Saturday, February 25, 2023

13.புத்திசாலி தீர்ப்பு

13- அருமையான தீர்ப்பு



 

ஒரு செல்வந்தரிடம் 17 குதிரைகள் இருந்தன. அவருக்கு மூன்று மகன்கள் இருந்தனர்.அவர் நோய்வாய் பட்டதால் கீழ்கண்டவாறு உயில் எழுதி வைத்தார்.

இருக்கும் 17 குதிரைகளில் பாதி பெரியவனுக்கும்,மீதியில் 2/3 பங்கு இரண்டாம்மகனுக்கும்.இரண்டாம் மகனுக்கு கொடுத்த பின் மீதியில் 2/3 பங்கு   மூன்றாம்  மகனுக்கும்  எழுதி வைத்திருந்தார்.

மூன்று  மகன்களுக்கும்  ஒண்ணுமே புரியவில்லை.எப்படி குதிரைகளை பிரித்துக்கொள்வது என்று தெரியவில்லை..

உடனே அவர்கள் அந்த ஊர் நாட்டாண்மையிடம் சென்று அவருடைய உதவியை நாடினர்.நாட்டாண்மை புத்திசாலி.எல்லோருடைய சிக்கல்களையும் தீர்த்து வைப்பார்.

செல்வந்தரின் உயிலை பார்த்துவிட்டு நாட்டாண்மை கீழ்கண்டவாறு  கூறினார்

முதலில் தன்னிடம் இருக்கும் ஒரு குதிரையை கொண்டு வந்து நிறுத்தினார். மொத்தம் 17+1= 18 ஆயிற்று.முதல் மகனுக்கு 18 குதிரைகளில் பாதி அதாவது 9 குதிரைகளை  கொடுத்துவிட்டார்.

இண்டாம் மகனுக்கு மீதி 9 ல் 2/3 பங்கு அதாவது 6 குதிரைகள் அவனுக்கு கொடுப்பது என்று முடிவாயிற்று.

மூன்றாம் மகனுக்கு முதல் இரண்டு பேருக்கு கொடுத்த மீதியில் 2/3 பங்கு.அதாவது மீதியுள்ள 3 ல் 2/3 பங்கு, 2 குதிரைகளை அவனுக்கு கொடுப்பது என முடிவாகியது.

எஞ்சிய ஒரு குதிரை செல்வந்தருடையது. ஆகையால் அவர் அந்த குதிரையை எடுத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்றார்.

Friday, February 24, 2023

.12.முயன்றால் முடியாதது இல்லை (நீதிக்கதை)

   12- முயன்றால் எல்லாமே முடியும்


மதன நாட்டு அரசனின் படை மிகவும் சிறியது.அவனால் பக்கத்து ஊர் அரசனிடம் போராடி வெல்ல முடியவில்லை.

தோல்வியுற்ற அரசனை கொலை செய்யுமாறு எதிரி நாட்டு அரசன் கட்டளையிட்டான்.அதனால் மதன நாட்டு அரசன் ஒருகுகைக்குள் ஓடி ஒளிந்து கொண்டான்,மனச்சோர்வினால் துணிவு இழந்தான்.

ஒரு நாள் சோம்பலுடன் அரசன் குகைக்குள் படுத்துக்கொண்டிருந்தான்.அப்பொழுது  ஒரு சிலந்தி வலையை ப் பின்ன கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தது.ஒவ்வொரு தடவையும் அது பின்னிய வலைஅறுந்து விழுந்து கொண்டிருந்தது.அது தன் முயற்சியை கைவிடாமல் மீண்டும் மீண்டும் முயற்சித்தது.

சிலந்தியின் விடாமுற்சியை பார்த்ததும் அரசனுக்கு தைரியம் வந்தது.தானும் சிலந்தி மாதிரி முயற்சி செய்யவேண்டும்,ஓடி ஒளியக்கூடாது என்று சபதம் பூண்டான்.

வெளியே சென்று தனக்கு நம்பிக்கையான ஆட்களை சந்தித்து பலம் மிகுந்த படையை உருவாக்கினான்.தன் எதிரிகளுடன்  மீண்டும் போர் புரிந்து இழந்த நாட்டை  மீண்டான்.

