Friday, March 31, 2023

21. கழுதையின் புத்திசாலித்தனம்

21- கழுதையின் புத்திசாலித்தனம்




 ஒரு காட்டில் கழு தை ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது.அந்த கழுதையை ஒரு ஓநாய் கவனித்து கொண்டிருந்தது.கழுதை எப்பொழுதும் தனியாகவே காட்டில் போய்கொண்டிருக்கும்.

அதை பயன்படுத்தி ஓநாய் அதை அடித்து தின்னும் நோக்கத்துடன் அதன் மீது பாய்ந்தது.

தனக்கு வந்த ஆபத்தை உணர்ந்த கழுதை மனதுக்குள் ‘ இந்த ஓநாயை எதிர்த்து சண்டை போடுவது கஷ்டம்.ஆகையால் ஏதாவது தந்திரம் பண்ணித்தான் இதனிடமிருந்து தப்பிக்கவேண்டும்’ என தீர்மானித்தது.

கழுதை,ஓநாயின் பாய்ச்சலின்போது சற்று விலகிக்கொண்டு ‘ஓநாயாரே உம்முடைய வலிமையின் முன் நான் எம்மாத்திரம். நான் இன்று உனக்கு பலியாவது உறுதி.அதற்கு முன்னால் நான் சொல்ல வந்த  விஷயத்தை நீங்கள் கேட்கவேண்டும்’ என்று கேட்டுக்கொண்டது.

‘நீ என்ன சொல்ல விரும்புகிறாய், சொல்'  என்றது ஓநாய். .

‘என் காலில் பெரிய முள் ஒன்று குத்திவிட்டது.முள்ளை எடுக்க நான் எவ்வளவு  முயன்றும் முடியவில்லை. நீங்கள் என்னை அடித்து சாப்பிட்டால் அந்த முள் உங்கள் தொண்டையில் குத்தி உங்கள் உயிரை வாங்கிவிடும்.ஆகவே  முதலில் என் காலில் தைத்த முள்ளை எடுத்துவிட்டு பிறகு நீர் என்னை அடித்து தின்னலாம்’ என்றது.

ஓநாயும் அதற்கு ஒப்புக்கொண்டது.கழுதை தன் பின்னங்கால்களை திருப்பி காண்பித்தது முள் இருக்கிறதா என ஓநாய் தேடும் வேளையில், அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி கொண்ட கழுதை பின்னங்கால்களால் ஓநாயை பலமாக உதைத்தது.கழுதையின் உதையை தாங்கமுடியாமல் ஓநாய் கீழே விழுந்தது.கழுதையும்  தப்பித்தது.

No comments: