Wednesday, October 14, 2020

ஆணவம்

 





 பல வண்ணங்கள் கொண்ட கிளி ஒன்றும் காகம் ஒன்றும் நட்புடன் இருந்தன.


ஆனாலும் கிளி அவ்வப்போது காக்கையை அதன் நிறத்தைச் சொல்லி கேலி செய்து வந்தது.


ஒருநாள், வேடன் ஒருவன் கையில் அக்கிளி சிக்கிக் கொண்டது.


அவன் அதை தன் வீட்டிற்கு எடுத்துச் சென்று, அதன் நாக்கை வழித்து வழித்து..மிளகாயினாலும்,பூண்டினாலும் வழித்து..தமிழில் பேசு..தமிழில் பேசு என துன்புறுத்திக் கொண்டிருந்தான்.


அதைக் கண்ட காகம் வருந்தியது.அப்போது வேடனின் மனைவி, சாத உருண்டை ஒன்றைக் கொண்டு வந்து வைத்து.."காகா..காகா" என இதைப் பார்த்துக் கூவினாள்.


காகம் ,கிளியைப் பார்த்துச் சொன்னது..


"பார்த்தியா..அவனது மொழியில் பேசச் சொல்லி அவன்  உன்னை துன்புறுத்துகிறான்.ஆனால், அவன் மனைவியோ என் பாஷையில் என்னைக் கூப்பிட்டு சோறு வைக்கிறாள்.காரணம் உனது அதீத அழகும், ஆணவமும்..சில நேரத்தில் அவை நமக்கே ஆபத்தாக அமையும்..என சொல்லி விட்டுப் பறந்தது.




