிழ்கிறது 'என்றது.

வாயோ...நான் உணவை மென்று வயிறு அனுபவிக்கவே அனுப்புகிறேன் என்றது.

இப்படி எல்லா உறுப்புகளும் வயிறை குறை சொல்லின.பின் அனைத்து உறுப்புகளும் ..வயிற்றுக்கு இனி எந்த உதவியும் செய்யக்கூடாது என தீர்மானித்தன.

அதனால்...வயிறுக்கு உணவு கிடைக்கவில்லை..உடல் மெலிந்தது..கை..கால்..தலை என அனைத்து உறுப்புகளும் வலுவிழந்தன.

அப்போதுதான் அவற்றிற்கு ..தனிப்பட்ட முறையில் தங்களால் எதையும் செய்யமுடியாது.தங்களுக்கு ஆற்றல் அனுப்புவது வயிறே...என்று புரிந்தது.

வயிற்றிடம் அவை மன்னிப்பு கேட்க ..வயிறும் வழக்கம்போல செயல்படத் தொடங்கியது.

நம் உடலில் எல்லா உறுப்புகளும் ஒன்று பட்டு செயல்பட்டாலே ..உடல் சுறுசுறுப்பாய் இயங்கும்.

ஆகவே எந்த காரியத்தை செய்வதாயினும் நமக்குள் ஒற்றுமை அவசியம்.

Monday, May 3, 2010

25 யானையும் குறும்பும்.....


ஒரு ஊரில் யானை ஒன்று இருந்தது.அது தினந்தோறும்...அந்த ஊர் கடைத்தெரு வழியாக ஆற்றில் குளிக்கச் செல்லும்.

குளித்து முடித்து திரும்புகையில் கடைத்தெருவில் உள்ள கடைக்காரர்கள் யானைக்கு தின்பதற்கு ஏதேனும் தருவார்கள்.தன் துதிக்கையில் வாங்கி அது உண்ணும்.

அந்தக் கடைத்தெருவில் இருந்த ஒரு தையல்கடையின் தையல்காரர் தினமும் யானைக்கு வாழைப்பழம் தருவார்.

ஒரு நாள் அதனிடம் குறும்பு செய்ய எண்ணிய அவர் அது பழத்திற்கு வந்த போது ..அதன் துதிக்கையில் பழம் தராமல் ஊசியால் குத்தினார்.

யானை...கோபத்துடன் சென்று விட்டது.

அடுத்த நாள் குளிக்க சென்ற யானை..குளித்து முடித்ததும் தும்பிக்கையில் சேற்று நீரை நிரப்பிக் கொண்டு வந்து ...தையல் கடையில் நின்று கொண்டிருந்த தையல்காரர் மீது பீச்சியடித்தது.

தையல்காரர்..தைப்பதற்கு வாங்கி வைத்திருந்த புதுத் துணிகளும் சேறாயின..

தன் குறும்புச் செயல் இவ்வளவு பெரிய தண்டனையை அளித்ததுக் கண்டு தையல்காரர் மனம் வருந்தினார்.

குறும்பு செய்யும் பழக்கம் பெரியவர்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் உண்டு...

ஆனால் அக்குறும்பு பிறருக்கு மன வருத்தத்தையோ,காயத்தையோ ஏற்படுத்தக்கூடாது.

Saturday, May 1, 2010

24.தவளையும் ..கொக்குகளும்


மீன்கள் நிறைந்த குளமொன்றில் அவற்றுடன் ஒரு தவளையும் வாழ்ந்து வந்தது...

மீன்களை கொத்தி உணவாக்கிக் கொள்ள பல கொக்குகள் அந்தக் குளத்தைத் தேடி வருவதுண்டு...அவற்றில் இரு கொக்குகள் தவளைக்கு நண்பனாயின.அவை வந்தவுடன் தவளையை நலம் விசாரித்தப் பின்னரே தங்களுக்கு இரையான மீனைத் தேட ஆரம்பிக்கும்.

கோடைகாலம் வந்தது.குளம் வற்றியது...மீதமிருந்த மீன்களும் மடிந்தன...தவளை மட்டும் செய்வதறியாது திகைத்தது.

அப்போது அதன் நண்பர்களான கொக்குகள் .. தவளையைத் வேறு தண்ணீர் உள்ள இடத்தில் விடுவதாகக் கூறின.

