Showing posts with label . நீதிக்கதைகள். Show all posts
Showing posts with label . நீதிக்கதைகள். Show all posts

Friday, March 23, 2018

18 - தெரியாத வேலையில் தலையிடாதே




ஒரு விறகு வெட்டி இருந்தான். காட்டுப் பகுதிக்கு ஒட்டி இருந்தது அவன் குடிசை.
மரங்களை வெட்டிவருவது, கோடரியால் பிளப்பது, சிறு துண்டுகளாக்கி பக்கத்துக்கு கிராமங்களுக்கு கொண்டு விற்பது. அதை கொண்டு குடும்பம் நடத்துவது, அவனது அன்றாட வேலை.
அன்று அப்படிதான் ஒரு பெரிய அடிமரத்துண்டை கோடரியால் பிளக்க ஆரம்பித்தான்.
கலப்பு வந்தது. அடிமரத்தை பாதியளவு பிளந்திருந்ததால் அப்பிளவுக்கு இடையில் ஆப்பு போல் ஒரு மரச்சக்கையை வைத்துவிட்டு ஓய்வெடுக்கச் சென்றான்.
பக்கத்திலேயே ஒரு பெரிய மரம் இருந்தது. அம்மரத்தின் ஒரு கிளையில் இருந்த அக்குரங்கு ஒன்று மரம் வேட்டியின் செயலைப் பார்த்துக் கொண்டிருந்தது.
மரம் வெட்டி அப்பால் நகர்ந்ததும் அக்குரங்கு உடனே இறங்கி வந்தது.
அம்மரத்துண்டின் பிளவுபட்ட பகுதியில் வால் முழுவதும் விட்ட நிலையில் படிய அதன்மேல் அமர்ந்து கொண்டது.
அது குரங்கு அல்லவா! அதற்கே உரிய குரங்கு வேலையைச் செய்ய ஆரம்பித்தது; ஆப்பாக சொருகி இருந்த மரத்துண்டை ஆட்டி ஆட்டி எடுக்க ஆரம்பித்தது/
ஒரு ஆட்டு, இரண்டு ஆட்டு, மூன்று ஆட்டு….. சில ஆட்டுகள்!
படுக்கென்று அந்த ஆப்புதுண்டு வந்துவிட்டது. சடக்கென்று பிளவுபட்டப் பகுதியின் இடைவெளி குறைந்துவிட்டது.
அத்துடனா?
பிளவுக்குள் தொங்கி இருந்த வால் நசுங்க குறைந்து “வீல்…வீல்” என்று அலறியது.
ஓய்வாக உள்ளே இருந்த மரம்வெட்டி அலறல் கேட்டு அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தான்.
பாத்தால் குரங்கு பாவம் செத்துவிட்டது.
“இத்தனை நாள் இல்லாமல் எங்கிருந்து வந்துத் தொலைந்தது இன்று சாவதற்கென்றே” என்ற முணுமுணுப்புடன் குரங்கின் உடலை அப்புறப்படுத்தினான் அவன்.
குரங்கின் அசட்டுச் செயல் அதற்கே அழிவை தந்துவிட்டது

Monday, September 25, 2017

1 - நான் ஒரு முட்டாளுங்க - நீதிக்கதை


ஒரு பெரிய குரு இருந்தார். முற்றும் துறந்தவர். எல்லாம் கற்றவர். அவரை ஒரு பிரசங்கம் செய்யக் கூப்பிட்டிருந்தாங்க.
பத்தாயிரம் பேர் வருவாங்கனு சொல்லியிருந்தாங்க. அவரை அழைச்சிட்டு வர ஒரு குதிரைக் காரன் போயிருந்தான். அன்னிக்குன்னு பார்த்து ஊரில் பயங்கர மழை. கூட்டம் கேன்சலாகி எல்லோரும் கலைஞ்சு போயிட்டாங்க.
குரு வந்தபோது அங்கே யாருமே இல்லை. பேசறதுக்காக நிறையத் தயார் பண்ணிட்டு வந்த குருவுக்கோ ஏமாற்றம். இருக்கிற ஒரு குதிரைக்காரனுக்காக மட்டும் பிரசங்கம் பண்ணவும் மனசில்லை.
'என்னப்பா பண்ண லாம்?’னு கேட்டார்.
‘அய்யா! நான் குதிரைக் காரன்... எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க... நான் முப்பது குதிரை வளர்க்கிறேன். புல்லு வைக்கப் போறப்போ எல்லாக் குதிரையும் வெளியே போயி, அங்கே ஒரே ஒரு குதிரை மட்டும்தான் இருக்குதுனு வெச்சுக்கோங்க. நான் அந்த ஒரு குதிரைக்குத் தேவையான புல்லை வெச்சிட்டுத்தாங்க திரும்புவேன்’னான்.
பொளேர்னு அறைஞ்ச மாதிரி இருந்தது குருவுக்கு. அந்தக் குதிரைக்காரனுக்கு ஒரு ‘சபாஷ்’ போட்டுட்டு, அவனுக்கு மட்டும் தன் பிரசங்கத்தை ஆரம்பிச்சார். தத்துவம், மந்திரம், பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம்னு சரமாரியா போட்டுத் தாக்கி பிரமாதப் படுத்திட்டார் குரு. பிரசங்கம் முடிஞ்சுது. ‘எப்படிப்பா இருந்தது என் பேச்சு?’னு அவனைப் பார்த்து பெருமையா கேட்டார் குரு.
‘அய்யா... நான் குதிரைக்காரன். எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க... நான் புல்லு வைக்கப் போற இடத்தில் ஒரு குதிரைதான் இருந்துச்சுன்னா, நான் அதுக்கு மட்டும்தான் புல்லு வெப்பேன். முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டிட்டு வர மாட்டேன்!’னான். அவ்ளோதான்... குரு தெறிச்சிட்டார்!
நீதி...மத்தவங்களுக்கு என்ன தேவையோ, அல்லது எது சொன்னா புரியுமோ அதை மட்டும் சொல்லனும்...புரியாத, தேவையில்லாத விஷயங்களை மெனக்கெட்டு சொல்றது நம்மை தான் முட்டாளாக்கும் !!!

Thursday, October 20, 2016

158. வியாபாரிக்கு தண்டனை

ஒரு வியாபாரி நெய்யில் கலப்படம் செய்து விற்று வந்தான்.மக்கள் புகார் அளித்தனர். அவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிபதி முன்னர் நிறுத்தப்பட்டான்.

நீதிபதி வழங்கிய தண்டனை:

1.அவன் விற்கும் நெய் முழுவதும் அவனே குடிக்கவேண்டும்.
       அல்லது
2.100 கசையடி
       அல்லது
3. 100 பவுன் அபராதம்

இவற்றில் அவன் விருப்பமான தண்டனையை ஏற்கவும் என்றார் நீதிபதி.

