Friday, September 1, 2023

50.-உறுதி..முயற்சி..நம்பிக்கை

50 - உறுதி,முயற்சி,நம்பிக்கை 




சரவணன் ஒரு ஏழை விவசாயியின் மகன்.

ஒருநாள்,சரவணனின் மாமா அவனுக்கு ஒரு பேனா பரிசளித்தார்..பின் அவனிடம்  ‘நீ படித்து என்னவாகப்போகிறாய்  ?’என்று கேட்டார்.

அவன்  ‘கலைக்டர் ஆவேன்’ என்றான்.

அவன் மாமா அவன் பதிலைக் கேட்டு சிரித்துவிட்டு  ‘ நீ ஒரு ஏழை…உன்னால் எப்படி அவ்வளவு பெரிய பதவியை அடைய முடியும்’ என்றார். 

பள்ளிக்கு அழுதபடியே வந்தவனை பள்ளி தலைமை ஆசிரியர் பார்த்து,அவன் அழுவதின் காரணத்தைக் கேட்டார்.அவனும் தன் மாமா சொன்னதை சொல்லி ‘ஏன் சார் என்னால் கலைக்டர் ஆக முடியாதா?’ என்று கேட்டான்.

"கண்டிப்பாக முடியும்..நன்கு படித்து ..நேர்மையான வழியில்  உழைத்தால்..கலைக்டர் மட்டுமல்ல நீ எண்ணிய இலக்கை அடையலாம்.முதலில் நம்மால் முடியும் என்ற நம்பிக்கை வேண்டும்’ என்றார்.

அவர் கூறியதை மனதில் கொண்டு சரவணன் நன்கு படித்து எல்லா பரீட்சைகளிலும் நல்ல மதிப்பெண்கள் எடுத்து கலைக்டர் பதவிக்கு வந்தான்.

இன்று ..அவன் படித்த பள்ளியில் ஆண்டுவிழா நிகழ்ச்சி அவன் தலைமையில் நடக்க இருக்கிறது.

நிகழ்ச்சியில் பேசியவன்.."மாணவர்களே! நம்மால் முடியாதது என்று எதுவுமே இல்லை.முதலில் நாம் ஒரு இலக்கை நிர்ணயித்து கொண்டு..அதை அடைந்தே தீருவேன்..என்ற நம்பிக்கையுடன் செயல் பட்டால் வெற்றி நிச்சயம்" என்றான்.

நாமும் நம் விரும்பிய வாழ்வை அடைய வேண்டுமானால் அதற்கான உறுதி, முயற்சி,நம்பிக்கை ஆகியவற்றுடன் செயல் பட்டால் வெற்றி நிச்சயம்.

Wednesday, August 30, 2023

49.தேனீயும் ..கொடுக்கும்

49.தேனீயும் கொடுக்கும்



 ஒரு மரத்தில் தேன் கூடு ஒன்று இருந்தது.தேனீக்களின் தலைவியாகிய ராணித் தேனிக்கு கடவுளை சந்திக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்ததால்,அது கடவுளை நினைத்து தவம் செய்தது.

ராணித் தேனியின் முன் கடவள் தோன்றி..’உனக்கு என்ன வரம் 

வேண்டும்? "என்று கேட்டார்.

‘இறைவா… என்னிடமிருக்கும்  தேனை நாடி வருவோரைக்கொட்டி…அவர்கள் சகிக்க முடியாத வேதனையை அனுபவிக்குமாறு செய்து அருள வேண்டும்’ என்று ராணித் தேனி கேட்க…கடவுளுக்கு வருத்தம் ஏற்பட்டது.

‘தேனியே..பிறர்க்கு உதவ வேண்டும் என நீ கேட்டிருந்தால்  எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கும்.ஆனால் நீயோ பிற்ர்க்கு  தொல்லை தரவேண்டும் என வரம் கேட்கிறாய்.நீ கேட்ட வரத்தை கொடுக்கிறேன்,ஆனால் பிறரை துன்புறுத்தவேண்டும் என நினைக்கும் உனக்கு ஒரு பாடம் கற்பிக்க விரும்புகிறேன்..எனது வரம் மூலம் உனக்கு கொடுக்கு ஒன்று முளைக்கும்.அந்த கொடுக்கினால் மற்றவர்களை கொட்டி துன்புறுத்தலுக்கு உள்ளாக்கும்போது உன்  கொடுக்கின் நுனி உன்னால் கொட்டப்பட்டுள்ளவரின் உடலில் ஒட்டிக்கொள்ளும்.உடன் நீ இறந்து விடுவாய் "என்று கூறி மறைந்தார்.

