Thursday, August 30, 2012

111. " பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் " (நீதிக்கதை)




முருகன் ஒரு கடவுள் பக்தன்.
தமக்கு என்ன வேண்டுமானாலும் அந்த இறைவனை வேண்டினால் போதும் என எண்ணுபவன்.

பல நாட்களாய் அவன் கடவுளை தன் வீட்டிற்கு விருந்து உண்ண வரும்படி வேண்டிக்கொண்டிருந்தான்.

ஒரு நாள் கடவுள் அவன் முன் தோன்றி அன்று இரவு விருந்துண்ண அவன் வீட்டிற்கு வருவதாகக் கூறினார்.

முருகனும் தடபுடலாய் விருந்து ஏற்பாடு செய்தான்.

அவன் இறைவனுக்காக காத்திருக்கையில்....ஒரு வயதான பிச்சைக்காரர்..' ஐயா பசிக்குது. உணவு கொடுங்கள் ' என்று கேட்டார்.

' கடவுள் என் வீட்டிற்கு வரும் நேரம்...நீ இங்கே இருக்காதே..போ..போ..' என பிச்சைக்காரரை விரட்டினான் முருகன்.

ஆனால் இரவு கடவுள் விருந்துண்ண முருகன் வீட்டிற்கு வரவில்லை.

அடுத்த நாள் முருகன் ...இறைவனிடம் " நேற்று ஏன் வரவில்லை" என வினவினான்.

இறைவனும் ...' நான் சொன்னபடி நேற்று வந்தேன்..பிச்கைக்காரர் உருவில்....நீ தான் விரட்டி விட்டாய்' என்றார்.

பின் ..மனிதர்களுக்கு நீ செய்யும் தொண்டே எனக்கு செய்யும் தொண்டு என்று உணர்ந்து கொள் என்றார் கடவுள்.

அன்று முதல் முருகனும் தன்னால் இயன்றவரை ஏழை மக்களுக்கு உதவி வந்தான்.

Wednesday, April 18, 2012

110. நம்பிக்கை துரோகம் கூடாது (நீதிக்கதை)




பணக்காரன் ஒருவன் வெளியூருக்கு செல்ல வேண்டியிருந்தது.அதனால் தன் சொத்துக்களை பாதுகாக்க தன் நண்பன் மாணிக்கம் என்பவனை நம்பி ஒப்படைத்துவிட்டு சென்றான்.

பணக்காரனின் நிலங்களின் நடுவே ஒரு குளம் இருந்தது.அக்குளத்தில் பலவகையான மீன்கள் வளர்க்கப்பட்டன.

ஒரு நாள் ...மீனுக்கு ஆசைப்பட்ட மாணிக்கம்..வலைவீசி மீன்களைப் பிடித்தான்.அச்சமயம் ஊருக்கு சென்றிருந்த பணக்காரன் திரும்பி வந்தான்.

தன் சொத்துக்களை பாதுகாக்க வேண்டி அமர்த்தப்பட்ட தன் நண்பன் மாணிக்கம் குளத்தில் மீன்களைபிடிப்பதைக்கண்டு " மற்றவர்கள் தவறு செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய நீயே தவறு செய்கிறாயே?" என்று கேட்டுவிட்டு அவனை வேலையிலிருந்து நீக்கி விட்டார்.

மாணிக்கம் ..தன்னை நம்பிய பணக்காரனுக்கு துரோகம் செய்து விட்டதை எண்ணி பின்னர் வெட்கமடைந்தான்.

நாமும்...நம்மை நம்பி பிறர் ஒப்படைக்கும் காரியங்களை நம் காரியங்களைப்போல செய்யவேண்டும்.

நம்மை நம்பியவர்களை ஏமாற்றக்கூடாது.

Thursday, April 5, 2012

109. உள்ளதும் போய்விடும்...(நீதிக்கதை)




ஒரு கொக்கு ஒன்று நதிக்கரையில் நின்றபடியே...நீரில் மீன் வரும்போது கொத்தித்தின்ன காத்திருந்தது.

பல சிறிய மீன்கள் நதியில் கொக்கின் கண்ணில் பட்டாலும்....அது பேராசையுடன் பெரிய மீன் வருகைக்குக் காத்திருந்தது.

அப்போது பெரிய மீன் ஒன்று ஆற்றில் வர ...அதைக் கொத்தி விழுங்கியது கொக்கு...ஆனால் கொக்கின் தொண்டை சிறியதாய் இருந்ததாலும் ....மீன் பெரியதாய் இருந்ததாலும் மீன் கொக்கின் தொண்டையில் அகப்பட்டுக்கொண்டது.