முதலில் அவன் நெய் குடிக்கவே விரும்பினான்.ஆனால் நாற்றம் வீசும் நெய்யை அவனால் குடிக்க முடியவில்லை.

சரி என கசையடிக்கு தயார் என்றான். ஆனால் இருபது கசையடிக்கு மேல் அவனால் தாங்க முடியவில்லை.

அதனால் அபராதம் செலுத்திவிட்டு போவதாக கூறினான் நீதிபதியும் ஒப்புக்கொள்ள அபராதம் செலுத்திவிட்டு வெளியே வந்தான்.

முதலிலே அவன் தன் தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்டு அபராதத்துடன்  வெளியே வந்திருக்கலாம்.

நம்மில் பலரும் அப்படித்தான்.துன்பம் வரும்போது முதலிலே கடவுளை வேண்டி பயன்பெறாது....கடைசியில் இறைவனிடம் சரணடைகிறோம்.

ஆண்டவை என்றும் நம்புவோமாக.

Tuesday, June 14, 2016

157 -ஸ்ரீ ராமகிருஷ்ணர் அருளிய கதைகள்

6  மனதை ஒருமுகப்படுத்து.

பாண்டவர்களும் கௌரவர்களும் துரோணரிடம் வில்வித்தை கற்கத்தொடங்கினர்.

ஒரு நாள்....

அர்ச்சுனன் கையில் வில்லைக்கொடுத்து சற்றுத்தொலைவில் இருந்த பறவையை நோக்கி  அம்பு எய்தச்சொன்னார் துரோணர்.

' அர்ஜுனா...உன் கண்ணுக்கு என்ன தெரிகிறது பக்கத்திலுள்ள சகோதரர்கள் தெரிகிறார்களா?' என்றார்.

'இல்லை' என்றார் அர்ஜுனன்.

'நான் தெரிகிறேனா'

'இல்லை'

'மரத்தை பார்க்கிறாயா'

'இல்லை'

'மரத்தின் மீதுள்ள பறவையை பார்க்கிறாயா'

'இல்லை'

'வேறு என்ன பார்க்கிறாய்'

'பறவையின் கண்ணை மட்டும் பார்க்கிறேன்'

இப்படி செய்ததால் தான் பறவையின் மீது சரியாக அம்பெய்த முடிந்தது அர்ச்சுனனால்.

நாமும் நாம் அடைய எண்ணும் இலக்கை மட்டுமே பார்க்கவேண்டும்.மற்றவற்றை தவிர்த்திடவேண்டும். யார் தன் கண்ணையும் கருத்தையும் இலக்கில் வைக்கிறானோ அவனே வெற்றியடைவான்.

'


Thursday, June 2, 2016

156.ஸ்ரீ ராமகிருஷ்ணர் அருளிய கதைகள்

5. ' பற்றற்றான் பற்று '


நடுத்தர வயது கணவன், மனைவி  அவர்கள்.
உலக வாழ்க்கையை வெறுத்து துறவு பூண்டனர். இறைவனை தரிசிக்கும் நோக்கத்துடன் பல புண்ணியத்தலங்களுக்கு சென்று வந்தனர்,

ஒரு நாள்,அவர்கள் நடந்து செல்லும்போது,மனைவி சற்று பின்னாக வந்து கொண்டிருந்தாள். முன்னால் சென்றுகொண்டிருந்த கணவனின் கால்களில்எதுவோ இடறியது.குனிந்து பார்த்தவன்  அது ஒரு வைரக்கல் என்பதை உணர்ந்தான்.அதைக்கண்டால் தன் மனைவிக்கு உலகப்பற்று ஏற்பட்டுவிடும் என்று ஐயம் கொண்டான்.ஆகவே,மனைவி வருவதற்கு முன்,அந்த வைரக்கல்லை  அவளது பார்வை படாது மறைக்க முயன்றான்.

ஆனால் மனைவிக்கு கணவன் எதையோ மறைக்க முயன்றது புரிந்துவிட்டது. அவனது மூடிய கையை பிரித்தாள்.அதில் வைரம் இருந்ததையும்,கணவன் மறைக்க முயன்ற நோக்கத்தையும் அறிந்தாள்.

கணவனைப் பார்த்து, ' வைரத்துக்கும், கூழாங்கல்லுக்கும் வேறுபாடு காண்பவன் எப்படித் துறவியாய் இருக்க முடியும்? என்று கேட்டாள்.

கணவன் வெட்கி தலை குனிந்தான்.ஆசை அதிகம் உள்ளவர்களுக்கு எல்லாவற்றிலும் விருப்பம்.ஆனால் இறைவன் மீது பற்று வைத்தவர்களோ,இறைவனை மட்டுமே மனதில் தேக்கிக் கொள்கிறார்கள்.மற்றவற்றின் மீதிருந்த நாட்டத்தை விடுகிறார்கள்.

Friday, April 8, 2016

155. ஸ்ரீ ராமகிருஷ்ணர் அருளிய கதைகள்



4.' ஆண்டவன் மீது நம்பிக்கை "

ஆற்றுக்கு மறுகரையில் வசித்து வந்த சன்னியாசி ஒருவருக்கு தினந்தோறும் படகில் பால் கொண்டு வந்து தருவாள் ஒரு பெண்,

ஒரு சமயம் படகு வர தாமதமானதால் குறித்த நேரத்தில் பால் கொண்டு வந்து தர முடியவில்லை.

இதனால் கோபமடைந்த சன்னியாசி,தாமதத்திற்கான காரணத்தைக் கேட்க.அந்தப் பெண்ணும் படகு கிடைக்காததைக் கூறினாள்.

உடன் சன்னியாசி ' ஆண்டவன் பெயரைச் சொன்னால் பிறவிப் பெருங்கடலையே கடக்கலாம், உன்னால் இந்த ஆற்றைக்கூட கடக்க முடியவில்லையே' என்றார்.

சன்னியாசி சொன்னதைக்கேட்ட அந்தப் பெண்..... தினமும் ஆண்டவன் பெயரை உச்சரித்தபடியே ஆற்றினைக் கடந்து வந்து பால் எடுத்து சென்று கொண்டிருந்தாள்.

தினசரி சரியான நேரத்துக்கு அவள் வருவதைக் கண்ட சன்னியாசி ' நீ எப்படி ஆற்றைக் கடக்கிறாய் ' என்றார்,

பகவான் நாமத்தை உச்சரித்தப்படியே ஆற்றில் நடந்து வருவேன்  என்றாள்.

"அப்படியா" என ஆச்சரியத்துடன் கேட்டவர் அதை தனக்கு காண்பிக்குமாறு கூறினார்.

' பால்காரப்பெண் ஆண்டவன் பெயரை கூறியபடியே ஆற்றில் நடக்க ஆரம்பித்தாள்'.

வியந்த குருவால் ..அவளைப்போல ஆற்றில் நடக்க முடியவில்லை.தனது ஆடை நனைந்துவிடுமே என்ற பயம்.

ஆண்டவனை நம்புகிறவர் .... துணி நனையுமே என ஏன் பயப்படுகிறீர்கள் என்றாள் பெண்.

அப்பொழுதுதான் சன்னியாசிக்கு ஆண்டவன் மீது தான் முழு நம்பிக்கை வைக்கவில்லை எனத் தெரிந்தது.

ஆண்டவனிடம் நாம் வைக்கும் நம்பிக்கை நம்மை ஆச்சிரியங்களை செய்ய வைக்கும் என உணர்ந்தார்.

நாமும் கடவுளை வேண்டிக்கொண்டால் மட்டும் போதாது கடவுளிடம் முழு நம்பிக்கையை வைக்கவேண்டும்.

Sunday, March 20, 2016

154. ஸ்ரீ ராமகிருஷ்ணர் அருளிய கதைகள்



3. இராமபிரானும், தவளையும்

இராமபிரான் வனவாசத்தில் இருந்தபோது காட்டின் வழியாகப் போய்க் கொண்டிருந்தார்.ஒரு நாள் தன் வில்லையும் அம்பையும் தரையில் நட்டுவிட்டுப் பம்பை என்னும் குளத்தில் நீர் பருகுவதற்காக இறங்கினார்.

நீரை அருந்திவிட்டு..மீண்டும் கரையேறி வந்து தனது அம்பையும் வில்லையும் எடுக்கும் சமயத்தில் தமது வில் ஒரு தவளையைத் துளைத்திருப்பதைக் கண்டார். தவளையின் உடல் முழுவதும் ரத்தம். இதைக் கண்ட ராமர் மனம் வருந்தி ...தவளையிடம்,

" ஏ தவளையே! நான் வில்லை வைக்கும் சமயம் நீ சப்தம் செய்திருந்தால்..... உன்னை நான் காப்பாற்றியிருப்பேனே! உனக்கு இந்த கதி வந்திருக்காதே!" என்றார்.

அதற்கு தவளை ," பெருமானே " எனக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால்....உன்னை சரணடைவேன் ,,ஆனால் அந்த ஆபத்து உன்னாலேயே வந்தால் என்னால் என்ன செய்யமுடியும்? யாரிடம் முறையிடமுடியும்" என்றது..

இதனால் நாம் அறியும் நீதி என்ன வெனில் ..." நீதி வழங்குபவரே அநீதியை இழைத்தால்...நீதி கிடைக்க வேறு வழியில்லை...எனவே நீதிமான்கள் தவறு ஏதும் இழைக்கக்கூடாது என்பதாம்.

Thursday, February 18, 2016

153. ஸ்ரீ ராமகிருஷ்ணர் அருளிய கதைகள்



2 .ஒன்றே கடவுள்

ஒரு ஊரில்,துணிகளுக்கு சாயம் பூசும் ஒருவன் இருந்தான்.

அவனிடம் பாத்திரம் நிறைய வண்ணக்கலவை இருந்தது.அந்த ஊர் மக்கள் தங்கள் ஆடைக்கு எந்த நிறம் கேட்டு வருகின்றார்களோ,அந்த வண்ணப்பாத்திரத்தில்
தோய்த்தெடுத்து அவர்கள் கேட்கும் நிறத்தைக்கொ டுத்து அனுப்புவான்.

ஒரு முறை ஒருவன் வந்தான்.' என் துணிக்கு என்ன நிறம் வேண்டும் எனக் கேட்கத் தெரியவில்லை.தங்கள் பாத்திரத்தில் என்ன நிறம் வைத்திருக்கிறீர்களோ அந்த நிறத்தைத் தோய்த்து தாருங்கள் என்றான்.

அந்த சாயக்காரனைப் போலத்தான் பரம்பொருளும்.

சாயக்காரனிடம் நாம் எந்த சாயத்தைக் கேட்டாலும் அதையே அவன் மக்களுக்கு தருவது போல், பரம்பொருளிடம் தத்தம் தேவைகளை எவ்வெவ்வாறு கேட்கிறாரோ
அவ்வவ்வாறே அவர்களுக்கு உதவுகின்றார்.
 அவருக்கு பாரபட்சம் கிடையாது. சாயப்பாத்திரம் போல கடவுள் ஒருவரே ஆவார்.

அவர் பல வழிகளிலும்,பல நிறங்களிலும்.பல வடிவங்களிலும் மாறி மாறி அருள்  பொழிகின்றார்.

Saturday, January 23, 2016

152. ஸ்ரீ ராமகிருஷ்ணர் அருளிய கதைகள்





1. கடவுளே சொந்தம்

      ஒரு குரு ...தனது சீடனுக்கு, ஆன்மீக வாழ்க்கையின் பெருமையையும்,உலக மக்களின் போக்கையும் பற்றிக் கூறினார்.நீண்ட நேர உரையாடலுக்குப் பிறகு....'கடவுள் ஒருவரே அனைவருக்கும் சொந்தமானவர்' என்றார்.

      குருவோ சன்னியாசி...சீடனுக்கோ மனைவி,மகன்,மகள் எல்லாம் உண்டு.அதனால் அவன் குருவின் வார்த்தைகளை நம்பவில்லை.தான்,தன் மனைவி,மக்களுக்கு உழைப்பதைப் பார்த்து....தன் குடும்பத்தில் உள்ளவர்கள்,தனக்கு உதவாமலா போய்விடுவார்கள் என்ற சிந்தனையில் குரு சொன்னவற்றை அவன் மறுத்தான்..
 
