Saturday, February 10, 2018

8 -உழைப்பே உயர்வு தரும்



சரவணனும், கந்தனும் நண்பர்கள்.
சரவணன் எல்லோரிடமும் இரக்கக் குணம் கொண்டவன்.கந்தனோ, யார்..யாருக்கு இரக்கம் காட்ட வேண்டும் என்பதை அறிந்தவன்

ஒருநாள், வாலிப வயது பிச்சைக்காரன் ஒருவன் அவர்களிடம் வந்து , தனக்கு பசிப்பதாகக் கூறி பிச்சைக் கேட்டான்.கந்தன் அவனிடம், "உனக்கு இளம் வயது.ஏன் பிச்சை எடுக்கிறாய்? ஏதேனும் வேலை செய்து பிழைக்கலாமே!' என திட்டி அனுப்பி விட்டான்.

ஆனால், சரவணனோ அவனைக் கூப்பிட்டு, சிறிது பணம் தந்து அனுப்பினான்

அடுத்தநாளும் இப்படியே நடந்தது

மூன்றாம் நாள், அவன் வந்த போது, கந்தன் அவனை தர தர  என இழுத்துக் கொண்டு ஒரு நதிக்கரைக்கு வந்தான்.அவனிடம் ஒரு தூண்டிலைக் கொடுத்து, "இனி நீ இந்தத் தூண்டில் மூலம் மீன் பிடித்து, அதை விற்று, உழைத்து உண்ண வேண்டும்." என்று கோபத்துடன் கூறிச் சென்றான்.

பிறகு அவர்கள் அந்தப் பிச்சைக்காரனப் பார்க்கவேயில்லை.

சில வருடங்கள் ஓடின..

ஒருநாள் பணக்கரர் ஒருவர் கந்தனையும், சரவணனையும் பார்க்க வந்தார்.

அவர் யார் ?என அவர்களூக்குத் தெரியவில்லை.

அவரே சொன்னார்"ஐயா''நீங்கள் தூண்டில் கொடுத்து உழைத்துப் பிழைக்கச் சொன்னீர்களே! அந்தப் பிச்சைக்காரன் நான்.அன்றுமுதல் உழைத்தேன்.பணக்காரன் ஆனேன்.உழைப்புத்தான் உயர்வு தரும் என உணர்ந்தேன்.
அதற்கு உங்களுக்கு நன்றி என்றதுடன் கந்தனுக்கும் சரவணனுக்கும் சில பரிசுகள் கொடுத்துவிட்டுச் சென்றார்.

இதிலிருந்து சோம்பித் திரிபவர்கள் வாழ்வில் முன்னேற முடியாது.உழைப்பே உயர்வு தரும் என உணருவோமாக

Friday, February 9, 2018

7 - விட்டுக் கொடுக்கும் மனம்


அந்த ஊரின் நடுவே ஆறு ஒன்று ஓடிக் கொண்டிருந்தது.
ஆற்றைக் கடக்க ஒரு பாலம் ஒன்றிருந்தது.அது மிகவும் குறுகிய பாலம்.ஒருவர் போனால் , ஒருவர் வர முடியாத அளவிற்குக் குறுகியது,

ஒருநாள் பாலத்தின் ஒருமுனையிலிருந்து ஆடு ஒன்று பாலத்தைக் கடக்க எண்ணி பாலத்தில் நடக்க ஆரம்பித்தது

அதே நேரத்தில்,எதிர்முனையில் இருந்தும்,ஆற்றினைக் கடக்க பாலத்தில் ஒரு ஆடு வர ஆரம்பித்தது.

இரு ஆடுகளும், நடு பாலத்தில் சந்தித்தன

முதல் ஆடு, "வழி விடு.நான் தான் முதலில் கடக்க ஆரம்பித்தேன்"என்றது

எதிர் முனையில் இருந்து வந்த மற்ற ஆடோ, "முடியாது.நான் தான் முதலில் கடக்க ஆரம்பித்தேன்..நீ வழிவிடு" என்றது.

இரண்டு ஆடுகளும். ஒன்றுக்கொன்று விட்டுக் கொடுக்காமல் ..நடுப்பாலத்தில் சண்டையிட்டுக் கொண்டிருந்தன.
 ஒருகட்டத்தில், ஒன்றை ஒன்று முட்டிக் கொண்டு, கால்கள்  தடுமாற, பாலத்திலிருந்து ஆற்றில் விழுந்தன.இரு ஆடுகளையும் ஆறு அடித்துச் சென்றது.

