Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Saturday, December 24, 2011

100. நூற்றுக்கு நூறு




(ஒரு மாறுதலுக்காக ..பெற்றோருக்கான கதை இது)

கணக்கில் நூற்றுக்கு தொண்ணூற்றி ஏழு மதிப்பெண்கள் வாங்கிய கண்ணன் விடைத்தாளை சந்தோஷத்துடன் அப்பாவின் முன் நீட்டினான்.

பையனின் மகிழ்ச்சியில் தானும் கலந்து கொண்டு தன் மகனை தட்டிக்கொடுக்காமல்....நீ வாங்க முடியாத அந்த மூன்று மதிப்பெண்கள் என்ன என்றும் ..ஏன் அதை கோட்டை விட்டாய் என்றும் சற்று கோபத்துடன் கேட்டார் கண்ணனின் தந்தை சரவணன்.

மகிழ்ச்சியோடு வந்த கண்ணன் ....முகத்தை தொங்கப் போட்டுக்கொண்டு திரும்பினான்.

கண்ணனின் தந்தைக்கு கணக்கு ஆசிரியராய் இருந்தவர் அரவாமுதன்...அவரே தன் மகனுக்கும் ஆசிரியராய் அமைந்து விட்டதால்....அடுத்த நாள் பள்ளியில் அவரை சந்தித்தார் கண்ணனின் தந்தை.

ஆசிரியர்,'  'சரவணா உன் மகன் மிகவும் புத்திசாலி...97 மதிப்பெண்கள் பெற்ற அவனை பாராட்டாமல் மூன்று மதிப்பெண்கள் எங்கே போயிற்று என்று கேட்கிறாய்...
ஆனால் நீ படிக்கும் போது எழுபது மதிப்பெண்களுக்கு மேல் வாங்கியதில்லை.. உன் தந்தை வந்து ...நீ வாங்காமல் விட்ட அந்த முப்பது மதிப்பெண்கள் பெரிது என எண்ணாமல் உன்னை பாராட்டினார்....அந்த புத்தி உனக்கு ஏன் இல்லாமல் போனது.....நீ மட்டுமல்ல ...உன்னைப்போல அனைத்து பெற்றோரும், .தங்கள் குழந்தைகள்
படிப்பதைக்கண்டு பெருமைப்படுங்கள். .குழந்தைகளுக்கு இன்றைய வயதில் உள்ள புத்திசாலித்தனம்...அந்த வயதில் உங்களுக்கு இருந்ததா என்று சிந்தியுங்கள்.' என்றார்.

ஆசிரியரின் கூற்றிலிருந்த உண்மை கண்ணனின் தந்தையை சுட்டது.