Saturday, January 23, 2016

152. ஸ்ரீ ராமகிருஷ்ணர் அருளிய கதைகள்





1. கடவுளே சொந்தம்

      ஒரு குரு ...தனது சீடனுக்கு, ஆன்மீக வாழ்க்கையின் பெருமையையும்,உலக மக்களின் போக்கையும் பற்றிக் கூறினார்.நீண்ட நேர உரையாடலுக்குப் பிறகு....'கடவுள் ஒருவரே அனைவருக்கும் சொந்தமானவர்' என்றார்.

      குருவோ சன்னியாசி...சீடனுக்கோ மனைவி,மகன்,மகள் எல்லாம் உண்டு.அதனால் அவன் குருவின் வார்த்தைகளை நம்பவில்லை.தான்,தன் மனைவி,மக்களுக்கு உழைப்பதைப் பார்த்து....தன் குடும்பத்தில் உள்ளவர்கள்,தனக்கு உதவாமலா போய்விடுவார்கள் என்ற சிந்தனையில் குரு சொன்னவற்றை அவன் மறுத்தான்..
 
      சீடன், குருவிடம்,' என் தாய். என்  மனைவி., என் மக்கள்,என் உறவினர்கள் எல்லோரும் என் மீது அளவற்ற பாசம் வைத்துள்ளார்கள். நான் இல்லாவிடில் அவர்கள் உலகே இருண்டுவிடும் என்று எண்ணுவார்கள்.எனக்குதலைவலி வந்தாலும் பொறுக்க மாட்டர்கள். அப்படியிருக்கையில் என்னை அவர்கள் ஒதுக்கியா விடுவார்கள்' என்றான்,

      உடன் குரு,' நாம் யாரையும் நம்பி விடக்கூடாது.எல்லோருடைய அன்பும் பொய்யானது.யாரும் யாருக்காகவும் வாழவில்லை.வேண்டுமானால் இதை சோதித்துப் பார்க்கலாம்.உனக்கு சில மாத்திரைகளை தருகிறேன்.நீ  வீட்டிற்கு போய்,அதனை சாப்பிட்டுவிட்டு படுத்துக் கொள்.நீ இறந்து விட்டதாக அவர்கள் எண்ணுவர்.அதே சமயம் அவர்கள் என்னன்ன செய்கிறார்கள் என்பதையும் நீ அறிந்து கொள்வாய்.அப்போது நான் அங்கு வருகிறேன்' என்று கூறிவிட்டு, சீடனிடம் சில மாத்திரைகளை கொடுத்தார்

      சீடனும்,வீட்டிற்கு சென்று,மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டு. இறந்தவன் போல் படுத்துக் கிடந்தான்.அவனைச் சார்ந்த உறவினர்கள், அவன் இறந்து விட்டதாக எண்ணி அழ ஆரம்பித்துவிட்டனர். அப்போது அங்கே வந்த குரு.... அவர்களிடம் ' என்னால் இவனை பிழைக்கவைக்க முடியும் .அரிய மருந்து ஒன்று உள்ளது.அதை இவனுக்கு கொடுக்கின்றேன்...இவன் பிழைத்துக்கொள்வான். ஆனால் இந்த மருந்தை உங்களில் ஒருவர் முதலில் சாப்பிடவேண்டும் அப்படி சாப்பிடுபவர்கள் இறந்து விடுவார்கள்.பின்னர் அந்த மருந்தை இவனுக்குக் கொடுத்தால் இவன் பிழைத்துக் கொள்வான்' என்றார்.

     மருந்த பெற்றுக்கொண்டவர்கள்...அதை வாங்கிப் பார்த்துவிட்டு, அதனை உண்ண விருப்பமின்றி அவரிடம் திருப்பி கொடுத்துவிட்டனர்.

     யாரும் அவனுக்காக உயிரை விட விரும்பவில்லை.

     எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த சீடன்,  எழுந்து குரு சொன்னது ' சரி' என ஒப்புகொண்டான்.

Saturday, June 6, 2015

150- மூட நம்பிக்கை

                       

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர் டாக்டர் அம்பேத்கர்.

அவர் ஒருநாள் தனது நண்பர் ஒருவருடன் வீதியில் சென்று கொண்டிருந்தார்.அப்போது ஒருவன் கரடி ஒன்றை வைத்துக் கொண்டு, அதன் முடி ஒன்றினை வாங்கி வீட்டில் வைத்து கொண்டிருந்தால் பணக்காரராகிவிடலாம் என்று கரடியின் முடியை விற்று கொண்டிருந்தான்.

கரடியின் முடியை வாங்கக் கூட்டம் அலை மோதியது.அம்பேத்கரின் நண்பரும் முடியை வாங்கச்  சென்றார்.அவரை தடுத்து நிறுத்திய அம்பேத்கர், "நீ அந்த முடியை வாங்கினால் என்ன ஆவாய்?" என்றார்.

நண்பர், "நானும் பணக்காரனாக ஆவேன்" என்றார்.

உடன் அம்பேத்கர், :நீ கரடியின் ஒரு முடியை வாங்கினால் பணக்காரன் ஆவாய். சரி, நான் ஒப்புக் கொள்கிறேன்.ஆனால் அந்த வியாபாரி அந்தக் கரடியையே வைத்திருக்கின்றானே...அவன் ஏன் பணக்காரன் ஆகாமல் இப்படித் தெருவில் அதன் முடியை விற்று பிழைத்துக் கொண்டிருக்கின்றான்?" என்றார்.

அப்போதுதான் நண்பரும் தான் அப்படி நினைத்தது மூடநம்பிக்கை என்பதை உணர்ந்தார்.

நாமும் , ஒருவர் சொல்வதைக் கெட்டு, அதைப் பற்றி சிந்திக்காமல் மூட நம்பிக்கையுடன் செயல் படக் கூடாது.நம் அறிவைப் பயன்படுத்தி அதற்கேற்ப நடக்க வேண்டும்.

இதைத்தான் வள்ளுவரும்,

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

என்றார்.

(எந்தவொரு பொருள் குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடமை ஆகும்.)

Friday, June 5, 2015

149-ஓட்டைப்பானையின் சாதனை

                         

சரவணன் தோட்ட வேலை செய்பவன்.

ஒரு நீளமான கம்பின் இரு முனைகளிலும் பெரிய பானைகளைக் கட்டித் தொங்க விட்டு, அதில் தொலை தூரத்திலிருந்து தண்ணீர் சுமந்து வந்து தன் செடிகளுக்கு ஊற்றி வந்தான்.

அந்த கம்பின் இரு முனைகளில், ஒரு முனையில் இருந்த பானையின் அடியில் ஒரு  ஓட்டை இருந்தது.அதனால் சரவணன் தூக்கி வருன் நீரில் பாதி வழியிலேயே சிந்தி வந்தது,.

இதனால், அந்த ஓட்டைப் பானையைப் பார்த்து அடுத்த முனையில் இருந்த நல்ல பானை கேலி செய்து வந்தது.

ஒருநாள், சரவணனிடம் அவனது நண்பர் ஒருவர் "ஓட்டைப் பானையை மாற்று" என்றார்.

அதற்கு சரவணன், "ஐயா...நானும் அது பற்றி சிந்தித்தேன்.ஆனால் நான் தண்ணீர் கொண்டு வரும் வழியில் அழகிய பூச்செடிகள் உள்ளன.பானையில் இருந்து சிந்தும் நீர் அப்பூச்செடிகளில்தான் விழுகிறது. அதனால் அச்செடிகள் வளமாக வளர்ந்து, அழகாக பூத்திருக்கின்றன.இந்த ஓட்டைப் பானைத்தான் அதை சாதித்திருக்கிறது" என்றான்.

இது கேட்டு...ஓட்டைப் பானை செய்து வந்த நற்செயலை எண்ணி நல்லப் பானை அதைக் கேலி செய்வதை நிறுத்தியது.

நாமும், ஒருவரது அருமை, பெருமைகள் தெரியாது யாரையும் எடை போடக்கூடாது.

Thursday, June 4, 2015

148- நம்பிக்கை

                     

கந்தனுக்கு முழு ஆண்டுத் தேர்வு நெருங்க நெருங்க பயம் அதிகரித்தது.

"அம்மா! நான் நன்கு படித்திருந்தாலும்...பரீட்சை எழுத பயமாய் இருக்கிறது" என்றான்.

