Tuesday, November 30, 2010

52..காலத்தால் செய்த உதவி -நீதிக்கதை.

பிரதீப் நன்கு படிக்கும் மாணவன்.அவனது லட்சியமே நன்கு படித்து டாக்டராக ஆகி ஏழைகளுக்கு இலவச வைத்தியம் பார்க்க வேண்டும் என்பதே.

ஆனால் அவனது குடும்பத்தில் அவன் உடன் பிறந்தவர்கள் ஐந்துபேர்.ஆகவே அவனுக்குத் தேவையானதைத் தரக்கூட அவனது பெற்றோர்களால் முடியவில்லை.

இந்நிலையில் ஒருநாள் சரியான சாப்பாடுக் கூட சாப்பிடாது..பள்ளி பரீட்சைக்குக் கிளம்பினான் அவன்.

வெளியே நல்ல வெயில்..பசி வேறு வயிற்றைக் கிள்ள..தெரு ஓரம் மயங்கி விழுந்தான்.

தெருவில் வந்துக் கொண்டிருந்த மூதாட்டி ஒருத்தி அதைப் பார்த்தார்.உடன்..தன் கையில் வாங்கி வந்துக் கொண்டிருந்த பாலை ஒரு தம்ளரில் ஊற்றி அவனுக்கு அளித்தாள்.அதைப் பருகிய பிரதீப் பின் தெம்புடன் தேர்வுக்குச் சென்றான்.

காலம் ஓடியது..

அந்த மூதாட்டி நோய் வாய் பட்டாள்.ஒரு மருத்துவமனையில் அண்டை வீட்டார் அவளைச் சேர்த்தனர்.அவளுக்கு நல்ல சிகிச்சைக் கொடுக்கப் பட்டது.உடல் நன்கு தேறியது..பின்னரே அவளுக்கு மருத்துவ மனைக்கான செலவை எப்படிக் கொடுப்பது என்ற எண்ணம் வந்தது.

அவளை வீட்டிற்குப் போகலாம் என்ற மருத்துவர் ஒருவர் கட்டணத்திற்கான பில்லைக் கொடுத்தார்.அதில் கட்டணம் ஒரு தம்ளர் பால்..அதுவும் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு விட்டது என்றிருந்தது.

புரியாத மூதாட்டி..அந்த மருத்துவரைப் பார்த்தாள்.அவர் "அம்மா..நான் யார் என்று தெரியவில்லையா...நான் தான் அன்று ஒருநாள் பரீட்சைக்குப் போனபோது மயங்கி விழுந்து..உங்களால் பாலை வாங்கி அருந்தி புத்துயிர் பெற்று பரீட்சைக்கு சென்ற மாணவன்.அன்று உங்கள் உதவி எனக்கு மிகவும் பெரிதாய் இருந்தது' என்றார்.

காலத்தால் செய்த உதவி சிறிதாய் இருந்தாலும்..அதைப் பெரிதாக நினைத்து மறக்கக் கூடாது

No comments: