Tuesday, February 5, 2013

118 -கடலின் பெருமை (நீதிக்கதை)




ஒருநாள் நதி ஒன்று, கிணறு ஒன்றிடம், 'நீயும் என்னைப் போல கடலில் கலந்துவிடு வா' என்றது.

அதற்கு கிணறு, 'நீ கடலில் கலப்பதற்கு முன், ஆயிரக்கணக்கான மக்களுக்கு குடிநீராகவும்,உணவு விளைய பாசனத்திற்கும் பயன்படுகிறாய்.ஆனால் கடலில் கலந்தபின்னர் உனது தனித்துவத்தை இழந்துவிடுகிறாய்.பயனில்லா உப்பு நீராகி விடுகிறாய்.அதுபோல ஆக நான் விரும்பவில்லை.என் காலம் முழுதும் மக்களுக்கு பயன்படவே விரும்புகிறேன்' என்றது.

இதைக் கேட்ட நதி, 'கிணறே..நீ தவறாகப் பேசுகிறாய்.நாம் தனித்துவத்துடன் இருப்பதற்குக் காரணமே கடல் தான்.அது பார்க்க ஆரவாரமாய் இருந்தாலும், ஆரவாரம் இல்லாமல் தன் பணியைச் செய்து வருகிறது.கடலில் உள்ள நீர்தான் ஆவியாகி, மழைமேகமாக மாறி மழைத் தருகிறது. மக்கள் வாழ்வில் வறட்சியைப் போக்க பெரும் பங்கு வகிக்கிறது.நாட்டின் வெப்பதட்ப நிலையை நிர்ணயிக்கிறது ..மழையில்லையேல், ஒருநாள்..நீ, நான் எல்லாம் வறண்டுவிடுவோம்.' என்றது.

அப்போதுதான் கிணற்றிற்கு கடலின் முக்கியத்துவம் புரிந்தது.ஒருசிலருக்கு பயன் படும் தான் செருக்குடன் இருக்கும் போது..உலகிற்கே பயன்படும் கடலின்..விளம்பரமின்மைக் கண்டு வியந்தது.

இதையெல்லாம் கண்டு கொள்ளாமல்..கடல் தன் பணியை ஆற்றிக் கொண்டிருந்தது.

நாமும்..நம்மால் முடிந்த நல்ல காரியங்களைச் செய்யும்போது..அதற்கான விளம்பரத்தை எதிர்ப்பார்க்காது...நம் மனநிறைவை மட்டுமே எண்ணி செயல்பட வேண்டும்.

Thursday, January 31, 2013

117.செய் நன்றி மறவாமை (நீதிக்கதை)




ஒரு கிராமத்தில் குரங்கொன்று இருந்தது.

ஒரு நாள் அது மரத்தில் ஒடி விளையாடியபோது,உச்சாணிக் கொம்பில் இருந்து தவறி விழுந்து படு காயமடைந்தது.
அதனால் எழுந்து நடக்க முடியவில்லை.உணவு தேடவும் வழியில்லை.மரத்தின் அடியிலே  படுத்துக் கிடந்தது.

அம்மரத்தின் அருகில் ஒரு சிறு குடிசையில் ஒருவன் வாழ்ந்து வந்தான்.அவன் அந்தக் குரங்கைப்பார்த்து மனம் வருந்தி அதை தன் குடிசைக்கு எடுத்து சென்று அடிபட்ட காலுக்கு மருந்திட்டு, உண்ண  உணவும் கொடுத்தான்.

நாளடைவில் குரங்கு குணமானது.அப்போதுதான் அந்த குடிசையை நன்கு பார்த்தது. குடிசையின் உச்சியில் ஒரு பெரிய ஓட்டை இருந்தது.அதன் வழியே வெய்யிலும்,மழை என்றால் மழை நீரும் குடிசைக்குள் விழுவது தெரிந்தது.

குரங்கு உடனே வெளியே வந்து,மரத்தில் ஏறி,இலைகளையும் சிறு கிளைகளையும் எடுத்து வந்து,குடிசையின் உச்சிக்கு சென்று ஓட்டையை அடைத்தது,

இப்போது குடிசையில் ஓட்டையும் இல்லை,வெய்யிலோ,அல்லது மழையின் பாதிப்போ இல்லை.

அந்த ஏழை தனக்கு செய்த உதவியை குரங்கு எண்ணி,தன்னால் முடிந்த பிரதியுபகாரத்தை செய்தது பாராட்டுக்குரியது.

