Wednesday, June 8, 2011

76.' முட்டாள்களுக்கு விளக்க முடியாது " (நீதிக்கதை)



கந்தனும் சரவணனும் நண்பர்கள்....

ஆனால் கந்தன் புத்திசாலி...சரவணனனோ மூடனாக இருந்தான்.என்ன சொன்னாலும் அவனுக்கு புரிவதில்லை.

குளிர்காலத்தில் ஒருநாள் நல்ல குளிர்..குளிரால் நடுங்கியபடியே கந்தனும் சரவணனும் இருந்தனர்.அப்போது கந்தன் தன் கைகளை தன் வாயால் ஊதிக்கொண்டிருந்தான்.

சரவணன் ' ஏன் அப்படி செய்கிறாய்' என்றான்.' என் கை விரல்கள் குளிரால் மரத்துப் போயுள்ளன.சூடு ஏற்றுவதற்காக ஊதுகிறேன்' என்றான்' கந்தன்.

பின் கந்தனின் தாய் சூடான காஃபியைக் கொண்டு வந்து இருவருக்கும் கொடுத்தார்.

காஃபி சூடாக இருந்ததால் ...கந்தன் அதை வாயால் ஊதியபடி உறிஞ்ச ஆரம்பித்தான்.

'ஏன் இப்போது ஊதுகிறாய் ...காஃபி சூடாக இல்லையா' என்றான் சரவணன்..

அதற்கு கந்தன் ' காஃபி சூடாக உள்ளது...ஆகவே சூட்டை குறைக்க வாயால் ஊதுகிறேன் ' என்றான்.

உடனே சரவணன் கோபமாக ' முன்னே குளிர்ச்சிக்காக ஊதுகிறேன் என்றாய்...இப்போது உஷ்ணத்திற்காக ஊதுகிறேன் என்கிறாய். ஒரே வாயிலிருந்து உஷ்ணம்,குளிர் காற்று எப்படி படும்...? என்னை மூடன் என எண்ணி விட்டாயா? நீ பொய்யன்' என்றான்.

கந்தன் என்ன விளக்கம் கொடுத்தாலும் அவனுக்குப் புரியாது என உணர்ந்தான்.

முட்டாள்களிடம் பேசும்போது கவனமாய் இருக்க வேண்டும்.

ஏனென்றால் நாம் என்ன சொன்னாலும் அவர்களுக்கு புரியாது.

Monday, May 30, 2011

75. அவசர புத்தி (நீதிக்கதை)



ஒரு ஊரில் ஒர் அரசன் இருந்தான்.அவன் நல்லாட்சியால் மக்கள் மகிழ்ச்சியாய் இருந்தனர்.

ஒரு நாள்..அவனது அமைச்சர் அவனிடம் ' அரசே..உங்களுக்கு வைரம் என்றால் ஆசை என்று அறிவேன்.நம் நாட்டில் மருதன் என்னும் வியாபாரியிடம் விலை மதிபற்ற வைரம் இருக்கிறது' என்றான்.

உடன் அரசனும் மருதனுக்கு...அவனிடம் உள்ள வைரத்தை தனக்குக் கொடுக்குமாறும் அதற்குரிய விலையை கொடுத்து விடுவதாகவும் ஒரு கடிதம் எழுதி சேவகனிடம் கொடுத்து அனுப்பினான்.

மருதனிடம் உண்மையாக வைரம் இல்லை.அதை தெரியப்படுத்த...ஒரு கடிதம் எழுதத் தொடங்கினான்.

" அரசே என்னிடம் அப்படி ஏதும் வைரம் இல்லை....அப்படியே இருந்திருந்தாற் கூட ....' என்று எழுதிக் கொண்டிருந்தபோது ...வேறு வேலை ஒன்று வரவே எழுந்திருந்துச் சென்றான்.

சென்ற மருதன் திரும்ப நேரமானதால் சேவகர்கள் அவன் முற்றுப்பெறாமல் எழுதியிருந்த கடிதத்தை எடுத்துக்கொண்டு அரசனிடம் விரைந்தனர்.