ஆனால் தவளை என்னால் உங்களுடன் சேர்ந்து பறக்க முடியாதே என்று கூறியது.

அப்போது ஒரு கொக்கு ..ஒரு பெரிய குச்சியைக் கொண்டு வந்து ..அதன் நடுவில் தவளையைக் கவ்விக் கொள்ளச் சொன்னது.

குச்சியின் இரு முனையையும் இரு கொக்குகளும் பிடித்துக்கொண்டு பறப்பதாகவும்...ஆனால் எக்காரணம் கொண்டும் தவளை தன் வாயைத் திறக்கக் கூடாது என்றன...

தவளையும் ஒப்புக் கொண்டது.

அப்படி அவை பறக்கும் போது தெருவில் நின்றிருந்த சில சிறுவர்கள் ..'தவளை பறக்குது'..'தவளை பறக்குது' என கத்தினர்.

அச்சத்தத்தைக் கேட்ட தவளை கொக்குகள் சொன்னதை மறந்து 'அங்கு என்ன சத்தம்' என்று கேட்க வாயைத் திறந்தது.கீழே விழுந்து படு காயமடைந்தது.

தன்னைவிட அறிவில் சிறந்தவர்கள் கூறும் அறிவுரையைக் கேட்டு நடக்க வேண்டும்...இல்லாவிட்டால் அந்த தவளையைப் போல துன்பமே வந்து சேரும்...

Thursday, April 29, 2010

23.மரமும் ..கிளியும்


பல பறவைகள் ஒரு மரத்தில் கூடு கட்டி..அதில் பழுக்கும் பழங்களை உண்டு மகிழ்ந்து வந்தன.

ஒரு சமயம்..மழையில்லாமல்,மரம் வாட ஆரம்பித்தது..அதன் இலைகள் உதிர்ந்தன..பூக்கவில்லை..பழுக்கவில்லை அம்மரங்கள்.

அம்மரத்தை நம்பி..அது காய்க்கும் பழங்களை நம்பி வாழ்ந்த பறவைகள் வேறு இடம் தேடி ஓட ஆரம்பித்தன.

ஒரு கிளி மட்டும் ..அந்த மரத்தை விட்டுப் போகாமல்...மரத்தினடமே இருந்தது...பட்டினியால் வாடியது..தினமும் கடவுளை வேண்டியது.

ஒரு நாள் கடவுள் அந்த கிளி முன் தோன்றி.. 'தினமும் என்னை வேண்டுகிறாயே...உனக்கு என்ன வேண்டும் என்றார்.

'இறைவா..இந்த மரம் மீண்டும் பூத்து ..காய்க்க வேண்டும் என்றது கிளி..

'இந்த மரத்தைப் பற்றி யோசிக்காது...மற்றப் பறவைகள் போல் நீயும் ஓடியிருக்கலாமே என்றார் கடவுள்.

அதற்குக் கிளி..'இந்த மரம் பழுத்து இது நாள் வரை எங்களை காத்தது...இன்று இது தண்ணீர் இன்றி துன்பப்படுகிறது...இச்சமயத்தில் நம்மைக் காத்ததை மறந்து..இதை விட்டு ஓடுதல் சுயநலமில்லையா..பாவமில்லையா' என்றது கிளி.

கிளியின் சுயநலமற்றத் தன்மையைப் போற்றிய இறைவன் ..அம்மரம் மீண்டும் தழைக்க ..மழையை பொழிய வைத்து அருளினார்.

ஒருவர் செய்த நன்றியை மறக்காது..அவர்கள் துன்புறும்போது அவர்களுடன் சேர்ந்தே ஆறுதலாய் இருக்கவேண்டும்.

Sunday, April 25, 2010

22.நடப்பது யாவும் நல்லதற்கே.


ஒரு கப்பல் கடலில் சென்று கொண்டிருந்தபோது இயந்திரக் கோளாறால்...கடலில் மூழ்கியது.அதிலிருந்த அனைவரும் மடிந்தனர்.கப்பல் கேப்டன் மட்டும் உயிர்பிழைத்து..நீந்தியபடியே ஆள் இல்லாதீவு ஒன்றிற்கு வந்தான்

தனியாக என்ன செய்வது எனத்தெரியாத அவன்..அந்தத்தீவில் கிடைத்த ஓலை..குச்சி எல்லாவற்றையும் சேகரித்து இருக்க ஒரு குடிசையை அமைத்துக்கொண்டான்.

