Tuesday, January 31, 2012

105. " பச்சோந்தியாய் இராதே " (நீதிக்கதை)




ஒரு மரத்தினடியில் ஒருவன் பச்சோந்தி ஒன்றைப் பார்த்தான்.அது பழுப்பு நிறமாய் இருந்தது.

அவன் தன் நண்பனிடம் ' நான் பச்சோந்தியைப் பார்த்தேன்.அது பழுப்பு நிறம் ' என்றான்.

அந்த நண்பனோ..'இல்லை...இல்லை..அது பச்சை நிறம் நான் பார்த்திருக்கிறேன்' என்றான்.

இவற்றைக் கேட்டுக்கொண்டிருந்த மற்றவன் ' இல்லை அது நீல நிறம்' என்றான்.

வேறொருவன் ' அது சிவப்பு நிறம் ' என்றான்.

அனைவரும் ஒருவருக்கொருவர் இது சம்பந்தமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த ஒருவர் இவர்களின் சண்டைக்கான காரணம் கேட்க ...ஒவ்வொருவரும் தான் பார்த்த பச்சோந்தியின் நிறம் பற்றிக் கூறினர்.

உடனே அவர்..'நீங்கள் சொல்லுவது எல்லாம் உண்மையே..பச்சோந்தி ...அவ்வப்போது அது இருக்குமிடத்திற்கு ஏற்ப தன் நிறத்தை மாற்றிக் கொள்ளும்' என்றார்.

இது கேட்டு நண்பர்கள் ஆச்சிரியமடைந்தனர்.

அவர் மேலும் கூறினார்.' சமயத்திற்கு ஏற்றாற் போல நிறம் மாறும் பச்சோந்தி மாதிரி நாம் இருக்கக் கூடாது.எப்போதும்..எந்த இடத்திலும் நல்ல குணத்தோடு  பிறர் மீது
குறை கூறாது..அடக்கத்துடன் ..மற்றவர் மீது அன்புடன் நாம் இருந்து கொள்ளவேண்டும்.

 "பச்சோந்தி போன்று நேரத்துக்கு தக்கபடி மாறக்கூடாது" என அறிவுரை கூறினார்.

Wednesday, January 25, 2012

104. ' மூடர்களை திருத்த முடியாது' (நீதிக்கதை)



ஒரு பணக்காரரிடம் முட்டாள் வேலைக்காரன் ஒருவன் இருந்தான்.

அவன்..அந்த பணக்காரரைத் தேடி யார் வந்தாலும் பணக்காரரிடம் ' ராமசாமி வந்திருந்தார்...கிருஷ்ணசாமி வந்திருந்தார் ' என்பான்.

இதனால் வருபவர்கள் தங்களுக்கு வேலைக்காரன் மரியாதை தருவதில்லை என்று பணக்காரரிடம் முறையிட்டனர்.

பணக்காரர் உடனே வேலைக்காரனை அழைத்து ...'இனி என்னைத் தேடி வருபவர்களுக்கு நீ மரியாதை தர வேண்டும்..அவர்களை திரு.ராமசாமி..திரு.கிருஷ்ணசாமி என்று சொல்லவேண்டும்' என்றார்.

முட்டாள் வேலைக்காரன் ..அதற்கு பிறகு யார் வந்தாலும்..எது வந்தாலும் அதற்கு முன் ..திரு.. திரு.. என்ற அடை மொழியைச் சேர்த்தான்.

சில நாட்களில்....வேலைக்காரனின் ' திரு' பழக்கம் பணக்காரருக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

மீண்டும் வேலைக்காரனை கூப்பிட்டு ' இனி..உன் வாயால் ' திரு' என்ற சொல்லைக் கேட்டால் ...உன்னை வேலையை விட்டு நிறுத்தி விடுவேன் ' என்றார்.

வேலைக்காரனும் பயந்தபடியே ' சரி' என தலையை ஆட்டினான்.

ஒரு நாள் ..இரவு பணக்காரர் வீட்டிற்கு திருடர்கள் வந்தனர்....பணக்காரரின் அனைத்து பணம்,நகைகளை கொள்ளையடித்து ஓட முற்பட்டனர்.

அதை வேலைக்காரன் பார்த்துவிட்டான்.. வேகமாக பணக்காரர் படுக்கை அறைக் கதவை தட்டினான்.அவரும் கதவைத் திறந்தார்.உடன் வேலையாள் ' டன் வந்து டிண்டு '
போனான் என்றான்.

பணக்காரருக்கு என்ன சொல்கிறான் என்று புரியவில்லை.பலமுறை கேட்டும் .....நான் சொன்னால் என்னை வேலையை விட்டு துரத்தி விடுவீர்கள்' என்றான்.

