Friday, April 28, 2023

39. உருவு கண்டு எள்ளாமை வேண்டாம்


39- உருவு கண்டு எள்ளாமை வேண்டும்



 அந்த ஊரில் மிருக காட்சி சாலை ஒன்றிருந்தது.

அந்த மிருக காட்சியில் எல்லா மிருகங்களும் இருந்தன

சிங்கம்,புலி ஆகியவை தனித்தனி கூண்டில் அடைக்கப்பட்டிருந்தன..

ஒட்டகம்,யானை எல்லாம் தனியே அவர்களின் பாகனோடு நின்று கொண்டிருந்தன.

அங்கு வந்த சிறுவர்,சிறுமிகள் ஒட்டக சவாரியை விரும்வ..பாகனும்அதில் ஏறி வலம் வர ஒப்பு கொண்டான்.

சிறிது நேரம் கழித்து..ஒட்டகம் சற்று இளைப்பாறியது.

அப்பொழுது அருகே இருந்த மற்ற மிருகங்கள் ஒட்டகத்தை பார்த்து “நீ ஏன் இவ்வளவு உயரமாக இருக்கிறாய்,உயரமான  கழுத்து,அதில் பெரிய திமில் என்றுபார்க்க அருவருப்பாக இருக்கிறது"என்று கேலி செய்தன.

  அப்பொழுது  ஒட்டகம் “நண்பர்களே’ உங்களுக்கு என்னைப்பற்றி தெரியாது.நான் சொல்கிறேன் தெரிந்துகொள்ளுங்கள் .

நாங்கள் பெரும்பாலும் பாலைவனத்தில் தான் வாழ்வோம். மிருக காட்சியிலும் இருப்போம்.

உணவும் நீரும் கிடைக்கும்போது அதை திமிலாக்கிகொள்வோம்.(திமிலில் கொழுப்பாக சேர்த்துக்கொள்வோம்)

உணவோ நீரோ கிடைக்காத காலத்தில் எங்கள் திமிலின் கொழுப்பில் உள்ள ஹைட் ரஜனோடு நாங்கள் சுவாசிக்கும் காற்றில் உள்ள ஆக்ஸிஜனைக்  கலந்து நீராகவும் உணவாகவம் மாற்றிக்கொள்வோம்.

உணவு மட்டும் கிடைத்தால் போதும்,நீரின் தேவையில்லாமல் ஒரு மாத காலம் எங்களால்  பயணம்  செய்ய முடியும்.

உணவும்,நீரும் இல்லாமல் ஒரு வார காலம் இருப்போம்.

குளிர் காலத்தில் ஆறு மாத காலம் வரை கூட நீர் அருந்தாமல் எங்களால் இருக்கமுடியும். நீர் கிடைத்தால் 100 லிட்டெர் தண்ணீரை 10 நிமிடத்தில் குடித்து விடுவோம்.

இறைவன் எங்களுக்கு 50 ஆண்டுகள் வரை வாழ அருள் புரிந்திருக்கிறார்.

எங்கள் முன்னோர்கள் பெரும்பாலோர் பாலைவனத்தில் வாழ்ந்து வந்ததால் எங்களை “பாலைவனகப்பல்.." என்றும் கூறுவர்.

பாலைவனத்தில் வாழ்வதற்கேற்ப ஆண்டவன் எங்களை இப்படி படைத்திருக்கிறார்.என்னைப்போன்ற சிலர் தான் நகரங்களில்  காணப்படுகிறோம்.

உருவத்தைக்கண்டு இகழக்கூடாது.காரணமில்லாமல் ஆண்டவன் எதையும் படைக்க மாட்டார்."  என்றது

அதைக்கேட்ட மற்ற மிருகங்கள் அதை எள்ளி நகையாடுவதை நிறுத்திவிட்டு மரியாதையுடன் நடத்த ஆரம்பித்தன,.


Thursday, April 27, 2023

38. அவரவர் பார்வையில்


38- அவரவர் பார்வையில்



 ஒரு ஊரில் வெவ்வேறு மதத்தலைவர்கள் இருந்தார்கள்.ஒவ்வொரு மதத்தலைவர்களும் அவர்களுடைய மதக் கடவுளை உயர்வாக பேசி மற்ற மதக்கடவுள்களை தங்களுக்கு தெரியாது என்பது போல் பேசுவர்.

இதனால் இவர்களுக்குள் எந்த மதக்கடவுள் உயர்ந்தவர்  என்ற சர்ச்சை  வந்தது.

அனைவரும் இந்த சர்ச்சைக்கு ஒரு தீர்வு கிடைக்க அந்த ஊரைச்சேர்ந்த நீதிபதியிடம் சென்றனர்.

அவர்களது குறையை கேட்ட நீதிபதி தன் வேலையாட்களிடம் ஒரு  ஆனையையும் 4 கண் பார்வை இல்லாதவர்களையும்  அழைத்து  வரச்சொன்னார்.

 அவர்களிடம் நீதிபதி  யானை ஒன்று உங்கள் எதிரே உள்ளது.அதை தொட்டுபார்த்து யானை எப்படி உள்ளது  என்று சொல்லவேண்டும் என்றார்.

யானையின் காதுகளை தொட்ட முதல் நபர் முறம் போல் உள்ளது என்றான்.

யானையின் வயிற்றை தொட்ட இரண்டாம் நபர் சுவர் போல் உள்ளது என்றான்.

யானையின் கால்களை தொட்ட மூன்றாம்  நபர் தூண் போல் உள்ளது என்றான்.

யானையின் வாலைத்தொட்ட நாலாவது  நபர் துடைப்பம் போல் உள்ளது என்றான்.

உடனே நீதிபதி மதத்தலைவர்களிடம் பார்த்தீர்களா "யானை ஒன்று தான் ஆனால் ஒருவனுக்கு முறம் போலவும்,மற்றொருவனுக்கு சுவர் போலவும்,இன்னொருவனுக்கு தூண் போலவும், நான்காவது நபருக்கு துடைப்பம் போலவும் தோன்றியிருக்கிறது.

கடவுள்  ஒருவர் தான்,அவரவர் பார்வையில் தான் வித்தியாசம் இருக்கிறது என்றார். "

இதைக்கேட்ட மதத்தலைவர்கள் வெட்கி தலைகுனிந்து திரும்பினர்.

Wednesday, April 26, 2023

37. வாத்தின் புத்திக் கூர்மை



37- வாத்துகளின் புத்தி கூர்மை



 ஒரு குளத்தின் அருகில் ஒரு ஆண் வாத்தும் பெண் வாத்தும் வசித்து வந்தன.