பின் வயிற்றைக் கிள்ளியதால் ..உண்பதற்கு ஏதேனும் கிடைக்குமா..என்று தீவைச் சுிற்றிவரக் கிளம்பினான்.திரும்பி வந்து பார்த்தபோது...அவன் அமைத்திருந்த குடிசை தீப்பற்றி எறிஞ்சிருந்தது...

அதைப் பார்த்த அவன் கண்களில் நீருடன் 'கடவுளே நான் என்ன தீங்கு செய்தேன்..என்னை யாருமில்லா தீவில் சேர்த்தாய்.உண்ண உணவில்லை.இருக்க கட்டிய குடிசையும் தீப்பற்றி எறிய வைத்துவிட்டாயே' எனக் கதறினான்.

அப்போது ..அந்தத் தீவை நோக்கி ஒரு கப்பல் வந்தது..அதில் இருந்தவர்கள் இவனைக் காப்பாற்றி தங்கள் கப்பலில் ஏற்றினர்.

'நான் இங்கு மாட்டிக்கொண்டது உங்களுக்கு எப்படித் தெரிந்தது'என அவர்களிடம் இவன் கேட்டான்.

அவர்கள் சொன்னார்கள்..'யாருமில்லா தீவில் நெருப்பு பற்றி எறிந்ததைக் கண்டோம்...உடன் யாருக்கோ உதவி தேவை என்பதை உணர்ந்து வந்தோம்'. .என்றனர்.

கடவுள் எது செய்தாலும் அது நல்லதற்கே என்பதை உணர்ந்தான் அவன்.

Tuesday, April 20, 2010

21- .'கெட்ட சகவாசம்'


அருண் நன்கு படிக்கும் மாணவன்.ஆனால் கடந்த சில மாதங்களாக தேர்வில் அவன் எதிபார்த்த மதிப்பெண்களைப் பெறவில்லை.இது அவனது தந்தையை வேதனை அடையச் செய்தது.

அவனின் இந்த நிலைக்கு என்னக் காரணம் என்று அவன் தந்தை...சில ஆசிரியர்களை வினவ ..ஒரு ஆசிரியர்..'சமீபகாலமாக அவன் நண்பர்கள் சரியில்லை...அவர்கள் படிக்காமல் ஊர் சுற்றுபவர்கள் என்று சொன்னார்.

அது கேட்டு அவன் தந்தை அருணைக் கூப்பிட்டு நயமாக..கெட்ட சகவாசத்தை விடச் சொன்னார்...அருணோ அதற்கு இசையவில்லை....தன் நண்பர்களால் தன்னை மாற்ற முடியாது என்றான்.

அப்போது ..அவன் தந்தை ஒரு கூடையில் சில ஆப்பிள்களைக் கொண்டு வந்தார்...அருணிடம் ..ஒரு அழுகிய ஆப்பிளைக் கொடுத்து கூடையில் இருந்த மற்ற ஆப்பிள்களுடன் வைக்கச் சொன்னார்.

இரவு கழிந்தது..

மறுநாள்,,அந்த ஆப்பிள் கூடையை அருணைக் கொண்டு வரச்சொன்னார்...கூடையில் மேலும் சில ஆப்பிள்கள் அழுகியிருந்தன...

அருணின் அப்பா சொன்னார்...'அருண் பார்த்தாயா நேற்று கூடையில் நல்ல ஆப்பிள்கள் இருந்தன.அத்துடன் ஒரு அழுகிய ஆப்பிளை வைத்ததுமே மற்ற ஆப்பிள்களும் கெட்டுப்போகத் தொடங்கி விட்டன.அதுபோல நல்ல நண்பர்களுடன் ஒரு கெட்ட நண்பன் சேர்ந்தாலும்,நல்ல நண்பர்கள் அனைவரையும் கெடுத்துவிடுவான்.ஆனால் உனக்கோ கெட்ட நண்பர்கள் அதிகம்' என்றார்.

அது கேட்டு...அருண் ...தன் தவறை உணர்ந்து தன் கெட்ட நண்பர்கள் சகவாசத்தை விட்டான்.