அன்றுமுதல் தேனி  யாரையும் கொட்டவில்லை.ஏனெனில் கொட்டினால் அது  இறந்துவிடுமே.

வன்முறையால் அழிந்துவிடுவோம்  ஆகவே  வன்முறையில் ஈடுபடாமல் நாம் பிறர்கு நன்மை செய்யவேண்டும்…அப்படி நடந்தால் நமக்கும் நன்மை  வந்து சேரும்.

Sunday, July 16, 2023

48.தகுதி

48.தகுதி




ராமன்,வாசுகி தம்பதியருக்கு கந்தன் ஒரே பையன்.

பக்கத்திலுள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறான்.படிப்பிலும் கெட்டிக்காரன்.விளையாட்டிலும் ஆர்வம் அதிகம்.

ஆனால் அவனிடம் ஒரு கெட்ட பழக்கம் இருந்தது,அளவுக்கதிகமாக இனிப்பு சாப்பிடுவான்.வீட்டில் இனிப்பு ஏதும் இல்லாவிடில் சர்க்கரை டப்பாவை காலி செய்து விடுவான்.

கந்தனின் பெற்றோருக்கு கந்தனின் இந்த கெட்ட பழக்கம் மிகவும் கவலையை  உண்டு  பண்ணியது.பிற் காலத்தில் அவனது உடல் நலம் இதனால் கெட்டுவிடும் என்று அஞ்சினர்.

பக்கத்து வீட்டு நண்பர் ஒருவர் கந்தனின்  தந்தையிடம் "பக்கத்து ஊரில் ஒரு வைத்தியர் உள்ளார்..அவர் மருத்துவர் மட்டுமல்லாது மன ரீதியான ஆலோசனைகளையும் கூறுவார்.அவரிடம் கந்தனை கூட்டிச்செல்லுங்கள்" என்றார்.

 அவனது பெற்றோர் அவனை பக்கத்து ஊர் மருத்துவரிடம்  காண்பித்தனர்.ம்ருத்துவர் கந்தனின் கெட்ட பழக்கத்தை கேட்டுவிட்டு," ஒரு வாரம் கழித்து வாருங்கள். நான் இதற்கு ஒரு தீர்வு சொல்கிறேன்" என்றார்.

கந்தனின் பெற்றோருக்கு ஒரே ஆச்சிரியம்,ஏன் மருத்துவர் ஒரு வாரம் கழிச்சு வரச்சொன்னார் என்று.ஒன்றும் புரியவில்லை  அவர்களுக்கு.

அடுத்த வாரம் வந்தது.கந்தனின் பெற்றோர் அவனை மருத்துவரிடம் அழைத்து சென்றனர்.

அவரிடம் கந்தனின் தந்தை" எங்களை ஏன் ஒரு வாரம் கழிச்சு வரச்சொன்னீர்கள் "என்று கேட்டார்.

அதற்கு மருத்துவர்," ஒருவருக்கு அறிவுரை  கூறவேண்டுமென்றால் சொல்பவருக்கு ஒரு   தகுதி வேண்டும்..எனக்கு  அன்று அந்த தகுதியில்லை.ஏனென்றால்  நானும் நிறைய இனிப்பு சாப்பிடுவேன் உங்களது  குறையை கேட்டவுடன் நானும் ஒரு வாரமாக இனிப்பு சாப்பிடாமல்..அறிவுரை கூறுவதற்கான தகுதியினை உண்டாக்கி கொண்டேன். மேலும்இனிமேலும் இனிப்பை அதிகம் சாப்பிடமாட்டேன்.

கந்தன் நல்ல பையன்.நன்றாக படிக்கிறான்.நான்  சொல்வதைக்கேட்டு அவனும் கொஞ்சம் கொஞ்சமாக இனிப்பு சாப்பிடுவதை நிறுத்தி விடுவான்.நீங்கள் கவலைப்படாதீர்கள்.வீடு  போய் சேருங்கள்" என்றார்.

வீட்டுக்கு சென்றவுடன் கந்தனின் நடவடிக்கையில் ஒரு மாற்றம் தெரிந்தது.கொஞ்சம் கொஞ்சமாக அதிகம் இனிப்பு சாப்பிடுவதை  நிறுத்தினான்.

நாம் யாருக்காவது அறிவுரை சொல்ல நேரிட்டால் முதலில் அதற்கான தகுதியை நாம்  உண்டாக்கிகொள்ளவேண்டும்..


Friday, July 14, 2023

47.விழிப்புணர்வு

47- விழிப்புணர்வு 




குரு சிஷ்யர்களுக்கு பாடம்  நடத்திக்கொண்டிருந்தார்.

அப்பொழுது ஒரு சிஷ்யன் ஐயா, நாங்கள் எப்படி ‘விழிப்புணர்வு’ பெறுவது என்று கேட்டான்.

குரு உடனே நீங்கள் உங்களை"அறிவால்’ நிரப்பிக்கொள்ளுங்கள்' என்றார்.

சிஷ்யர்களுக்கு புரியவில்லை".சற்று விளக்கமாக கூறுங்கள்" என்றனர்.

குரு உடனே அவர்களிடம் ‘அறிவால் நிரப்பிக்கொள்வது  என்றால் ...பல நூறு ஓட்டைகளை கொண்ட சல்லடையில்   நீரை நிரப்புவதாகும்" என்றார்.

பின் சீடர்களிடம், " நீங்கள் போய் முயன்று பாருங்கள்" என்றார்.

சீடர்கள் வெளியே வந்து சல்லடையில் தண்ணீர் ஊற்ற அது முற்றிலும் ஓட்டைகள் வழியாக வெளியே வந்தன.

இன்னொரு சீடன் "ஐஸ் கட்டியை போடலாம்" என்று கூற அதையும் செய்து  பார்த்தனர்.அதுவும் சிறிது நேரத்தில் உருகிவிட்டது.

என்ன செய்வது என்று புரியாமல் குருவிடம் வந்து தங்களது இயலாமையக் கூறினர்.

குரு உடனே சீடர்களே "சல்லடையை எடுத்துக்கொண்டு என்னோடு வாருங்கள்" என்றார்.

சீடர்களும் அவர் பின்னால் சென்றனர்.

குரு சீடர்கள் குளிக்கும் பெரிய நீர் தொட்டியில் சல்லடையை போட்டார். சல்லடை நீருக்குள் மூழ்கியது.சீடர்களிடம் "இப்பொழுது சல்லடையில் நீர் நிரம்பியுள்ளது பார்த்தீர்களா"என்றார்.

"அதுபோல விழிப்புணர்வு பெறுவது எப்படி என்று கேட்டீர்களே அதை பெற அறிவு என்னும் கடலுக்குள் உங்களை தூக்கிப்போடுங்கள்.அறிவு உங்களை விட்டு விலகாது எ"ன்றார் குரு.

சீடர்களுக்கு தெளிவு பிறந்தது.

46.உருவ கேலி கூடாது

 

46- உருவ கேலி கூடாது




ஒரு மிருக காட்சி சாலையில் ஒட்டகம்,யானை ,மான் மூன்றும் நண்பர்களாக இருந்தனர்.

ஆனால் ஒட்டகம் மட்டும் எப்போதும் மானைப்பார்த்து ‘ உனக்கு நீண்ட காதுகளும்,பெரிய கொம்புகளும் சிறிய வயிறும் இருக்கு’. பார்க்க நன்றாக இல்லை' என்று கேலி செய்யும்.

யானையை பார்த்து ‘நீ பருமனானவன்.உன் தோல் மிகவும் தடிப்பானது.கால்களும் தூண்கள் போன்றவை.முறம் போன்ற காதுகள்,நீண்ட தும்பிக்கை,சம்பந்தமில்லாமல் தந்தம் வேறு’ என்று கேலி செய்யும்.