ஒரு நாள் பெண் வாத்து குளக்கரையில் இரண்டு  முட்டையிட்டது. அந்த முட்டைகளை  இரண்டு வாத்துகளும் கவனமாக பாதுகாத்து வந்தன.

அந்த குளத்தின் அருகே இருந்த மரம் ஒன்றில் பாம்பு புற்று ஒன்று இருந்தது.அதிலிருந்த பாம்பு இந்த முட்டைகளை பார்த்துவிட்டது.பாம்புக்கு முட்டைகளை எடுத்து உணவாக்கிகொள்ளவேண்டும் என்ற ஆசை  எழுந்தது.

வாத்துகள் இரண்டுக்கும் நல்ல பசி.அதனால் அவை இரண்டும் ஒரு இலையால் முட்டைகளை மூடி விட்டு குளத்தில் நீந்தி மீன்கள் சாப்பிட கிடைக்குமா என்று பார்த்தன. அந்த  சமயத்தில் பாம்பு வந்து அந்த முட்டைகளை ஒவ்வொன்றாக விழுங்கி விட்டது.

திரும்ப வந்த வாத்துகள் முட்டையை காணவில்லைஎன்றதும் மிகவும் வருத்தமடைந்தன.யார் எடுத்தார்கள் என்று தெரியவில்லை.சுற்று முற்றும் பார்த்ததில் பாம்பு புற்றினைக் கண்டதும் பாம்பு தான் எடுத்திருக்கும் என்று தீர்மானித்தன.

அடுத்த முறை மீண்டும் இரண்டு முட்டை போட்டது வாத்து.பின் இரண்டு வாத்துகளும் மரத்தில் மறைந்து கொண்டு பார்த்தன.அப்பொழுது பாம்பு வந்துகொண்டிருந்தது.அது முட்டையை எடுக்கும்போது வாத்து பாம்பிடம் "அவசரப்படாதே,நான் சொல்வதை  சற்று பொறுமையுடன் கேள்" என்றண.

"என்ன?" என்று கேட்டது? பாம்பு.

"நீ எங்கள் முட்டைகளை உணவாக்கிகொள்கிறாய்.எங்களுடைய குழந்தைகளை அழிக்கிறாய்.இங்கு இரண்டு முட்டைகள் தான் உள்ளது.பக்கத்து காட்டில் ஒரு மரத்தடியில் நிறைய முட்டைகள் உள்ளன.நீ விரும்பினால் நாங்கள் உன்னை அங்கு அழைத்து செல்கிறோம்" என்றன..

பாம்பும் அதிக உணவுக்கு ஆசைபட்டு சரி என்று சொல்லி அவைகளுடன் சென்றது.

அதற்கு முந்தின நாள் பருந்திடம் ஒருஇடத்தில் காத்திருக்கச்சொல்லி, தாங்கள் அதற்கு உணவாக பாம்பை அழைத்து  வருவதாக கூறியிருந்தன.

திட்டமிட்டபடி அந்த மரத்தடியில்  பருந்து காத்துக்கொண்டிருந்தது. வாத்துகள் பாம்புடன் வந்ததும் பருந்து பாம்பை கொத்தி தனக்கு உணவாக்கிகொண்டது.

தந்திரத்தால் தன்னை எதிரியிடம் காப்பாற்றிய பருந்துக்கு நன்றி கூறிவிட்டு தனது முட்டைகளை அடைகாக்க வாத்துகளும் சந்தோஷமாக திரும்பின.


36. செய்யும் தொழிலே தெய்வம்

 

36- செய்யும் தொழிலே தெய்வம்


மதுரையை ஆண்ட மன்னர்களுள் வீரபாண்டியன் என்ற அரசன் கலைகளில் ஆர்வம் உள்ளவர்.அவரது மனைவியும் அவரைப்போல கலைகளில் ரசனை உள்ளவள்.

ராணிக்கு தனது அந்தபுரத்தில் ஒரு அம்மனின் சிலை வடிக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது.அவளுக்கு பூஜை வழிபாடுகளில் மிகுந்த நம்பிக்கை உண்டு.

ராணியின் விருப்பத்திற்கேற்ப அரசன் கைதேர்ந்த சிற்பிகளை அழைத்து ஒரு அம்மன் சிலையை வடிவமைக்கச் சொன்னார்.வந்த சிற்பிகளில் அனுபவமிக்க சிற்பி ஒருவரை தேர்ந்தெடுத்து அவரிடம் ‘ஆறடி  உயரமுள்ள ஒரு அம்மன் சிலை  அந்தபுரத்தில் வடிவமைக்கவேண்டும்’ என்றார்.

சிற்பியும் அதற்கு ஒத்துக்கொண்டு வேலையை ஆரம்பித்தார்.அரசரும், அரசியும் அவ்வப்பொழுது வந்து மேற்பார்வையிடுவது வழக்கம்.சில நாட்கள் கழித்து  மற்ற மந்திரிகள் அரசரிடம் சிலை முடியும் தறுவாயில் உள்ளது என்று கூற இருவரும் சிற்பக்கூடம் விரைந்தனர்.

அங்கு அவர்கள் முழுமையான சிலை  கீழே கிடக்க சிற்பி மீண்டும் ஒரு புது சிலையை செதுக்கிகொண்டிருந்தார். அதற்கு காரணம் கேட்ட அரசரிடம் சிற்பி  அம்மனின் மூக்கில் ஒரு பெரிய ஓட்டை விழுந்துவிட்டது.அதனால் தான் மீண்டும் செய்கிறேன் என்றார்.

அரசர் , "ஆறடி உயரத்தில் உள்ள சிலையில் சிறு தவறு இருந்தால் மற்ற்வர்களுக்கு தெரியாது,இதையே வைத்துக்கொள்ளலாமே "என்றார்.

அதற்கு சிற்பி அரசே ‘ என் மனம் ஒப்பவில்லை’.  ஒரு வேலையை நம்மிடம் ஒப்படைப்பவர்களை நாம் ஏமாற்றக்கூடாது.அப்படி ஏமாற்றுவது அவர்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம் ஆனால் நம் மனசாட்சிக்கு தெரியும்மேலும்  நாம் ‘செய்யும் தொழிலே  தெய்வம்”அந்த தெய்வத்தை ஏமாற்றுவது தொழில் தர்மம்  இல்லை."என்றார்.

