Wednesday, April 27, 2011

71.சிங்கமும்..ஈ யும்..(நீதிக்கதை)



ஒரு காட்டில் சிங்கம் ஒன்று இருந்தது.அது தனது பலத்தாலும், கர்ஜனையாலும் காட்டில் இருந்த அனைத்து மிருகங்களையும் பயமுறுத்தி வந்தது.
பயம் காரணமாய் அனைத்து மிருகங்களும் சிங்கத்திடம் அடக்கமாய் இருந்து வந்தன.
இந்நிலையில் 'ஈ" ஒன்று பயமின்றி சிங்கத்தின் மீது வந்து அமர்ந்தது.
அதைப் பார்த்ததும் சிங்கம் கோபமுற்று கர்ஜனை செய்தபடியே..'உன்னை என் பற்களால் கடித்துக் குதறுவேன்..நகங்களால் பிறாண்டுவேன்' என்றது.
அதற்கு ஈ யோ நீ பலசாலியாய் இருக்கலாம்..உன்னைப் பார்த்து மற்ற மிருகங்கள் பயப்படலாம்.ஆனால் நான் பயப்பட மாட்டேன்.இன்னும் சொல்லப்போனால்..நீ சொன்னபடி உன்னையே நீ பற்களால் கடித்துக் கொள்ளவும், நகங்களால் பிறாண்டிக் கொள்ளவும் செய்வேன்" என்றது.
சிங்கம் கோபத்துடன் சவால் விட..ஈ பறந்து வந்து சிங்கத்தின் மூக்கிலும்,முகத்திலும் அமர்ந்து அதைக் கடித்தது. ஈ முதுகில் அமர்ந்த போது..அதை விரட்ட சிங்கம்.தன் பற்களால் முயன்ற போது..ஈ பறந்து விட சிங்கம் தன் முதுகைத் தானே கடித்துக் கொண்டது.
ஈ சிங்கத்தின் முகத்தில் அமர்ந்த போது, அதை விரட்ட தன் கால் நகங்களால் முயல..ஈ பறக்க...சிங்கம் தன் நகங்களால் தன் முகத்தையே பிறாண்டிக் கொண்டது.
சிங்கத்தை நன்கு இம்சை செய்து விட்டு ஈ பறந்தது.
அப்போதுதான் சிங்கத்திற்கு புரிந்தது..தான் உடலளவில் வீரமாய் இருந்தாலும்..ஒரு சிறு ஈ தன்னை சங்கடப் படுத்தி விட்டதே என..உருவத்தைக் கண்டு யாரையும் எடை போடக் கூடாது என உணர்ந்தது.
இதைத்தான் வள்ளுவரும்..

உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்
கச்சாணி யன்னார் உடைத்து

என்றார்.
(பொருள்- உருவத்தால் சிறியவர்கள் ஆனாலும் யாரையும் கேலி செய்து அலட்சியப் படுத்த்க் கூடாது. பெரிய தேர் ஓடக் காரணமாய் இருப்பது சிறிய அதன் அச்சாணியே)

Tuesday, April 12, 2011

70. மூடருக்கு அறிவுரை கூறலாமா!! (நீதிக்கதை)



ஒரு காட்டில்...ஒரு நாள் ...நல்ல மழை பெய்துக் கொண்டிருந்தது.
ஒரு குரங்கு குளிர் தாங்காமலும்..மழையிலிருந்து காப்பாற்றிக்கொள்ளவும் ஒரு மரத்தினடியில் ஒதுங்கிக்கொண்டது.
மரத்தில் பறவை ஒன்று கூடு கட்டி தன் குஞ்சுகளுடன் மழைக்கு அடக்கமாக உட்கார்ந்து கொண்டிருந்தது.
குரங்கைப் பார்த்து பறவை மனம் பொறுக்காமல் ' குரங்காரே..என்னைப்பாரும்...வெய்யில் மழையிலிருந்து என்னையும் என் குஞ்சுகளையும் காப்பாற்றிக்கொள்ள கூடு கட்டியிருக்கிறேன்.அதனால் தான் இந்த மழையிலும் சுகமாய் இருக்கிறேன்.நீரும் அப்படி செய்திருக்கலாமே என்றது...
குரங்கிற்கு கோபம் தலைக்கேறியது..'உன்னைவிட வலுவானவன் நான்..எனக்கு நீ புத்தி சொல்கிறாயோ....
இப்போது உன்னையும் உன் குஞ்சுகளையும் என்ன செய்கிறேன் பார்' என மரத்தில் விடுவிடு என ஏறி பறவையின் கூட்டை பிய்த்து எறிந்தது.
பறவைக்கு அப்போதுதான் புரிந்தது' அறிவுரைகளைக்கூட.....அதைக்கேட்டு நடப்பவர்களுக்குத்தான் சொல்லவேண்டும்
என்று.
நாமும்...ஒருவருக்கு அறிவுரை வழங்குமுன் அவர் அதன்படி நடப்பாரா என்று புரிந்துகொண்டபின்னரே அறிவுரை வழங்கவேண்டும்.

Tuesday, April 5, 2011

69. உப்புமூட்டை வியாபாரியும்...இறைவனும்.(நீதிக்கதை)




ஒரு ஊரில் உப்பு வியாபாரி ஒருவன் இருந்தான்...அவனுக்கு முன்னைப்போல வியாபாரம் ஆகாததால் வறுமையில் வாடினான்.

அவன் இறைவனை நோக்கி "ஆண்டவா எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டத்தை குடுக்கிற" என்று கேட்டுவிட்டு தன் கழுதையின்மேல் உப்பு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு பக்கத்து ஊர் சந்தைக்கு சென்றான்.ஆனால் வழியில் பெரிய மழை பெய்து உப்பு முழுவதும் கரைந்து போனது..." உன்னை அவ்வளவு வேண்டியும்,,ஏழையான என் வயிற்றில் இப்படி அடித்துவிட்டாயே' என இறைவனைத் திட்டினான்.

பின் மழை சற்றே நிற்க ஊர் திரும்பினான்.வழியில் சில திருடர்கள் ..வியாபாரிகள் தன் பொருளை சந்தையில் விற்றுவிட்டு பணத்துடன் வருவார்கள் என எண்ணி வெடி மருந்து கொண்டு வெடிக்கும் துப்பாக்கியுடன் நின்றார்கள்.

வியாபாரி திரும்பி வரும்போது வெடிமருந்து மழையால் நனைந்திருந்ததால் துப்பாக்கி வெடிக்கவில்லை..உடனே திருடர்கள் மாட்டிக்கொள்வோமோ என்று பயந்து ஓட்டம் பிடித்தனர்.

அப்போதுதான் உப்பு வியாபாரி நினைத்தான்,"மழை வந்ததால் உப்பு தான் போச்சு....மழை வராதிருந்தால் என் உயிர் அல்லவா போயிருக்கும்...ஆண்டவன் கருணையே கருணை...அது புரியாமல் ஆண்டவனை திட்டினேனே" என உருகினான்.


நமக்கு எந்த ஒரு துன்பம் வந்தாலும் ..அதற்கு கண்டிப்பாக ஒரு காரணம் இருக்கும் என்பதை அறிய வேண்டும்.அதுபோல் துன்பம் விலகவும் ஒரு வழி இருக்கும் என்றும் உணரவேண்டும்.

Monday, March 28, 2011

68. முயற்சி இனிமை பயக்கும்...(நீதிக்கதை)


கோபி கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வரும் இளைஞன்.

அவன் எவ்வளவோ முயற்சிகள் செய்தும் எங்கும் வேலை கிடைக்கவில்லை...அதனால் மனம் சோர்ந்தான்.

வருத்தத்துடன் காணப்பட்ட அவனை அவன் தந்தை அழைத்துக் காரணம் கேட்க அவனும் சொன்னான்.

உடனே அவன் தந்தை பக்கத்திலிருந்த ஒரு ஆப்பிள் பழத்தை அவனிடம் கொடுத்து ...அதை கத்தியால் வெட்டச்சொன்னார்.

அவனும் அப்படியே செய்தான்.

இரண்டாகப் பிளந்த ஆப்பிளைக்காட்டி ..'இதனுள் எவ்வளவு விதைகள் இருக்கிறது பார்..' என்றார்.

'நான்கைந்து விதைகள் இருக்கும்' என்றான். கோபி.

'இந்த விதைகளில் ஒன்றோ....அல்லது பலவோ வேறு ஆப்பிள் மரங்கள் உருவாகக் காரணமாய் இருக்கப் போகின்றன....அல்லது எல்லா

விதைகளும் நம்மால் தூக்கி எறியப்படப் போகின்றன.ஆனாலும்.. ஒவ்வொரு ஆப்பிளுக்குள்ளும் விதைகள் உருவாகிக் கொண்டுதானே இருக்கின்றன.

பல வீணாகிப் போனாலும் ஏதேனும் ஒன்று ஆப்பிள் மரமாக ஆகத்தானே போகிறது.அதுபோலத்தான் நம் முயற்சிகளும்...

வெற்றி கிடைக்காததால் ....அது பெரிய தோல்வியாக எண்ணாமல் ..அடுத்த முயற்சியில் ஈடுபடு...அப்போது என்றேனும் வெற்றி உனக்கு கிட்டும்'

என்றார் கோபியின் தந்தை.

கோபியின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது.

இதையே வள்ளுவர்

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும் ...  என்றார்.

முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை.முயற்சியே சிறந்த செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும் என்பது பொருள்.

Monday, March 14, 2011

67. கைகளால் பலன்...(நீதிக்கதை)




ஒரு நாள் வகுப்பறையில் ஆசிரியர் ஒருவர் தன் மாணவர்களிடம்....

" இறைவன் நமக்குக் கொடுத்துள்ள கைகளால் என்ன பயன் " என்றார்.

ஒரு மாணவன் " எதையும் சாப்பிடலாம் " என்றான்.

மற்றவனோ 'யாரையும் அடிக்கலாம்' என்றான்.

மூன்றாமவனோ " ஆசிரியர் அடிக்க வந்தால் தடுக்கலாம் " என்றான்.

நான்காவது மாணவனோ "இறைவனை கை கொண்டு தொழலாம்" என்றான்.

புத்திசாலி மாணவன் ஒருவன் எழுந்து " கை இருப்பதன் பலன் தானம் செய்வதற்கே,தர்மம் செய்வதற்கே.

தானம் செய்வதால்,தர்மம் செய்வதால் இல்லாதவர்கள் மகிழ்வார்கள்.. ...

"நம்மிடம் உள்ளதை பகிர்ந்து உண்ணுவதற்கே இறைவன் கைகளை படைத்துள்ளான்". என்றான்.

ஆசிரியரும் அந்த புத்திசாலி மாணவனை பாராட்டியதுடன் "மனிதர்களுக்கு இரக்க குணமும் தன்னிடம் உள்ளதை

பிறருக்கு வழங்கி வாழ்தலுமே நன்மை பயக்கும்" என்றார்.

Tuesday, March 8, 2011

66.கடவுள் பக்தி (நீதிக்கதை)



ஒரு ஊரில் கடவுள் மீது அதிக பக்திக் கொண்ட ஒருவன் இருந்தான்.அவன் பெயர் முருகன்.அவனுக்கு நாதன் என்னும் நண்பன் ஒருவன் இருந்தான்.

நாதன் நாத்திகவாதி.கடவுள் என்று ஒன்றும் இல்லை என்று சொல்லித் திரிபவன்.

ஒரு நாள் நாதன்,முருகனிடம் ' நீ கடவுளை எனக்குக் காட்டு....நான் ஒப்புக்கொள்கிறேன் ' என்றான்.

என்னுடன் இரு.நான் உனக்கு கடவுளைக் காட்டுகிறேன் என்றான் முருகன்.

அதன்படியே நாதன் முருகன் வீட்டிற்கு வந்தான்,பல மணிநேரம் ஆகியும் இறைவன் வரவில்லை.

நாதன், முருகனிடம் ' பசிக்கிறது என்றான்.

நீ சொல்வது பொய்- என்றான் முருகன்.

இல்லை உண்மையிலேயே எனக்கு பசிக்கிறது.

அப்படியானால் எனக்கு பசியைக் காட்டு.

பசியை எப்படி காட்டமுடியும்.

அதன் நிறம்.

பசிக்கு ஏது நிறம்.

அதன் குணம்.

குணம் இல்லை.

உன்னால் உன் பசியைக் காட்டமுடியவில்லை.ஏன்.?

அது வந்து....அது வந்து..

எப்படி பசி என்று ஒன்று இருந்தும் உன்னால் அந்தப் பசியை காட்டமுடியவில்லையோ அது போன்று தான் கடவுள் என்று ஒருவர் இருந்தும் அவர் புற உருவத்தைக் காட்டமுடிவதில்லை.

கடவுள் மீது பக்தி உள்ளவர்கள் மட்டுமே அந்த இறைவன் இருப்பது உணரமுடியும் என்றான் முருகன்.

நாதனுக்கும் கடவுள் நம்பிக்கை ஏற்படத் தொடங்கியது.

Friday, February 18, 2011

65. அன்பே சிறந்தது (நீதிக்கதை)



அந்த வீட்டில் குமரன் தன் தாய் தந்தையுடன் வசித்துவந்தான்.

அப்போது வீடட்டின் முன் மூன்று வயதானவர்கள் வந்து ' உள்ளேவரலாமா ' என்று கேட்டனர்.

தந்தை 'வாருங்கள்' என்றார்.

'நாங்கள் மூவரும் ஒன்றாக வரமுடியாது...யாராவது ஒருவர் தான் வரமுடியும்...என் பெயர் பணம்...இவர் பெயர் வெற்றி...இவர் பெயர் அன்பு..எங்கள் மூவரில் ஒருவர் தான் ஒரு வீட்டிற்குள் செல்லமுடியும்...எங்கள் மூவரில் உங்களுக்கு யார் வேண்டுமோ அவரை அழைத்துக் கொள்ளுங்கள்' என்றார் பணம் எனப்படுபவர்.

குமரனின் தந்தை ' வெற்றியை அழைக்கலாம்..நாம் எந்த வேலையைச் செய்தாலும் அதில் வெற்றியடையலாம்' என்றார்.

ஆனால் குமரனோ ...'அப்பா பணத்தையே உள்ளே அழைக்கலாம்...நம்மிடம் பணம் சேர்ந்துவிட்டால்...எல்லாவற்றையும்..வெற்றி ..உட்பட ...அனைத்தையும் வாங்கலாம்' என்றான்.

ஆனால் குமரனின் தாயோ 'வேண்டாம்...அன்பையே அழைக்கலாம்.அன்பு தான் முக்கியம்' என்றாள்.

பின் மூவரும், 'அன்பு உள்ளே வரட்டும்' என்றனர்.

அன்பு உள்ளே வர, அவரைத் தொடர்ந்து வெற்றியும், பணமும் கூட உள்ளே நுழைந்தனர்.உடன் குமரனின் அம்மா'அன்பை மட்டும் தானே உள்ளே அழைத்தோம்' என்றார்.

அன்பு சொன்னார்,' நீங்கள் பணத்தையோ, வெற்றியையோ அழைத்திருந்தால்..மற்ற இருவரும் வெளியே நின்றிருப்போம்.ஆனால் அன்பான என்னை வரச் சொன்னதால்..நான் இருக்கும் இடத்தில் தான் பணமும், வெற்றியும் இருக்கும்..ஆகவே அவர்களும் உள்ளே வந்து விட்டனர்'

அன்பு உள்ளம் இருந்தால்..நம் வாழ்வில் வெற்றியும்,தேவையான வசதிகளும் தானாகவே வந்துவிடும்.

அன்பே சிவம்...அன்பே முக்கியம்.

இதையே வள்ளுவர்..

அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு


என்கிறார்..

அன்பு நெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்.இல்லையேல் ,அது வெறும் எலும்புத்தோல் போர்த்திய வெறும் உடலாகும்.

சுருங்கச் சொன்னால்..அன்பு மனம் கொண்டவர்களே மனிதர்கள் ஆவர்.