மீனை துப்பவும் முடியாமல்......விழுங்கவும் முடியாமல் ...மூச்சுத் திணறிக் கொக்கு மயங்கி விழுந்தது,

அதைப் பார்த்துக் கொண்டிருந்த மற்றொரு கொக்கு ..' என்னைப் போல சின்ன மீன்கள் ஒன்றிரண்டை கொத்தி சாப்பிடாமல் பேராசையுடன் .....பெரிய மீனை விழுங்கின உனக்கு
இந்த தண்டனை தேவை தான்' என்றது.

நாமும்...நமக்கு கிடைக்கும் பொருளை வைத்து சந்தோஷம் அடைய வேண்டுமேயன்றி பெரும் பொருள் வேண்டி பேராசைப்பட்டால் உள்ளதும் போய்விடும்.


Saturday, March 17, 2012

108. இறைவனின் பரிசு (நீதிக்கதை )




குமரனும்,சரவணனும் நண்பர்கள்...குமரன் வகுப்பில் படு சுட்டி....எதிலும் முதல் மாணவனாகத் திகழ்ந்ததுடன் ...அனைவரிடமும் நல்ல பெயரையும் எடுத்தவன்.

சரவணனோ..நேர் எதிர்.படிப்பிலும் சுமார்...அவ்வப்போது...சிறு சிறு திருடுகளிலும் ஈடுபட்டு வந்தான்.

ஒரு நாள் சரவணனின் தந்தை குமரனிடம்..' உன் நண்பன் சரவணனை திருத்த வேண்டியது உன் கடமை அல்லவா.....' என்றார்.

அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டான் குமரன்.

ஒரு நாள் வகுப்பில்...பக்கத்து நண்பன் ஒருவன் பையிலிருந்து ...பணத்தை சரவணன் திருடுவதை...குமரன் பார்த்துவிட்டான்.
சரவணன் உடன் குமரனிடம் ' குமரா...இதை நீ ஒருவன் பார்த்துவிட்டாய்...இதை யாரிடமும் சொல்லிவிடாதே...இதுவரை நான் திருடுவதை யாரும் பார்த்ததில்லை...
இன்று இத்திருட்டு நம் இருவருக்கு மட்டுமே தெரியும்' என்றான்.

உடன் குமரன்..'சரவணா..நீ அப்படித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறாய்.இதுவரை நீ செய்த திருட்டுகள் உனக்கு மட்டுமே தெரியும் என்று.
நீ செய்வதை,சொல்வதை ..இன்னொருவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்.அதை மறந்துவிடாதே...இன்று..இத்திருட்டு ..என்னையும் சேர்த்து மூவருக்குத் தெரியும்" என்றார்.

' யார்....யார்...; என பயத்துடன் கேட்டான் சரவணன்.'

 "நாம் செய்யும் நல்லது..கெட்டது எல்லாவற்றையும் அவன் நம்முடன் இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறான்....
அவன் நம் செயலுக்கு ஏற்ப பின்னாளில் தண்டனையைக் கொடுப்பான். அவன் தான் இறைவன் "' என்றான். குமரன்.

குமரன் சொல்வதுபோல ....நாம் செய்யும் எல்லாவற்றையும் இறைவன் பார்த்துக்கொண்டிருக்கிறான்.
அதற்கான பயனை நமக்கு பரிசாக அளிக்கிறான்.

Monday, February 27, 2012

" சிறுவர் உலகம் "....புத்தக வெளியீடு




" சிறுவர் உலகத்தில் எழுதிய முதல் 54  நீதிக்கதைகள் வானதி பதிப்பகத்தாரால் "சிறுவர் உலகம் " என்ற பெயரிலேயே முதல் பாகமாக வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அனைவரிடமும் பகிர்ந்து கொள்கிறேன்.

புத்தகம் பற்றிய விவரம் வருமாறு:

புத்தகத்தலைப்பு சிறுவர் உலகம் - 1 (நீதிக்கதைகள்)

வெளியீட்டாளர் வானதி பதிப்பகம்
                       23. தீனதயாளு தெரு
                       தி.நகர். சென்னை- 17.
                       ph.24342810/ 24310769

108 பக்கங்கள் விலை ரூபாய் 50/-

மீதியுள்ள கதைகள் இரண்டாவது பாகமாக விரைவில் வெளிவர உள்ளது.

Saturday, February 18, 2012

107. அச்சம் கலந்த மரியாதை..(நீதிக்கதை)




அது ஒரு அழகிய கிராமம்.கிராமத்தின் வெளியே ஒரு ஆலமரம் இருந்தது.அதன் அடியில் ஒரு பாம்பு புற்றில் பாம்பு ஒன்று வாழ்ந்து வந்தது.