      சீடன், குருவிடம்,' என் தாய். என்  மனைவி., என் மக்கள்,என் உறவினர்கள் எல்லோரும் என் மீது அளவற்ற பாசம் வைத்துள்ளார்கள். நான் இல்லாவிடில் அவர்கள் உலகே இருண்டுவிடும் என்று எண்ணுவார்கள்.எனக்குதலைவலி வந்தாலும் பொறுக்க மாட்டர்கள். அப்படியிருக்கையில் என்னை அவர்கள் ஒதுக்கியா விடுவார்கள்' என்றான்,

      உடன் குரு,' நாம் யாரையும் நம்பி விடக்கூடாது.எல்லோருடைய அன்பும் பொய்யானது.யாரும் யாருக்காகவும் வாழவில்லை.வேண்டுமானால் இதை சோதித்துப் பார்க்கலாம்.உனக்கு சில மாத்திரைகளை தருகிறேன்.நீ  வீட்டிற்கு போய்,அதனை சாப்பிட்டுவிட்டு படுத்துக் கொள்.நீ இறந்து விட்டதாக அவர்கள் எண்ணுவர்.அதே சமயம் அவர்கள் என்னன்ன செய்கிறார்கள் என்பதையும் நீ அறிந்து கொள்வாய்.அப்போது நான் அங்கு வருகிறேன்' என்று கூறிவிட்டு, சீடனிடம் சில மாத்திரைகளை கொடுத்தார்

      சீடனும்,வீட்டிற்கு சென்று,மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டு. இறந்தவன் போல் படுத்துக் கிடந்தான்.அவனைச் சார்ந்த உறவினர்கள், அவன் இறந்து விட்டதாக எண்ணி அழ ஆரம்பித்துவிட்டனர். அப்போது அங்கே வந்த குரு.... அவர்களிடம் ' என்னால் இவனை பிழைக்கவைக்க முடியும் .அரிய மருந்து ஒன்று உள்ளது.அதை இவனுக்கு கொடுக்கின்றேன்...இவன் பிழைத்துக்கொள்வான். ஆனால் இந்த மருந்தை உங்களில் ஒருவர் முதலில் சாப்பிடவேண்டும் அப்படி சாப்பிடுபவர்கள் இறந்து விடுவார்கள்.பின்னர் அந்த மருந்தை இவனுக்குக் கொடுத்தால் இவன் பிழைத்துக் கொள்வான்' என்றார்.

     மருந்த பெற்றுக்கொண்டவர்கள்...அதை வாங்கிப் பார்த்துவிட்டு, அதனை உண்ண விருப்பமின்றி அவரிடம் திருப்பி கொடுத்துவிட்டனர்.

     யாரும் அவனுக்காக உயிரை விட விரும்பவில்லை.

     எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த சீடன்,  எழுந்து குரு சொன்னது ' சரி' என ஒப்புகொண்டான்.

Saturday, June 6, 2015

150- மூட நம்பிக்கை

                       

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர் டாக்டர் அம்பேத்கர்.

அவர் ஒருநாள் தனது நண்பர் ஒருவருடன் வீதியில் சென்று கொண்டிருந்தார்.அப்போது ஒருவன் கரடி ஒன்றை வைத்துக் கொண்டு, அதன் முடி ஒன்றினை வாங்கி வீட்டில் வைத்து கொண்டிருந்தால் பணக்காரராகிவிடலாம் என்று கரடியின் முடியை விற்று கொண்டிருந்தான்.

கரடியின் முடியை வாங்கக் கூட்டம் அலை மோதியது.அம்பேத்கரின் நண்பரும் முடியை வாங்கச்  சென்றார்.அவரை தடுத்து நிறுத்திய அம்பேத்கர், "நீ அந்த முடியை வாங்கினால் என்ன ஆவாய்?" என்றார்.

நண்பர், "நானும் பணக்காரனாக ஆவேன்" என்றார்.

உடன் அம்பேத்கர், :நீ கரடியின் ஒரு முடியை வாங்கினால் பணக்காரன் ஆவாய். சரி, நான் ஒப்புக் கொள்கிறேன்.ஆனால் அந்த வியாபாரி அந்தக் கரடியையே வைத்திருக்கின்றானே...அவன் ஏன் பணக்காரன் ஆகாமல் இப்படித் தெருவில் அதன் முடியை விற்று பிழைத்துக் கொண்டிருக்கின்றான்?" என்றார்.

அப்போதுதான் நண்பரும் தான் அப்படி நினைத்தது மூடநம்பிக்கை என்பதை உணர்ந்தார்.

நாமும் , ஒருவர் சொல்வதைக் கெட்டு, அதைப் பற்றி சிந்திக்காமல் மூட நம்பிக்கையுடன் செயல் படக் கூடாது.நம் அறிவைப் பயன்படுத்தி அதற்கேற்ப நடக்க வேண்டும்.

இதைத்தான் வள்ளுவரும்,

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

என்றார்.

(எந்தவொரு பொருள் குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடமை ஆகும்.)

Friday, June 5, 2015

149-ஓட்டைப்பானையின் சாதனை

                         

சரவணன் தோட்ட வேலை செய்பவன்.

ஒரு நீளமான கம்பின் இரு முனைகளிலும் பெரிய பானைகளைக் கட்டித் தொங்க விட்டு, அதில் தொலை தூரத்திலிருந்து தண்ணீர் சுமந்து வந்து தன் செடிகளுக்கு ஊற்றி வந்தான்.

அந்த கம்பின் இரு முனைகளில், ஒரு முனையில் இருந்த பானையின் அடியில் ஒரு  ஓட்டை இருந்தது.அதனால் சரவணன் தூக்கி வருன் நீரில் பாதி வழியிலேயே சிந்தி வந்தது,.

இதனால், அந்த ஓட்டைப் பானையைப் பார்த்து அடுத்த முனையில் இருந்த நல்ல பானை கேலி செய்து வந்தது.

ஒருநாள், சரவணனிடம் அவனது நண்பர் ஒருவர் "ஓட்டைப் பானையை மாற்று" என்றார்.

அதற்கு சரவணன், "ஐயா...நானும் அது பற்றி சிந்தித்தேன்.ஆனால் நான் தண்ணீர் கொண்டு வரும் வழியில் அழகிய பூச்செடிகள் உள்ளன.பானையில் இருந்து சிந்தும் நீர் அப்பூச்செடிகளில்தான் விழுகிறது. அதனால் அச்செடிகள் வளமாக வளர்ந்து, அழகாக பூத்திருக்கின்றன.இந்த ஓட்டைப் பானைத்தான் அதை சாதித்திருக்கிறது" என்றான்.

இது கேட்டு...ஓட்டைப் பானை செய்து வந்த நற்செயலை எண்ணி நல்லப் பானை அதைக் கேலி செய்வதை நிறுத்தியது.

நாமும், ஒருவரது அருமை, பெருமைகள் தெரியாது யாரையும் எடை போடக்கூடாது.

Thursday, June 4, 2015

148- நம்பிக்கை

                     

கந்தனுக்கு முழு ஆண்டுத் தேர்வு நெருங்க நெருங்க பயம் அதிகரித்தது.

"அம்மா! நான் நன்கு படித்திருந்தாலும்...பரீட்சை எழுத பயமாய் இருக்கிறது" என்றான்.

அதற்கு அம்மா, "பயப்படாதே! நீ நன்றாகவே தேர்வு எழுதுவாய்.வேண்டுமானால் என் கையிலுள்ள இந்த நாணயத்தினால் டாஸ் போடலாம்.தலை விழுந்தால், நீ நல்ல மதிப்பெண்களைப் பெறுவாய்" என்று சொல்லியபடியே, தன் கையிலிருந்த நாணயத்தை சுண்டி டாஸ் போட்டார்.

தலையே விழுந்தது.

அதைக் கண்ட கந்தன் மகிழ்ந்து, முழு தைரியத்துடன் தேர்வுகளை எழுதினான்.

ரிசல்ட் வந்தது..எல்லா பாடங்களிலும் 95 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருந்தான் அவன்."அம்மா! அன்று டாஸில் தலை விழுந்ததால்தான் நான் வெற்றி பெற்றேன்" என்றான்.

அதற்கு அம்மா,  அந்த நாணயத்தை அவனிடம் காட்டினார். நாணயத்தின் இரு பக்கமுமே தலை இருந்த அதிசய நாணயம் அது."கந்தா ! நீ வென்றது டாஸால் அல்ல.தலை விழுந்த நம்பிக்கையால்.வாழ்வில் வெற்றி பெற கடின உழைப்புடன் நம்பிக்கை வேண்டும்." என்றார்.

கந்தனும் நம்பிக்கையின் அவசியத்தைப் புரிந்து கொண்டான்.

நீங்களும் அப்படித்தானே!

Tuesday, June 2, 2015

147 - குற்றம் பார்க்கின்....

                               

ஒரு காட்டில் பெரிய மரம் ஒன்று நன்கு தழைத்து வளர்ந்து, கனிகளுடன் காணப்பட்டது.அம்மரத்தில், பல பறவைகள் கூடு கட்டி, தனது குஞ்சுகளுடன் சந்தோசமாக அக்கனிகளை உண்டு வாழ்ந்து கொண்டிருந்தன.

அதே காட்டில், வஞ்சக நரி ஒன்று இருந்தது.அது எப்போதும் பிறர் மீது குற்றம் சொல்லியே வாழ்ந்து வந்தது.

ஒரு சமயம், மழையே இல்லாததால், தண்ணீர் இல்லாது அக்காட்டில் விலங்குகளும், பறவைகளும் தவித்தன.அந்த மரமும் தனது இலைகளையெல்லாம் இழந்து..எலும்புக் கூடாய் வாடிக்காணப்பட்டது.
அதனால், அம்மரத்தில் வசித்து வந்த பறவைகள் வேறு இடம் தேடிச் சென்றன...

இதுதான் சமயமென்று, நரி மரத்திடம் வந்து, "பார்த்தாயா?  நீ வளமாய் இருந்த போது உன்னையே சுற்றி வந்த பறவைகள், நீ வாடியதும் உன்னை விட்டுச் சென்று விட்டன.அவை திரும்பி வந்தால் அடைக்கலம் கொடுக்காதே" என்றது.

ஆனால், அந்த மரமோ, நரியைப் போல குறுகிய நோக்கம் கொண்டது அல்ல..அது நரியிடம், " நரியாரே! எல்லாவற்றிலும் குறை காணக்கூடாது.மழை இல்லாவிடினும், எனது ஆழமான வேர்கள் எனக்கு வேண்டிய தண்ணீர் மற்றும் ஊட்டச் சத்துகளை பூமியிலிருந்து பெற்றுத் தந்து விடும்.அதுபோன்ற வசதி, அந்தப் பறவைகளுக்குக் கிடையாது.ஆகவே..அவை உயிர் வாழ வேண்டுமாயின் வேறு இடம் தேடித்தான் செல்ல வேண்டும்" என்றது.

மரத்தின் குணத்தைப் பாருங்கள்.

நாமும் அந்த நரியைப் போல இல்லாமல், நமது சுற்றத்தினர், நட்பு ஆகியோரிடம் தேவையின்றி குறைகளைக் கூறி வெறுக்கக்கூடாது, குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பதை உணர வேண்டும்.

Friday, January 9, 2015

142. இறைவனின் படைப்பில் ............. (நீதிக்கதை)




ஒரு காட்டில் ஒரு முயல் ஓடி விளையாடிக் கொண்டிருந்தது. அதை பார்த்துக் கொண்டிருந்தது ஒருஆமை....
'நம்மால் ஏற்கனவே வேகமாக போகமுடியாது...இதில்,முதுகில் வேறு பாரமாக ஓடு.
முயலைப் பார்த்து பொறாமைப் படுவதில் பயன் இல்லை....ஆண்டவனைத்தான் என்னை இப்படிப் படைத்ததற்காக நொந்து கொள்ளவேண்டும்.' என எண்ணியது.
அப்போது ....அன்று இறை எதுவும் கிடைக்காததால் அலைந்து கொண்டிருந்த சிங்கம்,விளையாடிக்கொண்டிருந்த முயலைப்பிடிக்க பாய்ந்தது.
முயல் ஒரே ஓட்டமாக ஓடி ஒளிந்தது.ஆமையோ, தன் கூட்டுக்குள் முடங்கியது
சிறிது நேரத்தில் சிங்கம் சென்றுவிட ....முயல் பயத்தில் அவ்விடம் வந்ததும், ஆமை தன் கூட்டிலிருந்து தலையை நீட்டிப் பார்த்தது.
ஒவ்வொரு விநாடியும்....மரணபயத்திலேயே முயல் வாழ்நாளை கழிக்க வேண்டியிருக்கையில்,விலங்குகளிடமிருந்து காத்துக்கொள்ள தன் முதுகிலேயே தனக்கு கூட்டையும் கொடுத்த இறைவனை நிந்தித்தது எவ்வளவு தவறு என உணர்ந்தது.
இறைவன் படைப்பில் ஒவ்வொரு உயிர்க்கும் ஒவ்வொரு தனித்தன்மை உண்டு.அந்த தனித்தன்மையை உபயோகித்து ...ஆபத்துக் காலங்களில் தப்பிக்கலாம்.
இதுவே இறைவன் கருணை என்பதை உணர்ந்தது ஆமை

Tuesday, November 11, 2014

135. ' நரியின் சாதூர்யம்' (நீதிக்கதை)




ஒரு காட்டை ஒட்டி ஒரு சிறு நதி ஓடிக்கொண்டிருந்தது.
அதில் ஒரு முதலையும் ஒரு நண்டும் இருந்தன.அவை இரண்டும் நதியில் இருந்த மீன்களை உண்டு உயிர் வாழ்ந்தன.
மற்ற சில விலங்குகளும் தண்ணீர் அருந்த வருவதுண்டு.

கோடைகாலம் வந்ததது...நதியில் நீர் வரத்தும் குறைய மீன்களே இல்லாத நிலை வந்தது.தண்ணீர் குறைந்ததால்,முதலைக்கு பயந்து விலங்குகள் தண்ணீர் அருந்தவும் வருவ்தில்லை.
உண்ண எதுவும் இல்லா நிலையில்,ஒரு நாள்,முதலை நண்டிடம்,நீ விலங்குகளிடம் சென்று நான் இறந்து விட்டதாகச் சொல்.அதை நம்பி ஏதேனும் விலங்குகள் வந்தால் அதை அடித்து நாம் உண்ணலாம் என்றது. நண்டும் அப்படியே செய்ய ......நரி ஒன்று முதலையை உண்ணலாம் என ஆசையுடன் நண்டுடன் வந்தது.

செத்தது போலக்கிடந்த முதலையைப் பார்த்ததும் நரிக்கு சந்தேகம் வந்தது. உடனே தன் மூளையை உபயோகித்து "முதலை செத்தது போலத்தெரியவில்லையே ! அப்படி இறந்திருந்தால் அதன் வால் ஆடுமே " என்றது.

இதக் கேட்டவுடன் முதலை தன் வாலை ஆட்டியது.அதைப் பார்த்த நரி,நண்டிடம் 'செத்த முதலை எப்படி வாலை ஆட்டும்.நீங்கள் இருவரும் போய் சொல்கிறீர்கள்' என கூறிவிட்டு ஓடியது.

அறிவில்லாத முதலையும் நண்டும் ஏமாந்தது.

நாமும் யாரேனும் ஏதேனும் கூறினால் அதை உடனே நம்பாது நம் அறிவை பயன்படுத்தி உண்மையை கண்டறியவேண்டும்.

Friday, November 7, 2014

134. கழுதை சிங்கமாகுமா..(நீதிக்கதை)



கழுதை ஒன்று தனது சலவைத்தொழிலாளியான முதலாளியிடமிருந்து தப்பி காட்டுக்குள் புகுந்தது.

காட்டில் புலி,சிங்கம்,யானை போன்ற மிருகங்களைப் பார்த்து பயந்து ....அவற்றிடம் இருந்து எப்படி தப்புவது என புரியாது விழித்தது.

அப்போது சிங்கத்தின் தோல் ஒன்று கழுதைக்குக் கிடைத்தது.அதை எடுத்து போர்த்திக்கொண்டு காட்டிற்குள்.. தானும் ஒரு சிங்கம் போல உலாவியது.

அது தெரியாத மிருகங்கள் கழுதையை சிங்கம் என நினைத்து பயந்து ஓடின.

அதைக் கண்டு மகிழ்ந்த கழுதை ....மீண்டும் நகரத்திற்குள் நுழைந்தது.மனிதர்கள் சிங்கம் நகரத்திற்குள் இருப்பதைப் பார்த்து பயந்தனர்.

கழுதைக்கு மகிழ்ச்சி அதிகமாகியது...திடீரென கத்த ஆரம்பித்தது.காணாமல் போயிருந்த தன் கழுதையைத் தேடிக் கொண்டிருந்த சலவைத்தொழிலாளி ...தன் கழுதையின் குரல் கேட்டு வந்தான்.
தன் கழுதை சிங்கத்தின் தோலை போர்த்தியிருப்பதைக் கண்டு அதை நீக்கிவிட்டு கழுதையை பலமாக அடிக்க ஆரம்பித்தான்.

நாமும் நம்மைப் போலவே நடந்து கொள்ளவேண்டும்.
பிறர் போல நடிக்க ஆசைப்பட்டால் ஒருநாள் ஆபத்தில் சிக்கிக்கொள்வோம்.

Thursday, October 30, 2014

133. அறிவுரை வழங்கும் தகுதி (நீதிக்கதை)




கடற்கரை ஓரம் நண்டு ஒன்று வசித்து வந்தது.அது தனது மகனான குட்டி நண்டை நடக்கச் சொல்லி அழகுப் பார்த்தது

ஆனால் ...குட்டி நண்டோ...நேராக நடக்க முடியாமல் தனது இடது பக்கவாட்டிலேயே நடந்தது.அதனைப் பார்த்த தாய் நண்டு ' மகனே...பக்கவாட்டில் நடக்கக்கூடாது.நேராக நடக்கவேண்டும்' என்று அறிவுரை கூறியது.

உடனே குட்டி நண்டு...' அம்மா..எவ்வளவு முயன்றும் என்னால் நேராக நடக்க முடியவில்லை.நேராக எப்படி நடப்பது என எனக்கு சொல்லிக்கொடு ' என்றது.

தாய் நண்டும்...அப்படி நடக்கப் பார்த்தது..ஆனால் அதனால் நேராக நடக்க முடியவில்லை.பக்கவாட்டிலேயே நடந்தது.
அப்போதுதான் அதற்கு....நண்டினமான தங்களால் நேராக நடக்க முடியாது என உணர்ந்தது.அது தெரியாமல் தன் மகனுக்கு அறிவுரை கூறினோமே என நாணியது.

நாமும் பிறர்க்கு ஏதேனும் அறிவுரை வழங்குமுன், நாம் அப்படி நடந்து கொண்டோமா என யோசிக்க வேண்டும்.

அறிவுரை வழங்குமுன் அதற்கேற்றார் போல நம்மை திருத்திக் கொள்ள வேண்டும்.

Monday, October 27, 2014

133.ஆபத்தில் உதவ வேண்டும் (நீதிக்கதை)



சரவணனும் முருகனும் நண்பர்கள்.இருவரும் ஒரு நாள் அடுத்த ஊருக்கு பிரயாணம் செய்தனர்.

போகும் வழியில் அவர்கள் ஒரு காட்டைக் கடக்க வேண்டியிருந்தது.காட்டில் கொஞ்சதூரம் போனதும் ஒரு பெரிய கரடி அவர்களுக்கு முன்னால் வருவதைக்கண்டனர்.

கரடியைக் கண்டதும் சரவணன் உடனே ஒரு மரத்தில் ஏறிக்கொண்டான்.முருகனுக்கு மரத்தில் ஏறத்தெரியாது.மரத்தின் மீது ஏறிய சரவணனின் உதவியும் கிடைக்கவில்லை.

தன்னாலும் தனித்து கரடியை எதிர்க்கமுடியாது.என்ன செய்வது என யோசித்தவன்,உடனே மூச்சை அடக்கிகொண்டு இறந்தவன் போலக்கிடந்தான்.

கரடி அவனிடம் வந்து பார்த்து ...இறந்த உடல் நினைத்து அப்பால் போய்விட்டது.