நாமும் நமக்கு யாரேனும் சிறு உதவி செய்தாலும் அதை மறக்காமல் பெரிதாக எண்ணி ,நம்மால் முடிந்த நல்ல காரியங்களை
உதவியவர்களுக்கு செய்ய வேண்டும்

Monday, January 21, 2013

116. ஒன்று படுவோம்..(நீதிக்கதை)




காடு ஒன்றில் சிங்கம் ஒன்று இருந்தது.அது தினமும் மற்ற மிருகங்களைக் கொன்று பசியாறி வந்தது.நாளாக ஆக அதற்கும் வயதாகி, வலுவிழந்தது.அதனால் தனக்குத் தேவையான உணவை வேட்டையாட அதனால் அலைய முடியவில்லை.

ஒருநாள் அது நரி ஒன்றைக் கூப்பிட்டு, தனக்கு அன்றாடம் தேவைக்கான உணவிற்கான மிருகத்தை, நயமாகப் பேசி அழைத்து வருமாறும், அப்படி அது அழைத்து வரும் மிருகத்தை அடித்து தான் தின்றது போக , மீதத்தை நரி உண்ணலாம் என்றும் கூறியது. நரியும், அதற்கு ஒப்புக் கொண்டது.

காட்டை ஒட்டி இருந்த நகரில் நான்கு பசுக்கள் தினமும் ஒற்றுமையாய் புல் மேய்ந்து வந்தன.அவற்றைப் பார்த்த நரிக்கு நாவில் எச்சில் ஊறியது.இப்பசுக்களை சிங்கத்திடம் அழைத்துச் சென்றால் தினமும் தனக்கு உணவு கிடைக்கும் என எண்ணி அவற்றிடம் சென்று பேசியது.ஆனால் ஒற்றுமையாய் இருந்த பசுக்கள் நரியை விரட்டி அடித்தன.

நரி ஒரு தந்திரம் செய்தது..பசுக்களின் ஒற்றுமையைக் குலைக்க முடிவெடுத்தது.

முதலில் ஒரு பசுவிடம் சென்று..'எனக்குத் தெரிந்து..மற்ற பசுக்களை விட நீ இளைத்து இருக்கிறாய்.உனக்குத் தேவையான புல் கிடைக்கவில்லை என எண்ணுகிறேன்.அருகிலேயே..ஒரு புல்வெளி உள்ளது.பசுமையான புற்கள்.நீ தனியே வந்தால் அவற்றை உண்டு ருசிக்கலாம்.ஆனால் உன் நண்பர்கள் உன்னுடன் வந்தால், உன் பங்கு சிறிதாகிவிடும்' என்றது.

பச்சைப் பசேல் என்றிருக்கும் புல்லைத் தின்ன ஆசைப்பட்ட அந்த பசு..மற்ற மூன்று பசுக்களிடமும் சொல்லாது, நரியுடன் சென்றது.நரி அப்பசுவை, சிங்கம் இருக்குமிடம் அழைத்துச் சென்றது.சிங்கமும், தனியே வந்த அப்பசுவைக் கொன்று உண்டது.

அப்படியே, மற்ற பசுக்களையும் பிரித்து நரி அழைத்துச் சென்று சிங்கத்திற்கு உணவாக்கியது.

பசுக்கள் ஒற்றுமையாய் இருந்தவரை அவற்றை அணுக முடியாத நரி, அந்த ஒற்றுமையைக் குலைத்து, அவற்றைப் பிரித்து அழித்துவிட்டது.

நாமும், நம் குடும்பம், சுற்றம், சூழலுடன் ஒற்றுமையாய் இருந்தால்..நம்மை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது.

Thursday, December 27, 2012

115 எல்லாம் நன்மைக்கே.. (நீதிக்கதை)



மகத நாட்டு மன்னன் ஒருவன் தனது அமைச்சருடன் வேட்டைக்குச் சென்றான்...வில்லை  எடுத்து..அம்பைப் பொருத்தி நாணை இழுக்கையில்..அவன் கட்டை விரல் துண்டாகிக்  கீழே வீழ்ந்தது.

இதைக் கண்ட அமைச்சர், 'மன்னா..கவலை வேண்டாம்.எல்லாம் நன்மைக்கே' என்றார்.

தன் விரல் போனதை, அமைச்சர் 'நன்மைக்கே' என்றதால் கோபமுற்ற மன்னன், அந்த அமைச்சரை சிறையில் அடைத்தான்.

சில நாட்கள் சென்றன..

இம்முறை மன்னன்..தனியாக வேட்டைக்குச் சென்றான்.அப்போது அங்கு இருந்த காட்டுவாசிகளிடம் சிக்கினான்.அவர்கள் தங்களது எல்லை சாமிக்கு நரபலி கொடுக்க ஒரு மனிதனைத் தேடிக் கொண்டு இருந்தார்கள்.மன்னனைக் கண்டதும், அவரை, நரபலி கொடுக்க சிறை பிடித்தனர்.