பணக்காரரும் ..' உன்னை துரத்த மாட்டேன்..சொல்' என்றார்.

' திருடன் வந்து திருடிண்டு போனான் ' என்றான்...அப்போதுதான் பணக்காரருக்கு ' திரு ' என்ற வார்த்தையை சொல்லக் கூடாது என்று சொன்னது ஞாபகம் வந்தது.

மூடர்களை திருத்துவது என்பது மிகவும் கடினம் என்று பணக்காரர் உணர்ந்தார். தன் விதியை நொந்து கொண்டார்.

நாமும் மூடர்களுக்கு அறிவுரை சொல்லும்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.

Tuesday, January 17, 2012

103. " கண்ணுடையர் கற்றோர் " (நீதிக்கதை)




படிக்காமல்...சோம்பேறியாய் ஊரைச் சுற்றிக்கொண்டிருந்தான் மாடசாமி...

அவன் ஒரு நாள் தெருவில் நடந்து கொண்டிருந்தபோது...அவனுக்கு இணையாக...அந்த ஊர் பள்ளிக்கூடத்தின் தலைமையாசிரியரும் வந்து கொண்டிருந்தார்...

அவரைப் பார்த்த மக்கள்...அவருக்கு வணக்கம் சொன்னனர்.

தலையை அசைத்து தலைமை ஆசிரியர் அந்த வணக்கங்களை ஏற்றுக் கொண்டிருந்தார்.அதையெல்லாம் கவனிக்காத மாடசாமி மக்கள் தன்னைத்தான் வணங்குவதாக எண்ணி கர்வம் அடைந்தான்.

இது தினசரி நடந்து கொண்டிருந்து.

ஒரு நாள் தலைமை ஆசிரியர் சற்று நேரம் கழித்து பள்ளிக்கு செல்ல வேண்டியிருந்தது.ஆகவே தாமதமாக புறப்பட எண்ணினார்.

இதை அறியாத மாடசாமி...தெருவில் நடக்க ஆரம்பித்தான்...ஆனால் ஒருவரும் கண்டுகொள்ளவில்லை.யாரும் வணக்கமும் சொல்லவில்லை.

இதனால் கோபம் அடைந்தவன்...'நீங்கள் எல்லாம் எனக்கு ஏன் வணக்கம் சொல்லவில்லை' என மக்களிடம் கேட்டான்...

அதைக்கேட்டு சிரித்த மக்கள்....;மூடனே ...நாங்கள் ஏன் உனக்கு வணக்கம் சொல்ல வேண்டும்....நீ என்ன படித்தவனா...அல்லது உழைத்து சம்பாதிப்பவனா...நீ படிக்காத சோம்பேறி....தினசரி உன் தேவைகளுக்கே பிறரை எதிர்பார்ப்பவன்' என்றனர்.

அப்போதுதான் மடசாமிக்கு தான் செய்த தவறுகள் புரிய ஆரம்பித்தது.இது நாள் வரை மக்கள் மதித்தது தலைமை ஆசிரியரை என்று.

இனி சோம்பித் திரியாமல்...முடிந்தவரை படிக்க ஆரம்பிப்பேன் ...உழைத்து சம்பாதிப்பேன் என்றான்....

பின்னால் தலைமை ஆசிரியர் அப்போது வர மக்களுடன் சேர்ந்து அவனும் வணக்கம் சொன்னான்.

படிப்பறிவும்,கர்வம் இல்லாமையும்,கோபம் இல்லாமையும்,உழைப்பும் ஒவ்வொருவரையும் வாழ்க்கையில் உயர்த்திவிடும்.

' கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
 புண்ணுடையர் கல்லா தவர்.'

கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார்.கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும் என்கிறார் வள்ளுவர்.

Friday, January 6, 2012

102. மூத்தோர் சொல் மதிப்போம்...(நீதிக்கதை)



ஒரு பெரிய மரத்தினடியில் பாம்பு புற்று ஒன்று இருந்தது.

அம்மரத்தில் காகம் ஒன்று கூடு கட்டி குஞ்சு பொரிக்க எண்ணியது.

அப்போது ஒரு மூத்த காகம் ஒன்று...'அந்த மரத்தினடியில் பாம்பு புற்று இருக்கிறது.ஆகவே அம்மரத்தில் கூடு கட்டாதே' என்றது.ஆனால் மற்ற காகம் அதைக் கேட்கவில்லை.'

அடுத்த நாள் கூட்டினுள் முட்டையிட்டுவிட்டு காகம் உணவிற்காக வெளியே சென்றது.

காகம் இல்லாத நேரம் பொந்திலிருந்து ...பாம்பு ஒன்று மரத்திலேறி கூட்டினுள் இருந்த முட்டையைத் தின்றுவிட்டது.