அதற்கு அம்மா, "பயப்படாதே! நீ நன்றாகவே தேர்வு எழுதுவாய்.வேண்டுமானால் என் கையிலுள்ள இந்த நாணயத்தினால் டாஸ் போடலாம்.தலை விழுந்தால், நீ நல்ல மதிப்பெண்களைப் பெறுவாய்" என்று சொல்லியபடியே, தன் கையிலிருந்த நாணயத்தை சுண்டி டாஸ் போட்டார்.

தலையே விழுந்தது.

அதைக் கண்ட கந்தன் மகிழ்ந்து, முழு தைரியத்துடன் தேர்வுகளை எழுதினான்.

ரிசல்ட் வந்தது..எல்லா பாடங்களிலும் 95 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருந்தான் அவன்."அம்மா! அன்று டாஸில் தலை விழுந்ததால்தான் நான் வெற்றி பெற்றேன்" என்றான்.

அதற்கு அம்மா,  அந்த நாணயத்தை அவனிடம் காட்டினார். நாணயத்தின் இரு பக்கமுமே தலை இருந்த அதிசய நாணயம் அது."கந்தா ! நீ வென்றது டாஸால் அல்ல.தலை விழுந்த நம்பிக்கையால்.வாழ்வில் வெற்றி பெற கடின உழைப்புடன் நம்பிக்கை வேண்டும்." என்றார்.

கந்தனும் நம்பிக்கையின் அவசியத்தைப் புரிந்து கொண்டான்.

நீங்களும் அப்படித்தானே!

Tuesday, June 2, 2015

147 - குற்றம் பார்க்கின்....

                               

ஒரு காட்டில் பெரிய மரம் ஒன்று நன்கு தழைத்து வளர்ந்து, கனிகளுடன் காணப்பட்டது.அம்மரத்தில், பல பறவைகள் கூடு கட்டி, தனது குஞ்சுகளுடன் சந்தோசமாக அக்கனிகளை உண்டு வாழ்ந்து கொண்டிருந்தன.

அதே காட்டில், வஞ்சக நரி ஒன்று இருந்தது.அது எப்போதும் பிறர் மீது குற்றம் சொல்லியே வாழ்ந்து வந்தது.

ஒரு சமயம், மழையே இல்லாததால், தண்ணீர் இல்லாது அக்காட்டில் விலங்குகளும், பறவைகளும் தவித்தன.அந்த மரமும் தனது இலைகளையெல்லாம் இழந்து..எலும்புக் கூடாய் வாடிக்காணப்பட்டது.
அதனால், அம்மரத்தில் வசித்து வந்த பறவைகள் வேறு இடம் தேடிச் சென்றன...

இதுதான் சமயமென்று, நரி மரத்திடம் வந்து, "பார்த்தாயா?  நீ வளமாய் இருந்த போது உன்னையே சுற்றி வந்த பறவைகள், நீ வாடியதும் உன்னை விட்டுச் சென்று விட்டன.அவை திரும்பி வந்தால் அடைக்கலம் கொடுக்காதே" என்றது.

ஆனால், அந்த மரமோ, நரியைப் போல குறுகிய நோக்கம் கொண்டது அல்ல..அது நரியிடம், " நரியாரே! எல்லாவற்றிலும் குறை காணக்கூடாது.மழை இல்லாவிடினும், எனது ஆழமான வேர்கள் எனக்கு வேண்டிய தண்ணீர் மற்றும் ஊட்டச் சத்துகளை பூமியிலிருந்து பெற்றுத் தந்து விடும்.அதுபோன்ற வசதி, அந்தப் பறவைகளுக்குக் கிடையாது.ஆகவே..அவை உயிர் வாழ வேண்டுமாயின் வேறு இடம் தேடித்தான் செல்ல வேண்டும்" என்றது.

மரத்தின் குணத்தைப் பாருங்கள்.

நாமும் அந்த நரியைப் போல இல்லாமல், நமது சுற்றத்தினர், நட்பு ஆகியோரிடம் தேவையின்றி குறைகளைக் கூறி வெறுக்கக்கூடாது, குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பதை உணர வேண்டும்.