எந்த ஒரு காரியத்தில் ஈடுபட்டாலும் சோர்வு இன்றி முயற்சி செய்தால் வெற்றி பெறலாம்.

Monday, February 20, 2023

11. நேர்மை (நீதிக்கதை)

11- நேர்மை

 

 வயலூர் என்ற ஊரில் ராமன்,லட்சுமணன் என்ற இரு நண்பர்கள் இருந்தனர்.ஓரளவு படித்திருந்தாலும் இருவருக்கும் சரியான வேலை கிடைக்கவில்லை.ஊரில் சிறு சிறு வேலைகளை செய்து பிழைத்து வந்தனர்.

சிலநாட்களுக்கு பிறகு இருவரும் ஏதோ ஒரு வேலையின் பொருட்டு பக்கத்து நகருக்கு சென்றனர்.வழியில் ஒரு பை கிடைத்தது.அதில் ஐம்பதாயிரம் ரூபாய் இருந்தது.ராமன்’ இருவரும் பாதிப்பாதி எடுத்துக்கொள்ளலாம்’ நம்முடைய  வறுமையும் குறையும் "என்றான்.

லட்சுமணனோ, "வேண்டாம் இது இன்னொருவரது பணம்.நமக்கு வேண்டாம்.நாம் இதை நம்மூர் தாசில்தாரிடம் ஒப்படைத்துவிடுவோம்.அவர் விசாரித்து உரியவரிடம் ஒப்படைப்பார் 'என்றான்.

ராமனோ, "முடியாது நமக்கு கிடைத்ததை நாம் ஏன் விடவேண்டும்.இருவரும் சமமாக பகிர்ந்து கொள்ளலாம்" என்று லட்சுமணன் கையில் ரூபாய் 25000/- த்தை திணித்துவிட்டு மீதியை அவன்  வீட்டுக்கு எடுத்து சென்று அந்த  பணத்தில் மனைவி, குழந்தைகளுக்கு துணி மணி வாங்கிகொடுத்து தாராளமாக செலவு செய்தான்.

லட்சுமணன் நேராக  அந்த ஊர் தாசில்தாரிடம் சென்று நடந்ததைக்கூறி அவரிடம் தன்னிடமிருந்த 25000/- ரூபாயை கொடுத்து உரியவரிடம் சேர்க்க சொன்னான்.

தாசில்தாரும் விசாரித்து அந்த பணம் ஒரு பழ வியாபாரியின் பணம் என்றும்,அன்றைய கடை வசூலை எடுத்துக் கொண்டு செல்லும் போது தொலைத்து விட்டதாகவும் கூறியதால்,அப்பணத்தை தாசில்தார் அவரிடம் ஒப்படைத்து விட்டதாகக் கூறினார். மேலும், லட்சுமணனை உடனடியாக தன்னைப் பார்க்க வரச் சொன்னான். லட்சுமணனும் அங்கு சென்றார்.அங்கே இருந்த பழவியாபாரி அவனுடைய நேர்மையை பாராட்டி அவனுக்கு தனக்கு தெரிந்த கடை ஒன்றில்  கேஷியராக வேலை வாங்கிக்கொடுத்தார்.

மீதி ராமன் எடுத்துச் சென்ற பணத்தை அவனைப் பார்த்து எப்படி வாங்கிக் கொள்ள வேண்டுமோ..அப்படி வாங்கிக் கொள்வதாகக் கூறினார்.

லட்சுமணன்,நடந்ததை ராமனிடம் கூறி ராமா’ ஒன்றை நினைவில் கொள்,நேர்மையாக  நடந்தால் நிச்சயம் நல்ல பலன் உண்டு.ஆகவே அவர் வந்தால் அப்பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடு’ என்றான்.

நாமும் லட்சுமணனைப்போல நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்.

