Tuesday, July 17, 2018

30.சமயோசிதப் புத்தி



ஒரு நாள் இடி மின்னலுடன் காட்டில் மழை பெய்து கொண்டிருந்தது.

ஒரு மான் தன் குட்டிகளுடன் எங்கு செல்வது எனத்தெரியாமல் அலைந்து கொண்டிருந்தது.அப்போது ஒரு குகை  காலியாக இருப்பதைப் பார்த்தது.அது சிங்கத்தின் குகை.
வேறு வழி தெரியாத மான் அது சிங்கத்தின் குகை என்று அறிந்தும் காலியாக இருந்ததால் தன் குட்டிகளுடன் உள்ளே சென்றது.

வெளியே போயிருந்த சிங்கம் தூரத்தில் வருவதைப்பார்த்த  மான்,தன் குட்டிகளிடம் "எனக்கு சிங்கக் கறி வேண்டும்" என கத்துங்கள் என்றது.
குட்டிகளும் அது போல கத்த சிங்கம் குகைக்குள் தன்னைவிட  பலசாலியான மிருகங்கள் இருப்பதாக எண்ணி ஓடியது.

வழியில் நரி ஒன்றைப்பார்த்த சிங்கம் "என் குகையில் பலசாலியான மிருகங்கள் இருக்கின்றன,அவை என்னைக் கொல்ல காத்திருக்கிறன" என்றது.

ஆனால் குகைக்குள் மான் தன் குட்டிகளுடன் செல்வதை நரி பார்த்திருந்தது.அது சிங்கத்திடம் அதைக்கூறி "பயப்படாதீர்கள் நானும் உங்களுடன் வருகிறேன்.நீங்கள் பெரிய மானை சாப்பிடுங்கள்,நான் குட்டிகளை சாப்பிடுகிறேன் "என சிங்கத்தை மீண்டும் குகைக்குள் அழைத்து வந்தது

சிங்கத்தை நரி அழைத்து வருவதைப் பார்த்த மான், உடனே தன் குட்டிகளிடம் "கவலைப்படாதீங்க.நரிமாமா சிங்கக்கறிக்காக கண்டிப்பாக சிங்கத்தை அழைத்துவருவதாகச் சொல்லியிருக்கார்" என் சிங்கத்தின் காதுகளில் விழுமாறு கத்தி சொன்னது.

அதைக் கேட்ட சிங்கம், நரி தன்னை ஏமாற்றி அழைத்து  வருவதாக எண்ணி நரியை அடித்துக் கொன்றது.பின் குகைக்குள் இருந்த மிருகங்களிடமிருந்துத் தப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வேறு குகையைத் தேடி ஓடிவிட்டது

எந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கை, முயற்சியைக் கைவிடாததால் மானால், தன்னையும், தன் குட்டிகளையும் காப்பாற்றமுடிந்தது. மானின் சமயோசித புத்தியை நாமும் பாராட்டுவோம்

தன்னம்பிக்கை, முயற்சி இருந்தால் எந்தக் காரியத்திலும் வெற்றியடையலாம்

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சரியாகச் சொன்னீர்கள்...

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி