Tuesday, November 30, 2010

52..காலத்தால் செய்த உதவி -நீதிக்கதை.

பிரதீப் நன்கு படிக்கும் மாணவன்.அவனது லட்சியமே நன்கு படித்து டாக்டராக ஆகி ஏழைகளுக்கு இலவச வைத்தியம் பார்க்க வேண்டும் என்பதே.

ஆனால் அவனது குடும்பத்தில் அவன் உடன் பிறந்தவர்கள் ஐந்துபேர்.ஆகவே அவனுக்குத் தேவையானதைத் தரக்கூட அவனது பெற்றோர்களால் முடியவில்லை.

இந்நிலையில் ஒருநாள் சரியான சாப்பாடுக் கூட சாப்பிடாது..பள்ளி பரீட்சைக்குக் கிளம்பினான் அவன்.

வெளியே நல்ல வெயில்..பசி வேறு வயிற்றைக் கிள்ள..தெரு ஓரம் மயங்கி விழுந்தான்.

தெருவில் வந்துக் கொண்டிருந்த மூதாட்டி ஒருத்தி அதைப் பார்த்தார்.உடன்..தன் கையில் வாங்கி வந்துக் கொண்டிருந்த பாலை ஒரு தம்ளரில் ஊற்றி அவனுக்கு அளித்தாள்.அதைப் பருகிய பிரதீப் பின் தெம்புடன் தேர்வுக்குச் சென்றான்.

காலம் ஓடியது..

அந்த மூதாட்டி நோய் வாய் பட்டாள்.ஒரு மருத்துவமனையில் அண்டை வீட்டார் அவளைச் சேர்த்தனர்.அவளுக்கு நல்ல சிகிச்சைக் கொடுக்கப் பட்டது.உடல் நன்கு தேறியது..பின்னரே அவளுக்கு மருத்துவ மனைக்கான செலவை எப்படிக் கொடுப்பது என்ற எண்ணம் வந்தது.

அவளை வீட்டிற்குப் போகலாம் என்ற மருத்துவர் ஒருவர் கட்டணத்திற்கான பில்லைக் கொடுத்தார்.அதில் கட்டணம் ஒரு தம்ளர் பால்..அதுவும் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு விட்டது என்றிருந்தது.

புரியாத மூதாட்டி..அந்த மருத்துவரைப் பார்த்தாள்.அவர் "அம்மா..நான் யார் என்று தெரியவில்லையா...நான் தான் அன்று ஒருநாள் பரீட்சைக்குப் போனபோது மயங்கி விழுந்து..உங்களால் பாலை வாங்கி அருந்தி புத்துயிர் பெற்று பரீட்சைக்கு சென்ற மாணவன்.அன்று உங்கள் உதவி எனக்கு மிகவும் பெரிதாய் இருந்தது' என்றார்.

காலத்தால் செய்த உதவி சிறிதாய் இருந்தாலும்..அதைப் பெரிதாக நினைத்து மறக்கக் கூடாது

Thursday, November 18, 2010

51.மானும்..ஓநாயும் (நீதிக்கதை)

ஒரு ஊரில் மான் கூட்டம் ஒன்று வசித்து வந்தன.அவற்றுள் ஒரு சின்ன மான் மிகவும் புத்திசாலியாய் இருந்தது.

அதே நேரம் தன் புத்திசாலித்தனத்தைக் கண்டு மற்ற மான்களிடம் சற்று கர்வமாகவே நடந்துவந்தது.

ஒரு நாள் எல்லா மான்களும் மேய்ச்சல் முடிந்து திரும்புகையில் இருட்ட ஆரம்பித்தது..ஆனால் அப்போதும் அந்த

சின்ன மான் திரும்ப வரவில்லை..

'இருட்டில் எந்தமிருகமாவது வந்து உன்னை அடித்து உண்டு விடும்'என்று வயதான மான் ஒன்று அறிவுரை கூறியும்

சின்ன மான் கேட்கவில்லை..'சரி' என மற்ற அனைத்து மான்களும் திரும்பின..