அரசர் சிற்பியின் நேர்மையை பாராட்டி அவருக்கு அரசவையில் முக்கியமான  பதவி கொடுத்தார்.

Monday, April 24, 2023

35. யோசித்து செய்.

35- யோசித்து செய்





அந்த கிராமத்தில் ஒரு  குளம் இருந்தது.அதில் மீன்களும் தவளைகளும் நிறைய இருந்தன.குளத்தின் அருகே உள்ள ஒரு மரப்பொந்தில் ஒரு  சுண்டெலி வசித்து வந்தது.சுண்டெலிக்கு தண்ணீரில் குதித்து விளையாட ஆசை.ஆனால் தன்னால்  முடியாது என்று அறிந்த சுண்டெலி அந்த குளத்தில் அடிக்கடி காணப்பட்ட தவளை ஒன்றின்  நட்பை  பெற்றது.இருவரும் மிகவும்  நண்பர்களாக  இருந்தனர்.

ஒரு நாள் சுண்டெலி தவளையிடம் ‘நண்பா ‘ எனக்கு தண்ணீரில் குதித்து விளையாடவேண்டும்’ என்று ஆசை.நீ எனக்கு உதவி செய்வாயா?" என்று கேட்டது.

தவளையும் "நாளைக்கு நான் நீ தண்ணீரில் விளையாடுவதற்கு உதவி செய்கிறேன்" என்றது.

அடுத்த நாள் தவளை வெகுநேரம் யோசித்தது.எப்படி சுண்டெலியை தண்ணீருக்குள் கொண்டு வருவது என்று தெரியவில்லை.சட்டென்று ஒரு யோசனை தோன்ற அதை செயல்படுத்தியது

அதன்படி தவளை ஒரு கயிற்றை எடுத்து அதனை தன் காலிலும் சுண்டலியின் காலிலும் சேர்த்து கட்டியது.இரண்டும் சேர்ந்தாற்போல் தண்ணீரில்   இறங்கியது.அப்பொழுது மேலே பறந்துகொண்டிருந்த பருந்து ஒன்று இவர்களை தாக்க வந்தது.உடன் தவளை தன்னையும் சுண்டெலியையும்  காப்பாற்றும் எண்ணத்தில் தண்ணீரில்  முழுவதுமாக இறங்கியது.தண்ணீரில் மூழ்கிய சுண்டெலி மூச்சு திணறி இறந்தது. அதன் உடல் மேலே மிதந்தது.

அதைப் பார்த்த பருந்து சுண்டெலியை தூக்க அதனுடன் கயிற்றால் கட்டப்பட்ட தவளையையும் சேர்த்து தூக்கியது.பருந்துக்கு உணவாக எலியும் தளையும் கிடைத்தது.

இதிலிருந்து நாம் பெ, அவர் சொல்வதை செய்யும்போது அதற்கான எதிர்பலன் என்னவாகும் என்று யோசித்து அதற்கேற்றபடி செயல்படவேண்டும்.










`

அதை 





lmஅதைஆஆஆஆஆஆஅathaiaaaaaaaஆஆ

Thursday, April 20, 2023

34. எல்லாவற்றிற்கும் காரணம் உண்டு


34- எல்லாவற்றிற்கும் காரணம் உண்டு




 ஒரு காட்டில் ஆமையும்,நத்தையும் நண்பர்களாக இருந்து வந்தன.அவர்களைத்தேடி ஒரு முயல் அவ்வப்பொழுது அங்கு வரும்.மூன்றும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்கும்.

ஒரு நாள் முயல் அவற்றிடம் "உங்களால் என்னை மாதிரி வேகமாக ஓடமுடியாது,துள்ளி குதித்து  விளையாடவும் முடியாது.ஆண்டவன் உங்களை ஏன் இப்படி படைத்திருக்கானோ தெரியவில்லை", என்று ஏளனமாக பேசியது.மேலும் முயல் அவற்றைப்பார்த்து "உங்களால் உங்கள் முதுகிலுள்ள ஓட்டை சுமந்து கொண்டு நடப்பதே சிரமம்,பின் எவ்வாறு ஓடமுடியும் "என்றும் கேலி செய்தது.

அப்போது ஓநாய் ஒன்று அவற்றை நோக்கி ஓடி வந்தது.உடனே ஆமையும் நத்தையும் தங்கள் உடலை ஓட்டுக்குள் இழுத்துக்கொண்டு மறைத்துக்கொண்டன.ஓநாய் முயலை குறிபார்த்தது.முயல் வேகமாக தப்பி ஓடியது.முயலை தொடர்ந்து சென்றதால் களைப்படிந்த ஓநாய் வந்த வழியே திரும்பி விட்டது.

சற்று நேரம் கழித்து அங்கு வந்த முயலிடம் ஆமை சொன்னது.."எங்களை ஏளனமாக பேசினாயே.ஓநாய் வந்ததும்..நாங்கள் எங்கள் உடலை சுருக்கிக் கொண்டு கூட்டினுள் அடைந்தோம்.ஓநாய் எங்களை ஒன்றும் செய்யவில்லை.ஆனால் உன்னைப் பிடிக்க நினைத்த போது..பயத்தில் எவ்வளவு வேகமாக ஓடினாய்? இப்போது புரிந்த்தா..ஆண்டன் ஏன் உனக்கு ஓடும் திறமையையும்,எங்களுக்கு கூட்டினையும் தந்துள்ளார் என்று."

ஒவ்வொரு உயிருக்கும் உயிர் வாழ என்னன்ன தேவையோ அதை பல வடிவங்களில் ஆண்டவன் கொடுத்திருக்கிறார்"

இறைவன் படைப்பில் எல்லாவற்றிற்கும் காரணம் உண்டு.


Wednesday, April 19, 2023

26 - நிலையாமை

26 - நிலையாமை
     



கங்கையில் ஒரு வியாபாரி குளித்துக் கொண்டிருந்தான். அப்போது அழகான கைத்தடி ஒன்று மிதந்து வந்தது. அதை எடுத்துக் கொண்டு கரையை நோக்கி நீந்தினான் அவன். அப்போது ஒரு நீர்ச்சுழலில் மாட்டிக் கொண்டான்.தப்பிக்கக் கடும் முயற்சி செய்தான்.ஒரு வழியாகப் போராடி உயிர் பிழைத்தான். ஆனால் அந்தக் கைத்தடி எங்கோ நழுவிப் போய் விட்டது.

கரைக்கு வந்த அவன் அழகான கைத்தடியை இழந்து விட்டேனே என்று கதறினான். அங்கு இருந்த ஒரு துறவி, ''அய்யா, நீங்கள் குளிக்க வெறுங்கையுடன் வந்ததை பார்த்தேனே? இப்போது கைத்தடியை நழுவ விட்டதாகக் கூறுகிறீர்களே?'' என்று கேட்டார்.
வியாபாரி நடந்ததைக் கூறினான்.

துறவி சொன்னார், ''அய்யா, உங்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்பு வருகிறது. கங்கையில் கைத்தடி மிதந்து வந்தது. இப்போதும் அது மிதந்து கொண்டு போகிறது. அப்படி இருக்கையில் அது உங்கள் கைத்தடி என்று எப்படிக் கூறுகிறீர்கள்? அந்தக் கைத்தடியை இரண்டு நிமிடங்கள் தங்கள் கையில் வைத்திருந்ததனால் அது உங்களுடையது என்று சொந்தம் கொண்டாட உரிமை பெற்று விட்டீர்களா?''

வாழ்க்கையில் எதுவும் நிச்சயமில்லை. பிறக்கும் போது யாரும் எதையும் கொண்டு வருவதில்லை. இறக்கும் போதும் எதையும் கொண்டு போவதில்லை. ஆனால் வாழ்வில் பலவற்றை உரிமை கொண்டாடுகிறோம். நமது துன்பங்களுக்கெல்லாம் அது தான் காரணம்.





Tuesday, April 18, 2023

33.புத்திசாலியும் மூடனும்


33- புத்திசாலியும்..மூடனும்




 தாமோதரன் ஒரு ஆசிரியர்.எல்லோரிடத்திலும் அன்பானவர்.இலவச பாடசாலை ஒன்று ஆரம்பித்து எல்லோருக்கும் இலவசமாக கல்வி கற்று தந்தார்.அதனால் அந்த கிராம மக்களுக்கு அவர் மேல் ஒரு மரியாதை உண்டு.சிறுவர்,சிறுமிகளிடம் மிகவும் கண்டிப்பாக இல்லாமல் அன்பாக இருந்ததால் எல்ல சிறுவர் சிறுமிகளும் அவரிடம் பாடம் கற்க விருப்பபட்டனர்.

அந்த ஊரில் ராமு என்ற செல்வந்தன் இருந்தான்.படிப்பறிவு கிடையாது.அவனது வீட்டில் அவனது பெற்றோர் எவ்வளவு கெஞ்சியும்  பள்ளிக்கூடம் பக்கம் சென்றதில்லை.அவனுக்கு ஆசிரியரிடம் மரியாதை கிடையாது.அவரை எங்கு கண்டாலும் வம்புக்கு இழுப்பான்.

ஒரு நாள் மாணவ மாணவிகளுக்கு பாடம் சொல்லிக்கொடுத்துவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்த ஆசிரியரை ராமு வழிமறித்தான்.

அவன் கையில் ஒரு பெரிய பூசணிக்காய் ஒன்று இருந்தது.அவன் ஆசிரியரைப் பார்த்து உங்களை ஊரில் எல்லோரும் ‘அறிவாளி’ என்று கூறுகின்றனர்.உங்களுக்கு தெரியாதது எதுவும் இல்லை என்கின்றனர். நான்  உங்களுக்கு ஒரு கணக்கு போடுகிறேன்.அதில் நீங்கள் தோற்று விட்டால்  உங்களை ‘முட்டாள்” என்று நீங்கள் ஒத்துக்கொள்ளவேண்டும் என்று சொல்லி கணக்கை கூறினான்.

‘ இந்த பூசணிக்காயின் எடை என்ன? என்றான்.

அதைக்கேட்ட ஆசிரியர் ஒரு நிமிடம் யோசித்தார்.இவன் ஒரு மூடன்,இவனுக்கு சரியான  பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்தார்.

அவனிடம் ‘உன் தலையின் எடை எவ்வளவோ அவ்வளவு தான் பூசணிக்காயின் எடையும். வேண்டுமென்றால் உன் தலையைக் கொய்து விட்டு இரண்டையும் அளந்து பார்க்கலாம் என்றார்.

தன்னுடைய ஆணவத்தை அடக்கிய  ஆசிரியர் ‘ புத்திசாலி;' என்று உணர்ந்த ராமு அவரிடம் தன் செயலுக்காக வருந்தி மன்னிப்பு கேட்டான்.அதற்கு பின் அவரிடம்  வம்பு செய்வதில்லை,மரியாதையுடன் நடந்து கொள்ள ஆரம்பித்தான்..

32. குறையில்லாதவர் யாருமில்லை…

 32- குறையில்லாதவர் யாருமில்லை



மாதவனும்,கல்யாணியும் அரசு  அலுவலகத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.மாதவன் அலுவலகத்துக்கு ஸ்கூட்டரில் செல்வது வழக்கம்கல்யாணி பஸ்ஸில் செல்வாள்.அவர்களது மகள் நேத்ரா வீட்டு பக்கத்திலுள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறாள்.மாதவன் மாலை அலுவலகத்திலிருந்து பள்ளி சென்று அவளை அழைத்து வருவது வழக்கம்.

ஒரு நாள் மாதவன் ஸ்கூட்டர் பழுது அடைந்த்து. அதனால் அவன் பஸ்ஸில் அலுவலகத்துக்கு சென்றான்.மாலை வரும்போது மகளை   பள்ளிக்கூடத்திலிருந்து  ஆட்டோவில் அழைத்து கொண்டு வந்தான்.

வீட்டிற்கு வந்தவுடன் நேத்ரா ‘ அப்பா எனக்கு மிகவும் பசிக்கிறது  ஏதாவது செய்து கொடுங்கள்' என்றாள்.மாதவனும் கல்யாணி வர லேட்டாகும் என்பதால் மகளிடம் ‘கண்ணா, நான் உனக்கு தோசை வார்த்து தருகிறன் ‘ என்றான்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து மாவை ஊற்றி தோசை வார்க்கலானான்.முதல் இரண்டு தோசை தீய்ந்துவிட்டது. மூன்றாம் தோசை சுமாராக வந்தது.நேத்ராவும் பசியால் அதனை சாப்பிட்டாள்.

அம்மா வந்தவுடன் நேத்ரா அம்மா ‘ அப்பா எனக்கு தோசை வார்த்து கொடுத்தார்’ஆனால்  எல்லாம் தீய்ந்துவிட்டது..உன்னை போல் முறுகலாக அப்பாவுக்கு  வார்க்க தெரியவில்லை  என்றாள்.

