Monday, June 24, 2013

125. மூடரின் செயல் (நீதிக்கதை)



' மரம் நடு விழா ' ஒரு ஊரில் நடைபெறுவதாக இருந்தது.

இது சம்மந்தமாக அரசு மூன்று பேரை வேலைக்கு அமர்த்தியது.அவர்களது வேலை....

முதலாவது நபர் ... பத்தடி தூரத்துக்கு ஒன்றாக பள்ளம் தோண்ட வேண்டியது ஆகும்.
இரண்டாவது நபர்...அந்த பள்ளத்தில் ஒரு செடியை நட வேண்டும்.
மூன்றாவது நபர்...பள்ளத்தை மண் கொண்டு மூடவேண்டும்.

அவர்கள் இந்த வேலையை முதல் நாள் அந்த ஊரின் பத்து தெருக்களில் செய்து முடித்தனர்.
அடுத்த நாள் பத்து தெருக்கள் என ஏற்பாடு.

அடுத்த நாள்.. பள்ளம் தோண்டுபவர் தோண்டிக்கொண்டு சென்றார்.
செடியை நட வேண்டிய இரண்டாவது நபர் வேலைக்கு வரவில்லை.
அது பற்றிக் கவலைப்படாத மூன்றாவது நபர் தோண்டிய பள்ளத்தை மூடிக்கொண்டே வந்தார்.

இதைப் பார்த்த வழிப்போக்கர் ஒருவர் ...' ஏம்பா..நீ பள்ளம் தோண்டியதும் ...இவர் அதை மூடி விடுகிறாரே..என்ன விஷயம் ...' என்றார்.
அதற்கு முதல் நபர் ....' ஐயா..செடி நடு விழா எங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதில் என் வேலை பள்ளம் தோண்டுபவது...
செடி நடுவது இரண்டாம் நபர் வேலை....
இதோ நிற்கும் மூன்றாம் நபர் பள்ளத்தை மூடவேண்டும்.
செடி நடும் நபர் இன்று வரவில்லை.
அதனால் வேலை தடைபெறக்கூடாது என எங்கள் இருவர் வேலையை சரியாக செய்து விடுகிறோம்' என்றார்.

இந்த மூடர்களை என்ன செய்வது?

நம்மில் பலர் கூட ....என்ன வேலை செய்கிறோம் ...எதற்காக அதை செய்கிறோம் என்றெல்லாம் தெரியாமல் இயந்திரத்தனமாய் காரியங்களைச் செய்கிறோம்..
அதைவிடுத்து ...நாம் செய்யும் வேலையைப் பற்றி முழுவதும் அறிந்து செய்ய வேண்டும்.
இல்லையேல் இந்த மூடர்களின் கதிக்குத்தான் ஆளாவோம்.

Sunday, May 12, 2013

124.பெற்றோரைப் பேண்.....(நீதிக்கதை)





முன்னொருகாலத்தில் புண்டரிகன் என்று ஒருவன் இருந்தான்.

அவன் இறைவனை வேண்டுவதைவிட தன்னெய்பெற்ற தாய் தந்தையருக்கு பணிவிடை செய்வதையே பெறும் பேறாகச் செய்துக் கொண்டிருந்தான்.

அவனது செயல்களைக் கண்ட இறைவன் மனம் மகிழ்ந்து அவனுக்குக் காட்சியளித்தார்.

அந்த நேரம் அவன் தன் பெற்றொர்களை கவனித்துக் கொண்டிருந்தான். இறைவன், தான் வந்திருப்பதைச் சொல்லியும் அவன் மனம் மாறவில்லை.

" இறைவா...எனக்காக சற்றுப் பொறுங்கள்.பெற்றோர்களுக்கான என் கடமையை முடித்துவிட்டு உங்களைக் கவனிக்க வந்து விடுகிறேன்' என்றான்.

இறைவனும்....புண்டரிகன் மீது கோபம் கொள்ளாது...காத்திருந்து அவனைப் பார்த்துவிட்டு தன் நல்லாசிகளை வழங்கிச் சென்றார்.

ஒருவருக்கு இறைவன் வழிபாடு முக்கியம் ..அதைவிட முக்கியமானது....தன்னைப் பெற்றவர்களை பேணிக்காப்பது என்பதை நாம் உணரவேண்டும்.

Monday, April 8, 2013

123. உனக்கான கடமையைச் செய் (நீதிக்கதை)



ஒரு நாள் நல்ல வெயில்...

சரவணன்,குடையை எடுத்துக்கொண்டு,காலில் செருப்பைப் போட்டுக்கொண்டு வெளியே சென்று வந்தான்.

