Thursday, November 21, 2013

130.புத்திக் கூர்மை ....(நீதிக்கதை)



அந்தக் காட்டில் சிங்கம் ஒன்று இருந்தது. அதற்கான உணவை நரி ஒன்று தினமும் ஏற்பாடு செய்துவந்தது.

அந்தக் காட்டில் ...கிடைக்கும் வளமிக்க இலைகளையும்,புல்லையும் உண்டு நன்கு கொழுத்திருந்த ஆடு ஒன்று இருந்தது.
அதைப் பார்த்த நரி...அதை சிங்கத்துக்கு உணவாக ஆக்கினால்...சிங்கம் உண்டது போக தானும் மீதியை உண்ணலாம் என திட்டம் போட்டது.

உடனே சிங்கத்திடம் சென்று "  சிங்கராஜாவே ....இந்தக்காட்டில் இதுவரை நான் பார்த்திராத கொழு கொழு ஆடு ஒன்று உள்ளது.அதை காட்டுகிறேன்...அதை நீங்கள் இன்று உணவாக்கிக் கொள்ளலாம் " என்றது.

சிங்கமும், நரியுடன் புறப்பட்டது.

தூரத்திலிருந்து... நரி,சிங்கத்தை அழைத்து வருவதைப் பார்த்த ஆடு...விஷயத்தை ஊகித்துக் கொண்டது.
உடன், தனது புத்தி கூர்மையால் ...அந்த இடத்தில் இருந்த சில எலும்புகள் முன் அமர்ந்து,' சிங்கத்தின் ஊண் ருசியே அலாதி...இன்று ஒரு சிங்கத்தை,நரி கூட்டி வரேன் என்று சொல்லியதே இன்னும் காணவில்லையே" என நரியுடன் வரும் சிங்கத்தின் காதில் விழுமாறு கூறியது.

இதைக் கேட்ட சிங்கம்...'  அனைவரும் பயப்படும்  சிங்கமான தன் இனத்தை உண்ணும் ஆடு போல தெரிகிறது...நல்ல வேளை, இந்த நரியின் பேச்சைக் கேட்டு உயிரை விடாமல் இருந்தோம்' என்று எண்ணியபடியே நரியை அடித்து போட்டுவிட்டு அவ்விடத்தை விட்டு ஓடியது.

தன் புத்திக் கூர்மையால் ஆடு உயிர் பிழைத்தது. நாமும்....நமக்கு துன்பம் வரும்போது ....நமது மூளையை உபயோகித்து துன்பங்களிலிருந்து விடுபடவேண்டும்.