கரடி போனதும்,மரத்திலிருந்து இறங்கிய சரவணன் முருகனிடம் 'கரடி உன்னிடம் என்ன சொல்லிற்று ' என்று கேட்டான்
முருகன் சொன்னான்,கரடி என்னிடம் வந்து ' ஆபத்தில் உதவாத நண்பனை நம்பாதே ' என்றது என்றான்.

நாமும் சரவணனைப் போல இல்லாமல் ,,,அடுத்தவர்க்கு ஆபத்து.ஏற்பாட்டால் அவர்களைவிட்டு விலகாமல் நம்மால் முடிந்த உதவியைச் செய்யவேண்டும்.

Wednesday, October 22, 2014

132. நல்ல நண்பன் வேண்டும் (நீதிக்கதை)



ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவன் இருந்தான்.அவன் வயல்களில் பயிரிட்டிருந்த தானியங்களை பறவைகள் வந்து நாசம் செய்து கொண்டிருந்தன.அதனால் அவற்றைப் பிடிக்க வலையைக் கட்டியிருந்தான் அவன்.

அன்று மாலை,அந்த வலையில் பல பறவைகளுடன் ஒரு கொக்கும் மாட்டிக்கொண்டது.

விவசாயி வந்து பறவைகளைப் பிடித்தான். மாட்டிக்கொண்ட கொக்கு விவசாயியைப் பார்த்து ' ஐயா நீங்கள் பறவைகளைப் பிடிக்கத்தானே வலையைப் போட்டீர்கள்.நான் பறவை அல்ல ...அதனால் என்னை விடுவிக்கவேண்டும்' என்று கேட்டது.

அதற்கு விவசாயி ..." நீ சொல்வது உண்மை. ஆனால் நீ கெட்டவர்களுடன் அகப்பட்டாய்.கெட்டவர்கள் நட்பு உனக்கு இருப்பதால்..அவற்றுடன் சேர்ந்து நீயும் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றான்.

நாமும்....கெட்டவர்கள் நட்பை விட்டொழிக்க வேண்டும்.இல்லையேல் என்றேனும் ஒரு நாள் அவர்களுடன் சேர்ந்து நமக்கும் தண்டனை கிடைக்கும்.

" நல்ல நண்பனையே தேர்ந்தெடுங்கள்"

Tuesday, March 11, 2014

131. ' யார் உயர்ந்தவர்.. (நீதிக்கதை)




ஒன்று முதல் ஒன்பது வரை ஒன்பது நண்பர்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். ' 0 ' மட்டும் தனியாக சோகமாக அமர்ந்துள்ளது.அவர்கள் விளையாட்டில் அதை சேர்க்கவில்லை.

ஆசிரியர்:  வகுப்பறைக்குள் நுழைய ....

ஒன்று :   ஆசிரியர் வந்துட்டார்...ஆசிரியர் வந்துட்டார்.....

எல்லோரும் எழுந்து நின்று: வணக்கம் சார்..

ஆசிரியர்: வணக்கம். எல்லோரும் உட்காருங்க.இப்ப attendance எடுக்கப் போறேன். வந்திருக்கிறவர்கள் present சொல்லவும்.ஒன்று..

ஒன்று:    Presnet Sir

ஆசிரியர்:  இரண்டு

இரண்டு:    Present Sir

ஆசிரியர்:   மூன்று

மூன்று:     Present Sir

(இப்படி ஒன்பது வரை கூப்பிட அனைத்து எண்களும் Present சொல்ல )

ஆசிரியர்:   சைஃபர்
(Present  சப்தம் வராததால் மீண்டும்) சைஃபர் இன்னிக்கு வரலியா.......

இரண்டு:  வந்திருக்கான் Sir.

ஆசிரியர்:  என்ன...சைஃபர் தூங்குகிறாயா?
          எழுந்து நில்
         (சைஃபர் சோகத்துடன் எழுந்து நிற்க)
         ஏன் Present சொல்லவில்லை....

         (சைஃபர் அழ ஆரம்பிக்க)

ஆசிரியர்: ஏன் அழற!

சைஃபர்:  நான் சைஃபர்.அதனால் எனக்கு மதிப்பு இல்லையாம்.ஒன்று முதல் ஒன்பது வரை எந்த நண்பனும்...என்னை அவர்களுடன் விளையாட்டில் சேர்த்துக் கொள்ள மாட்டேன்  என்று சொல்கிறார்கள்.

ஆசிரியர்: அப்படியா...உட்கார்..நீ மதிப்புள்ளவன் என அவர்கள் வாயாலேயே சொல்ல வைக்கிறேன்.

          ஒன்று முதல் ஒன்பது வரை ஒவ்வொருவரும் தாங்கள் ஏன் மதிப்புள்ளவர்கள் என்று சொல்லவேண்டும்.

          முதலில்  ஒன்று நீ சொல்...

ஒன்று:    (எழுந்து நின்று ) ஐயா...நீங்களே நாங்கள் பத்து பேர் இருக்கும் போது ஒன்றான என்னையே முதலில் கூப்பிட்டீர்கள்.இது ஒன்றே நான் அவர்களை விட மதிப்பு வாய்ந்தவன் என்பதற்கான சான்று.

          தவிர ...படிப்பில் முதல் மாணவனாய் இருக்கவேண்டும்...முதல் மதிப்பெண் பெற வேண்டும் என ஆசிரியர்களும் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை நினைக்கின்றனர்.ஆகவே    
           நானே அனைவரை விட உயர்ந்தவன்.

ஆசிரியர்:  சரி...இப்போது ....இரண்டு நீ சொல்....

இரண்டு:   ஐயா...இறைவனால் படைக்கப்பட்டுள்ள அனைத்திற்கும்,மனிதன் படைத்த அனைத்திற்கும் இரண்டு பக்கங்கள்தான்.  உதாரணமாக ஒரு இலையை எடுத்து கொண்டாலும்    
          இலையின் உள்புறம்,வெளிபுறம் என இரண்டு.ஆண்பெண்,இன்பம்,துன்பம், வலது,இடது என எல்லாமே இரண்டுதான். ஆகவே நானே உயர்ந்தவன்.

ஆசிரியர்: o.k. ...மூன்று  நீ சொல்...


மூன்று:  ஐயா....தமிழ் என்றாலே மூன்று எழுத்து.தவிர்த்து இயற்றமிழ்,இசைத்தமிழ்,நாடகத்தமிழ் என தமிழை மூன்று வகைப் படுத்துவர்.
         அது போல தெய்வங்களிலும் பிரம்மா,விஷ்ணு,சிவன் என படைத்தல்,காத்தல்,அழித்தல் தொழில்களை புரியும் சுவாமிகளை மும்மூர்த்திகள் என்றே சொல்லுவார்கள்.ஆகவே மூன்றான நானே
         உயர்ந்தவன்.