வீட்டினுள் நுழைந்ததும் செருப்பை வெளியில் விட்டுவிட்டு குடையை உள்ளே எடுத்து சென்றான்.

அப்போது குடை செருப்பைப் பார்த்து சிரித்து.' நீ என்னை விட தாழ்ந்தவன்.ஆகவே தான் உன்னை வெளியே விட்டுவிட்டு என்னை உள்ளே எடுத்து செல்கின்றனர்' என்றது.

செருப்புக்கு மிகவும் வருத்தம் ஏற்பட்டது.

அடுத்த நாள் நல்ல மழை....வெளியே சென்றுவிட்டு வந்த சரவணன் வீட்டினுள் நுழையும் முன் செருப்பைக் கழட்ட...குடை செருப்பைப் பார்த்து சிரித்தது..

உடன் செருப்பு சரவணனைப் பார்த்து,' சரவணா...உன் பாதங்களை வெயிலிருந்தும்....குப்பை...மணல்..கல் ஆகியவற்றிலிருந்தும் நான் காக்கிறேன் .. ஆனால்  என்னை வீட்டிற்கு வெளியே விட்டு விடுகிறாய்.. தலையை மட்டும் காக்கும் குடையை உள்ளே எடுத்து செல்கிறாயே? என வருந்தியது.

உடனே சரவணன்,' செருப்பே..இதோ பார்...மழையில் குடை நனைந்ததால் அதையும் இன்று வெளியில் வைத்துள்ளேன்.ஆண்டவன் படைப்பில் எந்தப்பொருளும் சரி...எந்த உயிரினங்களும் சரி...அவற்றில் ஏற்றத்தாழ்வு என்பதே இல்லை.ஒவ்வொன்றும் அதற்கான கடமையைச் செய்கிறது.இதை உணராது ..நீங்களும் சரி..மக்களும் சரி ஒருவருக்கொருவர்..இகழ்ந்தும்,புகழ்ந்தும் பேசுகிறீர்கள்.உன் கடமையை ஒழுங்காக செய்வதை நினைத்து பார்.உனக்கு திருப்தி ஏற்படும். தவிர்த்து, குடை மனிதனுக்கு சில தினங்களுக்கு மட்டுமே பயன் படும்.ஆனால்,நீயோ மனிதர்கள் வெளியே கிளம்பும் போதெல்லாம் உன்னை வருத்திக் கொண்டு, அவர்களுக்காக உழைத்துத் தேய்கிறாய்.பிறருக்கு உதவுவதே நோக்கமாகக் கொண்ட நீ வருந்த வேண்டிய அவசியமே இல்லை.' என்றான்.

நாமும், பிறருக்கு பிரதிபலனை எதிர்பாராது உதவி செய்து, நம் கடமையை ஆற்ற வேண்டும்.தவிர்த்து..நமக்குள் நீ உயர்ந்தவன்..நான் உயர்ந்தவன் என்ற சர்ச்சைகளில் ஈடுபடக்கூடாது.

ஒவ்வொருவரும்...ஒவ்வொரு விதத்தில் உயர்ந்தவர்களே!

Monday, April 1, 2013

122. தீங்கு செய்யக்கூடாது ...(நீதிக்கதை)






பாஸ்கர் என்ற குறும்புக்காரச் சிறுவன் ஒருவன் இருந்தான்.அவன் பிறரை துன்புறுத்தி அவர்கள் படும் வேதனையைக் கண்டு மிகவும் சந்தோஷப்படுவான்.

அவனது வீட்டில் வளர்க்கும் பூனையைத் தூக்கி தூர எறிவான்...விழுந்த வலியுடன் சிறிது நேரம் எழுந்திருக்காது படுத்திருக்கும் பூனையின் வலியைக் கண்டு சிரிப்பான்.

அவனது வீட்டருகில் ஒரு குளம் இருந்தது.அந்தக் குளத்தில் அவன் வீட்டில் வளர்த்து வரும் ' டாமி ' என்ற நாயைத் தூக்கிப் போடுவான்.நாய் மூச்சிரைக்க நீந்தி கரைக்கு வரும்போது ...மீண்டும் தூக்கிப் போட்டு ...நாய் அல்லாடுவதைக் கண்டு சிரிப்பான்.

ஒரு நாள்...அப்படி செய்து கொண்டிருந்தபோது ...கால் வழுக்கி குளத்தில் அவன் வீழ்ந்து விட்டான்.அவனுக்கோ நீச்சல் தெரியாது...தண்ணீர் கால்களை இழுத்தது...'ஐயோ...யாரேனும் உதவுங்கள்' என கத்தினான்.