Friday, April 16, 2010

20- 'தன் கையே தனக்கு உதவி'.


வினோத்தும் விக்னேஷும் நண்பர்கள்..இருவரும் ஒரே பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தனர்.

வினோத் வீட்டில் வேலைக்காரர்கள் இருந்தனர்.அவனுக்கு பள்ளிக்கு செல்ல சீருடை அணிவிப்பது..அவனது ஷூவுக்கு பாலிஷ் போட்டு அணிவிப்பது...அவனுக்கு தலைவாரிவிடுவது எல்லாம் வேலையாட்களின் வேலை...

ஒரு நாள் அவன் பள்ளி செல்லும்வழியில் இருந்த விக்னேஷ் வீட்டிற்கு செல்ல நேரிட்டது.

அப்போது விக்னேஷ்...தன் ஷூவிற்கு பாலிஷ் போடுவதைப் பார்த்தான்...'உன் ஷூவிற்கு நீயே வா பாலிஷ் போடுவாய்' என வினோத் ஆச்சிரியத்துடன் கேட்டான்.

'ஆமாம்..நீ வேறு யார் ஷூவிற்கு பாலிஷ் போடுவாய் 'என்று கிண்டலாக பதிலுக்குக் கேட்டான்..விக்னேஷ்.

'என் ஷூவிற்கு வேலையாட்கள் தான் பாலிஷ் போடுவார்கள் 'என்றான் வினோத்.

'அப்படியா..நமக்காக நம் வேலையை பிறரைச் செய்யச் சொல்வது தவறல்லவா..'.கடவுள் நம் வேலைகளை நாமே செய்ய வேண்டும் என்பதற்காகத்தானே நமக்கு இரு கைகளை கொடுத்திருக்கிறார் 'என்றான் விக்னேஷ்.

அது கேட்டு தன் தவறை உணர்ந்த வினோத்..இனி தன் வேலைகளைத் தானே செய்யவேண்டும் என்று தீர்மானித்தான்.

தன் வேலையைத் தானே பார்ப்பது ..தவறில்லை..அது நம்மை மேலும் சந்தோஷமாக வைக்கும்.

(ஆப்ரஹாம் லிங்கன் வாழ்வில் நடந்த சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டது)

Wednesday, April 14, 2010

19.ஆட்டின் புத்திசாலித்தனம்


ஒரு காட்டில் ஓநாய் ஒன்று இருந்தது..அது இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்து ..ஊரில் இருந்த ஆடு..மாடுகளை வீழ்த்தி உண்டு வந்தது..

அதே ஊரில் மாடசாமி என்பவன் ஒரு ஆட்டை வளர்த்து வந்தான்.அந்த ஆடு புத்திசாலியாக வளர்ந்தது...

ஒரு நாள் இரவு ஊருக்குள் வந்த ஓநாய் மாடசாமியின் ஆட்டைப் பார்த்துவிட்டது,அதன் மீது பாய தயாரானது...ஆடோ..உயரமான இடத்திற்கு ஓடியது.அங்கிருந்தபடியே புத்திசாலியான அந்த ஆடு..
கீழே இருந்த ஓநாயிடம் ..'உமக்கு உணவாக ஆக நான் தயார்...ஆனால் அதற்கு முன் எனக்கு ஒரு சிறு ஆசை...இவ்வளவு அழகாக உள்ள நீங்கள் பாட...நான் ஆட வேண்டும்' என்று கூறியது.

தன்னை அழகன் என்ற புகழ்ச்சியில் மகிழ்ந்த ஓநாய் பாட சம்மதித்து தன் கொடூரக்குரலால் பாட ஆரம்பித்தது.

அந்த சத்தம் கேட்டு ..தூங்கிக்கொண்டிருந்த ஊர்மக்கள் விழித்தெழிந்து வந்து ஓநாயை அடித்துக் கொன்றனர்.

புகழ்ச்சியில் மயங்கிய ஓநாய் உயிரைவிட்டது.ஊரில் இருந்த ஆடு..மாடுகள் பயமின்றி வாழ்ந்தன...மாடசாமியின் ஆட்டின் புத்திக்கூர்மையை அனைவரும் பாராட்டினர்.

