Thursday, April 20, 2023

34. எல்லாவற்றிற்கும் காரணம் உண்டு


34- எல்லாவற்றிற்கும் காரணம் உண்டு




 ஒரு காட்டில் ஆமையும்,நத்தையும் நண்பர்களாக இருந்து வந்தன.அவர்களைத்தேடி ஒரு முயல் அவ்வப்பொழுது அங்கு வரும்.மூன்றும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்கும்.

ஒரு நாள் முயல் அவற்றிடம் "உங்களால் என்னை மாதிரி வேகமாக ஓடமுடியாது,துள்ளி குதித்து  விளையாடவும் முடியாது.ஆண்டவன் உங்களை ஏன் இப்படி படைத்திருக்கானோ தெரியவில்லை", என்று ஏளனமாக பேசியது.மேலும் முயல் அவற்றைப்பார்த்து "உங்களால் உங்கள் முதுகிலுள்ள ஓட்டை சுமந்து கொண்டு நடப்பதே சிரமம்,பின் எவ்வாறு ஓடமுடியும் "என்றும் கேலி செய்தது.

அப்போது ஓநாய் ஒன்று அவற்றை நோக்கி ஓடி வந்தது.உடனே ஆமையும் நத்தையும் தங்கள் உடலை ஓட்டுக்குள் இழுத்துக்கொண்டு மறைத்துக்கொண்டன.ஓநாய் முயலை குறிபார்த்தது.முயல் வேகமாக தப்பி ஓடியது.முயலை தொடர்ந்து சென்றதால் களைப்படிந்த ஓநாய் வந்த வழியே திரும்பி விட்டது.

சற்று நேரம் கழித்து அங்கு வந்த முயலிடம் ஆமை சொன்னது.."எங்களை ஏளனமாக பேசினாயே.ஓநாய் வந்ததும்..நாங்கள் எங்கள் உடலை சுருக்கிக் கொண்டு கூட்டினுள் அடைந்தோம்.ஓநாய் எங்களை ஒன்றும் செய்யவில்லை.ஆனால் உன்னைப் பிடிக்க நினைத்த போது..பயத்தில் எவ்வளவு வேகமாக ஓடினாய்? இப்போது புரிந்த்தா..ஆண்டன் ஏன் உனக்கு ஓடும் திறமையையும்,எங்களுக்கு கூட்டினையும் தந்துள்ளார் என்று."

ஒவ்வொரு உயிருக்கும் உயிர் வாழ என்னன்ன தேவையோ அதை பல வடிவங்களில் ஆண்டவன் கொடுத்திருக்கிறார்"

இறைவன் படைப்பில் எல்லாவற்றிற்கும் காரணம் உண்டு.