அந்த நேரம் அங்கு வந்த ஒரு ஓநாய் ஒன்று சின்ன மான் தனியாய் இருப்பதைப் பார்த்து ...அதை கொன்று உண்ண விரும்பியது..

உடன் சின்ன மான் புத்திசாலித்தனமாக' என்னை நீ உண்பதில் எனக்கு ஆட்சேபணையில்லை..ஆனால் அதற்கு முன் உன் இனிய குரலில்

பாட்டு ஒன்று கேட்க ஆசை'என்றது.

ஓநாயும் சின்ன மானின் கடைசி விருப்பத்தை கேட்டுவிட்டு போகட்டும் என்ற எண்ணத்தில் தன் கொடூரக்குரலால் பாட ஆரம்பித்தது.

அதன் குரல் கேட்ட வேட்டைக்காரர்கள் சிலர் அங்கு ஓடி வந்து ஓநாயை கொன்றனர்.

சின்ன மான் உயிர் தப்பியது.

கர்வம் இல்லாமல் ...மூத்த மான் சொன்ன அறிவுரையை கேட்டிருந்தால் சின்ன மானுக்கு இந்த நெருக்கடி வந்திருக்காது.

ஓநாயும் தன் கொடூரக்குரலை பற்றி புரிந்துகொண்டு பாடாமல் இருந்திருந்தால் இறந்திருக்காது

Thursday, November 11, 2010

50.ஓநாயும் ஆடும் (நீதிக்கதை)





ஒரு காட்டில் ஒரு ஓநாயும்...ஒரு வெள்ளாடும் இருந்தது,

கொழுத்த அந்த ஆட்டின் மீது ஓநாய்க்கு எப்போதும் ஒரு கண்...அதை அடித்து சாப்பிடவேண்டும் என்று.

அதற்காக பலமுறை ஓநாய் அந்த ஆட்டை சண்டைக்கு இழுத்தது.

ஓநாயின் குணம் அறிந்த ஆடு..ஓநாயிடம் இருந்து தன் புத்திசாலித்தனத்தால் தப்பிவந்தது.

ஒரு சமயம்..ஒரு நதியின் நடுவில் குறுகலான ஒரு பாலத்தில் ஆடு சென்றது .அப்பாலம் ஒரு நபர் சென்றால்..ஒருவர்

எதிரே வர முடியாத அளவு குறுகலானது.

பாலத்தில் ஆடு வருவதைக்கண்டு,பெரும்பகுதியை ஆடு கடந்ததும்,ஓநாய் அந்த முனையிலிருந்து ஆட்டை நோக்கி வந்தது..

இப்போது ஆடும்.ஓநாயும் எதிரெதிரே வந்துவிட்டன.

ஆடு ஓநாயிடம் ..'நான் கிட்டத்தட்ட பாலத்தைக் கடந்துவிட்டேன்...சற்று நீங்கள் பின் சென்று எனக்கு இடம் கொடுத்தால்..நான்

சென்றுவிடுவேன் ..'என்றது.

இதுதான் சரியான தருணம் என எண்ணி ஓநாய் ஆட்டை வீண் சண்டைக்கு இழுத்தது ''நான் முட்டாள்களுக்கு இடம் தர மாட்டேன்'

நீயே எனக்கு இடம் கொடுத்துப் பின்னால் போ' என்றது.

ஓநாயின் நோக்கம் அறிந்த ஆடு ..'நான் முட்டாள்களுக்கு முதல் இடம் தருவேன்' என தான் பின்னால் சென்று..ஓநாய் பாலத்தை கடக்கச் செய்தது.ஓநாயும் தன் செயல் இம்முறையும் பலிக்கவில்லையே என சென்றுவிட்டது.

ஆடு...தன் புத்திசாலித்தனத்தால்..ஓநாயை முட்டாள் என மறைமுகமாக சொன்னதுடன்..கெட்டவர்களுடன் வீண்வாதம் கூடாது என்று உணர்ந்ததால்

உயிர் பிழைத்தது.