Monday, March 30, 2020

32 - ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு


ஒரு கோவில் கோபுரத்தில் சில நீல நிறப் புறாக்களும் சில வெள்ளை நிறப் புறாக்களும் வாழ்ந்து வந்தன. நீலப் புறாக்கள் தாம் வெள்ளைப் புறாக்களைவிட அழகாக இருப்பதாக எண்ணி கர்வர்த்துடன் இருந்தன. சிலநாட்களின் பின் அக் கோபுரத்தில் திருத்த வேலகள் ஆரம்பமானது.
அதனால் எல்லாப் புறாக்களுக்கும் கோபுரத்தை விட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டது. புறாக்கள் எல்லாம் வேறொரு இடம் தேடி ஒரே திசையில் பறந்து சென்றன.  அவைகள் பறந்து செல்லும் போது ஓரிடத்தில் வெய்யிலில் உலர்வதற்காக பரப்பப்பட்ட நெற்களைக் கண்டன. கண்டதும் அனைத்தும் ஒன்றாக அவ்விடத்திற்கு பறந்து சென்று காயப் போடப்பட்ட நெற்களை தின்று தீர்த்து விட்டு அருகே இருந்த ஒரு பெரிய மரம் ஒன்றில் அமர்ந்தன.
தானியத்தை காய்வதற்காக பரப்பி விட்டு சென்ற வேடன் திரும்பி வந்து பார்த்த பொழுது தானிய மணிகள் ஒன்று கூட இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தான். தானியங்கள் காயப்போட்ட இடத்தில் புறாக்களின் எச்சம் கிடப்பதை பார்த்து வேடன் என்ன நடந்தது என்பதை ஊகித்தான்.
நாளைக்கு இந்த புறாக்களை எப்படியும் வலை விரித்து பிடித்து விட வேண்டும் என்று முடிவு செய்து அதன்படி மறுநாள் வலை ஒன்றைத் தயார் செய்து அந்த இடத்தில் விரித்து தானியங்களையும் போட்டு புறாக்கள் வரும்வரை காத்திருந்தான்.
அடுத்த நாள் அங்கே வந்த புறாக்கள் தானியத்தைப் பார்த்ததும், அதை உண்ணும் ஆசையில் வேகமாக தரையிறங்கி உண்ணத் தொடங்கின. சில மணித்துளிகளில் அதன் கால்கள் வலைகளில் சிக்கிக் கொண்டன.
சற்று தொலைவில் மறைந்திருந்த வேடன் நிலைமையை நன்கு புரிந்து கொண்டு புறாக்களை பிடிக்க ஓடி வந்தான். வேடன் வருவதைப் பார்த்த புறாக்கள் ஆபத்தை உணர்ந்து கொண்டு, உயிர் மீதுள்ள ஆசையினால் எல்லாப் புறாக்களும் ஒன்றாக இறக்கையை விரித்து பறக்க ஆரம்பித்தது. வலையையும் புறாக்கள் தூக்கி கொண்டு உயரப் பறந்து சென்றன.
இதனைக் கண்ட வேடன், “அய்யய்யோ… புறாக்கள் போனாலும் பரவாயில்லை. நான் கஷ்டப்பட்டு தயாரித்த வலையும் அதோடு போகிறதே…” என்று புலம்பிக் கொண்டே, பறந்து செல்லும் புறாக்களின் பின்னே ஓடினான்.
பறந்து செல்லும் போதே, அதில் இருந்த நீலப் புறாக்கள் கர்வத்தோடு, “எங்களது வலிமையால்தான் நீங்களும் காப்பாற்றப்பட்டு இருக்கிறீர்கள். நாங்கள் சிறகை மிக வேகமாக அடித்து பறக்கவில்லை என்றால்… அவ்வளவுதான்” என்று கூறின. உடனே வெள்ளை நிறப் புறாக்களும் தம் பங்குக்கு, “நாங்கள்தான் வலிமையோடு பறந்தோம். உங்களுக்கு அழகு இருக்கலாம், ஆனால் ஆற்றல் கிடையாது” என்று கூறிக் கொண்டு ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டே பறந்தன. வீ ண் கர்வத்தினால் சண்டையிட்டுக் கொண்டு பறந்ததினால் அவற்றின் பறக்கும் வேகம் குறைய ஆரம்பித்தது, அதனால் அவை ஒரு மரக்கிளையில் வலையுடன் சிக்கிக் கொண்டது.
இதனைப் பார்த்த வேடனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்ற பழமொழிக் கெற்ப இப்புறாக்கள் தப்பி விடுமோ என்று பயந்தேன். நல்லவேளையாக அவற்றின் “ஒற்றுமை நீங்கியதால் அனை வருக்கும் தாழ்வு” என்ற நெறிப்படி பறந்த புறாக்களே நன்றி” என்று புறாக்களைப் பார்த்து கூறிக் கொண்டே அவைகளை பிடித்து தனது கூடைக்குள் போடத் தொடங்கினான்.

Wednesday, July 18, 2018

31 - எப்படி வாழவேண்டும்




ஒரு சந்நியாசியிடம்..அவர் சிஷ்யன்..ஒருநாள்..'சுவாமி...நான் எப்படி வாழவேண்டும்..என்பதை..தெரிவித்தால்..நலமாயிருக்கும்..'என்றான்.,
குருவும்..தன் ஆயுட்காலம் முடிவதை..அறிந்து..தன் சிஷ்யன் இனி..தனியாக..விவரங்களை தெரிந்துக்கொள்ளட்டும்..என்று...தூரத்தில் நொண்டிக்கொண்டே வரும் நரியைக்காட்டி..'அதனுடன் செல்..அதற்கு உணவு எப்படி கிடைக்கிறது..என்று பார்..அப்போது..நீ எப்படி வாழவேண்டும் என்று தெரியும்..' என்றார்.,
நரியை தொடர்ந்து வந்த சிஷ்யன்..தூரத்தே ஒரு சிங்கம்..இறந்த மானின் உடலை இழுத்து வருவதை பார்த்து ஒளிந்துக் கொண்டான்.அந்த மான் சிங்கத்தால் வேட்டையாடப்பட்டது.அதை சிறிது தின்றுவிட்டு..மீதத்தை..நரியிடம் போட்டு விட்டு சென்றது..சிங்கம்..
உடனே சிஷ்யனுக்கு ..வாழவேண்டிய வழி தெரிந்தது போல இருந்தது..
அடுத்தநாள் முதல்...சிஷ்யன்..உண்ணாமல்...யாரேனும் தனக்கு..உணவு கொண்டுவந்து தருவார்கள் என காத்திருக்க ஆரம்பித்தான்..
நாட்கள் உருண்டன...
ஆனால்..யாரும் உணவை கொண்டுவந்து தரவில்லை..
அவன் உடல் இளைத்து..தெம்பையெல்லாம் இழந்தான்..குருவைத் தேடி வந்தான்..நடந்த விஷயங்களைக் கூறி.'குருவே..அந்த நரிக்கு கொடுத்தாற்போல்..யாரேனும்..எனக்கு ..உணவு கொண்டுவந்து தருவார்கள் என எண்ணினேன்..ஆனால் யாரும் வரவில்லை.'என புலம்பினான்..
பதிலுக்கு..குரு..'அட..மடையா..நீ என்னிடம்..எப்படி வாழவேண்டும் என்று கேட்டாய்...நானும் சொன்னேன்..ஆனால்..நீ..சிங்கம்..நரியைப் பார்த்து..தப்பாய் புரிந்துக் கொண்டாய்..உண்மையில்..நீ என்ன செய்திருக்க வேண்டும்..சிங்கம் போல வாழ நினைத்திருக்க வேண்டும்..மற்றவர்களுக்கு..உதவியாய்...மற்றவர்களுக்கு..உணவளிக்கக் கூடியவனாய் இருக்க எண்ணியிருக்க வேண்டும்'என்றார்..
அப்போதுதான்..சிஷ்யனுக்கு..எப்படி வாழவேண்டும் என்பதற்கான விடை தெரிந்தது

Tuesday, July 17, 2018

30.சமயோசிதப் புத்தி



ஒரு நாள் இடி மின்னலுடன் காட்டில் மழை பெய்து கொண்டிருந்தது.

ஒரு மான் தன் குட்டிகளுடன் எங்கு செல்வது எனத்தெரியாமல் அலைந்து கொண்டிருந்தது.அப்போது ஒரு குகை  காலியாக இருப்பதைப் பார்த்தது.அது சிங்கத்தின் குகை.
வேறு வழி தெரியாத மான் அது சிங்கத்தின் குகை என்று அறிந்தும் காலியாக இருந்ததால் தன் குட்டிகளுடன் உள்ளே சென்றது.

வெளியே போயிருந்த சிங்கம் தூரத்தில் வருவதைப்பார்த்த  மான்,தன் குட்டிகளிடம் "எனக்கு சிங்கக் கறி வேண்டும்" என கத்துங்கள் என்றது.
குட்டிகளும் அது போல கத்த சிங்கம் குகைக்குள் தன்னைவிட  பலசாலியான மிருகங்கள் இருப்பதாக எண்ணி ஓடியது.

வழியில் நரி ஒன்றைப்பார்த்த சிங்கம் "என் குகையில் பலசாலியான மிருகங்கள் இருக்கின்றன,அவை என்னைக் கொல்ல காத்திருக்கிறன" என்றது.

ஆனால் குகைக்குள் மான் தன் குட்டிகளுடன் செல்வதை நரி பார்த்திருந்தது.அது சிங்கத்திடம் அதைக்கூறி "பயப்படாதீர்கள் நானும் உங்களுடன் வருகிறேன்.நீங்கள் பெரிய மானை சாப்பிடுங்கள்,நான் குட்டிகளை சாப்பிடுகிறேன் "என சிங்கத்தை மீண்டும் குகைக்குள் அழைத்து வந்தது

சிங்கத்தை நரி அழைத்து வருவதைப் பார்த்த மான், உடனே தன் குட்டிகளிடம் "கவலைப்படாதீங்க.நரிமாமா சிங்கக்கறிக்காக கண்டிப்பாக சிங்கத்தை அழைத்துவருவதாகச் சொல்லியிருக்கார்" என் சிங்கத்தின் காதுகளில் விழுமாறு கத்தி சொன்னது.