அரசன் அக்கடிதத்தைப் படித்து ...முற்றுப் பெறாத அக்கடிதத்தில் என்ன எழுதியிருக்கக்கூடும் என அமைச்சரைக் கேட்டான்.

அரசே....அக்கடிதத்தில் 'என்னிடம் அப்படி ஏதும் வைரம் இல்லை...அப்படியே இருந்திருந்தாற் கூட...என எழுதிய மருதன்....'இருந்திருந்தாற் கூட உங்களுக்குத் தர விருப்பமில்லை' என எழுதியிருப்பான் என்றான்.

உடனே அரசன் மருதனை அழைத்து கோபமாகக் கேட்டான்.

உடன் மருதன் ' அரசே ...இருந்திருந்தாற் கூட....உங்களிடம் எந்த விலையும் எதிர்பாராது இலவசமாக தந்துவிடுவேன் 'என்றே எழுத நினைத்தேன் என்றான்.

அமைச்சரின் அவசர புத்தியால் மருதனை கோபப்பட்டோமே என அரசன் எண்ணி வருந்தினான்.

நாமும் எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படாமல் நன்கு ஆலோசித்தபின்னரே சரியான முடிவு எடுக்கவேண்டும்.

Saturday, May 21, 2011

74. செய்வன திருந்தச்செய் (நீதிக்கதை)



ஒரு குளத்தில் இரண்டு தவளைகள் இருந்தன.வெயில் காலம் வந்தபோது அந்த குளத்தில் நீர் வற்றத் தொடங்கியது.

ஆகவே அத்தவளைகள் குளத்திலிருந்து வெளியேறி வேறு இடம் தேடிச்சென்றன.

வழியில் தண்ணீர் நிறைந்திருந்த கிணற்றைப் பார்த்தன.உடன் ஒரு தவளை " நாம் இக்கிணற்றில் இறங்கி...இதிலேயே இருப்போம்.தண்ணீர் நிறைய இருக்கிறது" என்றது.

உடன் இரண்டாவது தவளை ...'வெயில் அதிகமாக அதிகமாக ...இக்கிணற்று நீரும் வற்றிவிட்டால் இந்த ஆழமான கிணற்றிலிருந்து நாம் எப்ப்டி வெளியே வருவது' என்று கேட்டது.

இரண்டாவது தவளை....புத்திசாலித்தனமாக யோசித்து ...ஒரு காரியத்தில் ஈடுபடும்போது ....அதற்குப்பின்னால் ஏற்படும் விளைவுகளைப்பற்றியும் யோசித்தது.

நாமும் எந்தக் காரியத்தை செய்தாலும் அதன் பின் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை யோசித்து....செய்யும் காரியத்தை திருந்தச் செய்யவேண்டும்.

Saturday, May 14, 2011

73. பகிர்ந்து உண்ணவேண்டும். (நீதிக்கதை)




ஒரு காட்டில் சிங்கம் ஒன்றும் புலி ஒன்றும் நண்பர்களாயிருந்தன..ஒரு நாள் இரண்டும் இரை ஏதும் கிடைக்காமல்...காட்டில் அலையும் சமயம் ஒரு ஆட்டுக்குட்டியைக் கண்டன.

இரண்டும் ஒரே சமயத்தில் அந்த ஆட்டின் மீது பாய்ந்து கொன்றன.

பின்னர்...அந்த ஆடு யாருக்கு சொந்தம் என இரண்டும் விவாதம் புரிந்து....சண்டையிடத் தொடங்கின.

பசியை மறந்து பலத்த சண்டை போட்டுக்கொண்டிருக்கும் சமயம்...நரி ஒன்று அந்த வழியே வந்தது....அது இறந்து கிடந்த ஆட்டை இழுத்துக்கொண்டுபோய் சாப்பிடத் தொடங்கியது.

சண்டையிட்டதால் மிகவும் களைப்புடனும்...பசியுடனும் இருந்த சிங்கமும் புலியும்...ஆட்டை உண்டு கொண்டிருந்த நரியை பார்த்தன.