Sunday, April 11, 2010

18. பயமே கூடாது


ஒரு சிங்கமும் ...யானையும் நண்பர்களாக இருந்தது.

ஒரு நாள் சிங்கம் யானையிடம் தனக்கு சேவல் கூவும்போது பயமாயிருக்கும் என்றது...

அதைக்கேட்ட யானை...சிங்கத்தைப் பரிகசித்தது.. 'பல மிருகங்கள்,உன்னை காட்டுக்கு ராஜா எனக் கூறி உன்னிடம் பயப்படும் போது..கேவலம்..நீ..ஒரு சேவலுக்குப் பயப்படுகிறாய் என்றது..'
'
அப்போது..ஒரு 'ஈ ' ஒன்று பறந்து வந்து..யானையின் காதருகே அமர்ந்தது..உடனே பயந்த யானை..தன் காதுகளை பலமாக ஆட்டியது.

'ஈ' க்கு பயந்த யானையைப் பார்த்து 'என்னை பரிகசித்த நீ கேவலம் 'ஈ' க்கு பயப்படுகிறாயே 'என்றது சிங்கம்.

'அது என் காதிற்குள் போனால் ..நான் அவ்வளவு தான்' என்றது யானை.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றில் பயம்..ஆனால் பயம் என்பதே அர்த்தமில்லாதது...நாம் வழ்வில் எந்த விஷயத்திற்கும் பயமில்லாமல் தைரியமாக செயல்படவேண்டும்.

Friday, April 9, 2010

17.முயற்சி வேண்டும்


ராமன் பள்ளிப்பாடங்களை சரிவர படிக்கமாட்டான்.அதனால் அவனால்...அவன் நண்பன் லட்சுமணனைப்போல அதிக மதிப்பெண்கள் வாங்க முடிவதில்லை.

நாளை முதல் தேர்வு ஆரம்பம்.கடவுளிடம் ராமன் ..இந்த முறை லட்சுமணனைவிட அதிக மதிப்பெண்கள் கிடைக்குமாறு செய் என வேண்டினான்.ஆனால் தேர்வு முடிவு வந்ததும்...லட்சுமணனுக்கே அதிக மதிப்பெண்கள்.

கோவிலுக்கு வந்த ராமன் ..'கடவுளே.. நான் உன்னை அவ்வளவு வேண்டியும் என்னை ஏமாற்றிவிட்டாயே!' என்றான்.

ஆண்டவன் உடனே அவன் முன் தோன்றி..'ராமா..உனக்கே மதிப்பெண்கள் அதிகம் கிடைக்க வழி செய்ய நான் முனைந்தேன்..ஆனால் அதற்கு நீ படித்து..பதில்களை எழுதியிருந்தால் மட்டுமே என்னால் முடியும்.ஆனால் நீ எழுதியிருந்தவை எல்லாம் தவறு என்று தெரிந்து என்னால் எப்படி உனக்கு உதவிட முடியும்' என்றார்.

ராமனுக்கு அப்போதுதான் தெரிந்தது...ஆண்டவனை மட்டுமே வேண்டினால் போதாது...நாமும் உழைத்து படித்திருக்க வேண்டும் என்று.

தெய்வ நம்பிக்கை மட்டுமே இருந்தால் போதாது ஒரு செயலில் வெற்றியடைய நம் முயற்சியும் வேண்டும்.

Tuesday, April 6, 2010

15. கையே சுகாதாரமானது


(இன்று உலக சுகாதார தினம்.அதை ஒட்டி ஒரு சிறு சம்பவம்.)

ராமனும்,லட்சுமணனும் நண்பர்கள்.ஒரு முறை அவர்கள் இருவரும் ஒரு நண்பனின் வீட்டிற்கு சாப்பிடச் சென்றார்கள்.

ராமன்...உணவை,எடுத்து சாப்பிட ஒரு ஸ்பூனும்..ஒரு ஃபோர்க்கும் கேட்டான்.லட்சுமணனோ..தன் கையால் உணவை எடுத்து சாப்பிட ஆரம்பித்தான்...

உடனே ராமன் அவனைப் பார்த்து 'ஸ்பூனை உபயோகித்து சாப்பிடு...அதுதான் சுகாதாரமானது...சுத்தமானது..'என்றான்.

