அன்று பள்ளி விடுமுறை என்றதால் சில சிறுவர்கள் சேர்ந்து, அந்த ஊரில் இருந்த ஒரு குளக்கரைக்கு வந்தனர்.
அந்தக் குளத்தில் பல தவளைகள் குதித்து விளையாடிக் கொண்டிருந்தன.
அதைக் கண்ட சிறுவர்கள் மகிழ்ச்சி மேலிட..அந்தத் தவளைகள் மீது யார் அதிகம் கல் எறிகிறார்கள் பார்க்கலாம் என்று போட்டி போட்டுக் கொண்டு, கரையில் இருந்த கற்களை எடுத்து தவளைகள் மீது வீச ஆரம்பித்தார்கள்.இதனால் பல தவளைகள் காயம் அடைந்தன.அப்போது, தைரியமாக ஒரு தவளை..அவர்களிடம் வந்து..
"கல்லெறிவதை நிறுத்துங்கள்.உங்கள் விளையாட்டால் சற்று முன் வரை மகிழ்வோடு விளையாடிக் கொண்டிருந்த எங்களில் பலர் காயமடைந்து வேதனையில் உள்ளனர்.நீங்கள் சந்தோஷமாய் இருக்க வேண்டுமென..எங்களை வேதனைப் படுத்தலாமா?:"என்றது.
சிறுவர்களும் தங்களது தவறை உணர்ந்து தவளையிடம் மன்னிப்புக் கேட்டனர்.
நமது மகிழ்ச்சி..இன்னொருவர் வேதனையால் ஏற்படக்கூடாது