யானையும் மானும் ஒன்றும் சொல்லாமல் நம்மை இறைவன் இப்படி படைத்துவிட்டான் என்ன செய்வது.காரணமில்லாமல் இறைவன் எதையும் செய்யமாட்டான் என்று தன்னைத்தானே தேற்றிக்கொள்ளும்

ஒரு நாள் மிருக காட்சி சாலைக்கு ஒரு ஆளுயுர முகம் பார்க்கும் கண்ணாடியை அந்த நிறுவத்தினர் கொண்டு வைத்தனர்.அதைப்பார்க்க எல்லா மிருகங்களும் ஆவலோடு  ஓடி வந்தன.

ஒட்டகமும் வந்தது.தன் உருவத்தை பார்த்தது.

‘நீண்ட கால்கள்,முதுகின் பின்புறம் உள்ள திமில்பெரிய மற்றும் தட்டையான பாதங்கள், நீண்ட கண் இமைகள்,மெல்லியபிளவுபட்ட நாசித்துவாரங்கள்,மிக நீண்ட வயிறு’ இவ்வளவும் கொண்ட விகாரமான உருவம் யார் ?"என்று  யானையிடமும் மானிடமும் கேட்டது.

அவர்கள் இருவரும் "நீ தான் இத்தகைய அம்சங்களைக்கொண்டவன்." என்றன

"நீ எப்பொழுதும் எங்கள் உருவத்தை கேலி செய்து கொண்டிருக்கிறாய்.உன் உருவத்தை பற்றி உனக்கு தெரியவில்லை.ஆண்டவ்னின் படைப்பில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.அவை எல்லாம் நன்மைக்குத்தான்.நீ பாலைவனங்களில் அதிகமாக் காணப்படுவ்தால் இந்த மாதிரி உருவம் இறைவன் உனக்கு கொடுத்திருக்கிறார்.அதை புரிந்துகொண்டு நீ இனிமேல் யாரையும் ஏளனமாக உருவக்கேலி செய்யாதே!" என்றன.

ஒட்டகமும் தன் தவறை உண்ர்ந்து அன்று முதல்அவர்களுடன் நண்பனாக இருந்தது.

..

Friday, July 7, 2023

45. திட்டமிடுதல்

 
  45 - திட்டமிடுதல்


முருகனின் தந்தை ஒரு விவசாயி. அவரிடம் சிறு விவசாய நிலம் ஒன்று இருந்தது.அதில் நான் கு தென்னை மரங்களும் உண்டு.

முருகனின் தகப்பனார் இதில் வரும் சொற்ப வருமானத்தைக்கொண்டு முருகனை பக்கத்திலுள்ள அரசு பள்ளியில் படிக்க வைத்தார். அவன் எட்டாவது படித்துக்கொண்டிருந்தான்.முருகன் படிப்பிலும் நல்ல புத்திசாலி.அவனுக்கு விவசாயத்திலும் ஈடுபாடு அதிகம்.

விடுமுறை நாட்களில் தந்தையுடன் விவசாய நிலத்தை அவன் பார்வையிடுவது வழக்கம்.

ஒரு நாள் அப்படி  செல்லும்போது பக்கத்து நிலத்தில் அந்த விவசாயிக்கு மூன்று கருவேலமரங்கள் உள்ளன.அதை வெட்டுவதற்கு  அவர் மூன்று பேரை அழைத்து ' நீங்கள் மூன்று மணிநேரத்தில் யார் வேகமாக மரத்தை  வெட்டுகிறார்களோ அவர்களுக்கு சன்மானம் அதிகம்'என்று கூறினார்.

அதில் இரண்டு பேர் கோடாரியை வாங்கியவுடன் மரத்தை வெட்ட ஆரம்பித்தனர்.மூன்றாமவர் இரண்டு மணிநேரம் கோடாரியை கூர்மையாக்கிவிட்டு மரத்தை வெட்ட களத்தில் குதித்தார்.அவரே சவாலில் ஜெயித்தார்.