ஆனால் லட்சுமணன் சிரித்துக்கொண்டே...'இல்லை..ராமா..கைதான் சிறந்தது..இது தான் சுகாதாரமானது...ஏனெனில் என் கையை என்னைவிட வேறு எவரும் பயன்படுத்தி இருக்கமுடியாது'என்றான்.

ராமன் வாய் மூடி மௌனியானான்.

(உண்மையில் இது வின்ஸ்டன் சர்ச்சிலுக்கும்...நம் நாட்டின் ஜனாதிபதியாயிருந்த ராதாகிருஷ்ணனுக்கும் இடையில் நடந்த சம்பவம்)

Friday, April 2, 2010

14.ஆண்டவன் படைப்பில்


ஒரு காட்டில் இருந்த மான் தண்ணீர் குடிக்க தண்ணீர் அதிகம் இருந்த குளத்தருகே வந்தது.

தண்ணீரில் தன் உருவத்தைப் பார்த்தது.தனக்கு ஆண்டவன் அளித்துள்ள அழகான உருவத்தையும்...புள்ளிகளையும் கொம்புகளையும் கண்டு மகிழ்ந்தது.

அப்போது சிறுத்து நீண்ட தன் கால்களைப் பார்த்தது.என்னை இவ்வளவு அழகாக படைத்த இறைவன் ...கால்களை இப்படி படைத்துவிட்டாரே என வருந்தியது.

அச்சமயம் ஒரு சிங்கம் ...அந்த மானை அடித்து சாப்பிட எண்ணி மானை நோக்கிப் பாய ...அலறி அடித்து மான் நான்கு கால் பாய்ச்சலில் பாய்ந்து ஓடி தப்பியது.

அப்போது அது.. ஆண்டவன் தனக்கு ஏன் இப்படிப்பட்ட கால்களைக் கொடுத்தான் என்பதை உணர்ந்து கடவுளுக்கு நன்றியைச் சொன்னது.

ஆண்டவன் படைப்பில் காரணமில்லாமல் எதையும் அவன் செய்வதில்லை

Sunday, March 28, 2010

13 - புத்திசாலிச் சிறுவன்




ஒரு நாள் சில சிறுவர்கள் பந்து விளையாடிக் கொண்டிருந்தனர்.அச்சமயத்தில் ஒரு சிறுவன் உதைத்த பந்து அருகில் இருந்த மரத்தின் பொந்திற்குள் விழுந்தது.

பந்துக்கு சொந்தக்காரச் சிறுவன் அழ ஆரம்பித்தான்.

அந்தப் பந்தை பொந்திலிருந்து எப்படி எடுப்பது என்று யாருக்கும் தெரியவில்லை.

அப்பொழுது ஒரு புத்திசாலிச் சிறுவன் அருகிலிருந்த வீட்டிலிருந்து ஒரு வாளியில் தண்ணீரை எடுத்து வந்து பொந்திற்குள் கொட்ட பந்து எழும்பி தண்ணீரின் மேல் வந்தது. அந்த பந்தை எடுத்து உரிய சிறுவனிடம் ஒப்படைத்தான்.

எந்த ஒரு காரியத்திற்கும் சற்று சிந்தித்தால் அந்த சிக்கலில் இருந்து விடுபடலாம்.

Thursday, March 25, 2010

12 - செய்யும் தொழிலே சிறந்தது




பரந்தாமன் கல் உடைப்பவன்.கல் உடைப்பதைவிட நல்ல வேலை கிடைக்கக் கடவுளை வேண்டினான்.

ஒரு நாள் அவன் முன்னால் கடவுள் தோன்றி 'உனக்கு என்ன வேண்டும்' என்றார்'.


'சூரியன் உலகம் முழுக்கத் தெரியும்..நானும் அவ்வாறு தெரிய ஆசைப்படுகிறேன் எனவே'சூரியனாக வேண்டும் ' என்றான்.

கடவுள் சம்மதம் தெரிவிப்பதற்குள் சூரியனை மேகம் மறைத்தது . உடனே 'மேகம் ஆக வேண்டும்' என்றான்.

மேகத்தை மழை மேகங்கள் மறைக்க ..தான்' மழை மேகமாக' ஆக வேண்டும் என்றான்.

மேகம் மழையாகப் பெய்தபின் 'மழையாக' வேண்டும் என்றான்.

மழைநீர் நதியாக ஓடியதைப் பார்த்து 'நதியாக மாறவேண்டும்' என்று ஆசைப்பட்டான்.

ஓடி வந்த நதியை ஒரு பெரிய பாறாங்கல் தடுத்ததைப் பார்த்து 'கல்லாக வேண்டும்'என்றான்.

உடனே கடவுள் அந்தக் கல்லையே உடைக்கும் நீ சிறந்தவன் தானே..என்றார்.சற்று சிந்தித்த பரந்தாமன் ஆமாம்..ஆமாம்..என்றான்.

சிரித்த கடவுள்

'இருக்கும் இடமே சொர்க்கம்'
'இருக்கும் நிலையே நல்ல நிலை'
'செய்யும் தொழிலே சிறந்த தொழில்'

என்பதை அனைவரும் உண்ர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.

Monday, March 22, 2010

11 - நாயும் ... எலும்புத்துண்டும்




டாமி என்ற நாய்க்கு....ஒரு நாள் எலும்புத் துண்டு ஒன்று கிடைத்தது

எலும்பைக் கடித்து அதிக நாட்கள் ஆகிவிட்டபடியால் ..அது மிகவும் சந்தோஷத்துடன் எடுத்துக் கொண்டு ஓடியது.

வழியில்...ஒரு ஆற்றின் பாலத்தை அது கடக்க நேரிட்டது...

அப்போது ஆற்றின் நிழலில்.. இதன் நிழல் தெரிந்தது.ஆனால் டாமியோ..'வேறு ஒரு நாய் ஒன்று..தன்னை விட பெரிய எலும்புத் துண்டோடு..நிற்கிறது என எண்ணியது.

தன்னிடமிருப்பதைவிட ..அந்த எலும்புத் துண்டு சற்று பெரிதாக இருப்பதாக எண்ணியது.தண்ணீரில் தெரிந்த தன் நிழலுடன் சண்டைபோட்டு ...அதை பறிக்க திட்டமிட்டு தன் நிழலைப் பார்த்து குரைத்தது.

அப்போது ...அதன் வாயிலிருந்த எலும்புத்துண்டு தண்ணீரில் விழுந்தது.டாமி ஏமாந்தது.அதற்கு எதுவுமே இல்லாமல் போயிற்று.

இதனால் நாம் அறிவது என்னவென்றால்..நம் கையில் உள்ள பொருளை விட்டு ..மற்றவர் கையில் உள்ள பொருளுக்கு ஆசைப்படக்கூடாது.

Thursday, March 18, 2010

10 - நன்றி மறப்பது நன்றன்று


கண்ணனும் ...முருகனும் நல்ல நண்பர்கள்.ஒரு நாள் கடற்கரைக்குச் சென்ற இவர்கள்..மணலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்..அப்போது நடைபெற்ற விவாதத்தில் முருகனின் பேச்சு கண்ணனுக்கு கோபத்தை உண்டாக்க..அவனது கன்னத்தில் பளாரென அறைந்தான் கண்ணன்.

அடியை வாங்கிக்கொண்ட முருகன்..சற்று நேரம் திகைத்துவிட்டான்.பின் கடற்கரை மணலில் 'கண்ணன் என்னை அடித்தான்' என எழுதினான்.

பின் இருவரும் மௌனமாக வீடு திரும்பினர்..அப்போது வேகமாக வந்த கார் ஒன்று முருகனை இடிக்குமாறு வர..உடனே கண்ணன்...முருகனை இழுத்து..நடக்க இருந்த விபத்தை தவிர்த்தான்.

நன்றியுடன் முருகன்...பக்கத்தில் இருந்த கல் ஒன்றை எடுத்து..பெரிய பாறாங்கல் ஒன்றில் 'இன்று கண்ணன் என் உயிரைக் காப்பாற்றினான்' என செதுக்கினான்.

இதைக் கண்ட கண்ணன்..'நான் உன்னை அடித்ததை மண்ணில் எழுதினாய்..காப்பாற்றியதை கல்லில் எழுதினாயே..ஏன்'என்றான்.

