Monday, May 30, 2011

75. அவசர புத்தி (நீதிக்கதை)



ஒரு ஊரில் ஒர் அரசன் இருந்தான்.அவன் நல்லாட்சியால் மக்கள் மகிழ்ச்சியாய் இருந்தனர்.

ஒரு நாள்..அவனது அமைச்சர் அவனிடம் ' அரசே..உங்களுக்கு வைரம் என்றால் ஆசை என்று அறிவேன்.நம் நாட்டில் மருதன் என்னும் வியாபாரியிடம் விலை மதிபற்ற வைரம் இருக்கிறது' என்றான்.

உடன் அரசனும் மருதனுக்கு...அவனிடம் உள்ள வைரத்தை தனக்குக் கொடுக்குமாறும் அதற்குரிய விலையை கொடுத்து விடுவதாகவும் ஒரு கடிதம் எழுதி சேவகனிடம் கொடுத்து அனுப்பினான்.

மருதனிடம் உண்மையாக வைரம் இல்லை.அதை தெரியப்படுத்த...ஒரு கடிதம் எழுதத் தொடங்கினான்.

" அரசே என்னிடம் அப்படி ஏதும் வைரம் இல்லை....அப்படியே இருந்திருந்தாற் கூட ....' என்று எழுதிக் கொண்டிருந்தபோது ...வேறு வேலை ஒன்று வரவே எழுந்திருந்துச் சென்றான்.

சென்ற மருதன் திரும்ப நேரமானதால் சேவகர்கள் அவன் முற்றுப்பெறாமல் எழுதியிருந்த கடிதத்தை எடுத்துக்கொண்டு அரசனிடம் விரைந்தனர்.

அரசன் அக்கடிதத்தைப் படித்து ...முற்றுப் பெறாத அக்கடிதத்தில் என்ன எழுதியிருக்கக்கூடும் என அமைச்சரைக் கேட்டான்.

அரசே....அக்கடிதத்தில் 'என்னிடம் அப்படி ஏதும் வைரம் இல்லை...அப்படியே இருந்திருந்தாற் கூட...என எழுதிய மருதன்....'இருந்திருந்தாற் கூட உங்களுக்குத் தர விருப்பமில்லை' என எழுதியிருப்பான் என்றான்.

உடனே அரசன் மருதனை அழைத்து கோபமாகக் கேட்டான்.

உடன் மருதன் ' அரசே ...இருந்திருந்தாற் கூட....உங்களிடம் எந்த விலையும் எதிர்பாராது இலவசமாக தந்துவிடுவேன் 'என்றே எழுத நினைத்தேன் என்றான்.

அமைச்சரின் அவசர புத்தியால் மருதனை கோபப்பட்டோமே என அரசன் எண்ணி வருந்தினான்.

நாமும் எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படாமல் நன்கு ஆலோசித்தபின்னரே சரியான முடிவு எடுக்கவேண்டும்.

No comments: