Monday, June 24, 2013

125. மூடரின் செயல் (நீதிக்கதை)



' மரம் நடு விழா ' ஒரு ஊரில் நடைபெறுவதாக இருந்தது.

இது சம்மந்தமாக அரசு மூன்று பேரை வேலைக்கு அமர்த்தியது.அவர்களது வேலை....

முதலாவது நபர் ... பத்தடி தூரத்துக்கு ஒன்றாக பள்ளம் தோண்ட வேண்டியது ஆகும்.
இரண்டாவது நபர்...அந்த பள்ளத்தில் ஒரு செடியை நட வேண்டும்.
மூன்றாவது நபர்...பள்ளத்தை மண் கொண்டு மூடவேண்டும்.

அவர்கள் இந்த வேலையை முதல் நாள் அந்த ஊரின் பத்து தெருக்களில் செய்து முடித்தனர்.
அடுத்த நாள் பத்து தெருக்கள் என ஏற்பாடு.

அடுத்த நாள்.. பள்ளம் தோண்டுபவர் தோண்டிக்கொண்டு சென்றார்.
செடியை நட வேண்டிய இரண்டாவது நபர் வேலைக்கு வரவில்லை.
அது பற்றிக் கவலைப்படாத மூன்றாவது நபர் தோண்டிய பள்ளத்தை மூடிக்கொண்டே வந்தார்.

இதைப் பார்த்த வழிப்போக்கர் ஒருவர் ...' ஏம்பா..நீ பள்ளம் தோண்டியதும் ...இவர் அதை மூடி விடுகிறாரே..என்ன விஷயம் ...' என்றார்.
அதற்கு முதல் நபர் ....' ஐயா..செடி நடு விழா எங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதில் என் வேலை பள்ளம் தோண்டுபவது...
செடி நடுவது இரண்டாம் நபர் வேலை....
இதோ நிற்கும் மூன்றாம் நபர் பள்ளத்தை மூடவேண்டும்.
செடி நடும் நபர் இன்று வரவில்லை.
அதனால் வேலை தடைபெறக்கூடாது என எங்கள் இருவர் வேலையை சரியாக செய்து விடுகிறோம்' என்றார்.

இந்த மூடர்களை என்ன செய்வது?

நம்மில் பலர் கூட ....என்ன வேலை செய்கிறோம் ...எதற்காக அதை செய்கிறோம் என்றெல்லாம் தெரியாமல் இயந்திரத்தனமாய் காரியங்களைச் செய்கிறோம்..
அதைவிடுத்து ...நாம் செய்யும் வேலையைப் பற்றி முழுவதும் அறிந்து செய்ய வேண்டும்.
இல்லையேல் இந்த மூடர்களின் கதிக்குத்தான் ஆளாவோம்.