வழக்கமாய் இது நடந்து கொண்டிருந்தது.அப்போதுதான் மூத்த காகத்தின் புத்திமதியை தான் கேட்கவில்லை என நினைத்தது.

உடன் அதனிடம் சென்று நடந்ததைக் கூறி....ஆலோசனைக் கேட்டது.

மூத்த காகம் ...' நான் அப்போதே கூறினேன் நீதான் கேட்கவில்லை ..சரி...இதற்கு ஒரு வழி பண்ணுகிறேன் என்று சொல்லிவிட்டு....அந்த நாட்டு ராணி குளிக்கும் தடாகத்திற்குச் சென்றது.

ராணி தன் முத்துமாலையைக் கழட்டி கரையில் வைத்துவிட்டு குளிக்கச்  சென்றாள். மூத்த காகம் அந்த மாலையை எடுத்துக்கொண்டு பறந்தது.

ராணி கூச்சலிட, வெளியேயிருந்த சேவகர்கள் உடனே காகத்தின் பின்னே ஓடினர்.மூத்த காகம் மரத்தினடியில் வந்து மாலையை புற்றினுள் போட்டது.

வந்த சேவகர்கள் பாம்பு புற்றை வெட்டினர். மாலையை எடுக்கும்போது பாம்பு வெளியே வந்தது.அதையும் வெட்டிக் கொன்றனர்.

அதற்கு பின் காகம் இடும் முட்டைகள் திருட்டு போகாமல் குஞ்சுகளாக வெளியே வந்தன.

நாமும் நம்மைவிட அனுபவசாலிகள் கூறும் அறிவுரை படி நடந்தால் நமக்கும் நல்லதே நடக்கும்.

Thursday, December 29, 2011

101. போதுமென்ற மனம்...(.நீதிக்கதை)



மோகன் படிக்கும் பள்ளியில் அவனுடைய நண்பனான கந்தனின் பிறந்த நாளுக்கு கந்தனின் தந்தை மாணவர்களுக்கு கொடுப்பதற்காக ஒரு கூடையில் நிறைய ஆப்பிள் பழங்களைக் கொண்டு வந்தார்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பழம் கொடுத்துக் கொண்டிருந்தார்.

கடைசியில் நின்று கொண்டிருந்த மோகனிடமும் அப்படியே ஒரு பழத்தைக் கொடுத்தார்..

கூடையில் மீதம் இரண்டு பழங்கள் இருப்பதைக் கண்ட மோகன் ..மேலும் கையை நீட்டினான்.

அவரும் இன்னொரு பழத்தை எடுத்து அவனிடம் தந்தார்.இன்னொரு கையில் அதை வாங்கினான் அவன்..அப்போதும் மோகனுக்கு திருப்தி ஏற்படவில்லை.

இரண்டு பழங்களையும் நெஞ்சில் அணைத்துக் கொண்டு ...அவன் மீண்டும் கையை நீட்டினான்.

அவர் கடைசியாக இருந்த பழத்தையும் அவனிடம் கொடுத்தார்.

அப்போது அவன் அணைத்திருந்த பழம் ஒன்று நழுவி தரையில் விழுந்தது. அதை எடுக்க குனிந்தான்.அப்போது மற்ற இரண்டு பழங்களும் கீழிருந்து உருண்டு ஓடி அருகில் இருந்த சாக்கடையில் விழுந்தன.

மோகன் கிடைத்த ஆப்பிள் பழங்களை நழுவ விட்டோமே என்று வருந்தினான்.

அப்போது கந்தனின் தந்தை ...'தம்பி..நான் ஒரு ஆப்பிள் கொடுத்தேன்.மற்றவர்களைப்போல அதுவே போதும் என நீ நினைக்கவில்லை.ஆனால் மேலும் மேலும் ஆசைப்பட்டாய்...கடைசியில் மற்றவர்களுக்கு கிடைத்த ஒரு ஆப்பிள் கூட உனக்கு கிடைக்கவில்லை...இனிமேலும் ..அதிகம் ஆசைப்படாது கிடைத்தது போதும் என்று நினை...போதுமென்ற மனம் அனைவருக்கும் வேண்டும் என்றார்.

பின்னர் தனது கைப்பையிலிருந்த ஒரு ஆப்பிளை எடுத்து மோகனுக்கு கொடுத்தார்.  மோகன் வெட்கி தலை குனிந்தான்.

Saturday, December 24, 2011

100. நூற்றுக்கு நூறு




(ஒரு மாறுதலுக்காக ..பெற்றோருக்கான கதை இது)

கணக்கில் நூற்றுக்கு தொண்ணூற்றி ஏழு மதிப்பெண்கள் வாங்கிய கண்ணன் விடைத்தாளை சந்தோஷத்துடன் அப்பாவின் முன் நீட்டினான்.