அப்போதுதான் .....அவை நமக்குள் சண்டையிடாமல் கிடைத்ததை சமபாகமாக பிரித்து உண்டுயிருக்கலாமே என எண்ணின.

ஒற்றுமையில்லாமல் சண்டையிட்டதால்....எதுவுமே கிடைக்காமல் போனதே என வருந்தின.நாம் ஒற்றுமையுடன் இருந்திருந்தால் நம் உழைப்பின் வெற்றியை நாமே அனுபவித்திருக்கலாமே என்றும் எண்ணின.

நாமும் நமக்கு கிடைப்பதை பகிர்ந்து உண்ணவேண்டும்.

Thursday, May 5, 2011

72. 'பேராசை பெரு நஷ்டம் ' (நீதிக்கதை)




கந்தன் என்ற ஒரு ஏழை தன் மனைவியுடன் குடிசையில் வாழ்ந்து வந்தான்.வயதாகி விட்டதால் வேலைக்கும் செல்ல முடியாததால்...அவர்கள் உண்ண உணவின்றி தவித்தனர்.

இந்நிலையில் ஒரு நாள் அவன் ஆண்டவனை நோக்கி ...'இறைவா எங்களை ஏன் இப்படி படைத்தாய்...இது இப்படியே நீடித்தால்....வறுமை தாங்காது...நாங்கள் இறப்பதை தவிர வேறு வழியில்லை' என வேண்டினான்.

உடன் இறைவன் நேரில் தோன்றி....அவனுக்கு வாத்து ஒன்றை பரிசளித்தார்.உடன் அந்த வாத்து ஒரு பொன் முட்டை இடும் என்றும்...அதை அன்றன்று அவன் விற்று தன் வாழ்நாளைக் கழிக்கலாம் என்றும் கூறி மறைந்தார்.

வாத்து தினம் முட்டையிட ...அவர்கள் வாழ்வு தினமும் இனிதாகக் கழிந்தது.

ஒரு நாள் கந்தனின் மனைவி அவனிடம் 'தினம் தினம் இது பொன் முட்டையிட்டு அதை விற்று நாம் பிழைக்கிறோம்.அதற்கு பதில் இதை அறுத்து அதன் வயிற்றில் உள்ள மொத்த பொன் முட்டைகளையும் எடுத்து விற்று நாம் பெரிய பணக்காரராக ஆகிவிடலாமே' என்றாள்.

கந்தனும் அவளது பேச்சைக் கேட்டு..அந்த வாத்தை பிடித்து அதன் வயிற்றைக் கிழித்தான்.ஆனால் அதன் வயிற்றில் ஏதும் இல்லை....மற்ற வாத்துக்களைப் போலவே இருந்தது.

முட்டாள் கந்தனும்,மனைவியும் தினமும் அடையும் லாபத்தை விட்டு ஒரே நாளில் பணக்காரராகும் பேராசையுடன் செயல்பட்டதால் இருந்ததையும் இழந்தனர்.

' பேராசை பெருநஷ்டம் '.

Wednesday, April 27, 2011

71.சிங்கமும்..ஈ யும்..(நீதிக்கதை)