அதைக் கேட்ட சிங்கம், நரி தன்னை ஏமாற்றி அழைத்து  வருவதாக எண்ணி நரியை அடித்துக் கொன்றது.பின் குகைக்குள் இருந்த மிருகங்களிடமிருந்துத் தப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வேறு குகையைத் தேடி ஓடிவிட்டது

எந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கை, முயற்சியைக் கைவிடாததால் மானால், தன்னையும், தன் குட்டிகளையும் காப்பாற்றமுடிந்தது. மானின் சமயோசித புத்தியை நாமும் பாராட்டுவோம்

தன்னம்பிக்கை, முயற்சி இருந்தால் எந்தக் காரியத்திலும் வெற்றியடையலாம்

Saturday, June 2, 2018

தன்னம்பிக்கை


200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி
” யாருக்கு இது' பிடிக்கும்?” எனக் கேட்டார்.
கூடியிருந்த அனைவரும் தனக்கு பிடிக்குமென கையை தூக்கினர்.
பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன் ஆனால் அதற்கு முன்” என சொல்லி
அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து
“இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்.
அனைவரும் கையைத் தூக்கினர்.
அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி
“இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார்.
அனைவரும் இப்போதும் கைகளை தூக்கினர்.
அவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய்தாள் பல முறை கசங்கியும் மிதிபட்டும் அழுக்கடைந்தும்
அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப் படும் போதும் ,
தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்தி கொள்கிறோம் .
நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர்.
இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித் தன்மை இருக்கும்.
அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. வாழ்கை என்ற பயிர்க்கு
தைரியமும் தன்னம்பிக்கையும் தான் உரம்.
ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்கள்

Monday, April 30, 2018

28- யார் பலசாலி



நல்ல பாம்பு ஒன்று புற்றில் வாழ்ந்து வந்தது.
அதற்கு ரொம்ப நாட்களாக தன்னுடைய இனத்தார் பெரிய மிருகங்களை கூட அப்படியே விழுங்கி விடுவதால், தாங்கள்தான் பலசாலி என்று நினைத்திருந்தது.
இருந்தாலும், இதை சோதித்து பார்க்க எண்ணி, புற்றை விட்டு வெளியே வந்தது.
அப்போது அங்கு ஒரு கீரி வரவே, பாம்பு பயத்துடன் மறைந்துக் கொண்டு, ""ஆகா! கீரிதான் பலசாலி'' என்று நினைத்துக் கொண்டது.
அச்சமயம் அங்கு வந்த பூனை, கீரியை விரட்டியது. அதைப் பார்த்ததும், "பூனைத்தான் பலசாலி' என்று எண்ணியது பாம்பு.
அந்தப் பூனையை ஒரு நாய் விரட்டத் தொடங்கியது. அதைக் கண்டதும், ""பூனையை விரட்டுகிற நாய்தான் பலசாலி' என்று நினைத்தது பாம்பு.
பூனையை விரட்டிக் கொண்டு ஓடிய நாய், ஒரு மனிதன் செய்து கொண்டிருந்த பச்சைப் பானையில் விழுந்தது. அதைக் கண்டு கோபம் அடைந்த மனிதன், நாயைத் தடியால் அடித்தான்.
நாய் அலறிக் கொண்டு ஓடியது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த பாம்பு, ""நாயை விட மனிதன்தான் பலசாலி'' என்று எண்ணிக் கொண்டே மறைவை விட்டு வெளியே வந்தது.
மனிதன் அதைக் கண்டதும், ""ஐயோ பாம்பு!'' என்று அலறிக் கொண்டு ஓடினான்.
அந்தக் காட்சியை கண்ட பாம்பு, "இந்த உலகில் எல்லாரையும் விட நான்தான் பலசாலி' என்று எண்ணிக் கொண்டது.
அப்போதுதான் முன்பு பார்த்த கீரி மீண்டும் அங்கே வரவே, "அய்யோ... அம்மா!' என்று அலறிக்கொண்டு ஓட்டம் எடுத்தது பாம்பு.
இந்த உலகில் ஒவ்வொருவரும் தான் தான் பெரியவர் என்று நினைத்துகொள்ளக் கூடாது என்பதற்காகவே.
"ஒவ்வொருவருக்கும் ஒரு எதிரியை
கடவுள் படைத்துள்ளார்"

27 - தவறை உணர்ந்தால் மன்னிப்பு உண்டு


ஒரு நரியும், ஒட்டகமும் நண்பர்களாக இருந்தன.ஒருநாள் ஒட்டகத்திடம் நரி சொல்லியது, "நண்பா..இந்த நதிக்கு அக்கரையில், ஒரு பெரிய கரும்புத் தோட்டம் உள்ளது.நாம் இருவரும் நதியைக் கடந்து அங்கே சென்றால் இனிப்பான கரும்பை சாப்பிட்டு வரலாம்"

அதைக் கேட்ட ஒட்டகம், "நரியே! நீ இனிப்பைச் சாப்பிட்டால் ஊளையிடுவாய்.அப்போது கரும்புத் தோட்டக்காரன் நம்மைப் பிடித்து அடித்து விடுவான்" என்றது.

நரி ,தான் ஊளை இடமாட்டேன் என வாக்குறுதி இட்டதால், இரண்டும் கிளம்பின.

ஒட்டகத்தின் மீது ஏறிக் கொண்டு நரி நதியைக் கடந்தது.

இரண்டும் கரும்புத் தோட்டத்திற்குச் சென்று இனிமையான கரும்பை சுவைத்தன.

மகிழ்ச்சியில் நரி ஊளையிடத் தொடங்கியது.அதைக் கேட்டு அங்கு வந்தான் கரும்புத் தோட்ட முதலாளி.நரி உடனே ஒடிப் போய் ஒரு புதரில் ஒளிந்து கொண்டது.

ஒட்டகமோ அடியை வாங்கிக் கொண்டு, வலியுடன் நதிக்கரைக்கு வந்தது.அப்போது நரி புதரிலிருந்து ஓடி வந்து, "ஒட்டக நண்பா..எனக்கு மகிழ்ச்சி அதிகமானால் ஊளையிடுவேன்.அது என் வழக்கம்.வழக்கத்தை என்னால் மாற்றிக் கொள்ள இயலவில்லை." என்றது.

ஒட்டகத்தின் மீது ஏறிக்கொண்டு நதியைக் கடந்தது நரி.பாதி வழியில்,நதியின் ஆழமான பகுதி வந்ததும், ஒட்டகம் ஆற்றில் புரண்டது.

நரி தண்ணீரில் விழுந்து தத்தளித்தது.ஒட்டகம் நரியினிடம், "அதிகமாக யாரேனும் அடித்தால் உடல்வலி தீரநீரில் புரள்வது என் வழக்கம்" என்றது.

நரி தன் தவறை உணர்ந்து, தன்னைக் காப்பாற்றும் படி ஒட்டகத்திடம் கெஞ்சியது.

ஒட்டகமும், நரியின் தவறை மன்னித்து, அதை மீண்டும் முதுகினில் ஏற்றி இக்கரைக்குக் கொண்டு சேர்த்தது.

தவறு செய்தவர்,தவறை உணர்ந்து வருந்தினால் மன்னிக்க வேண்டும்