ஒன்றுக்கொன்று விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாததால் தங்கள் உயிரை இழந்தன.

வாழ்விலும், நாம் விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கினைக் கொண்டால், வாழ்வு சிறப்பாக அமையும்.

Thursday, February 8, 2018

6 - நட்பின் பெருமை


ராமனும், குமரனும்  நண்பர்கள்.
இருவரும் ஒரே பள்ளியில், ஒரே பிரிவில் நான் காம் வகுப்பு படித்து வந்தனர்
ராமன், காலையில் விரைவில் எழுந்து, காலைக்கடன்களை முடித்து, குளித்து முடித்து, சிறிது நேரம் பள்ளிப் பாடங்களைப் படித்துவிட்டு, காலை உணவை அருந்திவிட்டு பள்ளி செல்வது வழக்கம்

ஆனால், குமரனோ ,நேர் எதிர்.
தாமதமாகத் தான் தினமும் எழுவான்.அவசர அவசரமாகக் காலைக் கடன்களை முடித்து, அரை குறையாகக் குளித்ததாகப் பெயர் பண்ணிவிட்டு, உணவை அள்ளி அள்ளி வாயில் போட்டுக் கொண்டு பள்ளிக்கு ஓடுவான்

ஒருநாள் குமரன், மிகவும் தாமதமாக எழுந்தான்.பள்ளிக்கோ நேரம் ஆகிறது.அவசர அவசரமாகக் காலைக் கடன்களை முடித்து பள்ளிக்கு விரைந்தான்

முதல் பீரியட் முடிந்ததும்...பொறுக்க முடியாத்தால் அவன் கால்சட்டை நனைந்தது.

அதைப்பார்த்த ராமன் உடனடியாக தன்னிடமிருந்த தண்ணீர்
பாட்டிலைத் திறந்து..ஏதேச்சையாகத் தண்ணீர் கொட்டுவது போல குமரனின் கால்சட்டையில் தண்ணீரைக் கொட்டினான்
மற்ற மாணவர்கள் பார்த்த போது, தான் தவறி தண்ணீரைக் கொட்டிவிட்டதாகக் குறி குமரனிடம் மன்னிப்புக் கேட்டான்.

மாலையில், பள்ளி முடிந்ததும், குமரன் , ராமனிடம் வந்து "ராமா..என் கால்சட்டை நனைந்ததை நீ பார்த்துவிட்டாய்.மற்றவர்கள் பார்த்து..என்னைக் கேலி செய்யப் போகிறார்களே என்று உடனே தண்ணீரைக் கொட்டி, தண்ணீரினால் என் கால்சட்டை நனைந்தது போல செய்து விட்டாய்.உன் இந்த உதவியை மறக்க மாட்டேன்" என்றான்.

ராமனும் குமரனைப் பார்த்து, "குமரா! இதற்கான காரணம் என்ன தெரியுமா? நீ தினமும் தாமதமாக எழுவதால்...உன்னால் எந்த ஒரு வேலையையும் ஒழுங்காகச் செய்ய இயலவில்லை.நீயும் என்னைப் போல சீக்கிரம் எழுந்தால், ஆரவாரமில்லாது எல்லா வேலைகளையும் செய்யலாம் இல்லையா?" என்றான்.

குமரனும், தன் தவறினை உணர்ந்து, அடுத்த நாள் முதல் ராமனை பின் பற்ற ஆரம்பித்தான்.

இப்போது, அவர்கள் வகுப்பில் முதல் மாணவர்கள் அவர்களே ஆகும்.



Wednesday, February 7, 2018

5 - முட்டாள் தோழன்


நரியூர் என்ற ஊரில் அரசன் ஒருவன் அரசாண்டு வந்தான்.அவனுக்கு ஒருவர் ஒரு நாள் குரங்கு ஒன்றை பரிசாக அளித்தார்.