ஒரு காட்டில் சிங்கம் ஒன்று இருந்தது.அது தனது பலத்தாலும், கர்ஜனையாலும் காட்டில் இருந்த அனைத்து மிருகங்களையும் பயமுறுத்தி வந்தது.
பயம் காரணமாய் அனைத்து மிருகங்களும் சிங்கத்திடம் அடக்கமாய் இருந்து வந்தன.
இந்நிலையில் 'ஈ" ஒன்று பயமின்றி சிங்கத்தின் மீது வந்து அமர்ந்தது.
அதைப் பார்த்ததும் சிங்கம் கோபமுற்று கர்ஜனை செய்தபடியே..'உன்னை என் பற்களால் கடித்துக் குதறுவேன்..நகங்களால் பிறாண்டுவேன்' என்றது.
அதற்கு ஈ யோ நீ பலசாலியாய் இருக்கலாம்..உன்னைப் பார்த்து மற்ற மிருகங்கள் பயப்படலாம்.ஆனால் நான் பயப்பட மாட்டேன்.இன்னும் சொல்லப்போனால்..நீ சொன்னபடி உன்னையே நீ பற்களால் கடித்துக் கொள்ளவும், நகங்களால் பிறாண்டிக் கொள்ளவும் செய்வேன்" என்றது.
சிங்கம் கோபத்துடன் சவால் விட..ஈ பறந்து வந்து சிங்கத்தின் மூக்கிலும்,முகத்திலும் அமர்ந்து அதைக் கடித்தது. ஈ முதுகில் அமர்ந்த போது..அதை விரட்ட சிங்கம்.தன் பற்களால் முயன்ற போது..ஈ பறந்து விட சிங்கம் தன் முதுகைத் தானே கடித்துக் கொண்டது.
ஈ சிங்கத்தின் முகத்தில் அமர்ந்த போது, அதை விரட்ட தன் கால் நகங்களால் முயல..ஈ பறக்க...சிங்கம் தன் நகங்களால் தன் முகத்தையே பிறாண்டிக் கொண்டது.
சிங்கத்தை நன்கு இம்சை செய்து விட்டு ஈ பறந்தது.
அப்போதுதான் சிங்கத்திற்கு புரிந்தது..தான் உடலளவில் வீரமாய் இருந்தாலும்..ஒரு சிறு ஈ தன்னை சங்கடப் படுத்தி விட்டதே என..உருவத்தைக் கண்டு யாரையும் எடை போடக் கூடாது என உணர்ந்தது.
இதைத்தான் வள்ளுவரும்..

உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்
கச்சாணி யன்னார் உடைத்து

என்றார்.
(பொருள்- உருவத்தால் சிறியவர்கள் ஆனாலும் யாரையும் கேலி செய்து அலட்சியப் படுத்த்க் கூடாது. பெரிய தேர் ஓடக் காரணமாய் இருப்பது சிறிய அதன் அச்சாணியே)

Tuesday, April 12, 2011

70. மூடருக்கு அறிவுரை கூறலாமா!! (நீதிக்கதை)



ஒரு காட்டில்...ஒரு நாள் ...நல்ல மழை பெய்துக் கொண்டிருந்தது.
ஒரு குரங்கு குளிர் தாங்காமலும்..மழையிலிருந்து காப்பாற்றிக்கொள்ளவும் ஒரு மரத்தினடியில் ஒதுங்கிக்கொண்டது.
மரத்தில் பறவை ஒன்று கூடு கட்டி தன் குஞ்சுகளுடன் மழைக்கு அடக்கமாக உட்கார்ந்து கொண்டிருந்தது.
குரங்கைப் பார்த்து பறவை மனம் பொறுக்காமல் ' குரங்காரே..என்னைப்பாரும்...வெய்யில் மழையிலிருந்து என்னையும் என் குஞ்சுகளையும் காப்பாற்றிக்கொள்ள கூடு கட்டியிருக்கிறேன்.அதனால் தான் இந்த மழையிலும் சுகமாய் இருக்கிறேன்.நீரும் அப்படி செய்திருக்கலாமே என்றது...
குரங்கிற்கு கோபம் தலைக்கேறியது..'உன்னைவிட வலுவானவன் நான்..எனக்கு நீ புத்தி சொல்கிறாயோ....
இப்போது உன்னையும் உன் குஞ்சுகளையும் என்ன செய்கிறேன் பார்' என மரத்தில் விடுவிடு என ஏறி பறவையின் கூட்டை பிய்த்து எறிந்தது.
பறவைக்கு அப்போதுதான் புரிந்தது' அறிவுரைகளைக்கூட.....அதைக்கேட்டு நடப்பவர்களுக்குத்தான் சொல்லவேண்டும்
என்று.
நாமும்...ஒருவருக்கு அறிவுரை வழங்குமுன் அவர் அதன்படி நடப்பாரா என்று புரிந்துகொண்டபின்னரே அறிவுரை வழங்கவேண்டும்.