Saturday, May 30, 2015

146- ஒற்றுமையின் பயன்

                               

வியாபாரி ஒருவன், பொருட்கள் வாங்க மலைப்பாதையில் நடந்து கொண்டிருந்தான்.அந்தப் பாதையின் நடுவில் ஒரு பெரிய பாறை ஒன்று வழியை அடைத்துக் கொண்டிருந்தது.மேலே நடக்கவும் வழி இல்லை.

அந்தப் பாறையை நகர்த்தி வழி உண்டாக்க முயன்றான்.ஆனால், அந்தப் பாறை சிறிதளவு கூட நகரவில்லை.

"அடடா! இரவு வந்து விட்டால்...கொடிய விலங்குகள் இங்கு வரலாமே! என்ன செய்வது?" என தனது விதியை நொந்தபடியே, சுற்றி நோட்டம் இட்டான்.

அப்போதுதான்...அவனைப்போல பலர் அந்தப் பாறையை அசைக்க முடியாமல் அங்கு அமர்ந்துள்ளதைக் கண்டான்.அனைவரின் முகத்திலும் சோகம்.

அப்போது அறிவாளி ஒருவன் அவ்விடம் வந்தான்.அவனாலும், பாறையை அகற்றி வழி உண்டாக்க இயலவில்லை.உடனே அவனுக்கு " தனிப்பட்ட ஒருவனால் பாறையை நகர்த்த முடியவில்லை.அதுவே, அனைவரும் ஒன்று கூடி   முயன்றால் பாறையை அகற்றலாம்" என்று யோசனை வந்தது.

அவன் அதை அனைவரிடமும் சொல்ல, அனைவரும் முயன்றனர்.இப்போது பாறை அசைந்து கொடுத்ததுடன், நகர்ந்து மலைச் சரிவில் உருண்டது.

பாதை தெரிந்தது.

அனைவரும் ஒன்றுபட்டு முயன்றதால்....வழி கிடைத்த மகிழ்ச்சியில், அவரவர் பயணத்தைத் தொடர்ந்தனர்.

Friday, May 29, 2015

145 - படிப்பின் அவசியம்

                     

ஒரு ஊரில் படிப்பறிவு இல்லாத, சிந்திக்கும் திறனற்ற மூடன் ஒருவன் வசித்து வந்தான்.

அவனிடம் ஒரு பசு மாடு இருந்தது.அது, அவன் தினமும் போடும் தவிட்டைத் தின்று..பால் தந்தது. அந்தப் பாலை விற்று மூடன் தன் வாழ்நாளை கழித்து வந்தான்.

ஒருநாள், பசுவிற்குப் போட தவிட்டுப் பானையைத் தூக்கி வரும் போது, அப்பானைத் தவறிக் கீழே விழுந்து, உடைந்தது.அதில் இருந்த தவிடு அனைத்தும் சாக்கடையில் விழுந்து கரைந்தது.

இதைக்கண்ட மூடன்..மனம் வருத்தப்பட்டு, இறைவனிடம் வேண்டினான்.

இறைவன் அவன் முன் தோன்றி, "உனக்கு என்ன வேண்டுமோ கேள்.அதைத் தருகிறேன்' என்றார்.

சிந்திக்கும் திறனற்ற, மூடனான அவன் இறைவனிடம், "இறைவா...என் தவிட்டுப் பானை உடைந்து விட்டது.அதனால் தவிடு மொத்தமும் சாக்கடையில் கரைந்தது.ஆகவே எனக்கு உடனடியாக ஒரு பானையும், தவிடும் வேண்டும்" என்றான்.

அவனது முட்டாள் தனத்தைக் கண்டு சிரித்த இறைவன், பானையையும் தவிடையும் அளித்துவிட்டுச் சென்றார்.

அவன், படிக்காத மூளையற்ற மூடனாய் இருந்ததால், அவனுக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை இழந்தான்.

இதனால் நாம் அறியும் நீதி, ஒவ்வொருவருக்கும் படிப்பு எவ்வளவு முக்கியம் எனத் தெரிந்து கொள்ளும் அதே நேரம்...நம் மூளையை உபயோகித்து சிந்திக்கும் திறனையும்  வளர்த்து கொள்ள வேண்டும்