இதை பார்த்துக்கொண்டிருந்த முருகனிடம் அவனது தந்தை "அந்த மூன்றாம் நபர் எப்படி வெற்றி பெற்றார் என்பதை கவனித்தாயா? அவரது வெற்றியில் ஒரு திட்டமிடுதல் இருந்தது.எந்த காரியத்தை செய்வதிலும் ஒரு திட்டமிடுதலும்,புத்திசாலித்தனமும் அவசியம்.ஓட்ட பந்தயத்தில் ஓடுபவர்கள் கூட முதலில் மெதுவாக ஆரம்பித்து போகப்போக வேகத்தை கூட்டுவார்கள்.அதுபோல் நீயும் எந்த பாடத்தை ஆரம்பிக்கும் முன் ஒரு திட்டமிடுதல் வேண்டும்.அதுவே உனக்கு வெற்றி க்கு வழி தரும்.உன்  புத்திசாலிதனத்தால் நீ அடைய வேண்டியதை அடையலாம்" என்றார்.

Thursday, June 15, 2023

44.பிறர் மனம் புண்படவேண்டாம்



44- பிறர் மனம் புண்பட பேசக்கூடாது 




ஒரு குளத்தில் ஒரு தங்க நிற மீனும் ஒரு கெளத்தி மீனும் வசித்து வந்தன. தங்க நிற  மீன் தங்கம் போல் பள பள வென்று இருக்கும். கெளத்தி மீன் கருப்பாக இருக்கும்.

அந்த குளத்தருகில் ஒரு மரத்தில் ஒரு காகம் இருந்தது.அது அவ்வப்பொழுது இந்த மீன்களுடன் பேசிக்கொண்டு பொழுதைக் கழிக்கும்.

தங்க நிற மீனுக்கு தான் பள பளவென்று இருப்பது பெருமை.அதனால் அது கெளத்தி மீனையும் காகத்தையும் எப்பொழுதும் ‘நீங்கள் இருவரும் கருப்பாக இருக்கிறீர்கள்’என்று கேலி செய்து கொண்டிருக்கும்

கெளத்தி மீன் இதைக்கேட்டு ஒன்றும் சொல்லாமல் இறைவன்  தன்னை இப்படி படைத்திருக்கிறான் என்ன செய்வது என்று அமைதியாக இருந்து விடும்.

ஆனால் காகம் வந்த சண்டையை விடாது.தங்க மீனிடம் நீ தங்க நிறமாக இருப்பது  உனக்கு ஆபத்து..அந்த நிறம் தான் உனக்கு பெரிய கெடுதலை கொடுக்கும் பார் என்று கூறும்.

ஒரு நாள் இரண்டு மீன்களும் குளத்தில் விளையாடிக்கொண்டிருந்தன.மரத்தின் மேலே காகம் உட்கார்ந்துகொண்டு இரண்டு மீன்களும் விளையாடுவதை  பார்த்துக்கொண்டிருந்தது.

அப்பொழுது ஒரு கொக்கு ஒன்று வந்து தங்க மீனிடம் 'தூரத்தில் நான் வந்து கொண்டிருந்தபோது உனது தங்க நிறம் என் கண்களை பறித்தது.அதனால் நீ தான் எனக்கு இன்றைய உணவு என்று கூறி அதனை கவ்வியது.தங்க மீன் அலற மேலே பார்த்துக்கொண்டிருந்த காகம் கொக்கின் தலையை கொத்த வலி தாங்காமல் கொக்கு தங்க மீனை விட்டுவிட்டு ஓடிவிட்டது.

பின்னர் காகம் கீழே வந்து தங்க மீனிடம் "நீ எப்பொழுதும் என்னையும் கெளத்தி மீனையும் கேவலமாக மனது புண்படும்படி பேசுவாய்.அதனால் தான் நீ இன்று ஆபத்தில் மாட்டிக் கொண்டுவிட்டாய்.இனிமேல் இப்படி மற்றவர்கள் மனது புண்படும்படி நடக்காதே" என்று அறிவுரை கூறியது.தங்க மீனும் தன் தவறை உணர்ந்தது.

நாமும் பிறர் மனம் புண்படும்படி நடந்துகொள்ளக்கூடாது.