ஆசிரியர்: o.k. நான்கு  நீ சொல்  ....


நான்கு : ரிக்,யஜூர்,சாம,அதர்வணம் என வேதங்கள் நான்கு வகைப்படும்.எந்த ஒரு செயல்செய்தாலும் அதுபற்றி நாலு பேரை கேட்டு தெரிந்து கொள் என்பார்கள்.
         ஆகவே நான்கான நானே உய்ர்ந்தவன்.


ஆசிரியர்: ஐந்து


ஐந்து:    ஒவ்வொரு மனிதன் கைகளிலும் ஐந்துவிரல்கள்.கால்களில் ஐந்து விரல்கள்..தவிர...இந்த பூமியே பஞ்ச பூதங்களால் ஆனது...பூமி.காற்று,ஆகாயம்,நெருப்பு, நீர் என.தவிர மெய்,வாய்,கண்,மூக்கு
         செவி என மனித உடலும் ஐந்து ஆகும்.


ஆசிரியர்: ஆறு  நீ...
.

ஆறு:     சுவைகள்...இனிப்பு,காரம்,புளிப்பு,உப்பு,உவர்ப்பு.துவர்ப்பு என ஆறு வகைப்படும்.
         தமிழ்க் கடவுள் என போற்றப்படும் முருகனுக்கு ஆறு முகங்கள்..
         மனிதர்களுக்கு உணவு விளைவிப்பதற்கும்,குடிநீருக்கும் தண்ணீர் அவசியம், அது ' நதி ' எனப்படுகிறது
         அது ' ஆறு ' என எங்கள் பெயரிலேயே அழைக்கப்படுகிறது.
         ஆதலால் நானே உயர்ந்தவன்.

ஆசிரியர்: ஏழு...


ஏழு:     ஐயா...வாரத்தின் நாட்கள் ஏழு.
         திருப்பதி பாலாஜி வீற்றிருக்கும் இடம் ஏழுமலைகளைக் கொண்டது.
         அதனால் ஏழு ஆகிய நானே உயர்ந்தவன்.

ஆசிரியர்: எட்டு........
.

எட்டு:    திசைகள் எட்டு..மனிதன் எங்கு சென்றாலும் என்  எல்லைக்குள் தான் இருந்தாக வேண்டும். ஆதலால் நானே பெரியவன்..

ஆசிரியர்: ஒன்பது நீ என்ன சொல்லப்போகிறாய்?

ஒன்பது:  ஐயா நவக்கிரகங்கள் ஒன்பது.இன்பம்,நகைச்சுவை,கருணை,கோபம்.வீரம்.பயம்,அருவருப்பு,அற்புதம்,சாந்தம் என நவரசங்கள்.நவராத்திரி,நவரத்தினம் என்றெல்லாம் சொல்லப்படுகிறது.
         ஆகவே ஒன்பதான நானே உயர்ந்தவன்.

ஆசிரியர்: சைஃபர் ...இவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டாயா? இப்போதும் நான் மதிப்பில்லாதவன் என்று நீ சொன்னதையே திரும்பச் சொல்லப்போகிறாயா..?

சைஃபர்:  ஆம் Sir.

ஆசிரியர்: சரி...உன் மதிப்பு உனக்கு தெரியவில்லை...நானே சொல்கிறேன் கேள்.  நீ எல்லாரையும் விட மதிப்பு அதிகம் வாய்ந்தவன். முதலில் உன்னை கண்டுபிடித்ததே இந்தியர்கள் என
         பெருமைப்படுவோம்.
         சைஃபர் நீ இங்கே வா.....வந்து நில்...
         (சைஃபர் வந்து நிற்கிறது)
         ஒன்று இங்கே வா.. சைஃபரின் அடுத்து நில்.....
         (ஒன்று வந்து நிற்கிறது)
         இப்பொழுது ஒன்றே உன் மதிப்பு என்ன?

ஒன்று:   ஒன்று.

ஆசிரியர்: சைஃபர்..நீ இப்போது ஒன்றின் அடுத்தபக்க்ம் இடம் மாறி நில்.
         ஒன்றே இப்போது உன் மதிப்பு என்ன?

ஒன்று:    பத்து...

ஆசிரியர்: சைஃபர் பார்த்தாயா...நீ ஒன்றின் பக்கத்தில் வந்து நின்றதும் ஒன்றின் மதிப்பு...பத்து மடங்கு உயர்ந்து விட்டது.அதாவது ஒன்று உன்னுடன் சேர்ந்ததும்தான் அதிக மதிப்பைப் பெற்றது,.
          இது போல ஒவ்வொரு எண்ணுடன் நீ சேரும்போது அவற்றின் மதிப்பை பத்து மடங்கு உயர்த்தி விடுகிறாய்.
         எண்களே ...இப்போது புரிந்து கொள்ளுங்கள் சைஃபர் உங்களுடன் இணைந்ததும் உங்கள் மதிப்பு உயர்கிறது.
         இனியாவது ' 0 ' ஐ உங்களுடன் விளையாட சேர்த்துக் கொள்வீர்களா...

ஒன்று   ஐயா..இதுவரை சைஃபரின் மதிப்பு தெரியாமல் அதை ஒதுக்கி வைத்தோம்.
முதல்    இனி நாங்கள் அனைவரும் சைஃபருடன் சேர்ந்து ஒன்றாக...ஒற்றுமையாக இருப்போம்.
ஒன்பது   இதை விளங்க வைத்த உங்களுக்கு நன்றி.
 வரை

சைஃபர்: என்னை எனக்கே புரிய வைத்த உங்களுக்கு நன்றி Sir.

ஆசிரியர்: உங்களுக்கெல்லாம் இன்னொன்றும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்,இறைவனால் படைக்கப்பட்ட,,மனிதனால் உருவாக்கப்பட்ட எதற்கும் மதிப்பில்லை என்பதே கிடையாது.எல்லாமே மதிப்பு
         வாய்ந்தவை அதனதன் உபயோகத்தில். இறைவன் அனைவருக்கும் ஒரே மூளையைத் தான் கொடுத்திருக்கிறான்.அதனால், யாரும் யாரையும் விட உயர்ந்தவர்க ள் அல்ல.
         இறைவன் அளித்த மூளையை சரியான வகையில் உபயோகிப்பவன் புத்திசாலியாகிறான்.
         இறைவன் படைத்த மூளையின் மதிப்பு உணர்ந்து படித்து ...நாமும் புத்திசாலி என பெயர் எடுப்போம்.
   
         அடுத்தது Play Time. என்ன செய்யப்போகிறீர்கள்.

எல்லா எண்களூம்:
        எல்லோரும் ஒன்றாக விளையாடப் போகிறோம்  Sir.

ஆசிரியர்: Good.