மன்னனை, குளிப்பாட்டி, சந்தனம் பூசி, பலி பீடத்திற்கு அழைத்து வந்தனர்.அப்போது..அக் காட்டுவாசிகளின் தலைவன், மன்னனுக்கு, கட்டை விரல் இல்லாததைப் பார்த்து, "ஊனமுள்ளவரை பலி கொடுப்பது வீண்' என்று கூறி மன்னனை விடுவித்தான்.

அப்போது மன்னனுக்கு அமைச்சர் சொன்னது நினைவிற்கு வந்தது..'எல்லாம் நன்மைக்கே'

ஆம்..அன்று விரல் போனது, நல்லதற்கே.இல்லையேல், இன்று உயிர் போயிருக்குமே..என எண்ணியவன்..ஊருக்கு வந்ததும் , அமைச்சரை விடுவித்தான்.

நாமும், நமக்கு ஏதேனும் துன்பம் வந்தால், உடனே, வாடிவிடாது..'எல்லாம் நன்மைக்கே' என்று எண்ண வேண்டும்.

அப்போதுதான்..நாளடைவில் துன்பம் அகலும்..துன்பத்தின் வலி அதிகம் தெரியாது.    

Sunday, November 18, 2012

114 .தேவையில்லாதது ஏதுமில்லை..... (நீதிக்கதை)





முனியனிடம் சில ஆடுகளும் ஒரு நாயும் இருந்தன. தினமும் அவன் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வான்.கூடவே அவனது நாயும் செல்லும்.

மர நிழலில் முனியன் படுத்து உறங்க ...ஆடுகள் புல் மேயும்...அந்த ஆடுகளை ஓநாய் போன்றவை அணுகாமல் நாய் காக்கும்.

முனியன் தூங்கி எழுந்ததும்,தான் சாப்பிட்டுவிட்டு நாய்க்கும் சாப்பாடு அளிப்பான்.இது ஆடுகளுக்கு பிடிப்பதில்லை.

ஒரு நாள் ஆடுகள் முனியனிடம் ' நாங்கள் உனக்கு பால் தருகிறோம்...நீ உயிர் வாழ உதவுகிறோம்..ஆனால் நீயோ எங்களை நாங்களாகவே மேய விட்டுவிட்டு ...சும்மாயிருக்கும் நாய்க்கு உணவளிக்கிறாயே ' என்றன.

அப்போது முனியன் ஆடுகளிடம் ' நீங்க சொல்வது சரி..ஆனால் சற்று சிந்தித்து பாருங்கள் இந்த நாய் ...நீங்களெல்லாம் மேயும் போது உங்களைப் பார்த்துக் கொள்ளாவிட்டால் ஓநாய் வந்து தினசரி உங்களில் ஒருவரை கொண்டு சென்று உணவாக்கிக்கொள்ளும்.
அப்படி நேராமல் உங்கள் உயிரைக் காக்கிறது இந்த நாய்' என்றான்.

ஆடுகளும் சிந்தித்துப் பார்த்துவிட்டு நாயின் முக்கியத்துவத்தை உணர்ந்தன.

.தேவையில்லாதது என எதுவும் கிடையாது.சற்று சிந்தித்தால் தேவையில்லாதவை என நினைப்பவையின் தேவையும் அவசியமும் புரியும்.

Friday, November 9, 2012

113. உறுதி மொழியும் சிங்கமும் ...(நீதிக்கதை)





அருகிலிருந்த காட்டிலிருந்து சிங்கம் ஒன்று ஒரு கிராமத்திற்குள் புகுந்து விட்டது.மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் பயத்தில் இருந்தனர்.

அப்போது அக்கிராமத்தில் இருந்த தைரியசாலி ஒருவன்..ஒரு இரும்பு கூண்டை தயார் செய்து ..அதனுள் ஒரு ஆட்டை கட்டி கிராம எல்லையில் வைத்திருந்தான்.  

கிராமத்திற்குள் அன்று வந்த சிங்கம் ஆட்டைப் பார்த்தது .கூண்டைப் பார்க்கவில்லை...ஆகவே ஆட்டை உண்ண எண்ணி கூண்டுக்குள் அது போக கூண்டு உடனே மூடிக் கொண்டது.

சிங்கம் கூண்டுக்குள் மாட்டிக்கொண்டதால் இப்போது அதன் எண்ணம் ஆட்டின் மீது செல்லாமல் தான் தப்பிக்கும் வழியை நாடியது.