Thursday, May 26, 2022

10. நம்பிக்கை

    10- நம்பிக்கை 






மனிதனுக்கு நம்பிக்கை மிகவும் அவசியம்..அப்போதுதான் அவனால் வாழ்வில்
முன்னேற முடியும்.எந்த காரியத்தையும் செய்ய என்னால் முடியும் என்ற எண்ணம்
வேண்டும்.ஒரு சின்னக் கதை
இரண்டு தவளைகள்..ஒரு பெரிய அடுக்கில் இருந்த பாலில் விழுந்து விட்டன.பால்
என்று தெரிந்ததும் தன்னால் பிழைக்கமுடியாது என்று நம்பியது ஒரு தவளை.இது
அவ நம்பிக்கை கொண்ட தவளை.
பாலில் அடிப்பாகம் சென்று அங்கேயே செத்து மடிந்தது.
ஆனால் அடுத்த தவளையோ நம்பிக்கை உள்ளது.
பால் என்று தெரிந்தும் கால்களைப் போட்டு இங்கும் அங்கும்
அடித்தது.உதைத்தது.நீச்சல் போட்டது.உந்தி உந்தி கலக்கியது.பால் கலங்க
ஆரம்பித்து ஆடை படர்ந்தது.மேலும் மேலும் நீந்தியது.சிறிது சிறிதாகத்
திரண்ட வெண்ணெய் பாலில் மிதந்தது.
நம்பிக்கை இழக்காத தவளை வெண்ணெய் மீது அமர்ந்துக் கொண்டது.வெளியே தாவி
பாய்ந்து தப்ப சிறிது ஓய்வு கிடைத்தது.
பால் பாத்திரத்தை விட்டு தாவி குதித்து ஓடியது..இது நம்பிக்கை.
பாலின் அடியில் சென்றது செத்து மடிந்தது அவநம்பிக்கை.
நம்மை ஒரு துன்பம் சூழும் போது துவண்டுவிடாமல்..அதிலிருந்து வெளிவரும்
நம்பிக்கை இருந்தால் வாழ்வில் நமக்கு வெற்றியே கிடைக்கும்.




9.யானையும் பன்றியும்...

     9- யானையும்..பன்றியும் 




கோயில் யானை ஒன்று அந்த ஊரில் இருந்த நதி ஒன்றில் குளித்துவிட்டு ..நெற்றியில் திரு நீறு மணக்க சுத்தமாக வந்து கொண்டிருந்தது.

ஒரு சிறிய பாலத்தை அது கடக்க முயன்றபோது ...அதன் எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி வாலை ஆட்டிக்கொண்டே வந்தது.

யானை பாலத்தின்  ஓரத்தில் ஒதுங்கி பன்றிக்கு வழிவிட்டது

அதைக்கண்ட பன்றி,,,தனக்கு பயந்து யானை வழி விட்டது என்று தன்னை பற்றி மி கவும் ஆணவம் கொண்டது,.

அத்துடன் நில்லாது ' யானை என்னைக் கண்டு பயந்துவிட்டது ' என்று ஊர் முழுவதும் சொல்லி விட்டது.

இதை கேட்ட மற்றொரு யானை ஒன்று கோயில் யானையிடம் சென்று, 'உண்மையிலே நீ பன்றியைப்பார்த்து பயந்து  விட்டாயா' என்று கேட்டது.

அதற்கு கோயில் யானை சொன்னது'நான் குளித்து சுத்தமாக இருந்தேன்,பன்றியின் சேறு என் மீதுவிழுந்துவிடக்கூடாதே என்று ஒதுங்கினேன்.'

'நான் பன்றியின் மீது ஏறி அதனை துவம்சம் பண்ண்யிருக்கலாம்.அதற்கு ஒரு நொடி கூட ஆகாது.ஆனால் என் கால் அல்லவா சேறாகிவிடும் 'என்றது.

ஆணவக்காரர்களைக்கண்டால் ஒதுங்கி விடவேண்டும் என  கேள்வி கேட்ட யானை உணர்ந்தது.

நாமும் ஆணவத்துடன் செயல் படக்கூடாது.அதே நேரம் ஆணவம் கொண்டவரிடம்  இருந்து விலகி விடவேண்டும்.

Sunday, May 22, 2022

8. ' முயன்றால் முடியாதது இல்லை'

8- முயன்றால் முடியாதது இல்லை


8-


 கந்தன் அனைத்துப் பாடங்களிலும்  எப்போதும் குறைந்த மதிப்பெண் பெற்று வந்தான்.

அந்த முறையும் அப்படித்தான்.