அந்த குரங்கும், அரசனிடம் மிகவும் பாசமாய் இருந்தது.
அரசர் உலாவச் செல்லும் போதெல்லாம், குரங்கையும் உடன் கூட்டிச் செல்வார்

ஒருநாள், அப்படிச் செல்லும் போது, முட்புதர் ஒன்றில் இருந்த பாம்பு ஒன்று அரசரைக்  கடிக்க இருந்தது.அதைக் கண்ட குரங்கு, அந்தப் பாம்புடன் சண்டையிட்டு அதைக் கொன்றது.
மன்னனுக்கோ மகிழ்ச்சி.குரங்கு, தன் உயிரைக் காத்தது என அனைத்து மந்திரிகளிடமும் சொல்லி, குரங்கின் விசுவாசத்தைப் போற்றினான்.
தவிர்த்து, அன்று முதல் குரங்கை தன் பாதுகாவலராக அமர்த்தினான்.

அமைச்சர்கள் அனைவரும் அரசனிடம்' அரசே! என்ன இருந்தாலும் குரங்கு ஒரு விலங்கு, அதற்கு பகுத்தறிவோ,முடிவெடுக்கும் திறனோ இருக்காது" என்றனர்.
ஆனால் , அரசனோ, "குரங்கிற்கு, பாசமும், விசுவாசமும் உள்ளது.அது போதும்" என்றான்.
அன்றுமுதல் குரங்கு அரசனின் பாதுகாவலன் ஆகியது.

ஒருநாள், அரசனுக்கு தூக்கம் வந்தது,மிகவும் சோர்வுடன் காணப்பட்ட அவன், குரங்கினிடம், "நான் தூங்கப் போகிறேன்.யாரும் தொந்தரவு செய்யாமல் பார்த்துக் கொள்" என்று கூறிவிட்டு தூங்கச் சென்றார்.

அரசன் தூங்க ஆரம்பித்ததும், ஈ ஒன்று பறந்து வந்து ராஜாவின் மூக்கின் மீது அமர்ந்தது.அதை விரட்டி அடித்த குரங்கு, "மன்னன் தூங்குகிறார்.அவரை இம்சித்தால் கொன்றுவிடுவேன் உன்னை" என ஈயை எச்சரித்தது.
அதை பொருட்படுத்தாத ஈ, இம்முறை அரசனின் கழுத்தில் அமர்ந்தது.

தூங்கும் அரசனை இம்சிக்கும் ஈ மீது கோபம் கொண்ட குரங்கு, அரசனின் வாளை எடுத்து, அவரது கழுத்தில் அமர்ந்திருந்த ஈ ம் மீது ஒரே போடாக போட்டது.
வாள், மன்னனின் கழுத்தில் பாய்ந்து மன்னன் உயிர் நீத்தான்.

முட்டாளை பாதுகாவலனாக அமர்த்தியதால் மன்னன் உயிரிழக்க நேரிட்டது.

ஆகவே, குழந்தைகளே! நாமும் முட்டாள்களை நண்பனாகக் கொள்ளக் கூடாது

Saturday, January 13, 2018

4. தேவையில்லாதவற்றில் தலையிடாதே.......




ஒரு விறகு வெட்டி இருந்தான். காட்டுப் பகுதிக்கு ஒட்டி இருந்தது அவன் குடிசை.

மரங்களை வெட்டிவருவது, கோடரியால் பிளப்பது, சிறு துண்டுகளாக்கி பக்கத்துக்கு கிராமங்களுக்கு கொண்டு விற்பது. அதை கொண்டு குடும்பம் நடத்துவது, அவனது அன்றாட வேலை.

அன்று அப்படிதான் ஒரு பெரிய அடிமரத்துண்டை கோடரியால் பிளக்க ஆரம்பித்தான்.

சிறிது நேரத்தில் களைப்படைந்தவன்,. அடிமரத்தை பாதியளவு பிளந்திருந்ததால் அப்பிளவுக்கு இடையில் ஆப்பு போல் ஒரு மரச்சக்கையை வைத்துவிட்டு ஓய்வெடுக்கச் சென்றான்.

பக்கத்திலேயே ஒரு பெரிய மரம் இருந்தது. அம்மரத்தின் ஒரு கிளையில் இருந்த அக்குரங்கு ஒன்று மரம் வெட்டியின் செயலைப் பார்த்துக் கொண்டிருந்தது.

மரம் வெட்டி அப்பால் நகர்ந்ததும் அக்குரங்கு உடனே இறங்கி வந்தது.

அம்மரத்துண்டின் பிளவுபட்ட பகுதியில் வால் முழுவதும் விட்ட நிலையில் படிய அதன்மேல் அமர்ந்து கொண்டது.