சுற்று வட்டாரத்தில் எந்த மனிதருமே இல்லை. ஆனால் பாஸ்கரின் குரலை எங்கேயோ இருந்த 'டாமி' கேட்டது...உடனே ஓடி வந்தது.அவன் இருக்கும் நிலை அறிந்து ...அதுவும் குளத்தில் குதித்து...பாஸ்கரின் சட்டையை பிடித்து இழுத்தவாறு...அவனையும் கரைக்கு இழுத்து வந்து அவனது உயிரைக் காப்பாற்றியது.

தான் நாயை துன்புறுத்தியிருந்தாலும் ...அது தன் உயிரைக் காத்தது நினைத்து ...பாஸ்கர் நாயை அன்புடன் அணைத்துக்கொண்டான். அது முதல் அவன் யாரையும், எதையும் துன்புறுத்துவதில்லை.

நாமும் பிறரை துன்புறுத்தக்கூடாது.அப்படி செய்தால் நமக்கே கேடு விளையும்.

இதையே திருவள்ளுவர்
     பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
     பிற்பகல் தாமே வரும்.
என்றார்.

Saturday, March 23, 2013

121.அறிவுக்கூர்மையும் ..வெளவாலும்..(நீதிக்கதை)




சண்முகத்தின் அப்பா தினமும் அவன் இரவு தூங்கப் போகும்போது நீதிக்கதைகளை அவனுக்கு சொல்வது வழக்கம்.

ஒரு நாள் அவர் அவனிடம் ' அறிவுக்கூர்மையிருந்தால் வரும் ஆபத்திலிருந்து தப்பலாம்' என்றார்..
அது எப்படி என்றான் சண்முகம்...
அப்பா அதற்கு அவனுக்கு ஒரு கதையைக் கூறினார்.

ஒரு காட்டில் இரு பூனைகள் இருந்தன.அதில் ஒரு பூனை எலிகளை மட்டுமே பிடித்து உண்ணும்.மற்றதோ பறவைகளை பிடித்து உண்ணும்.

ஒரு நாள் எலிகளைப் பிடிக்கும் பூனையிடம் வெளவால் ஒன்று மாட்டிக்கொண்டது.அது எலிகளை மட்டுமே உண்ணும் பூனை என்று வெளவாலுக்குத் தெரிந்தது..'உடனே அது....எலிகளை மட்டுமே உண்ணும் நீ...பறவையான என்னை உண்ணலாமா?' என்றது.
உடனே பூனை...' நீ பறவையா' என்று கேட்டது.' ஆம்...எனக்கு இறக்கைகள் இருக்கிறதே...நீ பார்க்கவில்லையா. நான் பறக்கும் பறவை தான்' என்றது.

பூனையும் வெளவாலை பறவை என நினைத்து விட்டுவிட்டது.

வேறொரு நாள்...அந்த வெளவால் பறந்து செல்லும்போது ..அதை பறவைகளை மட்டுமே உண்ணும் பூனை தாவிப்பிடித்தது.

உடனே வெளவால் அதனிடம் 'பூனையே....பறவைகளை மட்டும் உண்பவர் நீ...ஆனால் நான் பறவை இல்லையே," என்றது.

அதற்கு பூனை உனக்கு இறக்கைகள் உள்ளதே என்றது.

' அது இறக்கைகள் அல்ல...என்னுடைய மேல் தோல்...என் மீசையைப்பார்...நான் எலி தான் என்றது.

அதை எலி என நினைத்து அப்பூனை விட்டுவிட்டது

வௌவால் அறிவுக்கூர்மையாய் இருந்ததால் தான்..இரு பூனைகளிடமும் அவைகளுக்குத் தகுந்தார் போல பேசி..தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது.

Monday, February 25, 2013

120 - அவரவர் தொழில்..(நீதிக்கதை)

           


ஒரு சலவைத் தொழிலாளி இருந்தான்.அவன் தினந்தோறும் தன் கழுதையின் முதுகில் சுமைகளை ஏற்றி..குளத்திற்குச் சென்று துணிகளைத் துவைத்து...கழுதையின் மேல் வைத்து திரும்பி வருவான்.அவனுடன் அவனது செல்லப் பிராணியான நாயும் செல்லும்.

கழுதை, என்ன உழைத்தாலும்..அதை சலவைத் தொழிலாளி பாராட்டுவதில்லை.தேவையான உணவு மட்டும் அளித்து வந்தான்.