அம்மா சொன்னாள் 'நேத்ரா அப்பாவும் இன்று பஸ்ஸில் களைப்புடன் வந்திருப்பார்.வந்தவுடன் நீ பசி என்று கூறியதும் தனக்கு சரியாக வார்க்க தெரியாவிட்டாலும் பரவாயில்லை என்று தோசை வார்த்தார். முதல் தடவை செய்ததால் அவருக்கு தெரியவில்லை.

அதனால் அதை நாம் சுட்டிக்காட்டக்கூடாது.தவறுகள் எல்லோருக்கும் சகஜம்.அடுத்தடுத்த தோசை கண்டிப்பாக நன்றாக வரும்.

இதுபோல் பள்ளியிலும் நீ நண்பர்கள் யாரிடமும் எந்த குறையும் கண்டுபிடிக்கக்கூடாது.குறைகள் இல்லாத மனிதர்களே இல்லை.. குறைகள் விரைவில் நிறைகளாக மாறும் "என்றாள்.


Monday, April 17, 2023

31.அவனின்றி ஓர் அணுவும் அசையாது

31- அவனின்றி ஓர் அணுவும் அசையாது





 மகத நாட்டு மகளுக்கு கல்யாணம்.ஊரே ஒரே கொண்டாட்டத்தில் உள்ளது.அரசன் மகளின் கல்யாணத்துக்கு மூன்று நாட்கள் தொடர்ந்து அன்னதானம்  வழங்க ஏற்பாடு செய்திருந்தான்.

முருகன் ஒரு ஏழை.அவனுக்கு உடுத்துவதற்கு உடை கூட ஒழுங்காக இல்லை.இந்த கிழிந்த உடையுடன் அரண்மனைக்கு எவ்வாறு  செல்வது, அன்னதானத்தில் எவ்வாறு  கலந்து கொள்வது என்று அவனுக்கு ஒரே கவலையாக இருந்தது.

இருப்பினும் தன்னிடமுள்ள ஒரு ஆடையை தோய்த்து அணிந்து கொண்டு அரண்மனையில் அன்னதான வரிசையில்  நின்று கொண்டான். அவனுக்கு முன்னால்  பத்து பேர் நின்று கொண்டிருந்தனர்.எல்லோருக்கும் உணவு வழங்கப்பட்டது..அவனுடைய நேரம் வந்த போது அரண்மனை சேவகன்  அவனை தள்ளிவிட்டு அடுத்தவனுக்கு உணவு கொடுத்தான்.மனது மிகவும் வருத்தப்பட்டு முருகன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

முருகன் அப்படியே பசியால்  நடந்துகொண்டு குளத்தங்கரைக்கு வந்தவன் அதிலுள்ள தண்ணீரை அள்ளிக்குடித்துவிட்டு தன்னைத்தானே நொந்துகொண்டு இறைவா ‘என்னை ஏன் இப்படி படைத்தாய் ? நான் என்ன தவறு செய்தேன்? ஏழையாய் பிறந்தது என் தவறா?" என்று  புலம்பினான்.

திடீரென்று பின்புறம் ஒரு குரல் கேட்டது.திரும்பி பார்த்த முருகன் ஆச்சிரியப்பட்டுப் போனான்.நின்றது அரசன்.

அரசன்,அவனிடம் "உன்னை சேவகர்கள் தள்ளிவிட்டதை நான்  பார்த்தேன்.அதனால் உன் பின்னால் வந்தேன்.என்னுடன் வா "என்று கூறி அவனுக்கு நல்ல உடைகளை அணிவித்து அவனை தன்னுடன் அமர்ந்து சாப்பிட வைத்தார்.அவனுக்கு தேவையான பொருள் உதவியும் செய்தார்.அவனது அரசாங்கத்தில் ஒரு வேலையையும் போட்டுக் கொடுத்தார்.

இறைவன் எப்பொழுதும் நம்மை கைவிடுவதில்லை.நாம் கேட்பதை அவன் கொடுப்பதில்லை என்று வருந்தவே வேண்டாம்,

அவனுக்குத்தெரியும்  நமக்கு வேண்டியதை எந்த அளவு எப்போது தருவது என..ஆனால் ஒருநாள் கண்டிப்பாக அள்ளித்தருவான்.

“அவனின்றி ஓர் அணுவும் அசையாது.”


 


\

Sunday, April 16, 2023

30. முட்டாளாக்கிய முட்டாள்




 ஒரு ஊரில் சங்கரன் என்ற அப்பாவி ஒருவன் இருந்தான்.அவனது செயல்கள் எல்லாம் வினோதமாகவே இருக்கும்.அவனை எல்லோரும் முட்டாள் என்றே கூப்பிடுவர்.

அவன் ஒரு வீட்டில் தோட்டவேலைகளை செய்துகொண்டு அந்த வீட்டம்மா கொடுக்கும் உணவை சாப்பிட்டுக்கொண்டு பொழுதை கழித்து வந்தான்.அந்த ஊரில் உள்ள மற்றவர்கள் அவனிடம் வேலை வாங்குவர்.ஆனால் சரியான ஊதியம் கொடுப்பதில்லை.

ஒரு நாள் அவன் வேலை செய்யும் வீட்டிற்கு ஒரு விருந்தினர் வந்தார்.அந்த வீட்டுக்காரர் விருந்தினரிடம் சங்கரை காண்பித்து 'இவன் ஒரு முட்டாள்இவனிடம் எந்த வேலையையும் இலவசமாக வாங்கலாம்.வேண்டுமென்றால் சோதித்து பாருங்கள்' என்றார்.

உடனே விருந்தினர் அவருடைய ஒரு கையில் ஒரு ரூபாயும் மற்றொரு கையில் 5 ரூபாயும் வைத்திருந்து அவனிடம் "உனக்கு எது வேண்டும்?" என்று கேட்டார்.அவன் ஒரு ரூபாய் வைத்திருந்த கையை தேர்ந்தெடுத்தான்.விருந்தினர் அவனை தனியே அழைத்து," ஏன் அப்படி செய்கிறாய் ?"என்று கேட்டார்.

அதற்கு அவன் ,"ஒரு ரூபாயை எடுத்தால் எல்லோரும் நான் முட்டாள் என்று நினைத்து மீண்டும் மீண்டும் எனக்கு பணம் கொடுப்பார்கள்.இவ்வாறு நான் ஒரு நாளைக்கு ரூபாய் 5 முதல் 10 வரை சம்பாதிப்பேன் .ஆனால் நான் 5 ரூபாயை எடுத்தால் அதற்கு பிறகு யாரும் பணம் கொடுக்கமாட்டார்கள்."என்றான்

அவன் மேலும்  .’ நான் முட்டாளில்லைஎன்னை முட்டாளாக நினைத்து கொடுப்பவர்கள் தான் முட்டாள்கள்" என்றான். 

Saturday, April 15, 2023

29. புத்தி கூர்மை

   29- புத்தி கூர்மை



 கிராமம் ஒன்றில் புலவர் ஒருவர் வறுமையில் வாடினார்.

இதைப்பார்த்த அந்த ஊர் கிராமத்தலைவர் ..'நம் நாட்டு அரசரைப் பாடி அரசரிடமிருந்து பரிசினைப் பெற நீர் முயற்ச்சிக்கலாமே…’என்றார்.

புலவரும் அரசனைத் தேடி சென்றவர்,மன்னனை கண்டு புகழ்ந்து பாடியதும்,மன்னர் மகிழ்ந்து 'உங்களுக்கு என்ன அன்பளிப்பு வேண்டும் ?’ என்று கேட்டார்.

புலவரும், இனி வறுமையில் பாதிக்ககூடாது  என்று எண்ணினார்.பின் அங்கு பல  கட்டங்கள் கொண்ட சதுரங்க பலகை ஒன்று இருப்பதை  கண்டார்."உடன் அரசரிடம், எனக்கு பெரிதாக ஒன்றும் வேண்டாம்..அந்த சதுரங்க பலகையில் பல கட்டங்கள்  இருக்கின்றன  அல்லவா? அதில் முதல் கட்டத்தில் ஒரு நெல் மணியை வைத்து பின் ஒவ்வொரு கட்டத்திற்கும் அதை இரட்டிப்பாக்கினால் அதை பரிசாக ஏற்றுக்கொள்வேன் ’ என்றார்.

புலவர் இப்படி கேட்பதைக்கண்டு அவரை எள்ளி நகையாடிய அரசனும் ‘ சரி’ என்றார்.

பின் அரசன்’ அரண்மனை சேவகர்களிடம் புலவர் கேட்டபடி நெல்மணிகளை எடுத்து வாருங்கள்’ என்றார்.

முதல் கட்டத்தில் ஒன்று,இரண்டாம் கட்டத்தில் இரண்டு,மூன்றாம் கட்டத்தில் 4,நான்காம் கட்டத்தில்8 என நெல்மணிகளை  அடுக்கினர்.

பத்தாம்  கட்டம் வந்தபோது நெல்மணிகள் 512 ம், இருபதாம் கட்டம் வந்தபோது எண்ணிக்கை 

5,24,288 ஆயிற்று. 32ம் கட்டம் வந்தபோது அதாவது சதுரங்க பட்டையின் பாதிதூரம் வந்தபோதுஎண்ணிக்கை 214,74,83,648  (214 கோடிகளுக்கும் மேலே).

அது பெருகியது.

விரைவில் எண்ணிக்கை கோடான கோடிகளைத்தாண்டி அரசனின் ராஜ்ஜியம் முழுவதும் புலவனிடம் இழக்கும் நிலைமை ஏற்பட்டது.

புலவரின் சாதூர்யத்தையும் அது புரியாது அவரை எள்ளி நகையாடியதையும் உணர்ந்த அரசன் புலவரிடம் மன்னிப்பு கேட்டார்.

பின் புலவருக்கு தேவையான பரிசுகளைக் கொடுத்து அவரை வறுமையிலிருந்து விடுவித்தார்.

கூட்டு-பெருக்கும் சக்தி என்றும் பெரிது என்று நாமும் உணரவேண்டும்.


Wednesday, April 12, 2023

. 28. தோற்றத்தைக்கண்டு எடை போடக்கூடாது

 28 - தோற்றத்தை கண்டு எடை போடக்கூடாது


ஒரு காட்டில் கரடி ஒன்று வாழ்ந்து வந்தது.ஒரு நாள் உணவு எதுவும் கிடைக்காமல் பசியால்  அலைந்து திரிந்தது.

அப்போது ஒரு மரத்தின் மீது ..ஒரு தேன் கூட்டை கண்டது.அந்த தேன் கூட்டில் உள்ள தேனை குடிக்க எண்ணி அதன் அருகே சென்றது.

அப்போது வெளியே சென்று இருந்த தேனி ,ராஜா கரடி ஒன்று தேன் கூட்டிற்கு வருவதை பார்த்தது.

பார்த்ததும் அதன் அருகில் சென்றது.

கரடி அந்த தேனியை பார்த்து நான் இப்போது தேன்  கூட்டிலுள்ள தேனை குடிக்கப்போகிறேன் என்றது.

உடனே தேனி தெரியும், இது எங்கள் வீடு, இதை ஒன்றும் செய்யாதீர்கள்’ என்று கெஞ்சியது.

கரடி தேனியை பார்த்து ..’நீ எவ்வளவு சிறியவன்,நான் உன்னைவிட எவ்வளவு பெரியவன்,பலசாலியும் கூட தெரியுமா,உன்னால் என்னை ஒன்றும் செய்யமுடியாது ‘ என்றது.

நிலைமையை உணந்த தேனி ..'எனக்கு ஒரு நிமிடம் அவகாசம் கொடுங்கள்நான் வீட்டிலுள்ள பொருட்களை தேன் கூட்டிலிருந்து எடுத்து சென்று விடுகிறேன்’ என்றது.கரடியும்  அதற்கு சம்மதித்தது.

தேனி உடனே  கூட்டிற்கு சென்று மற்ற தேனீக்களிடம்  நடந்ததைக் கூறியது.மற்ற தேனீக்களும் உடனே கூட்டை விட்டு வெளியே வந்தன..அவை அனைத்தும் கரடியை கொட்ட தொடங்கின.கரடி தேனீக்கள் கொட்டியதால் வலியால் துடித்தது..பின் ஓடத்தொடங்கியது.தேனீக்களும் விடாமல் கரடியை துரத்தின.அவற்றிடமிருந்து தப்பிக்க கரடி பக்கத்திலுள்ள ஆற்றில் குதித்தது.

தேனீக்களும் கரடியை மன்னித்து அதனை விட்டுவிட்டன..உருவத்தில் சிறியது என கரடி  நினைத்ததால் அதற்கு வந்தது வினை.நாமும் உருவத்தில் சிறியவனவற்றை பார்த்து அலட்சியம் செய்யக்கூடாது.


Tuesday, April 11, 2023

27. பிறரை குறைத்து மதிப்பிடக்கூடாது

   27- பிறரை குறைத்து மதிப்பிட கூடாது


ஒரு தோட்டத்தில் ஒரு எறும்பு புற்று இருந்தது.அதிலிருந்த எறும்புகள் பக்கத்திலிருந்த ஒரு பெரிய மரத்தின் மீது ஏறிக்கொண்டிருந்தன.

மரத்திற்கு பக்கத்தில் ஒரு முசுக்கொட்டை செடி ஒன்று இருந்தது.அதில் ஒரு கூடு இருந்தது.அந்த கூட்டிற்குள் ஒரு புழு ஒன்று வாலாட்டிக்கொண்டிருந்தது..அது ஒரு பட்டுப்புழு.

எறும்பு கூட்டத்தில் ஒரு பெரிய எறும்பு புழுவைப்பார்த்து ‘எங்களைப்பார்,எத்தனை உயரமான மரத்தில் ஏறிச்செல்கிறோம்.ஆனால் உன்னால் ஒருபோதும் இவ்வளவு உயரத்திற்கு வரமுடியாது' என்று கேலி செய்தது.மற்ற எறும்புகளும் அதனை ஆமோதித்தன.

புழு அமைதியாக  இருந்தது.இந்த புழுதான் நன்கு வளர்ந்து கூட்டுபுழு ஆகி பின் அழகிய பட்டுபூச்சி ஆகும்.இதனை அறியாத எறும்புகள் அந்த புழுவை கேலியும் கிண்டலும் செய்தபடி அந்த இடத்தை விட்டு சென்றன.

அடுத்த இரண்டு தினங்களில் அங்கு வந்த எறும்புகள் வெறும் கூட்டை மட்டும் பார்த்தன.அதைப்பார்த்த எறும்புகள் புழு கூட்டிலேயே தனது வாழ்வை முடித்துக்கொண்டன  போலும் என்று எண்ணின.

அப்பொழுது ஒரு குரல் ‘எறும்பு நண்பர்களே’ என்று யாரோ கூப்பிடும் குரல் கேட்டது. மரத்தின்  உயரத்தில் அழகிய பட்டுபூச்சி சிறகடித்து நின்றது.பட்டுபூச்சி எறும்புகளைப்பார்த்து ,"இப்போது நான் உங்களை விட உயரமாக எதையும் பற்றிக்கொள்ளாமல் பறக்கிறேன்.உங்களால் இவ்வளவு உயரம்வரமுடியாது.நான் உங்களை கேவலப்படுத்தவில்லை.ஒவ்வொருவருக்கும் ஒரு திறமையை இறைவன் கொடுத்திருக்கிறான். அந்த  திறமைகளுக்காக நாம் மற்றவர்களை  இகழக்கூடாது.அதை புரிந்து கொள்ளுங்கள்" என்றது.

எறும்புகளும் .அதனை கேட்டு தலை குனிந்தன.

Friday, April 7, 2023

25. முயன்றால் முடியும்

   25 - முயன்றால் முடியும்


சதீஷ் ஒரு அரசாங்க பள்ளிக்கூடத்தில் 11ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான்.அவனுக்கு படிப்பில் மட்டுமல்லாமல் விளையாட்டிலும் ஆர்வம் அதிகம்.குறிப்பாக கால்பந்து ஆட்டத்தில் அவனுக்கு அதிக ஈடுபாடு அதிகம்.அவனுடைய பள்ளிகூட  கால்பந்து அணிக்கு அவன் தான்  தலைவன்.

அவன் தன் அணியில் இருக்கும் எல்லோரிடத்திலும் மிகவும் அன்பாக இருப்பான்.அவர்களுக்கு நல்ல பயிற்சி கொடுப்பான்.அவனது விடாமுயற்சியால் அவனது அணி மற்ற பள்ளிகளோடு விளையாடும்போது எப்பொழுதும் முதலாவதாக வெற்றிபெறும்.

ஒரு முறை அண்டை மாவட்டத்தோடு விளையாடும்போது அ்வனது  அணியால்  ஒரு போட்டியிலும் வெற்றி பெற முடியவில்லை.அதனால் அவன் மனதளவில் மிகவும் சோர்வடைந்துவிட்டான்.

இதை பார்த்த அவனது உடற்பயிற்சியாளர் அவனிடம் வந்து ‘சதீஷ் விளையாட்டில் வெற்றி தோல்வி என்பது சகஜம்’ ஆகவே தோல்வியைக்கண்டு மனம் தளராதே.இது வரைக்கும் நாம் நிறைய கோப்பைகள் பள்ளியளவில் வாங்கியிருக்கிறோம்..அதை மனதில் கொண்டு உன்னுடைய சக தோழர்களுக்கு  சரியான பயிற்சியும், மனவலிமையையும் நீ தான் கொடுக்கவேண்டும் என்றார்.

சதீஷும் ஆசிரியர் சொல்வதைக்கேட்டு அணியில் உள்ள மற்ற மாணவர்களை ஊக்கப்படுத்தி,சிறந்த பயிற்சி கொடுத்தான். அடுத்து நடந்த மாவட்ட அளவு போட்டியில் அவனது அணி முதலிடம் பெற்றது.

நம்மால் முடியாதது என்று எதுவுமில்லை.முயன்றால் எல்லாம் சாத்தியமே!





Tuesday, April 4, 2023

24.நினைத்தால் முடியும்

  24- நினைத்தால் முடியும்




 நடேசன் திருச்சி அருகே ஒரு கிராமத்தில்  விவசாயம்செய்து வந்தான்.அவனுக்கு குடி பழக்கம் இருந்தது.காலையில் எழுந்து நிலத்துக்கு சென்று எல்லா வேலைகளையும்   முடித்து  விட்டு வரும் போது நிறைய குடித்து விட்டு வருவான்.வீட்டில் சரியாக பணம்  கொடுப்பதில்லை.இதனால் அவனுக்கும் அவன் மனைவிக்கும் சண்டை ஏற்படும்.குழந்தைகள் இருவரையும் நன்றாக படிக்க வைக்க அவள் நினைத்தாள்.ஆனால் அது முடியவில்லை.

எவ்வளவோ அவன் மனைவி முயன்றும் அவனை திருத்த  முடியவில்லை.பக்கத்து வீட்டில்  நடேசனின்  நண்பர் வசித்து  வந்தார்.அவர் நடேசனின் மனைவியிடம் ‘அடுத்த ஊரில் ஒரு ஞானி ஒருவர் இருக்கிறார்’ என்றும் அவரிடம் நடேசனை கூட்டி செல்லுமாறு சொன்னார்.'அவருடைய போதனையால் நடேசன் ஒரு வேளை திருந்தக்கூடும் "என்றார்.

அடுத்த நாள் நடேசனின் மனைவி அவனை ஞானியிட அழைத்து சென்றாள்.ஞானியிடம் நடேசன் தன் நிலைமையை கூறினான்.எவ்வளவு முயன்றும் தன்னால் குடியை கட்டுபடுத்தமுடியவில்லை என்றான்.எனக்கு நீங்கள் தான் ஒரு வழி கூறவேண்டும் என்றான்.அவர் அவன் சொல்வதையெல்லாம் கேட்டு ‘நீ நாளை வா "என்று சொல்லி அனுப்பினார்.

அடுத்த நாள் அவன் சென்றபோது ஞானி ஒரு தூணை இறுக்கக் கட்டிக்கொண்டு  ‘என்னை விட்டு விடு என்னை விட்டு விடு என்று கத்திக்கொண்டிருந்தார்.

நடேசன் அவரைப்பார்த்து  ‘ஐயா, நீங்கள் தான் தூணை கட்டிக்கொண்டிருக்கிறீர்கள்,நீங்கள் தான் தூணை விடவேண்டும்.’ என்றான்.

உடனே ஞானி "இதுபோல நீ தான் குடியை கட்டிக்கொண்டிருக்கிறாய்,நீயாகத்தான்  விடவேண்டும்" என்றார்.

நடேசனும் அதை உணர்ந்து குடியை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி நல்லவனாக மாறினான்.

Monday, April 3, 2023

23.தன்னம்பிக்கை

     23 - தன்னம்பிக்கை


ஒரு ஊரில் ராமன்,லட்சுமணன் என்ற இரு சகோதரர்கள் வாழ்ந்து வந்தனர். ராமனுக்கு 10 வயது லட்சுமணனுக்கு 8 வயது.இருவரும் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக இருந்தனர்.எங்கு சென்றாலும் ஒற்றுமையாகவே சென்றனர்.படிப்பிலும் அவர்கள் புத்திசாலிகள்.

விடுமுறை அன்று ஒருநாள் அவர்கள் இருவரும் விளையாட வீட்டின் பின்புறம்  சென்றனர்.அவர்கள் அப்படி விளையாடிக்கொண்டிருக்கும் போது அவர்களையும் அறியாமல் வெகுதூரம் சென்றுவிட்டனர்.அங்கு ஒரு பாழடைந்த   கிணறு இருந்தது.அதில் பெரியவன் ராமன்  தவறி விழுந்து விட்டான்.சிறியவனான லட்சுமணன் செய்வதறியாது அழுது அங்குமிங்கும் ஓடினான்.யாருமின்றி அந்தப் பகுதி வெறிச்சோடி இருந்தது.

அப்பொழுது லட்சுமணன் கண்ணில் ஒரு வாளியும் அதனுடன் இணைந்த கயிறும் கண்ணில் தென்பட்டது.உடனே அதை அவன் எடுத்து கிணற்றில் போட்டு அண்ணனை வாளியை கெட்டியாக பிடித்துக் கொள்ளச் சொன்னான்.ராமனும் கயிற்றை பிடித்துக் கொள்ள லட்சுமணன் தன்பலத்தையெல்லாம் உபயோகித்து ராமனை  மேலே  இழுத்தான். ராமனும் மேலே வந்துவிட்டான்.லட்சுமணனுக்கு அவனாலேயே அவனது செயலை நம்பமுடியவில்லை.

லட்சுமணன் தன்னம்பிக்கையோடு தன்னால் முடியுமென்று நினைத்து இந்த காரியத்தை செய்தான்.

நாமும் ஒரு செயலில்  ஈடுபடுமுன் அச்செயலை நம்மால் செய்து முடிக்கமுடியும் என்ற நம்பிக்கையோடு செய்தால் வெற்றி நிச்சயம்.

Saturday, April 1, 2023

22. வருமுன் காத்துக்கொள்ளுதல்

22- வருமுன் காத்து கொள்




ஒரு சிறிய குளத்தில்  மூன்று மீன்கள் நண்பர்களாக வாழ்ந்துவந்தன.

 முதல்  மீன் துன்பம் வருமுன் தப்பித்துக்கொள்ள விரும்பும்.

இரண்டாவது மீன் துன்பம் வரும்போது அதிலிருந்து தப்பித்துக்கொள்ள வழி தேடும்.

மூன்றாவது மீன் தனக்கு துன்பம்வந்தால் அதை ஏற்றுக்கொள்ளும்.

ஒரு நாள்  மீனவர்கள்  இருவர் குளக்கரைக்கு வந்தனர்.குளத்தில் தண்ணீர் குறைவாக இருப்பதால் நாளை வந்து மீன் பிடித்துக்கொண்டு செல்லலாம் என்று பேசிக்கொண்டனர்.

இதைக்கேட்ட முதல் மீன் தன் நண்பர்கள் இருவரிடமும்  எச்சரிக்கை செய்தது.அவர்கள் இருவரும் முதல் மீன் சொல்வதை கேட்கவில்லை.

அதனால் முதல் மீன் ஒரு வாய்க்காலின் வழியே வெளியேறி வேறு இடத்துக்கு சென்று விட்டது.

இரண்டாவது மீனும்,மூன்றாவது மீனும் குளத்திலே இருந்தன.

அடுத்த நாள் இரண்டு மீனவர்களும் வந்து மீன்களை பிடித்துக்கொண்டனர்.மீன் வலையில்  இரண்டாவது மீனும் ,மூன்றாவது மீனும் மாட்டிக்கொண்டன.

இரண்டாவது மீன் மீனவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக இறந்தவன் போல் நடித்தது. இறந்த மீன் நமக்கு எதற்கு என்று  மீனவர்கள் அதை  மீண்டும் குளத்தில் விட்டனர்.அது தப்பித்து சென்று விட்டது.

மூன்றாவது மீன் செய்வதறியாது வலைக்குள்ளே மாட்டிக்கொண்டது.

நமக்கு வரப்போகும் துயரை முன்னமே அறிந்து அதிலிருந்து விடுபடும் வழியை  முதலிலேயே மேற்கொள்ளவேண்டும்.