அதனால் அவனது அப்பா கோபித்துக்கொள்ள..அழுதுகொண்டே தன்  அறைக்குள் வந்து அமர்ந்தான்.

அப்போது அறையின் மூலையில் ஒரு சிலந்தி...வலை பின்னிக்கொண்டிருந்தது.அது அவனது கவனத்தை ஈர்க்க அதையே பார்த்துகொண்டிருந்தான்.

அது வட்டமாக சுவரின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு தன் எச்சிலால் வலை பின்னிக்கொண்டிருக்கும் போது ஒரு பக்கம் அறுந்தது. அதை சரி பண்ணிவிட்டு மேலும் தொடர்கையில் மற்றொரு முனை அறுந்தது.

இப்படி தொடர்ந்து அறுந்து கொண்டிருந்தாலும் தன் முயற்சியை விடாது அடுத்த 

அரை மணிநேரத்தில்  அது வலையை பின்னி முடித்து நடுவில் சென்று அமர்ந்தது.

அதை பார்த்ததும் மகிழ்ச்சியால் அவன் கை தட்டினான்.

அவன் பின்னால்..அவனுக்கே தெரியாமல் நின்றுகொண்டிருந்த அம்மா..'கந்தா..பார்த்தாயா..பல முறை வலைஅறுந்தும் ..தன்னால் முடியாது என்று விட்டுவிட்டு போகவில்லை சிலந்தி.நேரத்தை பற்றி கவலைப்படாமல் பல முறை முயன்று தன் வேலையை செவ்வனே முடித்துவிட்டது.அதற்கு காரணம் அதனுடைய விடாமுயற்சியே.கடவுள் ..அனைவருக்கும் மூளையை கொடுத்துள்ளான்..அதை சரியாக பயன்படுத்தி..விடாமல் முயன்று படித்தால் உன்னாலும் நல்ல மதிப்பெண்கள் வாங்கமுடியும்.

சிலந்தியின் விடாமுயற்சி உனக்கு ஒரு பாடமாக அமையும்' என்றாள்.

அடுத்து வந்த அனைத்து பாடங்களிலும் கந்தன் முதல் மதிப்பெண் பெற்றான் என்பதை நான் உங்களுக்கு கூறவேண்டுமா..என்ன?.



Friday, May 20, 2022

7 - அன்னமும்..காகமும்

7 - அன்னமும்...காகமும் -





அந்த ஊருக்கு வெளியே ஒரு பெரிய அரசமரம் இருந்தது.அதில்   அன்னம் ஒன்றும்...காக்கை ஒன்றும் நண்பர்களாக  வசித்து வந்தன.

ஒருநாள் கடும் வெயிலில்...வேடன் ஒருவன் களைப்புடன் அங்கு வந்து மர நிழலில்  தன் வில்..அம்பு  ஆகியவற்றை பக்கத்தில் வைத்துக்கொண்டு படுத்து உறங்கினான்.

ஆனால்  சிறிது நேரத்தில் வெயில் ஏற.. வெயில்அவன் முகத்தில் விழுந்தது.

வாயைத்திறந்து கொண்டு அசதியில் தூங்கும் அவன் மீது வெயில் விழுவதைப்பார்த்து பரிதாபப் பட்ட அன்னம் தன் இறக்கைகளை நன்றாக விரித்து அவன் முகத்தில்  நிழல் விழுமாறு செய்தது.

அதேசமயம் பிறர் நலனை சற்றும் எண்ணாத குணம் கொண்ட காகம் அவனது திறந்த வாயில் எச்சத்தை விட்டு பறந்து சென்றது.

எழுந்து உட்கார்ந்த வேடன் ..தன் மேலே சிறகு விரித்துக் காணப்பட்ட அன்னம்தான் எச்சமிட்டுவிட்டது என எண்ணி ..சற்றும் சிந்திக்காது அம்பை எய்தி அதைக்கொன்றான்.

குணம் கெட்ட காகத்துடன் கூடா நட்பு கொண்டிருந்ததாலே அன்னம் உயிர் நீக்க நேர்ந்தது.

நாமும் நமது நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

கூடா நட்பினை தவிர்க்கவேண்டும்.