அதற்கு முருகன் ..'ஒருவர் செய்த தீங்கை மணலில் எழுதினால் ...அதை அடுத்த நிமிடம் காற்று கலைத்துவிடும்...அதே வேளையில் செய்த நன்மையை கல்லில் எழுத ..அது அழியாமல் என்றும் நிற்கும்'என்றான்.

ஒருவர் செய்த தீமையை உடனே மறந்து விடவேண்டும்.அதே வேளையில் அவர்கள் செய்த நன்மையை என்றென்றும் மறக்கக்கூடாது என்பதையே இச் செயல் நமக்கு தெரிவிக்கிறது.

Sunday, March 14, 2010

9-'நன்மைக்கு நன்மையே நடக்கும்;


ஒரு நாள் கந்தன் தந்தையுடன் மலைகள் இருந்த பகுதி ஒன்றில் நடந்து சென்றுக் கொண்டிருந்தான்.அப்போது கால் தடுக்கி விழ நேரிட்டது...வலியால் 'ஆ'எனக் குரல் கொடுத்தான்..

'ஆ' என எதிரொலியும் கேட்டது...

கந்தனுக்கு ஒரே ஆச்சரியம்..

'யார் நீ 'என்றான்.

பதிலுக்கு 'யார் நீ' என்று கேட்டது...

'உன்னை பாராட்டுகிறேன்; என்றான்.

அதுவும் அப்படியே கூறிற்று.

அப்பாவிடம் கந்தன்..'அப்பா..என்னது இது;என்றான்.

அவன் அப்பா சொன்னார்..'கந்தா..இதன் பெயர் எதிரொலி' ஆகும். உண்மையில் நாம் என்ன சொல்கிறோமோ..அதையே இது திரும்பச்சொல்லும்.

நீ இப்போது..'நீ சொல்கிறபடி செய்கிறேன்' என்று சொல் என்றார்..

கந்தனும் ..அப்படியே சொல்ல..திரும்ப எதிரொலியும் 'நீ சொல்கிறபடி செய்கிறேன் 'என்றது.

கந்தா...இதிலிருந்து தெரிந்து கொள்..நல்லதோ..தீமையோ எது நாம் செய்தாலும் அதுவே நமக்குத் திரும்ப நடக்கும்.

இதைத்தான் இந்த எதிரொலி உணர்த்துகிறது.

ஆகவே எப்போதும் நாம் அனைவருக்கும் நல்லதே செய்ய வேண்டும் என்றார்.

Thursday, March 11, 2010

8.பால்காரனும் ...பேராசையும்


பால்காரன்...தன் மாட்டிலிருந்து கறந்த பாலை ஒரு குடத்தில் இட்டு....அதை தலையில் சுமந்தபடியே அடுத்த ஊருக்கு ..விற்க புறப்பட்டான்.

பாலை விற்றதும் என்ன செய்யலாம் என்று எண்ணமிட்டுக் கொண்டிருந்தான்.

இப்பாலை விற்று வரும் பணத்தில் நூறு கோழிகள் வாங்குவேன்...அவற்றை வளர்த்து சந்தையில் அதிக பணத்திற்கு விற்பேன்.

விற்று வந்த பணத்தில் மூன்று அல்லது நான்கு ஆட்டுக் குட்டிகளை வாங்குவேன்.வீட்டின் அருகில் உள்ள புல்வெளியில் அவை மேயும்..அவை வளர்ந்தவுடன் அவற்றை விற்று ஒரு பசுமாட்டை வாங்குவேன்.

அப்போது என்னிடம் பசுமாட்டின் எண்ணிக்கை அதிகரிக்கும்.அதனால் ஒரு குடத்திற்கு பதில் இரு குடத்தளவு பால் விற்க கிடைக்கும்.

அது விற்ற பணம் ஏராளமாய் கிடைக்கும்...அதில் சந்தோஷமாக இருப்பேன்,,,ஆனந்தக் கூத்தாடுவேன் என...தலையில் இருந்த குடத்திலிருந்து கைகளை எடுத்துவிட்டுக் குதித்தான்.

தலையில் இருந்த குடம் கீழே விழுந்து பால் முழுவதும் தெருவில் ஆறாய் ஓடியது.

அவனது பேராசை எண்ணங்கள்...இருந்ததையும் அவனை விட்டு ஓடிப்போகச் செய்தது.

பேராசை பெரு நஷ்டம்.