அது குரங்கு அல்லவா! அதற்கே உரிய குரங்கு வேலையைச் செய்ய ஆரம்பித்தது; ஆப்பாக சொருகி இருந்த மரத்துண்டை ஆட்டி ஆட்டி எடுக்க ஆரம்பித்தது/

ஒரு ஆட்டு, இரண்டு ஆட்டு, மூன்று ஆட்டு….. சில ஆட்டுகள்!

படுக்கென்று அந்த ஆப்புதுண்டு வந்துவிட்டது. சடக்கென்று பிளவுபட்டப் பகுதியின் இடைவெளி குறைந்துவிட்டது.

அத்துடனா?

பிளவுக்குள் தொங்கி இருந்த வால் நசுங்க குறைந்து “வீல்…வீல்” என்று அலறியது.

ஓய்வாக உள்ளே இருந்த மரம்வெட்டி அலறல் கேட்டு அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தான்.

பாத்தால் குரங்கு பாவம் செத்துவிட்டது.

“இத்தனை நாள் இல்லாமல் எங்கிருந்து வந்துத் தொலைந்தது இன்று சாவதற்கென்றே” என்ற முணுமுணுப்புடன் குரங்கின் உடலை அப்புறப்படுத்தினான் அவன்.

குரங்கின் அசட்டுச் செயல் அதற்கே அழிவை தந்துவிட்டது

Monday, October 23, 2017

3. - தீமை செய்தால் தீமையே வரும்




ஒரு கிராமத்தில் கந்தன் என்பவர் வாழ்ந்து வந்தார்,
அவருடைய தோட்டத்தில் வெண்டைக்காய் நிறைய காய்த்திருக்கும்.
வாரம் ஒரு முறை அவற்றை பறித்து பையில் நிரப்பி தோளில்  வைத்துக்கொண்டு நான்கு கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் டவுன் வரை நடந்து சென்றே ரெகுலராக ஒரு மளிகை/காய்கறி கடையில் விற்று விட்டு வருவது வழக்கம். வெண்டைக்காயை கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக அரிசிபருப்பு,சர்க்கரை போன்ற  வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவது வழக்கம்.

கந்தன் கொண்டு வரும் வெண்டைக்காயின் சுவை அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரபலம். இதை பயன்படுத்தி மளிகைக் கடைக்காரரும் நல்ல லாபம் சம்பாதித்துவிடுவார்.

பல வருடமாக கந்தன் காயைக்கொண்டுவருவதால்  மளிகைக் கடைக்காரர் அதை எடை போட்டு பார்ப்பதில்லை,
கந்தன் சொல்லுகின்ற எடையை அப்படியே நம்பி அதற்கு
 ஈடான மளிகைப் பொருட்களை கொடுத்து அனுப்புவார்..
காரணம் கந்தனின் நேர்மையும் நாணயமும்  எல்லோரும் அறிந்ததே.

ஒரு நாள் கந்தன் பத்து கிலோ வெண்டைக்காயை கொடுத்துவிட்டு அதற்கான் பொருட்களை வாங்கிச் சென்றார்.
சிறிது நேரத்தில் பத்து கிலோ வெண்டைக்காயும்  மொத்தமாய் வேண்டும்
என்று ஒரு சமையல்காரர் வந்து  கேட்க அவருக்காக மளிகைகடைக்காரர் கந்தன் கொடுத்த வெண்டைக்காய்களை எடை போட ஒன்பது கிலோ தான் இருந்தது.

அன்று முழுவதும் மளிகைக்காரருக்கு தூக்கமே வரவில்லை..கந்தன் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தோம்,இவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகத்தை செய்து விட்டாரே1
இத்தனை வருடங்களாக இப்படி முட்டாள்தனமாக எடை குறைவான வெண்டைக்காய்களை வாங்கி ஏமாந்துவிட்டோமே என்று புலம்பினார்.

அடுத்த முறை கந்தன் வந்தால் சும்மா விடக்கூடாது என்று கடுங்கோபத்தில் இருந்தார்.

நான்கு நாட்கள் கழித்து கந்தன் மிகவும் சந்தோஷமாக வந்தார்.
நல்ல விளைச்சல் என்பதால் நிறைய காய்கறிகளைக் கொண்டு வந்திருந்தார்.

'கையும் களவுமாக பிடிக்கவேண்டுமென்று எத்தனை கிலோ என்று மளிகைக்கடைக்காரர் கேட்க பத்து கிலோ  என்றார் கந்தன்.
அவர் முன்னாலே எடையை போட்டு பார்க்க ஒன்பது கிலோ தான் இருந்தது.