கூண்டைப் பற்றி முன்னமே அறிந்திருந்த ஆடு...சிங்கத்திடம் ..' சிங்கமே..உன்னை நான் காப்பாற்றுகிறேன் ஆனால் நீ வெளியே வந்ததும் என்னைக் கொல்லக்கூடாது' என்றது. சிங்கமும் அவ்வாறே உறுதி அளித்தது...கட்டியிருந்த ஆட்டை விடுவித்தது.

ஆடு தாவித்தாவி ...கூண்டின் கதவைத்திறந்தது. வெளியே வந்தன சிங்கமும்..ஆடும்.

உடன் ...சிங்கம் ஆட்டைக் கொல்லப்பார்த்தது. ஆடோ ..'உன்னை நான் காப்பாற்றினேன்.அதற்காக நீ அளித்த உறுதி மொழியை மீறலாமா:,,என்றது.

'அப்போது என் உயிர் முக்கியம்..இப்போது என் உணவு முக்கியம்' என்றது சிங்கம்.

அப்போது அந்த வழியே வந்த நரியைப் பார்த்து ..ஆடு நரியை நீதி கேக்கலாமா...? என்றது.சிங்கமும் ஒப்புக்கொண்டது.
நடந்த விவரங்களை அறிந்த நரி ....'எனக்கு நீங்கள் சொல்வது சரிவர விளங்கவில்லை......முதலில் சிங்கம் கூண்டில்
எந்நிலையில் இருந்தது; என்றது.

சிங்கமும் கூண்டுக்குள் சென்று ' இந்நிலையில் தான் ' என்றது.

மின்னல் வேகத்தில் நரி கூண்டின் கதவை மூடியது.பின்னர் ஆட்டைப் பார்த்து ' உன்னை உண்ணும் சிங்கத்திற்கு உதவலாமா?'
என்றது.

ஆடு நரிக்கு நன்றி சொல்லிவிட்டு விரைந்தது.

நாமும் ஒருவருக்கு உதவும் முன் அவருடைய தராதரம் அறிந்து அதற்கேற்ப உதவவேண்டும்

அதுபோன்று ஒருவருக்கு நாம் கொடுக்கும் உறுதி மொழியையும் தவறக்கூடாது.சிங்கம் உறுதி மொழியை தவறியதால் தான் அவதிக்குள்ளானது.

Thursday, November 1, 2012

112 - கடவுளும் காற்றும் (நீதிக்கதை)





ஒரு நாள் மழையும் புயலுமாக இருந்தது. பலத்தக் காற்று வீசி பல மரங்கள் முறிந்து வீழ்ந்தன. மக்களும் அவதிக்குள்ளாயினர்.
அப்போது பலர் ' காற்று இப்படி வீசுகிறதே' என காற்றை சாடினர்.

இதனால் காற்று மனம் வருந்தி, கடவுளிடம் சென்று, ' இறைவா...நான் மனிதர்க்கு நன்மையே செய்கிறேன்.அவர்கள் உயிர் வாழும் மூச்சாகவும் உள்ளேன்.ஆனால் இதையெல்லாம் மறந்து மக்கள் என்னை ஏசுகின்றனரே ". என்றது.

அதற்கு கடவுள்... ' எப்போதும் மனிதர்க்கு உதவும் வரை புகழுண்டு.ஆனால் அவர்களுக்கு தீங்கிழைக்கும் போது திட்டு தான் கிடைக்கும்.உன்னை கோபமாகத்தான் பேசுவார்கள்' என்றார்.

அவர் மேலும் சொன்னார் ' நீயே புல்லாங்குழலில் நுழைந்து இசையாய் வெளியேறினால் மக்கள் மகிழ்கின்றனர். உதைப்பந்தில் அடைபட்டுக் கிடக்கும்போது அவர்களாலேயே உதைபடுகிறாய்.இதிலிருந்து என்ன தெரிகிறது...நீ மனிதனுக்கு பயன்படாமல் அடைத்துக் கிடந்தால் உதைபடுகிறாய்.அது போல் தான்...உன்னால் தீமை நிகழும்போது மனிதர்களின் ஏச்சுக்கும்,பேச்சுக்கும் ஆளாகிறாய்' என்றார்.

அது முதல் காற்று தன்னால் முடிந்தவரை மக்களுக்கு சேவையே செய்வேன் என்று குளிர்ந்து வீச ஆரம்பித்தது.

நமக்கும் யாரேனும் தீங்கிழைத்தாலும், ஏசினாலும்,அவர்களுக்கு நன்மையே செய்யவேண்டும்.