அந்த பாம்பு..தன்னை அடிக்க வருபவர்களை தற்காப்புக்காக கடிக்கும்.ஆகவே மக்கள் யாரும் அந்த புற்றிடம் செல்லமாட்டர்கள்.

ஒரு நாள் ஒரு ஞானி வந்து மரத்திடம் அமர்ந்தார்.அவர் தன்னை துன்புறுத்த வந்ததாக எண்ணிய பாம்பு...அவரை கடிக்க வந்தது...ஆனால் அந்த ஞானியைப் பார்த்ததும்
அவர் காலடியில் விழுந்து எழுந்தது.

மகான் பாம்பிடம்," நீ நிறைய பேரைக் கடித்து நிறைய பாவங்களைத் தேடிக்கொண்டாய்..இனி யாரையும் கடிக்காதே..' என்றார்.

அந்த மகான் சென்றதும்...அன்று முதல் பாம்பு யாரையும் கடிப்பதில்லை.

அது சாதுவாகி விட்டதால்..அதைக் கண்டதும் கிராம மக்கள் அதன் மீது கற்களை வீசி காயப்படுத்தினர்.உடலெங்கும் காயத்துடன் தன் பொந்தினுள் சென்று மறைந்தது பாம்பு.

சில நாட்கள் கழித்து, மீண்டும் அந்த ஞானி வந்தார்.அவர் வந்தது தெரிந்த பாம்பு புற்றிலிருந்து வெளியே வந்து அவரை வணங்கியது.
பின் " ஐயா...நீங்கள் சொன்ன அறிவுரையைக் கேட்டு..நான் யாரையும் கடிக்காமல் சாதுவாய் இருந்ததால் ..மக்களால் கொடுக்கப்பட்ட காயங்களைப் பாருங்கள்" என்றது.

அதற்கு அந்த ஞானி ' முட்டாள் பாம்பே நான் கடிக்காதே என்று தான் சொன்னேன்....சீற வேண்டாம் என்று சொல்லவில்லையே.நீ சீறியிருந்தால் அவர்கள் பயந்து உன்னை நெருங்கி இருக்க மாட்டார்கள்' என்றார்.

நாமும் யாருக்கும் தீங்கு செய்யக்கூடாது.அதே சமயம் யாரும் நமக்கு தீங்கு செய்யக் கூடாது என்பதால்..அவர்கள் நம்மிடம் அச்சம் கலந்த மரியாதை ஏற்படும் வண்ணம் நடந்து கொள்ளவேண்டும்.இல்லையேல் நாம் இளிச்சவாயர்களாக ஆகிவிடுவோம்.

Friday, February 10, 2012

106. நியாயமான ஆசையே வேண்டும். (நீதிக்கதை)




ஒரு ஊரில் வயதான கணவனும் மனைவியும் வறுமையில் வாழ்ந்து வந்தனர்.

அவர்கள் இறைவனிடம் ' கடவுளே..எங்களது முதுமைக் காலத்தில் ஏன் இப்படி வறுமையில் வாட விடுகிறாய் ' என முறையிட்டனர்.

ஒரு நாள் இறைவன் அவர்கள் முன் தோன்றி, ஒரு வாத்தை அவர்களுக்கு கொடுத்துவிட்டு ' தினமும் இந்த வாத்து ஒரு பொன் முட்டையிடும்...அதை விற்று உங்கள் வறுமையை போக்கிக் கொள்ளுங்கள்' என்றார்.

அவர்களும் அப்படியே செய்து வர அவர்கள் வறுமை சிறிது சிறிதாக மறைந்தது.

வறுமை மறைந்ததும் ..அது நாள் வரை அவர்களுக்கு இல்லாத பேராசை உண்டானது.

தினமும் ஒரு பொன் முட்டையிடும் இந்த வாத்தை அறுத்தால்..அதனுள் இருக்கும் அனைத்து பொன் முட்டைகளையும் எடுத்துக் கொண்டு ..நாம் பெரும் பணக்காரர்கள் ஆகி விடலாம் ' என்று எண்ணினர்.

அதனால் அந்த வாத்தின் வயிற்றைக் கத்தியால் கிழித்தனர்.

ஆனால் அந்த வாத்தின் வயிற்றில் பொன் முட்டைகள் இல்லாததுடன் எல்லா வாத்துகள் போல எலும்பும் சதையுமே இருந்தன.

பேராசையால் முட்டாள் தம்பதிகள் தினமும் அடையும் லாபத்தை இழந்தனர்.

மீண்டும் வறுமையால் வாட ஆரம்பித்தனர்.

பேராசை பெரு நஷ்டம்.

நாமும் எந்த நிலையிலும் பேராசை படக்கூடாது.

நம் நியாயமான ஆசைகளை  மட்டுமே இறைவன் நிறைவேற்றிவைப்பார்,