வந்த கோபத்தில் மளிகைக்காரர் பளார் பளார் என்று கந்தன் கன்னத்தில் அறைந்தார்.
இத்தனை வருடங்களாக இப்படித்தான் ஏமாத்திகிட்டு இருக்கியா?
கிராமத்துக் காரங்க ஏமாத்தமாட்டங்கன்னு நம்பித்தானே எடை போடாம அப்படியே வாங்கினேன்.இப்படி துரோகம் பண்ணிட்டியே "சீ" என துப்ப,நிலை குலைந்து போனார் கந்தன்.

அய்யா....என்னை மன்னிச்சிடுங்க.நான் ரொம்ப ஏழை.
எடைக்கல்லு வாங்கிற அளவுக்கு என் கிட்டே காசு இல்லீங்க,
ஒவ்வொரு முறையும் நீங்க கொடுக்கிற  ஒரு கிலோ சர்க்கரையை ஒரு தட்டுலேயும் இன்னொருட்தட்டிலே  காயயும் வைச்சுத்தான் கொண்டு வருவேன்.
இதைத்தவிர் வேற எதுவும் தெரியாதுங்கய்யா, என்று காலைப் பிடித்து அழ மளிகைக்காரருக்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது.

'தான் செய்த துரோகம்  தனக்கே வந்ததை உணர்ந்தார்1

இத்தனை வருடங்களாக கந்தனை ஏமாற்றிய  மளிகைக்காரரும் அவருக்கே தெரியாமல் ஏமாந்து கொண்டுதான் இருந்திருக்கிறார் என்பது
தெளிவானது..

நாம் எதை தருகிறோமோ
அதுதான் நமக்கு  திரும்ப வரும்
நல்லதை தந்தால் நல்லது வரும்
தீமையை தந்தால் தீமை வரும்.
ஆகவே
 நல்லதை மட்டுமே செய்வோம்,நல்லதை மட்டுமே விதைப்போம்.

Wednesday, October 18, 2017

2 -முயற்சி



கடவுளின் மீது பக்தி கொண்ட  கழுகு ஒன்று இருந்தது.தினமும் இறைவனை தியானம் செய்யும்.

அது வானில் பறந்தபடியே  கீழே மேய்ந்துகொண்டிருக்கும்  கோழிக்குஞ்சுகள்,ஓடி ஒளியும் எலி போன்றவற்றை பார்த்து சரேலென இறங்கி.அவற்றை கொத்திக்கொண்டு போய் பசி ஆறும்.

கடந்த சில தினங்களாக அதற்கு வயதானதால் வெளியே சுற்ற முடியவில்லை.உணவுக்கு ஏதேனும் வழி கிடைக்குமா என பார்த்தது.எதுவும் கிட்டவில்லை.

ஆகவே இறைவனை தியானித்து "ஆண்டவா" என்னால்  இன்று வெளியே போக முடியவில்லை.பசி வாட்டுகிறது.எனக்கு உண்ண ஏதாவது அளியுங்கள்,என வேண்டியது.

காலை,மாலை போய் இரவும் வந்தது.அதற்கு எதுவும் கிட்டவில்லை அதனால் இறைவன் மீது கோபமுற்று "இவ்வளவு நாள் உன்னை வேண்டிய உன் பக்தனுக்கு ஒரு வேளை உணவைக்கூட அளிக்காத இரக்கமற்றவனா நீ" என அரற்றியது.

இறைவன் அதன் முன் தோன்றி." கழுகே நீ காலையில் என்னை வேண்டியபோதே உனக்கான உணவைக் கொடுத்துவிட்டேன்,சற்று திரும்பிப்பார்" என்றார்.

கழுகு திரும்பி பார்க்க ஒரு செத்த எலி  கிடந்தது.' நான் உனக்கு உணவினை கொடுத்தாலும் அதற்கான சிறு முயற்சியாவது நீ செய்யவேண்டும்.நீ அப்படி முயலாதது உன் தவறு' என்று கூறி மறைந்தார்.

நமக்கு எல்லாமே இறைவன் என்றாலும்...நமக்கு வேண்டியதை அவர் அளித்தாலும் அதற்கான நம் முயற்சியும் சிறிதளவாவது இருக்கவேண்டும் என்பதே இக்கதையின் நீதி.