பையனின் மகிழ்ச்சியில் தானும் கலந்து கொண்டு தன் மகனை தட்டிக்கொடுக்காமல்....நீ வாங்க முடியாத அந்த மூன்று மதிப்பெண்கள் என்ன என்றும் ..ஏன் அதை கோட்டை விட்டாய் என்றும் சற்று கோபத்துடன் கேட்டார் கண்ணனின் தந்தை சரவணன்.

மகிழ்ச்சியோடு வந்த கண்ணன் ....முகத்தை தொங்கப் போட்டுக்கொண்டு திரும்பினான்.

கண்ணனின் தந்தைக்கு கணக்கு ஆசிரியராய் இருந்தவர் அரவாமுதன்...அவரே தன் மகனுக்கும் ஆசிரியராய் அமைந்து விட்டதால்....அடுத்த நாள் பள்ளியில் அவரை சந்தித்தார் கண்ணனின் தந்தை.

ஆசிரியர்,'  'சரவணா உன் மகன் மிகவும் புத்திசாலி...97 மதிப்பெண்கள் பெற்ற அவனை பாராட்டாமல் மூன்று மதிப்பெண்கள் எங்கே போயிற்று என்று கேட்கிறாய்...
ஆனால் நீ படிக்கும் போது எழுபது மதிப்பெண்களுக்கு மேல் வாங்கியதில்லை.. உன் தந்தை வந்து ...நீ வாங்காமல் விட்ட அந்த முப்பது மதிப்பெண்கள் பெரிது என எண்ணாமல் உன்னை பாராட்டினார்....அந்த புத்தி உனக்கு ஏன் இல்லாமல் போனது.....நீ மட்டுமல்ல ...உன்னைப்போல அனைத்து பெற்றோரும், .தங்கள் குழந்தைகள்
படிப்பதைக்கண்டு பெருமைப்படுங்கள். .குழந்தைகளுக்கு இன்றைய வயதில் உள்ள புத்திசாலித்தனம்...அந்த வயதில் உங்களுக்கு இருந்ததா என்று சிந்தியுங்கள்.' என்றார்.

ஆசிரியரின் கூற்றிலிருந்த உண்மை கண்ணனின் தந்தையை சுட்டது.

Monday, December 19, 2011

99. தகுதிக்கு மீறிய செயல் (நீதிக்கதை)




ஒரு காட்டில் சிற்றெறும்பு ஒன்று தன் கூட்டத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தது.

அது காட்டில் விலங்குகள் தன்னைவிட வலிமை மிக்க விலங்குகளால் உணவிற்காக கொல்லப்படுவதைப் பார்த்ததும்...

அந்த விலங்குகளைப் போல தங்கள் இனமும் வலிமை அடையவேண்டும் என விரும்பியது.

ஆகவே அது இறைவனை வேண்டி தவம் இருந்தது...

ஒரு நாள் இறைவன் அந்த எறும்பின் முன் தோன்றி "'எறும்பே உனக்கு என்ன வேண்டும் " என்றார்.

இறைவன் தன்முன்னே வந்ததுமே....மிகவும் மகிழ்ந்த எறும்பு... " நாங்கள் கடித்தால் சாக வேண்டும் ".அந்த வரம் வேண்டும்'. என்றது.

எறும்பு கேட்டதைக் கண்டு சிரித்த இறைவன் ' நன்கு யோசித்துத்தான், கேட்கிறாயா? என்றார்.எறும்பும் 'ஆம்.'.யோசித்துத்தான் கேட்கிறேன். என்றது

'அப்படியே ஆகட்டும்' என்று கூறி மறைந்தார் இறைவன்.

தங்கள் இனத்திற்கு வலிமை சேர்த்துவிட்டதால் மகிழ்ந்த சிற்றெறும்பு ....தனக்கு கிடைத்த வரத்தை சோதிக்க எண்ணி...காட்டில் வேட்டையாட வந்த வேடனின் காலைக் கடித்தது.

உடனே வேடன்...காலைக் கடித்த எறும்பை ' பட் ' என அடிக்க...அது இறந்தது.

பாவம் எறும்பு...அது இறைவனிடம் கேட்ட வரம்..' நாங்கள் கடித்தால் சாக வேண்டும்' என்பதே..யார் சாக வேண்டும் என கேட்கவில்லை..

தான் கேட்ட வரமே தங்கள் இனத்துக்கு எமனாக வந்துவிட்டதை அது உணரவில்லை.

எறும்பு தன் தகுதிக்கு மீறி ஆசைப்பட்டதே அதன் மரணத்திற்கு காரணமாய் இருந்துவிட்டடது.