ஆனால், நாயுடன் அவன் கொஞ்சி விளையாடுவான்.தான் உண்ணுவதையெல்லாம் அதற்கும் கொடுப்பான்.நாயும் வாலை ஆட்டியவாறே..அவனிடம் பேசுவது போல குரைக்கும்.கழுதைக்கு இது ஆத்திரத்தைக் கிளப்பியது.

ஒருநாள் இரவு..

நாய் குரைப்பதைக் கேட்டு, எழுந்துவந்த சலவைத் தொழிலாளி, திருடன் ஒருவன் துணிகளைக் களவாட வந்ததையும், அவனை நாய் குரைத்து விரட்டியதையும் அறிந்து, நாயைத் தூக்கி கொஞ்சினான்.

இதையெல்லாம்..பார்த்துக் கொண்டிருந்த கழுதை, விவரம் அறியாது,  தானும் தன் முதலாளியிடம் நல்ல பெயர் வாங்க எண்ணியது.

நள்ளிரவு நேரம்...எழுந்து கத்த ஆரம்பித்தது.அதனது நாராசக் குரலைக் கேட்ட தொழிலாளி ..வெளியே வந்து, தன் தூக்கத்தைக் கெடுத்த கழுதையை நையப் புடைத்தான்.

கழுதை வேதனையுடன் முணகியது.சலவைத் தொழிலாளி படுக்கச் சென்றதும்...நாய் ஆறுதலாக கழுதையிடம் வந்து அதை நக்கிக் கொடுத்தது.பின்னர் சொன்னது,'நான் என் வேலையைச் செய்தேன்..அதற்கு பாராட்டுக் கிடைத்தது.அதுபோல நீயும்..உன் வேலையை மட்டும் ஒழுங்காகச் செய்து வா..என்றேனும் பாராட்டுக் கிடைக்கும்.தவிர்த்து இன்னொருவர் போல நீயும் இருக்க எண்ணாதே.அவரவர் வேலையை அவரவர் செய்ய வேண்டும்.இல்லையேல் துன்பப் பட வேண்டியது தான்' என்றது.

நாமும்..நமக்கான வேலையை ஒழுங்காகச் செய்ய வேண்டுமே அல்லாது, பிறரது வேலையில் தலையிட்டால் துன்பமே அடைவோம்.

Friday, February 15, 2013

119 - மயிலும்..கொக்கும்.. (நீதிக்கதை)

               


ஒரு சோலையில் அழகான மயில் ஒன்று இருந்தது.அதற்கு தன் அழகுக் குறித்து மிகவும் கர்வம் இருந்தது.ஒருநாள் அந்த சோலைஅருகே இருந்த குளக்கரையில் அது தன் தோகையை விரித்து ஆட ஆரம்பித்தது.

அக்குளக்கரையில் கொக்கு ஒன்று...பெரிய மீன் வருமா..அதைக் கொத்திக் கொண்டு ஒடலாமா..? என்ற எண்ணத்தில் ஒற்றைக் காலில் நின்று கொண்டு இருந்தது.

கொக்கைப் பார்த்த மயில், 'கொக்கே! நீயும் நல்ல வெண்மை நிறத்தில் அழகாகத் தான் இருக்கிறாய்.ஆனாலும் அதனால் என்ன பயன்? என்னைப் போல உன்னால்..அழகாக ஆட முடியாது" என்றது.

அப்போது, பாம்பு ஒன்று, மயிலிடம் வர, விரித்த தோகையுடன் மயில் தப்பி ஓட பார்த்தது.உடன் கொக்கு மயிலிடம்.'மயிலே! பார்த்தாயா..உயிருக்கு பயந்து உன்னால் ஓடத்தான் முடிகிறது.ஆனால், என்னை யாரும் தாக்க முயன்றால்..நான் பறந்துடுவேன்.அதுபோல பறக்க உன்னால் முடியாது' என்றது.

மேலும் கொக்கு மயிலிடம்,'கடவுள் உயிரினங்களைப் படைக்கும் போது, ஒவ்வொரு உயிரினத்திற்கும் , ஒவ்வொரு திறமையைக் கொடுக்கிறார்,அதனால் உலகில், திறமை இல்லாதது என ஏதும் இல்லை.அதே நேரம், எல்லாத் திறமையைக் கொண்ட உயிரினமும் கிடையாது' என்று கூறியபடியே, கிடைத்த மீன் ஒன்றைக் கவ்விக் கொண்டு பறந்தது.

அதே நேரம், தன்னைக் கொத்த வந்த பாம்பை, கழுகு ஒன்று பறந்து வந்து கொத்திச் சென்றதையும் மயில் பார்த்தது.