Wednesday, November 3, 2010

49-முயலும் ஆமையும் (நீதிக்கதை)



ஒரு மரத்தடியில் ஆமையிடம் ஓட்டப்பந்தயத்தில் தோற்ற முயல் இளப்பாறிக் கொண்டிருந்தது.அதனிடம் வென்ற ஆமை..தனது ஓடும் திறமையில்தான் வென்றோம் என்னும் இறுமாப்பில் முயலைப் பார்த்து'மீண்டும் ஓட்டப் பந்தயத்திற்கு வருகிறாயா?'எனக் கேட்டது.
தனது அலட்சியப் போக்கால் முன்னர் தோல்வியடைந்த முயல்..சரியான தருணத்திற்குக் காத்திருந்தது.ஆமைக் கேட்டதுமே முயல் 'சரி' எனச் சொல்லி விட்டது.
இம்முறை தூங்கிவிடாது, ஒரே தாவலாய்த் தாவி வெற்றிக் கோட்டை அடைந்தது முயல்.
ஆமையும் ..அப்போது தான் முயல் போல தன்னால் வேகமாக ஓட முடியாது என்பதை உணர்ந்து..வெட்கித் தலை குனிந்தது.
முயலும் சென்ற முறை தன்னை உயர்வாக எண்ணியதால்..ஓடுகையில் தூங்கச் சென்றதை உணர்ந்து..அத் தவறை இம்முறை செய்யாது ஓடி வென்றது.
தவறு செய்வது என்பது அனைவரும் செய்யக் கூடியதே..
அது போல ஒரு முறை தவறு செய்துவிட்டால் அத்தவறை மீண்டும் செய்யாமல் கவனமாய் இருக்க வேண்டும்.

Friday, October 29, 2010

48-குல்லா வியாபாரியும் ..குரங்கும் - நீதிக்கதை

ஒரு ஊரில்  ஒரு குல்லா வியாபாரி இருந்தார்.அவர் தலைக்குல்லாய்களை  ஒரு மூட்டையாகக்  கட்டி  தலையில் சுமந்து வியாபாரம்  செய்து வந்தார் .
வெயிலில்  அவர் அலைவதால் ..அவரும் ஒரு குல்லா அணிந்திருந்தார்    .
ஒருநாள்  குல்லாக்களை  விற்க..தலையில் சுமந்தப்படி  சென்ற அவர் ..ஒரு மரத்தின் கீழ்  மூட்டையை இறக்கி வைத்து விட்டு கண்ணயர்ந்தார் .
அந்த மரத்தில் நிறைய குரங்குகள் இருந்தன.அவை கீழே இறங்கி வந்து மூட்டையைப்  பிரித்து அதில் இருந்த குல்லாய்களை ..அதனதன் தலைகளில் அணிந்துக் கொண்டன.
தூக்கம் கலைந்து எழுந்த வியாபாரி ..குல்லா மூட்டையைக் காணாது ..மரத்தை ஏறிட்டு நோக்க ..குரங்குகள் ஒவ்வொன்றும் குல்லாய் அணிந்திருந்தன.
அவற்றிடம் இருந்து குல்லாயை எப்படி வாங்குவது என யோசித்த வியாபாரி ..குரங்குகள் நாம் செய்வதையே திரும்பச் செய்யும் என படித்திருந்தார் .
அதனால் , தன் தலையிலிருந்த  குல்லாயைக் கழட்டி கீழே எறிந்தார் .
அதைப் பார்த்த குரங்குகள் ..தங்கள் தலையில் இருந்த குல்லாய்களையும் கீழே வீசின .
வியாபாரி எல்லாவற்றையும் எடுத்து மீண்டும் மூட்டையாகக் கட்டிக் கொண்டு வியாபாரத்திற்குக்
கிளம்பினார் .
  எந்த காரியத்திலும்..நாம் சற்று  சிந்தித்து செயல்பட்டால் வெற்றி அடையலாம் .

இந்தக் கதையில் வியாபாரி தன் புத்தியை உபயோகித்ததால்  அவரது குல்லாக்களும்
சேதமின்றி திரும்பக் கிடைத்தது .

Thursday, October 21, 2010

47- தென்னையும் நாணலும் - நீதிக்கதை

ஒரு ஆற்றங்கரையின் ஓரத்தில் ஒரு தென்னை மரமும்.நாணலும் இருந்தன.
தென்னை மரத்துக்கு தான் உயர்ந்தவன் என்ற எண்ணம் இருந்தது.ஆகவே அவ்வப்போது நாணலை அது கேலி செய்து வந்தது.
'நீ மிகவும் சிறியவன்..மழை,காற்று,வெயில் இவற்றை உன்னால் தாங்க முடியாது.நானோ உயர்ந்தவன் ...நான் எல்லாவற்றையும் தாங்குவேன்...எனக்கு
கவலை இல்லை' என்றது தென்னை நாணலைப் பார்த்து.
சில நாட்கள் கழிந்தன்.
மழைகாலம் வர... ஒரு நாள் புயல் ஏற்பட்டது...
புயல் காற்றில் நாணல் தலை வணங்கியது..தென்னையோ புயலை எதிர்த்தது..
தென்னை வேரோடு சாய்ந்தது.
நாணல் எந்த சேதமும் அடையவில்லை.
நாமும் தென்னையைப்போல கர்வமாய் இல்லாமல் நாணலைப்போல அனைவரிடமும் பணிவாக இருக்கவேண்டும்.

Wednesday, October 13, 2010

46 - பழுத்த இலையும் பள்ளமும்(நீதிக்கதை)

ஒரு பெரிய மரம் ஒன்று இருந்தது..அம்மரத்தின் வேரருகே ஒரு பள்ளம் ஒன்றும் இருந்தது..
இலையுதிர் காலம் வந்தது...
மரத்தில் இருந்த இலைகள் பழுத்து கீழே விழ ஆரம்பித்தன.அப்போது ஒரு பழுத்த இலை கீழே பள்ளத்தில் விழுந்தது...அந்த இலை பள்ளத்தைப் பார்த்து ...என்னை உன் பள்ளத்தில் ஏற்றுக்கொள்
இல்லாவிடில்...அடிக்கும் காற்றில் நான் எங்கே போவேன் என தெரியாமல் அல்லாடுவேன் என்றது..
அந்த பழுத்த இலையால் தனக்கு என்ன லாபம் என்று கருதிய பள்ளம்"காப்பாற்ற முடியாது" என்று கூறி பழுத்த இலையை வெளியே தள்ளியது.
பெரும் காற்று அடிக்க இலை பறந்து எங்கோ சென்று விட்டது.
மற்றுமொரு நாள்..வேறொரு இலை பள்ளத்தில் விழுந்தது..மழை வேறு பெய்ய ஆரம்பித்தது..உடனே பள்ளம்..இலயைப் பார்த்து ..
'என்னை மூடிக்கொள்.. இல்லாவிடில் இந்த மழை நீர் என்னுள் நிரம்பி என்னை மூழ்கடித்துவிடும்..மண் சரிந்து என்னை நீக்கிவிடும்' என்று கெஞ்சியது.
அதற்கு அந்த இலை
'அன்று என் சகோதர இலை உன்னை உதவி வேண்டிய போது நீ உதவவில்லை...அதுவும் காற்றில் எங்கோ சென்று மறைந்துவிட்டது..ஆனால் நீ உதவி கேட்கும்போது நான் உன்னைப்போல இருக்கமாட்டேன்'. என்று சொல்லிவிட்டு ..அந்த பள்ளத்தின் மேல்..அதை முழுவதுமாக மறைத்தது இலை.
மழை பெய்து ஓய ..பள்ளமும் காப்பாற்றப்பட்டது.பின் இலை பள்ளத்தைப்பார்த்து 'இனியும் உதவி என நம்மை நாடிவருபவருக்கு..நம்மால் ஆன உதவியை செய்யவேண்டும் என்பதைக் கற்றுக்கொள்'என்றது.
நாமும் பிறருக்கு உதவி செய்வதை ஒரு குறிக்கோளாகக் கொள்ளவேண்டும்.